எப்போதும் தன் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கும் ரூபா, தனக்கு ஏற்பட்ட விபத்திற்கு பின் வேகமாக இயக்குவதை நிறுத்திக் கொண்டாள். அன்று கடைத் தெருவிற்கு சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் தன் இரு சக்கர வாகனத்தில் பயணித்தாள். ஒவ்வொரு இடத்திலும் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வாங்கிய பின் பையில் திணித்துக் கொண்டு தன் பயணத்தை தொடர்ந்தாள்.
மெதுவாக வந்து கொண்டிருந்த அவளுக்குப் பின்னால் ஒரு இருசக்கர வாகனம் வருவதை உணர்ந்து தன் வண்டியை ரோட்டின் இடது பக்கமாக ஒதுங்கி சென்றாள். இருந்தாலும் தன்னை பின் தொடர்ந்து வந்த வண்டி ஓயாமல் ஒலி எழுப்பி கொண்டு வந்ததை பார்த்து சற்று எரிச்சல் அடைந்தாள். இதற்கு மேல் தன் வண்டியை இடது பக்கமாக ஒதுக்க முடியாது என்ற காரணத்தினால் தன் வண்டியை நிறுத்தி, பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவளுக்குப் பின்னால் வந்த வண்டியில் இருந்தவனை பார்த்து, “ஓயாமல் ஒலி எழுப்பி கொண்டு வருகிறீர்களே?” இதற்கு மேல் நான் ஒதுங்க இடம் கிடையாது என்று காட்டமாக சொன்னாள்.
அதற்கு அவர் “மன்னிச்சுக்கோங்க. நான் ஏதும் ஒலி எழுப்பவில்லை. நான் வண்டியில் வைத்திருக்கும் இந்தப் பெட்டியானது ஒலிப்பான் மீது பட்டு பட்டு ஒலி எழுப்பி விட்டது.” என்று சொன்னார். அவர் நிலைமையை பார்த்து மனதிற்குள் சிரித்தாள். அவரை தவறாக நினைத்த தன்னையும் மன்னிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டாள்.
பிறரை சாடும் முன் உண்மை நிலையை தெரிந்து கொள்வது நன்று.

No comments:
Post a Comment