Monday, May 18, 2026

கிழவியின் ஆசை by Veena Shankar

 


கிழவியின் ஆசை


எப்போதும் ஞாயிற்றுகிழமை காலை சரியாக பத்து மணிக்கு செண்பகத்தின் போன் வரும். அன்றும் வந்தது. இன்று அம்மா என்ன புலம்ப போகிறாளோ என்றவாறே போனை எடுத்தான் கதிர். வாரா வாரம் அவள் புலம்பல்கள் கேட்டு மனப்பாடம் ஆகிப் போனது. சரி! சரி! என்று தலையாட்டியவாறே போனை கீழே வைக்க, "என்ன? எனக்கு தனியா இருக்க ஒரு மாதிரியா இருக்கு, இருக்குற கொஞ்ச காலத்தை பேரன் பேத்திகளோடு இருக்கணும். இப்போ பள்ளிக்கூடம் லீவு தானே? பிள்ளைகளை அனுப்ப வேண்டியது தானே? அவ பிள்ளைகளை எங்கிட்ட விட மாட்டா? எனக்கு தெரியும். எல்லாம் நகரத்துல பொறந்த பிறப்பு அப்படி பேச வைக்குது. எனக்கு கிராமத்துல இருக்குற வசதி அங்க இல்லை. இந்த கட்டை எப்போ போகும்னு தெரியாது, அதுக்குள்ள பேரப்பிள்ளைகளோடு இருக்கணும்னு நினைக்கிறேன். உன் அண்ணன் கிட்டையும் சொல்லிட்டேன். அவனும் பிள்ளைகளை அனுப்பல. ஏதோ அந்த படிப்பு இந்த படிப்பு படிக்கிறாங்களாம். பிள்ளைங்களுக்கு நேரமே இல்லையாம். நீயும் அதையேத்தான் சொல்லப்போற. ம்ம்... ஏதோ செய்யுங்க. மாசம் ஒருக்க நீயும் உன் அண்ணனும் வந்து பார்த்துட்டு போறீங்க? அது கொஞ்சம் எனக்கு ஆறுதலா இருக்கு என்று தானே சொல்லியிருப்பாங்க. உங்கம்மா. உங்களுக்கு முன்னாடி பெரிய அத்தானுக்கும் போன் போயிருக்கும்" என்று மீனா சொன்னதும் "போனை ஒட்டுக் கேட்டதலையே உனக்கு இவ்வளவு விசயம் தெரியுதா?" என்று சொல்லி மீனாவை பார்த்து கிண்டலடித்தான் கதிர். 


அவள் சொன்ன வாய் முகூர்த்தம் அவன் அண்ணனிடமிருந்து அழைப்பு வர, "தம்பி ! போனை மீனாட்ட குடுங்க" என்று அவன் அண்ணி பேச, "சரி" என்று சொல்லி மீனாவிடம் போனை நீட்டினான்.


"அக்கா! சொல்லுங்க" என்றாள் மீனா. "இந்த லீவுக்கு என்னடி பண்ணலாம் ? எங்கே போகலாம்?" என்று கேட்டவளுக்கு "இந்த முறை நாம குடும்பத்தோடு போக வேண்டாம் க்கா. பிள்ளைகளை மட்டும் நம்ம கிராமத்திற்கு அனுப்பி விடுவோம். வாரா வாராம் கிழவியோட புலம்பல் தாங்கல. பிள்ளைகளுக்கும் ஆன் லைன் கிளாஸ் தானே! என்ன சொல்றீங்க? " என்று கேட்டதும் "நீ எடுக்கும் முடிவு சரியாத்தான் இருக்கும். அப்படியே செஞ்சிடலாம். நீ உன் புருஷன் ட்ட சொல்லிட்டியா?" என்று கேட்க, "இல்லைக்கா, இனி மேல்தான் சொல்லணும் " என்று சொல்லி போனை வைத்து விட்டாள். 


இவள் பேசியதை பக்கத்திலிருந்த கதிருக்கு கேட்கவே, "சூப்பர் ! என் அம்மா நம்ம பிள்ளைகளை தங்க தட்டுல வச்சு தாங்குவாங்க " என்றான். " நீங்களும் ஒட்டு கேட்குறீங்களே!" என்று புன்னகைத்தவாறே மீனா நகர்ந்தாள். 


ஒரு வழியாக பேரப்பிள்ளைகள் செண்பகத்தின் ஊர் வந்து சேர்ந்தனர். கிழவிக்கு கொள்ளை மகிழ்ச்சி. பணியாரம், ஆப்பம், சுசியம் என வித விதமான கிராமத்து பலகாரங்களை செய்து கொடுத்தாள். ஆனால் என்ன! வகுப்பு இருப்பதால் ஒவ்வொரு முறையும் செண்பகம் தான் பேரப்பிள்ளைகளின் அறைக்கு கொண்டு போய் கொடுத்தாள். பேரப்பிள்ளைகள் கேட்காமலேயே பலகாரங்கள், தின்பண்டங்கள் அந்த பெரிய வீட்டிற்குள் படையெடுத்தன. 


ஒரு வாரம் செல்ல கிழவிக்கு கொஞ்சம் சுறுசுறுப்பு குறைந்தது. ஆமாம். அவளோடு கூடமாட வேலை செய்ய யாருமில்லையே! ஆபிசில் வேலை பார்ப்பதால் இரு வீட்டு தம்பதிகளும் செல்லவில்லை. 


மேலும் ஒரு வாரம் போனது. செண்பகம் கொஞ்சம் அசந்து போனாள். இருந்தாலும் காலையில் எழுந்து சிற்றுண்டிக்கு இடியாப்பம் செய்ய தயார் ஆன நிலையில் அச்சில் போட்டு பிழிய பேரப்பிள்ளைகளை கூப்பிட்டாள். ஆனால் அடுக்களை பக்கம் அவர்கள் தலை கூட வைக்கவில்லை. பின் தானே செய்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் கிழவி தடுமாற , அடுத்த ஞாயிற்று கிழமை வரும் வரை காத்திருந்து பிள்ளைகளை அழைத்துக் கொள்ளும் படி கதிருக்கு போன் போட, ஒன்றும் புரியாமல் "சரியென்று " பதில் சொல்லி திரும்பியவனிடம் "என்ன! குழந்தைகளை கூட்டிக் கொண்டு போக கிழவி சொல்லிச்சா ?" என மீனா கேட்க, ஆம் என்றவன் "அது எப்படி உனக்கு தெரியும்.? நீ இப்பதானே வெளியிலிருந்து வர " என கேட்க, "எனக்கு தெரியும் . இவங்கள அத்தை பதினைந்து நாட்கள் சமாளிச்சதே பெரிய விஷயம். என்னமோ நாங்க பிள்ளைகளை கிராமத்திற்கு அனுப்பல ன்னு சடச்சாங்களே! இப்ப புரியுதா? இதுங்க நான் சொன்னாலே படிக்கணும்னு சொல்லி வேலை செய்யாதுங்க. இப்ப அத்தைக்கு நாங்க ஏன் அனுப்பல என்ற விசயம் புரிந்திருக்கும்" என்று சொல்லி தன் மூத்த பிள்ளைக்கு போனை போட்டு கிராமத்திலிருந்து கிளம்பி வரும்படி சொன்னாள் மீனா.

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...