முயற்சி
“சங்கீதா! உன்னால முடியும். மனம் தளராதே! இவ்வளவு நாள் நீ செய்த முயற்சி, பயிற்சி எல்லாமே வீணாக போய்விடும்.” என்று வாசு, சங்கீதாவின் தலையை மெல்ல வருடி சொல்லிக் கொண்டிருந்தான். “பயிற்சி எடுத்திருந்தாலும் முன் போல ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.” என்றாள் சங்கீதா. “அதெல்லாம் ஒன்னும் இல்லை சங்கீ. இந்த மேடை கிடைக்கிறது பெரிய கஷ்டம். இருந்தாலும் இந்த வாய்ப்பு உனக்கு பெருசா கிளிக் ஆகும் பாரு.” என்று மீண்டும் சங்கீதாவை எப்படியாவது பாட வைக்கும் முயற்சியில் இருந்தான் வாசு. “சரிங்க,” என்று தலையசைத்தாள். அதற்கான பாட்டு பயிற்சியையும் தொடர்ந்தாள்.
இரு ஆண்டுகளுக்கு முன் அவள் பாட வேண்டிய இடத்தில் அவளுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது. எதிர்திசையில் இருந்த ஹோட்டல் கடையில் எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் வெடிக்க, பொருட்கள் நாலா பக்கமும் சிதற, அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு பொருள் சங்கீதாவின் தொண்டையை பதம் பார்க்க வைத்து விட்டது. எனவே சங்கீதாவின் குரல்வளம் பாதிக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கும் பெரிய முயற்சிக்கும் பின் இன்று எப்படியோ மீண்டும் அதே இடத்தில் மேடையில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது தான் ஆச்சரியம். சங்கீதா பாட முடியாது என்று பலரும் நினைக்க, முயற்சி கொண்டு தன் குரல் வளத்தை பயிற்சி கொண்டு மீண்டும் வளப்படுத்த, கடைசி நிமிடத்தில் வாசுவின் பேச்சும் ஊக்கத்தை கொடுக்க, மேடையில் பாட தயாரானாள் சங்கீதா.
அவள் பாட ஆரம்பிக்கும் முன் கரகோஷம் ஒலிக்க, தன் கடந்த கால வாழ்க்கையை தன் ரசிகர்களிடம் சுருக்கமாக பகிர்ந்து கொண்டு, பாட ஆரம்பித்தாள், “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!” என்ற பாடலை.
ஆம். நம் உடலில் குறை இருந்தாலும் கூட மனதில் குறை இல்லாமல் வாழ பழகிக் கொள்ள வேண்டும். பாடுவதற்கு முழு முயற்சி எடுத்த தன் கணவன் வாசுவையும் நினைத்து மேடையில் நன்றியோடு கையெடுத்து கும்பிட்டாள் சங்கீதா.
முயற்சியும் பயிற்சியும் சிறந்தது, வாழ்வை உருமாற்றி எதிர்கொள்ள.

No comments:
Post a Comment