பேருந்தில் அடைந்த பெருமிதம்
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நானும் என் மகளும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறு வயதுடையவர் நடத்துநராகவும் ஓய்வு பெறும் வயதுடையவர் ஓட்டுநராகவும் பணியாற்றினர். பேருந்தில் பயணிகள் குறைவாகவே இருக்க முக்கிய பேருந்து நிலையத்தில் சொற்ப நேரம் நின்று பயணிகளை ஏற்றுவதில் மும்முரமாய் இருந்தார் ஓட்டுநர்.
நடத்துநர் சிறு வயதுக்காரர் என்பதால் அவரிடம் போதிய அனுபவம் இல்லை. மேலும் போகும் ஊர் பெயரை சொல்லி பயணியரை ஏற்றுமாறு ஓட்டுநர் நடத்துநரை பணிக்க, ஒப்புக்கு நடத்துநரும் கூவ, " நீ எல்லாம் எதுக்கு வேலைக்கு வர? பயணியரை ஏற்றும் திறமை கூட இல்லை. பேருந்தை விட்டு கீழே இறங்கி அழை" என்று கொஞ்சம் சத்தமாக சொன்னார் ஓட்டுநர்.
மீண்டும் அவர் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடத்துநரும் அவ்வாறே செய்ய பயணிகள் யாரும் ஏறுவதாக இல்லை என்று பதிலளித்தார். அவனுடைய பேச்சில் கடுப்பாகி போன ஓட்டுநர், பேருந்து நிலையத்திற்குள் வரும் அனைத்து பேருந்துகளையும் இடை மறைத்து பயணியரை ஏற்ற முற்பட்டார். சில பயணிகள் ஏற, ஒருவழியாக பேருந்தை அவ்விடத்திலிருந்து நகர்த்தினார் ஓட்டுநர். மேலும் நடத்துநரை வசை பாடியே வர, ஒரு கட்டத்தில் அவரும் ஓட்டுனரின் பேச்சை கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்த்தார். கடுப்பாகிய நான், ஓட்டுநரிடம் நடத்துநருக்காக பரிந்து பேச நினைப்பதற்குள் பயணச்சீட்டு கேட்டு நடத்துநர் எங்கள் பக்கம் வர நான் அடங்கிப் போனேன்.
பயணக் கட்டணம் தெரியாத நிலையில் ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் நான் நீட்ட, மீதம் எண்பத்தி நான்கு ரூபாய் சில்லறையை செழிக்க கொடுத்தார் நடத்துநர். அப்போது தான் ஓட்டுனரின் நிலையை நான் உணர்ந்தேன். ஆம், எனக்கு அந்த சில்லறையை கொடுக்காமல் என்னிடம் பதினாறு ரூபாய் சில்லறையை வசூலித்திருந்தால் மேலும் தொலை தூரம் செல்லும் பயணியருக்கு மீதி சில்லறையை கொடுப்பதில் சிரமம் இருக்காது என்பதை கூட அறியாமல் அவர் செய்த செயல் என்னை யோசிக்க வைத்தது.
பயணச்சீட்டை கொடுத்தவுடன் தன் இருக்கையில் அமராமல் பின்பக்க இருக்கையில் அமர்ந்தார் நடத்துநர். ஓட்டுநர் மறுபடியும் அவரை அழைத்து பாந்தமாக பேசினார். "என்னப்பா! நான் திட்டினதுக்கு கோவிச்சிக்கிட்டியா? அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்போது தான் புதுசா வந்திருக்கிற. தொழில் பத்தி நீ தெரிஞ்சிக்கணும் இல்லையா? அதான் நான் உன்னிடம் கோபத்தை காட்டி விட்டேன். உனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்னைக் கேள். நான் சொல்லித் தருகிறேன். நான் சொன்னதை மனதில் வைத்துக் கொள்ளாதே. உனக்கு நிறைய வருடங்கள் சர்வீஸ் இருக்கு. வா! உன் இருக்கையில் வந்து உட்கார்ந்து கொள். நான் சொல்ல சொல்ல என் அனுபவத்தை தெரிந்து கொள்" என்றார். மேலும் நடத்துநரும் "இல்லைங்க நான் உங்களை தவறாக நினைக்கவில்லை" என்றார்.
இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த என் மகளும் "அம்மா! அந்த டிரைவர் ரொம்ப நல்லவருமா. அவர் நடத்துனர திட்டிக்கொண்டே வந்ததால் நாமும் அவரை தவறாக நினைத்துவிட்டோம். ஆனால் அவர் பாருங்கள், கண்டக்டரை திட்டினாலும் கொஞ்ச நேரம் கழித்து அவரை சமாதானம் செய்கிறார்" என்று சொன்னதும் நான் என் வளர்ப்பில் வெற்றி வாகை சூடியதாய் நினைத்துக் கொண்டேன்.
ஆம். இப்போதைய பிள்ளைகள் எல்லாம் சிறிது கடிந்து கொண்டால் கூட சகஜ நிலைக்கு வருவது கிடையாது. ஆனால் தனக்கு பாடத்தை தான் கற்று தருகிறார் என்று நடத்துநர் நினைத்ததால் அங்கே விவாதங்கள் தடுக்கப்பட்டது.
இதில் யார் சிறந்தவர் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஓட்டுநரை தவறாக நினைக்காத நடத்துநரா?இல்லை நடத்துநர் சொன்னதை தவறாக எடுக்கவில்லை என்று நினைத்த ஓட்டுநரா?

No comments:
Post a Comment