ரயில் பரிதாபம்
எப்போதும் ஏசி பெட்டியில் பயணிக்கும் சுந்தர் மிக முக்கியமான வேலையாக மதுரை வரை பயணிக்க வேண்டியிருந்ததால் இரண்டாம் வகுப்பில் டிக்கெட் போட்டான். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சரியாக இரவு ஒன்பது மணிக்கு ரயிலும் புறப்பட்டது.
இவனுக்கு ஒரு நாளாவது கீழ் படுக்கையில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ரயில்வே ஒத்துழைத்தாலும் பயணியரின் நிலை கண்டு எப்போதும் இவனே தன் இருக்கையை தாரை வார்ப்பான்.
அன்றும் அப்படித்தான். ஒரு பெண் சிறிய குழந்தையோடு இவன் எதிர் பக்கத்தில் பயணித்தாள். அவளுக்கு கீழ் இருக்கையை தாரை வார்த்து விட வேண்டும் என்று எண்ணி சன்னலை பார்த்துக் கொண்டிருக்கையில் " சார்! நீங்க சாப்பிட்டீங்களா?" என்ற குரல் கேட்டு திரும்பினான். "ஆம்" என்று தலையாட்டவும் "இல்ல , என் மிசஸ் குழந்தை வச்சிருக்காங்க. நடு சீட்ல படுக்க முடியாது, அதனால..." என்று தயங்கியவனுக்கு, "ஓகே!ஓகே! " நான் மாறிக்கிறேன் என கேஷுவலாக விட்டுக் கொடுத்து நடு படுக்கைக்கு மாறினான்.
அப்படியே படுத்தவாறே செல்போன் பார்த்து கொண்டிருக்கையில் அடுத்த ஸ்டேஷன் வர, மேலும் சில பயணியர் பெட்டியில் ஏறினர். மேலும் ஒரு பெண் கைக்குழந்தையோடு கீழ் படுக்கையில் படுப்பதை பார்த்தான்
பத்து நிமிடங்கள் ஆன நிலையில் ஆண் ஒருவர் "சார்! கீழே இரண்டு பெண்கள் குழந்தைகளோடு இருக்காங்க. என்னால அப்பர் பெர்த் ல ஏற முடியாது, அதனாலே கொஞ்சம் பிளீஸ் மேல் படுக்கைக்கு மாறலாமா?" என்று கேட்க, அவர் நிலைமையை புரிந்து கொண்டு மேல் படுக்கைக்கு மாறினான்.
நேரம் மெல்ல நகர, ரயிலும் அடுத்த இரு நிறுத்தங்களைக் கடக்க, ஒருவர் மட்டும் ஏறினார். சிறிது சுற்றும் முற்றும் பார்த்தவர் உறங்காமல் இருந்த சுந்தரிடம் "தம்பி! எனக்கு சைட் அப்பர் ல சீட் அலாட் ஆகியிருக்கு. ஆனால் நான் உயரமாக இருப்பதால் எனக்கு கால் நீட்டி படுக்க முடியாது. கொஞ்சம் கஷ்டமா இருக்கும். நீங்கள் கொஞ்சம் மாறிக்கலாமா?" என்று கேட்டதும் அவர் உண்மை நிலையை புரிந்து கொண்ட சுந்தர், மனதால் நொந்தபடியே அவர் சொன்ன படுக்கைக்கு மாறினான் .
அங்கேயாவது நிம்மதியாக படுக்க விட்டார்களா அவனை? அவன் விதி பரிசோதகர் ரூபத்தில் வந்தது. அவரும் தன் பங்கிற்கு சும்மா இருக்காமல் கீழ் படுக்கைகாரர் கேட்டுக் கொண்டதன் பேரில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரை எழுப்பினார். "சார்! கீழ இருக்கிறவங்களுக்கு ஆர். ஏ. சி. ஃபேமிலியா வந்திருக்காங்க. அந்த அம்மாவல கீழ் படுக்கையில் இரண்டு குழந்தைகளோட படுக்க முடியாது. அவங்களோட இன்னொரு சீட் ஏசி ல இருக்கு, நீங்க ஏசிக்கு மாறலாமா ?" என்று கேட்க , கேட்பவர் பரிசோதகர் ஆயிற்றே? இல்லை என்று சொல்ல முடியாதே என்று நினைத்துக் கொண்டே தன் லக்கேஜோடு அவர் சொன்ன இருக்கைக்கு நடையை கட்டினான்..
படுக்க விட்டார்களா என்னை? ஓடினேன் ஓடினேன், ஏசி பெட்டிக்கே ஓடினேன் என்று அவன் மனம் சொன்னது. ஆனால் அங்கிருந்தவர்கள் "பாவம் அந்த தம்பி, எத்தனை தடவை தான் சளைக்காம சீட்ட மாத்துமோ? " என்று பேசியது அவன் காதிலும் விழுந்தது.