இன்றைய சிந்தனை
1) வலிக்கு ஏற்றது மருந்து என்றாலும் அதை எந்நாளும் அருந்த முடியாது
2) நித்தம் கொள்ளும் மன காயத்திற்கு தேவை மறதி என்ற மருந்து
3) நம் பயணத்தில் பாதை என்றோ அமையப் பெற்றுறிருக்கும். அதை கண்டுபிடித்து செல்வதே நம் பணியாகும்.
4) காகிதத்தில் அர்த்தமற்ற வார்த்தைகளாய் இருப்பதை விட எழுத்தில் ஊமையாய் இருந்து விடலாம்
5) வலிகளும் நம்மை நகைத்திருக்க வைக்கும் நம் எதிர்காலத்தை சிறப்பாய் வழி நடத்துவதற்காக
6) பூட்டின் உறுதியை ஓர் திறவுகோல் உடைத்து விடுவது போல மழலைகளின் பேச்சும் உருக்கிவிடும் பெற்றோரின் சோகத்தை
7) பேசுகின்ற வார்த்தைகள் தான் மனிதனின் பலமும் பலவீனமும். பலம் முன்னேற்றத்திற்கு வழி காட்டும். பலவீனம் மனதை இன்னும் பின்னேற்றும்
8) நமக்கான பாதை ஒன்று உண்டு என்று சொன்னாலும் போதுமே, யாரும் கைகோர்க்க தேவையில்லை. ஒருவர் இட்டு செல்வதை விட நாம் பட்டு தெரிவதே வாழ்க்கை
9) என்றும் ஒருவரே வெற்றி பெறுவதும் கடினம் . இருந்தாலும் முயற்சியில்லாமல் போனால் வெற்றி என்பதே கடினம்
10) இழந்த பின் அடையும் சோகததை விட இருப்பதால் அனுபவிக்கும் சோகம் மேல்
11) நிம்மதியையும் பொருளையும் தேடி அலைவதிலேயே நம் அமைதியும் காலமும் கரைகிறது
12) யாதையும் நாடுவதில் உள்ள சுவாரஸ்யம் அதை காப்பதிலும் வேண்டும்
13) உன்னை உதறி விடுபவனே உனக்கான ஏணியாவான் உன் வாழ்வின் உச்சியை அடைய
14) அன்பு என்பதே தெரியாத ஒருவனுக்கு அதனால் இழப்பில்லை. ஆனால் அதை வெளிப்படுத்த தெரியாதவனுக்கு மட்டும் பகையே மிஞ்சும்.
15) காயங்களும் வலிகளும் நிரந்தரமில்லை, ஆனால் அதன் நினைவுகளே வடுக்கள் என்றென்றும்
16) மன்னிப்பு என்ற வார்த்தை இல்லையென்றால் எவருடைய, எந்த செயலிலும் குற்றமில்லை
17) பின்புறம் பேசியதை நம் முன்புறம் வந்து யாரும் சொல்லாமலிருந்தால், முன்புறம் அமைதி காக்கும் பின்புறத்தைக் காட்டிலும்
18) நேசிக்கும் உறவுகள் இருக்கும் வரை யாரும் அன்புக்காக யாசிக்க வேண்டிய தேவையில்லை
19) ரகசியம் காப்பதால் மனதில் சுமை கூடும். அதை அவசியம் காத்தால் நம்மேல் நம்பிக்கை கூடும்
20) கடிகாரத்தின் முட்கள் சொல்கிறது, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் கடந்து செல்வதே தங்கள் முன்னேற்றத்தின் ரகசியம் என்று
21) கடிகாரத்தின் நிசப்தம் காலத்தை நிறுத்தி விட முடியாது, அது போல ஒருவரின் அர்த்தமற்ற பேச்சு முயற்சி உடையோரின் வெற்றிக்கு தடை போட முடியாது
22) பிறர் அடக்குவதால் மட்டும் பிறப்பது அல்ல அமைதி, அதன் பால் விளையும் அழுத்தத்தாலும் பிறப்பதே
23) விருப்பம் கூட மாறலாம் நாம் வீழ்கையில். ஆனால் தன்னம்பிக்கை மட்டும் நிரந்தரம் என்றும் எவருக்கும் மீண்டு எழுகையில்
24) தீபத்தின் ஒளி குறிப்பிட்ட இடத்தின் இருளைப் போக்குவது போல கண் முன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மெல்ல மெல்ல முயற்சி, உழைப்போடு எட்டுவதும் அறிவே!
25) வாழ்வு பொற்காலமாய் மாற வேண்டுமெனில் போர்க்களம் செல்லவும் தயங்குதல் கூடாது
26) வனப்பு கூடும் இடத்தில் பிறரின் ரசிப்பு தன்மை வெளிப்படும். ரசிப்பு உள்ள மனதில் வனப்பும் கூடும்.
27) வாலிபத்தில் காதலால் வரும் தோல்வியும் முதுமையில் தனிமையால் வாடும் சோகமும் ஒன்றே! யாருக்கும் இழப்பு உடையவர்களை தேற்றவும் தெரியாது. அவர்கள் தியாகத்தை போற்றவும் தெரியாது
28) குறையில்லா நெஞ்சமுமில்லை, குறை பேசா மனிதருமில்லை, நிறையுள்ள வாழ்க்கையும் இல்லை, நிறை காணும் எண்ணமுமில்லை
29) எதிர்ப்பார்ப்பு உள்ள இடத்தில் நல்ல குணம் சற்றே எட்டி நின்று வேடிக்கை பார்க்கும்.
30) தேடலுக்கான தேவை, கிட்டியவுடன் முற்றும். தேவைக்கான தேடல் என்றும் தொடரும்.
31) வெற்றி என்பது என்றும் வெற்றிடமல்ல ,தோல்வி என்பது எப்போதும் வெல்வதுமல்ல
32) அறிவின் ஆழம் தெளிவை பொறுத்தே, வலியின் ஆழம் காயத்தை பொறுத்தே
33) ஒற்றை வார்த்தை சொல்லிவிடும் எல்லா கேள்விகளுக்குமான விடையை, அதுவே பொறுமை என்ற மூன்றெழுத்து
34) எதுவும் நிரந்தரமில்லை உலகில், நாம் உள்ளிழுக்கும் காற்றும் சில மணித்துளிகளில் வெளியேறிவிடுவது போல
35) அழிவிற்கான ஆக்கம் என்றும் நிலைக்காது
36) தூண்டில் இல்லாமல் மீன் கிடைப்பதில்லை, தூண்டுதல் இல்லாமல் வெற்றிப் பாதை தெரிவதில்லை
37) வலிமையுள்ளவனுக்கே வலிகள் அதிகம். எனவே வலியை பொருட்படுத்தாது, வலிமையை கூட்ட முயற்சிக்க வேண்டும்
38) நாளைய தேவைக்காக இன்றைய நாளை தொலைக்கும் நாம் நித்தம் பெறுவது ஓர் புதிய அனுபவத்தை மட்டுமே
39) ஒன்று ஒன்றை விட சிறப்பாக தெரியக் காரணம் அதன் தன்மையால் மட்டுமல்ல, அது நம்மால் விரும்பப்படுவதுமே ஆகும்
40) ஒன்றை இழந்த பின்னே தான் மற்றொன்றின் அறிமுகம் கிடைக்கும், இழந்ததின் பயன் அறியும்.
41) எவருக்கும் இங்கே சுதந்திரம் இல்லை அன்பு, பாசம், கடமை எனும் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருப்பதால்.
42) உன் உணர்வுகளை புரிந்து கொள்ளா இடத்தில் நீ காட்டும் அன்பு வீண். உன்னை புரிந்து கொண்டு காட்டும் அன்பை நீ உணராது இருப்பதும் வீண்.
43) நியாயத்தின் படி ஏதும் நடக்காத போது அதில் உண்மையான பலனை எதிர்பார்ப்பதில் நியாயமில்லை
44) நட்புக்கு வசதி தேவையில்லை. ஆனாலும்
தேவைக்கு தான் நட்பு தேவை இங்கே இந்த உலகத்தில்
45) இமைக்கும் கண்கள் போலே துடிக்கும் மனமே மனிதம்
46) எதுவும் தேவையுள்ள போது கிடைக்காமலும்
தேவையில்லாத போது கிடைப்பதும் வீண் தானே?
47) பிறரை பேச்சால் காயப்படுத்தி அதை ரசிக்கும் குணமே இழிவானது. எனவே அதை பொருட்படுத்தாமல் மறந்து விடுவதே சிறந்தது
48) குழப்பம் உள்ள நேரத்தில் மௌனம் காத்தாலும் அந்த மௌனமும் பல நேரங்களில் தொடர்கதையாக மாற வாய்ப்புள்ளது. எனவே நீண்ட மௌனம் கூட குழப்பத்தை ஏற்படுத்தும்.
49) ஊசியின் ஒரு பக்க கூர்முனை ஆடையை தைக்க உதவுகிறது என்றாலும் அதன் மறுமுனை தன்னையே துளைத்துக் கொள்வதால் தான் நூல் உட்சென்று கிழிசலை அடைக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. அது போலத்தான் நம் மனதில் ஆயிரமாயிரம் காயங்கள் வடுக்களாக இருந்தாலும் பிறரை நோகடிக்காமல் வார்த்தையை பிரயோகிக்க பிரயத்தனப்பட வேண்டும்
50) தவறு என்பதற்கு புது இலக்கணம் என்றுமே இல்லை, பிறர் பேச்சுக்கு எதிராக நடக்காத வரை.
இன்றைய சிந்தனை
எதையும் பற்ற நினை, மாறாக அவற்றை துடிக்க வைத்து கைப்பற்ற நினைக்காதே!
விதையில் ஈரம் இருந்தால் விருட்சம் தானாய் உயிர் பெறும்
தேவையுள்ள போது நா தேடும் ஊறுகாயாக இருப்பதை விட, இலையில் ஒதுக்கும் கறிவேப்பிலையாக இருப்பதே சிறந்தது.
காரணம் தெரியாமல் வரும் சண்டைகள் கூட தேவை இங்கே ஒருவரை மற்றொருவர் புரிந்து கொள்ள
பூவின் வாசத்தால் மட்டுமே நாருக்கு மணம். பூ வாடிய பின் அந்த நாரை யாரும் சூடிக் கொள்ள விரும்புவதில்லை. அது போல தான் நம் நல் இயல்பு மாறாத வரை இந்த புவியில் எதுவும் சிறப்பே!
முட்கள் கொண்ட செடியானாலும் ரோஜாவின் இதழ்கள் மிருதுவாய் இருப்பது போல பிறப்பு எங்காகிலும் குணம் என்பது அவரவர் தனிச்சிறப்பே!
எங்கே பொருள் தேடல் முடிந்து மன தேட ல் ஆரம்பம் ஆகிறதோ அங்கே முதுமை தலை காட்டுகிறது என்று பொருள்
நம்மை விரும்புபவர்களால் மட்டுமே நாம் ஏற்றம் காண்பதில்லை . நம்மை வெறுத்தவர்களின் பேச்சு கூட நம்மை நாம் உணர்ந்து வெற்றிக் கொள்ள செய்யும்
துடிக்கும் கரங்களும் துடைக்கும் மனமும் துவண்டு விடாது என்றும்.
வாழ்க்கை இலகுவானது தான், அதை அழகாய் சுமக்க தெரிந்தவனுக்கு
கிறுக்கல்கள் கூட பொன்மொழியாய் மாறும், அனுபவமும் கற்பனையும் இருந்தால்
பிளவு இல்லா உறவில் தெளிவு உண்டு. தெளிவு இல்லா மனதில் ஏக்கம் உண்டு.
எவருக்கும் எதுவும் சொந்தமாகிப் போனால், சலிப்பு என்பதே மிச்சம் எதிர்காலத்தில்
நம்பிக்கை மட்டுமே ஒரு செயலை முழுமையடைய செய்யாது. அச்செயலுக்கான முயற்சியும் நிச்சயம் வேண்டும்.
எல்லோருடைய பிரார்த்தனையையும் கடவுள் உடனுக்குடன் `நிறைவேற்றுவானேயானால் அவனுக்கும் என்றும் மதிப்பு இருப்பதில்லை
எவரும் நம்மை அவருக்கு அடிமை என்று எண்ணிய பின் அவரிடமிருந்து மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது நம் தவறு
நித்தமும் இறக்கும் மனதிற்கு மனிதனின் ஒப்பாரி பாடல் தேவைப்படாது
எதையும் மனிதமாக பார்த்தால் அங்கே வணிகம் இருக்காது. எதுவும் வணிகமாக இருந்தால் அங்கே மனிதம் இருக்காது.
நாம் முடிவு எடுத்த பின் அதை மாற்ற நேரிட்டால் அதில் பிறரின் சுயநலம் கண்டிப்பாக இருக்கும்
நீ சொல்லும் வரிகள் யாவும் சரியாய் இருந்தாலும் , அது அடுத்தவருக்கு வலியாய் மாறாத வரை சிறப்பே!
மாட மாளிகை என்பது வசதிக்காக, ஏழை குடிசை சுகத்திற்காக
கேட்டாலும் கிடைக்காத இடத்தில் வாய் மூடி நிற்பதில் அர்த்தமில்லை
மனித செவிகள் இரண்டும் பிறர் கூறுவதை கேட்க மட்டுமல்ல, தேவையில்லாத சொல் ஒன்றன் வழி உட்புகுந்து மறு வழி வெளியேறவுமே
ஒரு சாண் வயிற்றுக்கு தேவைப்படுகிறது அரை டஜன் பதார்த்தங்கள், அவை உண்ட பிறகு தேவைப்படுகிறது ஒரு டஜன் மருந்து வில்லைகள்
வாழ்வில் எதுவும் கடந்து போகத்தான். இன்பம் துன்பம் இரண்டும், அதை சரி சமமாக பார்த்தால் அங்கே குதூகுலமும் அழுகையும் ஒன்றே
ஒரு செயலுக்காக எத்தனை முறை முயற்சி எடுக்கிறோம் என்பது பொருட்டல்ல, இறுதியில் கிடைக்கும் வெற்றியே இலக்காக வேண்டும்
ஒரு கோட்டின் அளவு என்பது அதன் பக்கத்தில் வரையப்படும் அடுத்த கோட்டின் நீளத்தைப் பொறுத்தே அமையும். அது போலவே தான் நம்முடைய துன்பங்களுமே!
கண்ணீர் என்பது ஆயுதமல்ல , அது என்றும் இயலாமை மற்றும் உணர்ச்சியின் வெளிப்பாடே!
எந்த ஒரு கருத்தும் நமக்கு சாதகமாக இருப்பின் அதைப் பற்றிய விமர்சனம் எழாது
வலியில் பிறப்பதே வைராக்கியம், அதுவே பின் மனதை பக்குவப்படுத்தும்
ஒருவரின் நேர்மறை கருத்து அடுத்தவருக்கு எதிர்மறையாகலாம். அதை தெளிவு படுத்திக் கொண்டு எதிலும் எப்போதும் நடுநிலை காப்பதே சிறப்பு.
விருட்சத்தின் வேராய் இருப்பதை விட மண்ணில் நீராய் இருப்பதும் அவசியமே!
அதுபோல குடும்பத்தின் தலைமையாய் இருப்பதை விட அதில் பொறுப்பாய் இருப்பதும் அவசியமே!
தமக்கு பிடித்தவர்களின் தவறை ஏற்றுக் கொள்வதும் அல்லாதவரின் செயலில் குற்றம் கண்டுபிடிப்பதும் மனித இயல்பே!
என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் உன்னால் முடியும் என்ற அடுத்தவரின் நம்பிக்கையும் கொள்ளும் என்றும் வெற்றியே!
மனம் வலியில் உள்ள போது அதை மறக்க மனம் வலிமை பெறுமாயின் எதிர்கொள்ளும் செயல் யாவும் சிறப்பே!
தொலைவாய் இருப்பதை தொலைவுப்படுத்தியே பார்த்து பழகி விட்டால் அது அண்மையில் வந்தாலும் அதன் மேல் காதல் வாராது.
மாற்றம் வேண்டும், அந்த மாற்றத்தில் ஓர் தெளிவு வேண்டும், அந்த தெளிவும் வலியிலிருந்து பிறந்திருக்க வேண்டும். அந்த வலியே மாற்றத்தை நாடியிருக்க வேண்டும்
தொலைந்து போன கனவுகள் என்றும் வருவதில்லை, தொடரும் உண்மை நட்பு என்றும் தொலைவதில்லை
உழைப்பின் அளவுகோல் அன்பும் கடமையும் கொண்ட செயல் திறனே !
ஆக்கத்திற்கு பல நல்ல வழிகள் இருந்தாலும் அதை செயல்படுத்த ஊக்கம் கொடுக்கும் நல்ல உள்ளங்களும் வேண்டும்
தனக்கு தேவை உள்ள போது சுயநலமாக இருப்பதும் பிறர் தேவைக்கு என்றாகும் போது பொதுநலம் பேசுவதும் மனித இயல்பே!
உழைப்பை திருடுபவனிடமும் தியாகத்தின் மதிப்பை உணராதவனிடமும் காட்டும் மனித நேயம் வீணே!
மௌனம் சிறந்த மருந்து, அடிப்பட்ட உள்ளத்தின் காயத்தை ஆற்றுவதற்கு
ஒன்று ஒன்றை விட சிறப்பாக தெரியக் காரணம் அதன் தன்மையால் மட்டுமல்ல, அது நம்மால் விரும்பப்படுவதுமே ஆகும்
முதுமையில் முகத்தின் பொலிவு இழந்தாலும் மனதில் வனப்பு கூடும் கடமை முடித்து ஏதோ சாதித்தது போல
பிறரை கபடமில்லாமல் பாராட்ட கற்றுக் கொண்டாலே போதும் , அதுவே மனது தெளிவு பெற்றதற்கான அடையாளம்
போலியும் பொலிவு பெறுவது பொல்லாத நாவினாலே
கொடுக்கும் கரங்கள் இருந்தாலும் இடையில் பறிக்கும் கூட்டம் உள்ளதே!
புன்னகை மகிழ்ச்சியில் மட்டும் வருவதல்ல, சூழ்நிலைக்கேற்ப இயலாமையில் கூட வருவதுண்டு
வாழ்க்கையும் இதுவா என்று சலித்து கொள்வதை விட அதை கடக்க கற்று கொள்வோம்