என்னை வசுமதி எங்கே தேடுகிறாள்? கொல்லைப்புறம் சென்று பார்க்கிறாள், ஏமாற்றத்தோடு வாசல் பக்கம் செல்லும் முன் அவள் அறையில் பதுங்கி இருக்கிறேனா? என தேடுகிறாள். டைனிங் டேபிளில் நான் இல்லாதது கண்டு கீழே குனிந்து பார்க்கிறாள். முகம் சுருங்கி, மெய்யும் தளர்ந்து போனாலும் அவளுக்கு நான் பிடிபடாமல் அவளை அலை கழிக்கிறேன். அவள் என்னை உதாசீனப்படுத்துவது எனக்கு பிடிக்காததால் தான் அங்கே இங்கே என்று உள்ளே இருந்தே அவள் தேடுதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறேன்.
அலுவலகத்திலிருந்து வந்து அரைமணி நேரம் என்னை கண்டுகொள்ளாமல் அனாதையாய் தவிக்கவிட்டு அவள் தேநீர் அருந்துவதும் டிவி பார்ப்பதுமாக இருந்து தற்போது என்னை காணாது தவிப்பது வசுமதிக்கு வழக்கமாகிவிட்டது. அதனால் தான் அவளை பழி வாங்குகிறேன். என் மேல் அவளுக்கு அக்கறை இருக்கிறதா? கண்ணாடி முன் தன் முகத்தை பார்ப்பதும் தன் தலையைத் தொட்டுப் பார்ப்பதுமாய் இருக்கிறாளே?
இன்னும் பத்து நிமிடத்தில் அவள் பிள்ளைகள் வந்து விடுவார்கள். அவர்களுக்கு பாடம் சொல்லி தர வேண்டும் என்பதற்காக மட்டுமே என்னை தேடுகிறாள். இதற்கு மட்டும் நான் வேண்டுமோ? என்ற எண்ணத்தில் இருந்த அவளின் தேடுதல் வேட்டை தொடரட்டும் என்று எண்ணி இருந்தேன். கடைசியில் ஒரு வழியாக அவள் ஹேன்ட் பேக்கில் கழற்றி வைத்தது நினைவுக்கு வர நானும் என் தோழியான கைகடிகாரம் மாட்டிக் கொண்டோம். அய்யோ நாம் மாட்டிக் கொண்டோமே! என நான் சொல்ல, இப்போதாவது வசுமதிக்கு உன் நினைவு வந்ததே! இது கூட பரவாயில்லை இன்னும் சில பேர் தங்கள் தலை மேல் உன்னை தாங்கி கொண்டு தேடு தேடு என்று தேடுவார்கள் என்று சொன்னது கைக்கடிகாரம்.
மேலும் இந்த தேடுதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, செல்போன் போல நமக்கும் ஜிபிஎஸ் சிஸ்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொல்கிறேன் என்று பதிலுக்கு சொல்லி வைத்தது கைகடிகாரம் மூக்கு கண்ணாடியிடம்.

No comments:
Post a Comment