அன்னிய மொழி
கோடைகால விடுமுறையில் தன் அப்பாவின் தூண்டுதலால் ஏழாம் வகுப்பு படிக்கும் செல்வா இந்தி வகுப்பிற்கு சேர்ந்தான். அரசு பள்ளியில் படிப்பதால் பிற்காலத்தில் இந்திமொழி தேவைப்படும் என்று நினைத்து சேர்த்துவிட்டார் செல்வாவின் அப்பா. ஆனால் துளிகூட விருப்பம் இல்லாமல் வகுப்பிற்குச் சென்றான் செல்வா. தனக்கு ஆங்கில மொழியறிவு மட்டும் போதும் என்று நினைத்து சில நேரம் வகுப்பை புறக்கணித்து வந்தான். இது செல்வாவின் அப்பாவிற்கு தெரிய வர, தானே செல்வாவை வகுப்பிற்கு விட்டு வந்தார். இந்தி ஆசிரியரும் பெருமுயற்சி எடுத்து அவனுக்கு இந்தி எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தட்டுத் தடுமாறி வார்த்தைகளை சேர்த்து படிக்கும் முன் முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு வர, வேறு வழியில்லாமல் செல்வா கொஞ்சம் படிக்கவும் ஆரம்பித்தான். தேர்வு எழுதிய போது கூட பயம் இல்லாத செல்வா, தேர்வு முடிவுக்கு பயந்தான். அவன் நினைத்தது போலவே தேர்வில் தோல்வி அடைந்தான். இந்தி ஆசிரியரின் அதிருப்திக்கு ஆளானான். தேர்வு முடிவை தன் தந்தையிடம் அவன் சொல்ல, அதற்கு அவன் தந்தையோ “பரவாயில்லை செல்வா. இந்த பாடம் உனக்கு புதிது தானே. வாய்க்குள் நுழையாத மொழியாகவும் இருக்கிறது. நீ இந்தி மொழியின் எழுத்துகளை கற்றுக் கொண்டாயே அதுவே எனக்கு மகிழ்ச்சி. அடுத்த முறை தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஆயத்தமாகு.” என்று சொல்லி தன் மகனை தேற்றினார்.
அப்பாவின் பேச்சு செல்வாவிற்கு இந்தி படிக்க சொல்லி தூண்டியது. அடுத்த முறை தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். அடுத்து இந்தியில் உள்ள எட்டு நிலைகளையும் படித்து முடித்து விட்டால் மீண்டும் இந்தி படி என்று அப்பா தன்னை நச்சரிக்க மாட்டார் என்று நினைத்துக் கொண்டே படித்தான். வருடத்திற்கு ஒன்றாகத் தேர்வு எழுதி வெற்றி அடைந்தான். இதற்குள்ளாக செல்வா கல்லூரியிலும் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆனது.
கல்லூரியில் இந்தி - தமிழ் மொழி பெயர்ப்பு போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. விளையாட்டாக அதில் தன் பெயரை செல்வா கொடுத்தான். எதிர்பாராதவிதமாக போட்டியில் கலந்து கொண்ட செல்வாவிற்கு முதல் பரிசு கிடைத்தது. இந்தி துறையின் உயர் பதவியில் இருந்த பேராசிரியரின் கையில் பரிசை செல்வா வாங்க, அவர் செல்வாவின் மொழி அறிவை பற்றி விசாரித்தார். மேலும் தான் உரையாற்றும்போது தன் தாய் மொழி தமிழ் தான் என்றாலும் தனக்கு தமிழ் சரி வர வராது என்றும் இந்தி மொழி தெரிந்த தனக்கு கூட இவ்வளவு அழகாக இந்தி - தமிழ் மொழிபெயர்ப்பை செய்திருக்க முடியாது என்றும் சொல்லி செல்வாவை பாராட்டி பேச, அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. மேலும் செல்வாவின் படைப்பு சர்வதேச போட்டிக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் செல்வா, தன் இறந்த தந்தையை நினைத்து கண்ணீர் சிந்தி, தன் அப்பா தனக்காக செய்த நல்ல செயலை அரங்கத்திற்கு வெளிப்படுத்த, அரங்கம் செல்வாவின் வார்த்தையில் மௌனமானது. மேலும் ஒரு மொழியை கூடுதலாக கற்பதால் ஒன்றும் நாம் குறைந்து விடப் போவதில்லை என்பதை தன் சக மாணவர்களுக்கும் கூறினான்.
நாம் நிராகரிக்கும் பொருளும், செயலும், மனிதர்களும் கூட சில சமயங்களில் நம் வாழ்க்கை பாதையை மாற்றக் கூடும்.










