Saturday, November 19, 2022

இந்த வாரத்தலைப்பு துணிச்சல் by Vidhya Nivash

 


துணிச்சலின் துணை இருந்தால் எதையும் தூள் தூளாக ஊதிச்செல்லலாம்

எதிர்நீச்சல் போட துணிச்சல் வேண்டும்

நீந்த தெரியாத மீன் நகர முடியுமா..

துணிந்து காரியத்தில் இறங்கவில்லை என்றால் வாழ்வில் முன்னேற்றம் ஏது..

குறிப்பாக பெண்களுக்கு ஒரு கைபோல சரியான நேரத்தில் துணிச்சலின் துணை வேண்டும்..

வெளிபடையாக வென்றோரின் துணிச்சலுக்கு துணை உள்ளார்ந்த துணிச்சலை ஊட்டியவரையே சாரும் அதற்கு முகவரியில்லை..

இந்த வாரத்தலைப்பு துணிச்சல் by Kiruthika

 


பச்சை பொன்னாடை 

    போர்த்திய மலை குன்றுகள் ....


பன்னீர் குளியல் போட்ட பளிச் புல்வெளிகள்...


வானவில் கூட பொறாமை கொள்ளும் வர்ணபூக்கள் ...


வானம் தொடும் முயற்சியில் நெட்டை மரங்கள்...


புத்துயிர் பரவசம் கொள்ள தேகம் முழுதும் வருட - பனி காற்று.....


என....


இத்தனை அழகை காட்டியும் ..

இன்றேன்னவோ ..

இந்த மலைகளின் ராணியால்..

இவளை கவர முடியவில்லை..!?..


இவள் தான் ஓவியா..!..

ரவி வர்மன் ஒவியமே 

புருவம் உயர்த்தும் இவள் அழகு கண்டு ..!..


என்ன சொல்ல..?

இவள் மனம் தான் -

துடிக்கிறது..தாங்க முடியா துயரத்தால்..இன்று!..



தன்னையே மூச்சென்றவன்..

இன்று- தன்னை உதறி விட்டு போய் விட்டான்..

தன்னை வரைந்த தாய் 

ஓர் தாசி என்று...!!...காரணம் சொல்லி...


தாசியானாலும் தன் தாயாயிற்றே ..

அவள் பாதை அவளை சிதைத்தது.. வழி மாற செய்தது..அதில் தன் பிழை என்னவோ?..



மலை உச்சியில் நின்று 

 முடிந்தவரை அழுதாள் ..

தன் தாயின் அடையாளம் மறக்க ..

தான் வாழ..

தன் தாய் மறு வாழ்வு பெற ..மாற்று வழி தேட ..

விடை அறியாது -

இரண்டடி முன்னெடுத்து வைத்தாள் - பைத்தியிகாரி !!



நெஞ்சடைத்தது 

விழி வியர்த்தது ..

அவ்வளவுதான் -

மூடிய இமைக்குள் கும்மிருட்டு ..!!

இறநூறு அடி மலை ஆழம் அறிந்தால் - கீழே 

விழும் போது தான்..!!!



இவள் தவிப்பரிந்தோ என்னவோ 

மலை ராணி மனமுவந்து -

கரம் விரித்தாள் 

மரக்கிளையாய்..!..


உயிர் பிழைத்து

  ஞானம் பெற்றால்

இத்தனை அடி உயரம் குதிக்க தான் கொண்ட 

துணிச்சல் -

வாழவும் உதவும் தானே ?--.என்று...


வழி கண்டதும் -

  விழி திறந்து ..

அழைக்க ஆரம்பித்தாள் 

    உதவிக்கு யாரேனும் வாருங்கள் என்று ...!....

இந்த வாரத்தலைப்பு துணிச்சல் by Veena Shankar

 


மிதிவண்டி ஓட்டி பழகும் போது முட்டியில் அடிபட்டாலும் மிதிவண்டி ஒட்டவேண்டுமென்ற துணிச்சலும்

தந்தையில்லாமல் குழந்தைகளை காப்பாற்றும் தாய்க்கு பிறக்கும் துணிச்சலும்

பிள்ளைகள் தன்னை ஒதுக்கும் போது அவர்களை எதிர்க்கும் துணிச்சலும்

ஆற்றல் இல்லா மனிதர்களிடையே எதிர்பாராமல் தோன்றும் துணிச்சலும்

ஆகாயத்தை ஆராய நினைத்து விண்ணில் ஏவும் செயற்கைக்கோளை உருவாக்கும் அறிவியலாரின் துணிச்சலும் சிறப்பே

 துணிச்சல்


                                                  நெடு நேர பயணம் என்பதால் எப்போதும் அவள் கூடவே வரும் சினேகாவின் கணவன் தன்னுடைய அலுவலக வேலை நிமித்தமாக இரு நாட்கள் முன்னதாகவே புது தில்லி புறப்பட்டு போய் விட்டான். தான் தனியாக பயணிப்பது என்பது சற்று சிரமம் என்பதை கணவனுக்கு உணர்த்த நினைத்த சினேகா, “நான் மட்டும் இரு நாட்கள் தனியாக பயணிக்க வேண்டும். நானும் உங்களோடு புது தில்லி வருகிறேன்” என கணவன் ஸ்ரீதரிடம் மன்றாடினாள். சரி என்று தலையை ஆட்டி வைத்தான். ஆனால் அவளுடைய துரதிருஷ்டம் ரயிலில் இடம் கிடைக்காததால் ஸ்ரீதரே வான்வழி பயணம் செல்ல நேர்ந்தது. வேறுவழியில்லாமல் சினேகாவும் ரயிலில் தனியே பயணிக்க ஆயத்தமானாள். 


                                             புது தில்லி செல்லும் ரயில் நடைமேடையில் அவள் நடக்கும் போது இளைஞன் ஒருவன் அவளை இடித்து விட்டு செல்ல, கம்புக்கு சேலை கட்டி விட்டால் கூட அதை சீண்டும் குணம் கொண்ட நம் ஆண்களுக்கு அழகான பெண் என்றால் சும்மா விடுவார்களா? என அவனை முறைத்துப் பார்க்க, சிறிது தூரம் சென்ற பின்னும் அந்த இளைஞன் மறுபடியும் இவளை பார்த்து கண்ணடிக்க அவள் கண்களால் அவனை முறைக்க அதற்குள் அவள் பயணிக்கப் போகும் பெட்டியை வந்தடைய, தன் இருக்கையை சரிபார்த்து அமர்ந்தாள்.  


                                          தென் மாவட்டத்தின் சிறிய கிராமத்தை சேர்ந்த பெண் சினேகா என்பதால், அவளுக்கு நகரம் அவ்வளவு பரிச்சயமில்லை. இருந்தாலும் கிராமத்தை விட்டு தன் கணவனின் வேலைக்காக சிறிய நகரத்தில் குடியேறியதால் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே செல்ல தெரிந்தவள்.


                                           கிராமத்தில் பெண்களுக்கும் பாம்பு பிடிப்பது கயிறு பிடிப்பது போல. அச்சம் இருக்காது. வெள்ளந்தியான மக்களின் அன்புக்கும் அணை போட முடியாது. ஆனால் நகரத்தில் நிலைமை அப்படி அல்லவே? ஸ்ரீதரின் தாய் மாமாவின் வீட்டு கல்யாணம் என்பதால் கட்டாயம் போக வேண்டியதால் தான் இந்த நிலைமை.


 

                           பெட்டி முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெடுந்தொலைவு பயணம் என்பதாலும் பல மாநிலங்களை கடப்பதாலும் பல மொழிகள் பேசும் மக்களின் பேச்சும் காதில் சினேகாவிற்கு கேட்டது. குறிப்பாக வடக்கத்திய மொழிகள் தான் அதிகம் அவள் காதில் கேட்டது. அவர்கள் பேசுவதை விட அதிக சத்தத்துடன் எழுப்பும் சிரிப்பு அவளை நாட்டிலிருந்து அந்நியப்படுத்தி இருப்பதாக உணர்ந்தாள். தனியே செல்வதால் மொழி புரிந்தாலாவது அவர்களின் பேச்சை ரசித்திருக்க முடியும். நம்மூர் அரசியல்வாதிகளின் பெருந்தன்மையை எண்ணி பெருமூச்சு மட்டும் விட்டாள். பயணத்தின் இடையில் பரிசோதகர் தன் பணியைத் தொடங்கினார்.


                                          ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நகரம் முடிந்து இயற்கை காட்சி தென்பட்டது. அதை ரசித்துக்கொண்டே வந்தாள் சினேகா. பயணத்தின் போது டாட்டா காட்டும் சிறு பிள்ளைகளுக்கு டாட்டா காட்டி அவர்களின் அன்பிற்கு விடை கொடுத்தாள். மதிய நேரம் ஆரம்பித்ததால் ஆடிய கூட்டங்கள் அடங்க, இவள் மெதுவாக தன் அலைபேசியை எடுத்து பார்க்கத் துவங்கினாள். பலமுறை ஸ்ரீதர் அழைத்திருந்தது சினேகாவிற்கு தெரிய வந்தது. உடனே அவனை தொடர்பு கொண்டாள். அரை மணி நேர உரையாடலுக்குப் பிறகு அலைபேசியில் இருக்கும் விளையாட்டினை விளையாட தொடங்கினாள். சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் அன்னியப்பட்டு விட்டது என்பது தான் உண்மை. அதையும் தவிர்த்து விட்டாள். அன்று மதியத்திற்கு தான் கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தை சாப்பிட்டு இரவுக்கு புளியோதரையை ஒதுக்கி, தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நித்திரைக்கு தயாரானாள்.


                                          வீட்டில் அரை மணி நேரம் தூக்கம் போடும் சினேகா இன்று களைப்பில் அசந்து போய் விட்டாள். அவள் கண்விழித்து பார்க்கும் போது தன் எதிரே இருந்த கூட்டங்கள் காணாமல் போய் இருக்கைக்கு ஒன்றிரண்டாய் இருப்பதை பார்த்து சற்று அச்சம் கொண்டு, தன் கை கடிகாரத்தை பார்க்க மணி ஐந்து என்பதை உணர்ந்தாள். இப்படி தூங்கி விட்டோமே? என நினைத்தவாறே சட்டென்று கீழே இறங்கி வந்து அமர்ந்தாள். சுற்றும் முற்றும் பார்த்து மெதுவாக இயற்கை உபாதைகளை முடித்து, முகம் கழுவி வருவதற்குள் ஒரு பெரிய ரயில் நிலையம் வர, தேனீர் விற்கும் வியாபாரிகளின் சத்தம் ஒலிக்க, தனக்கு ஒரு தேநீரை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தாள். அந்த ரயில் நிலையத்தில் மேலும் பலர் இறங்க, பெட்டியில் ஆங்காங்கே ஒரு சிலரே அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவளுக்கு லேசாக பயம் தொற்றிக் கொண்டது. இப்படி இருந்தால் இரவு பயணம் எப்படி இருக்கும்? என்பதை நினைத்து கொண்டிருக்கும் போதே ஓர் இளம் ஜோடி தங்கள் பெட்டியுடன் அவள் முன்னர் வந்து அமர்ந்தனர். சந்தோஷப் பெருமூச்சு விட்டவளாய் மீண்டும் தன் அலைபேசியை எடுத்து பார்க்க துவங்கினாள். தன் முன் இருப்பவர்களும் தன் மொழியை அறியாதவர்கள் என்பதால் தன் பயணத்தில் வெறுமையை உணர்ந்தாள்.  


                                                மீண்டும் அலைபேசியில் ஒரு சில மணித்துளிகள் மூழ்கி வந்தவள் தன் முன்னே இருந்த ஜோடியை நோட்டமிட்டாள். அவர்கள் உண்மையான கணவன் மனைவி இல்லை என்பதை மட்டும் உணர்ந்தாள். சிறிது நேரத்திலேயே அந்த ஜோடி தங்கள் அத்துமீறல்களை தொடங்கினர். அதைக் கண்டு முகம் சிவந்த சினேகா, தனக்கு தெரிந்த மொழிகள் அத்தனையிலும் அவர்களை வசைபாட பாடினாள். அடுத்தடுத்து இருந்த பயணிகள் இவள் சத்தத்தை கேட்டு எட்டிப் பார்த்தாலும் யாரும் எதையும் தட்டிக் கேட்கவில்லை. கூட்டம் இல்லாத இடத்தில் இப்படி பயணிப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு என்பதை உணராதவள் சினேகா. அவளை வெறித்துப் பார்த்த ஜோடி மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட, ஆத்திரமடைந்த சினேகா ஒரு கட்டத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கப் போவதாக செய்கையில் காட்டினாள். ஆனால் அதையும் கண்டு கொள்ளாமல் இருந்த அவர்களை, தக்க சமயத்தில் மாட்டி விட வேண்டும் என நினைத்து, தன் அலைபேசியில் ரயில் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்த்தாள். ஏதோ ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்ததை அரைகுறையாக உள்வாங்கிய சினேகாவிற்கு ஒரு யோசனை தோன்ற, சிறிது அமைதியானாள். நேரம் வர காத்திருந்தாள். 


                                     அரை மணி நேரத்திற்கு பிறகு சட்டென்று எழுந்து அவள் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க, ஒரு சில நிமிடங்களில் ரயில் நிற்பதை உணர்ந்த அந்த ஜோடி செய்வதறியாது திகைக்க அவர்கள் அந்த இடத்தைவிட்டு நகர்வதற்குள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெட்டிக்குள் நுழைந்தனர் ரயில்வே துறையினர். அபாய சங்கிலியை இழுத்தது யார் என்று பயணியரை பார்த்து கேட்க தானே பிடித்து இழுத்ததாக சினேகா ஒப்புக்கொள்ள, அதற்கான காரணத்தையும் கூற, துறையினர் அவளிடமிருந்து அபராத தொகையை மட்டும் வசூலித்து, அந்த ஜோடியை காவல்துறையிடம் ஒப்படைக்க அழைத்து சென்றனர்.


                                      அச்சமயம் சினேகாவின் துணிச்சலையும் சமயோஜித செயலையும் பாராட்டினர். “பெரும்பாலும் இப்படிப்பட்டவர்கள் ஓடும் ரயில் ஆனாலும் இறங்க தயங்குவதில்லை. ஆனால் இன்று நினைத்தாலும் அவர்கள் இறங்கி இருக்க முடியாது. ஏனென்றால் நாம் இப்போது பாலத்தில் தான் பயணிக்கிறோம்” என்று துறையினரில் ஒருவர் சினேகாவிடம் சொல்ல, “அதனால் தான் சார் நான் காலம் வரும் வரையில் காத்திருந்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்தேன்” என்று பதில் சொன்னாள் சினேகா. 


                               தன்னை இடித்தவனை முறைத்து மட்டும் பார்த்த அவள், எப்படி இப்படி துணிச்சல் தனக்கு வந்தது? என்று தன்னைத் தானே கேள்வி கேட்டு பெருமைப்பட்டுக் கொண்டாள். 


                                சொல்லி வருவதல்ல துணிச்சல்.

                                தக்க சமயத்தில் சொல்லாமல் நடப்பதே.

அறிவும் துணிச்சலும் 



                                                 நகரின் முக்கிய ரயில் நிலையம் என்பதால் சற்று தயங்கியபடி உள்ளே நுழைந்தாள் சாருமதி. அவள் தனியாக ரயிலில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை என்பதால் தன் வீட்டில் இருந்து ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் வந்தடைந்தாள். அவள் கணவன் சேகர் சொன்னபடியே தான் செல்ல வேண்டிய நடைமேடையை அறிய, அந்த டிஜிட்டல் பலகையின் பக்கத்தில் நின்று பார்த்தபடியே காத்திருக்க, அடுத்த சில நொடிகளில் அவள் ஏற வேண்டிய ரயிலின் நடைமேடை பற்றி அறிவிப்பு வர, தனக்குரிய மேடையை நோக்கி நடந்தாள்.  


                                           படிக்கட்டில் நிறைய கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்ததால், ரயில் புறப்பட நேரம் நிறைய இருப்பதால் மெதுவாக நடந்து சென்றாள். எட்டு மற்றும் ஒன்பது என குறிப்பிட்டு இருந்த இடத்தில் தன் கால்களை முன்னேற்றினாள். இறங்கி வரவும் அந்த நடை மேடையிலேயே தன்னுடைய ரயில் நிற்பதை பார்த்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள். சுற்று முற்றும் பார்க்க அவள் அமர்ந்திருந்த பெட்டியில் அவ்வளவாக கூட்டம் தென்படவில்லை. எப்போதும் கூட்டம் நிறைந்து இருக்கும் பெட்டியில் இன்று கூட்டமே இல்லையே? என்று யோசனை செய்தபடி அமர்ந்திருந்தாள். எப்போதும் தன் கணவன் ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை நடைமேடையில் நின்று கொண்டு நேரம் கடப்பதால் அதை விரும்பாத சாருமதி அவனை கண்டிப்பாள். 


                                         இன்று என்னவோ வெறுமையை உணர்ந்த சாருமதி ரயில் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதால், தான் இறங்கி நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர நினைத்து தன் கைபேசியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். தன் பெட்டிக்கு எதிராக இருக்கும் இருக்கையில் அமர்ந்தாள். மேலும் தான் ஏறிய ரயில் சரிதானே என்று மறுபடியும் தன் பயணச்சீட்டு கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தாள். எல்லாம் சரியாகத்தான் இருந்தது என்பதை உறுதி செய்து கொண்ட பின், அவள் பக்கத்தில் இருந்த நடைமேடை பலகையை பார்க்க, அது ஒன்பது என்று காண்பித்தது. சற்றே தன் புருவத்தை சுருக்கி பார்க்க, தான் ஏற வேண்டிய ரயில் இது தானே? என்று யோசித்தாள். இருந்தாலும் சரியானதுதான் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள் சுமதி. ஆனால் ஒரு இனம்புரியா கலக்கம் அவள் மனதில் வர சரி ரயிலில் ஏறி அமரலாம் என நினைத்து ரயிலில் ஏற முயல, அந்த ரயில் புறப்படுவதற்கான அறிவிப்பும் வர, மேலும் இரு இளைஞர்கள் அவளை முந்திக் கொண்டு வர, தாமதிக்காமல் ஏறி அமர்ந்தாள்.


                                                  தன்னுடைய ரயில் புறப்பட ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதால் தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள பக்கத்தில் இருந்த பெரியவரிடம், தான் போக வேண்டிய இடத்தைச் சொல்லி விசாரிக்க, அவள் போக வேண்டிய ரயில் இது அல்ல என்பதை அவர்கள் உணர்த்த, சட்டென்று தன் பையை கையிலெடுத்து கதவு பக்கம் ஓடி வருவதற்குள் ரயில் புறப்பட, சாருமதி இறங்கி ஓட நினைக்கையில் அவளை ஒருவர் இடைமறித்து நிற்க வைக்க, தான் தவறுதலாக இந்த ரயிலில் ஏறி விட்டதை அவனிடம் பதட்டத்தோடு சொல்லி மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படபடவென இறங்கினாள்.  


                                                   பயணத்தின் போது தன் பையை தன் பக்கத்தில் வைத்து பயணிக்கும் தான் இன்று மட்டும் ஏன் அதை ரயிலில் வைத்து இறங்கினேன் என்ற குழப்பமும் மேலிட்டது சாருமதிக்கு. இறங்கியவள் தான் முன்னே உட்கார்ந்து இருந்த அதே இருக்கையில் அமர, தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். கணவனோடு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது ஒரு கையை தன் கணவன் மீதும் மறுகையில் வாகனத்தை பிடித்துக்கொண்டும் பயணிக்கும் தனக்கு எப்படி ஓடும் ரயிலிலிருந்து இறங்கும் துணிச்சல் வந்தது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அப்போது மீண்டும் அவள் நடைமேடையில் உள்ள எண்ணை பார்க்க, அது ஒன்பதாவது நடைமேடை அல்ல எட்டாவது என்பதை கூர்ந்து பார்த்த பின் தான் தெரிந்து கொண்டாள்.


                            இவ்வளவு காசு வாங்கும் ரயில்வே துறையினர் இந்த நடைமேடையின் எட்டாம் எண்ணில் உள்ள வடிவத்தை ஒன்பது போல இருப்பதை கவனிக்க தவறி விடுகிறார்கள் என்று இருவர் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வது இவள் காதில் விழாமல் இல்லை.


                        விதியை நொந்து கொண்டாலும் தனக்கு தக்க சமயத்தில் அறிவு வேலை செய்ததையும் தன் துணிச்சலையும் எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டாள்.


                               எல்லோரிடமும் துணிச்சல் இருக்கும் அது தக்க சமயத்தில் மட்டுமே வெளிப்படும்.

துணிச்சல் வேண்டும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடபே

Thursday, November 10, 2022

மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் "கையருகே நிலா" by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம்,

நெடு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புத்தகத்தை பற்றி பகிர்ந்து கொள்ள விரும்பினேன். சமீபத்தில் அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் நடத்திய விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பேச்சை கேட்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய வார்த்தைகள் மிகவும் உற்சாகம் தந்தது. பிறகுதான் அவர் எழுதிய கையருகே நிலா என்ற புத்தகத்தை படித்தேன் .

என்னவென்று சொல்வது 70 களிலும் , 80 களிலும் பிறந்தவர்களின் வாழ்க்கை ஏடு என்று சொல்வதா ?இனிவரும் வருங்காலத்திற்கு முன்னேற்ற பாதை என்று சொல்வதா? கவிதை நடையில் எழுதிய தமிழ் புலமையை கண்டு வியப்பதா?அதற்கு மேலும் காந்தி, விவேகானந்தர் மற்றும் ஜென் தத்துவத்தை சொல்லி அதற்கெல்லாம் மேலாக தன் அன்னையின் அறிவுரையும் கூறி வாழ்க்கை பாடத்தை கற்றுத் தரும் ஒரு புத்தகம் என்று சொல்வதா ? நம்முடைய சிந்தனைகளை வெளிப்படுத்த தாய்மொழி சிறந்தது என்பதை மேற்கோள் காட்டி இருக்கும் சிறப்பை சொல்வதா?தாய்நாட்டு பற்று  மற்றும் அவருடைய சமுதாய சிந்தனையை சொல்வதா ? நிலவிலும் சாதித்து மீண்டும் இந்த மண்ணிலும் சாதிக்க அவர் முயற்சிக்கும் பாதையை சொல்வதா? எதை சொல்வது எதை விடுவது என்பதே தெரியவில்லை. 

அவர் மேற்கோள் காட்டிய ஒரே ஒரு ஜென் கதையை சொல்லி நான் இங்கே முடிக்கிறேன். ஒரு காட்டில் மான், வெட்டுக்கிளி மற்றும் தேனீ இரைத்தேட சென்றதாம் .அதிலே மான் பசியாறி சென்ற பிறகு அடுத்த மான் அங்கே இரைத்தேட இலைகள் இருக்காது. வெட்டுக்கிளி கத்தரித்துச் சென்ற செடிகள் அப்படியே பட்டு போய்விடும். ஆனால் தேனீக்கள் தேனை மட்டும் எடுத்துச் சென்று அந்தச் செடி மீண்டும் காய் காய்ப்பதற்கு அடுத்த தலைமுறை உருவாகுவதற்கு அடி கோலிட்டு செல்கிறது. இதில் எப்படியாக இருக்க வேண்டும் நாமும் அடுத்த தலைமுறையை உருவாக்க நாம் பாதைகளை வகுத்து செல்ல வேண்டும் அல்லவா ? என்று அழகாக மேற்கோள் காட்டியுள்ளார்.

 பல கருத்துக்கள் நிரம்பி வழியும் அற்புதமான புத்தகம் இது. படிப்படியாக தன்னுடைய வாழ்க்கையில் எப்படி முன்னேறி உள்ளார் என்பதை ,திறமைகளை உள்ளே வைத்து தேங்கி போகாமல் ,வாய்ப்புகள் இல்லை என்று சோம்பி போகாமல் ,இருப்பதை பயன்படுத்தி மேலே செல்வதற்கு, சிந்தனையை தூண்டும் பல கருத்துகளைக் கொண்ட ஒரு அழகான புத்தகம்.

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்துவதை விட,கிடைத்ததை விரும்பு. 


இந்த வாரத்தைலப்பு விடுதலை by Vidhya Nivash

 


Mask விடுதலை போய்..

இன்று அமீரகத்திற்கு கிடைத்த Green pass விடுதலை...எல்லையற்ற விடுதலை😃

விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு சென்று வீட்டிற்குள் நுழையும் போது..

பேருந்து நெரிசலிலிருந்து விடுபடும் போது..

சரிவர படிக்காமல் போன தேர்வை ஒத்தி வைக்கும் போது.. 

காலை கடமைக்களை முடித்து தனியாக நடைபயிற்சி போகும் போது ஜில்லென்ற காற்றை பிரசிக்கும் போது..

ஒவ்வொரு முறை வெளிநாட்டிலிருந்து விமான பயணத்தை முடித்து தாய்நாட்டில் காலடி வைக்கும் போது...

என சின்ன சின்ன வலிகளிலும், மகிழ்ச்சியிலும் ,தனிமையிலும் ,கூட்டத்திலும்,ஊடல்களிலும்....குறிப்பாக நமக்குள்ள நடக்கும் போரட்டத்தில் அது நான் இல்லை என்று வெளிவரும் போது ... எந்நிகரற்ற தற்காலிகமான விடுதலைகள்.

இந்த வாரத்தலைப்பு விடுதலை by Kiruthika

 


**விடுதலை வேண்டும் -


   ஏதேனும் புது முயற்சி எடுக்க நினைக்கையில்..

தவறாமல் ஆஜராகும் தயக்கத்திலிருந்து..!!!!!..



**விடுதலை வேண்டும் -


   எதிர்பாராதது நடக்கும் போது..

  எதிர்பார்த்தது நடக்காத போது ..

தவறாமல் ஆஜராகும் குழப்பத்திலிருந்து..!!!!!..




**விடுதலை வேண்டும் -


   தேவைக்கேற்ப ஆசை..

ஆசைக்கேற்ப முயற்சி..

என்பதில் -

தவறாமல் ஆஜராகும் 

'தவறிய' சமநிலையிலிருந்து..!!!!!.......


**விடுதலை வேண்டும்-


இன்னும் ..

வேறொருவர் வந்து தான் கொடுக்க வேண்டும்- நம் விடுதலையை ..

எனும் எண்ணத்திலிருந்து...!!!!!......

இந்த வாரத்தலைப்பு விடுதலை by Veena Shankar

 


தலைவர் என்பதை விடுத்து அனைவரும் சமம் என்ற உணர்வே அனைவருக்குமான விடுதலை.

 மனித கூண்டிலிருந்து வெளிவருவது மட்டும் விடுதலை ஆகாது. மனகூண்டிலிருந்து வெளிப்பட்டு திறமையை செயல்படுத்துவது விடுதலை

விடுகதையுலிருந்து அடைந்த விடுதலை

தாயின் பிரசவத்தில் சிசுவிற்கு விடுதலை

வார்த்தையின் கோர்வையில் மௌனத்திற்கு விடுதலை

போராட்டத்தின் ஓட்டத்தில் வறுமைக்கு விடுதலை

புன்னகை பூப்பதால் சோகத்திற்கு விடுதலை

உண்மைத் தன்மையால் போலிகளுக்கு விடுதலை

வான் மழையினால் நதிகளுக்கு விடுதலை

வயோதிகம் கொள்வதால் கடமையிலிருந்து விடுதலை

எல்லை மீறாத வரை கட்டுப்பாட்டிற்கு விடுதலை

அறிவியலின் விந்தையால் அரிச்சுவடிக்கு விடுதலை

இறுதியில் இதயத்தின் துடிப்பிலிருந்து உடலுக்கு விடுதலை

இந்த வாரத்தலைப்பு விடுதலை by Akhiladevi Kumaran

 




Monday, November 7, 2022

இனம்புரியாத இன்பம் by Vidhya Nivash

 


தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்..நான் செல்லும் பாதையில் தினமும் ஒரு தாய் தன்னுடைய மகனை ஸ்டாலரில் வைத்து தள்ளிக்கொண்டே என்னை கடந்து செல்வாள். ஒரு சில நாட்கள் நான் கவனிக்கவில்லை .அதன்பின் தான் நான் கவனித்தேன் சிரித்த முகத்துடன் எப்போதும் அவள் தன்னுடைய மகனை தள்ளிக்கொண்டே செல்வாள் .

ஒரு நாள் என்னை பார்த்து சிரித்தாள் .மறுநாள் சிரித்துக்கொண்டே காலை வணக்கம் சொன்னாள். நான் முதலில் சிரிக்கும் பொழுதே அவள் என்னை பார்த்து தான் சிரிக்கிறாளா என்று சந்தேகம். மறுநாள் காலை வணக்கம் சொல்லும் பொழுதும் அதே சந்தேகம். அவளுடைய குழந்தையும் ஒரு சராசரியான குழந்தை இல்லை என்பதை அதற்கு பிறகு தான் கவனித்தேன் . பின் மனதுக்குள்ளே ஒரு சந்தோஷம் சிரித்த முகத்துடன் காலை அவசரத்தில் பல வாகனங்கள் செல்லும் பாதையில் தைரியமாக புன்னகையுடன் அவள் அந்த குழந்தையை ஆனந்தமாக அழைத்துச் செல்வதைப் பார்க்கும் பொழுது எவ்வளவு ஒரு இனிமையான உள்ளம் அவளுக்கு என்று உணர்ந்தேன் .

 இன்று ஒரு ஆச்சரியம் வார விடுமுறை கழித்து இன்று நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தேன். தூரத்தில் இருந்து வரும் பொழுதே அவள் கை அசைக்கிறார். எனக்கு தானே என்ற சந்தேகத்துடன் அருகில் செல்ல மீண்டும் கையை காட்டுகிறார் அது எனக்கு தான் என்று புரிந்து கொண்டேன். நானும் சிரிப்புடன் கையசைத்து புன்னகைத்தேன் . 

நன்கு பேசி பழகினார்கள் கூட தூரத்தில் வரும் பொழுதே சிரிப்போமா? வேண்டாமா ?பேசுவோமா? வேண்டாமா? என்று இருக்க முன்பின் தெரியாத பேர் கூட அறியாத எந்த தேசம் என்று தெரியாத ஒரு தோழியைப் போல் உற்சாகமாக அவள் எனக்கு கையசைத்து புன்னகை புரிந்ததும் ஒரு மனம் புரியாத இன்பத்தை தந்தது ஒரு பாடத்தை புகட்டியது அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.



Sunday, November 6, 2022

இந்த வாரத்தலைப்பு " நன்றி" - Vedavalli Ramani

 


நன்றி மறப்பது நன்றன்று,நன்றியில்லாதது அன்றே மறப்பது நன்று.

இந்த வாரத்தலைப்பு " நன்றி" - Kiruthika

 


மறுநாள் உதிரும் -என

தெரிந்தும் மலரும் மலர்களுக்கு ...

மறுபடியும் வந்த வழி தான் -என

தெரிந்தும் கரை மோதும் அலைகளுக்கு ...

மாலையில் அந்தி சாயும்- என

தெரிந்தும் நேரம் தவறாது எழும் கதிரவனுக்கு...

மறுக்காமல் சில நிமிடங்களில் நீர் நிலை தான் -என

தெரிந்தும் விழும் பால் பனித்துளிக்கு...

மனித மனம் வெட்ட நினைத்தாலும் மீண்டும் துளிரும் இயற்கைக்கு ...

கோடான கோடி நன்றிகள் ....

இயற்கை இல்லையேல் ....

ரசனை எங்கே?

நம் முதல் கவிதை தான் எங்கே?

இந்த வாரத்தலைப்பு " நன்றி" - Veena Shankar

 


நன்றி என்ற வார்த்தை இருப்பது தெரிந்தும் அதை சொல்ல மறுக்கும் மனங்களுக்கும் நன்றி, நம்மை படிப்படியாக உயர்த்தியதற்கு.

 நன்றி என்ற வார்த்தையும் அன்னியபட்டுவிடும் புரிந்து கொள்ளும் மனங்களுக்குள். இருந்தாலும் சிரத்தையுடன் செய்யும் செயலுக்கு சிரம் தாழ்த்தி நன்றி சொல்லாவிட்டாலும் கரம் நீட்டி சொல்வதும் அழகு

     நன்றி


எப்போதுமே கூட்டம் நிறைந்திருக்கும் அந்த பேருந்து நிறுத்தத்தில் ஓர் இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கியது வசதியான ஓர் இளம் ஜோடி. வெகு நேரமாகியும் தங்களுக்குள் பேசி கொண்டே நின்று கொண்டிருந்தனர். பார்வையாளர்களுக்கு கட்டணம் இல்லா படமாயினர். வந்தது தங்கள் வாகனத்தில், பின் ஏன் இவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழ, நகரம் என்பதால் அடுத்தவர் செயலில் மூக்கை நுழைக்காமல் அவர்கள் மீது நமுட்டு பார்வை இருந்தாலும் அவர்களை கவனிக்க தவறவில்லை அந்த கூட்டம். பல இடங்களுக்கான பேருந்து வந்தும் அதில் ஏறாமல் நின்றனர் அந்த ஜோடி. நின்றிருந்தோர் ஒவ்வொருவராக பேருந்தில் ஏற மிஞ்சியது நான் மட்டுமே. நாம தான் இலவச பேருந்திற்கு நிற்கிறோம் என்றால் இந்த வசதியான பெண்ணும் ஓர் ஆணுடன் நிற்கிறாளே என்று பெண்ணியம் பேசும் எனக்கும் தோன்றியது. கூட்டம் சென்ற பின் அவர்களை நோட்டமிடவும் தவறவில்லை நான். அப்போது மறைவிடம் இல்லாததால் அந்த ஆண் அவளை சற்றே மறைத்து நிற்க, தான் அணிருந்த சல்வார் எங்கே கிழிந்திருக்கிறது என்று பார்த்தாள் அந்த பெண். பிறரை நோட்டமிடும் கில்லாடிய நான் அதை கண்டுபிடித்துவிட்டேன். அவள் இறங்கும் போது அவளுடைய சல்வார் கிழிந்திருக்க வேண்டும் என் எண்ணிக்கொண்டேன். திடீர் மாற்றம் செய்யும் அரசு போல என் பேருந்தும் வருவதை கவனிக்காமல் இருந்தேன் நான். பின் சுதாரித்துக் கொண்டு ஏறி, என் புடவையில் இருந்த ஒரு ஊக்கை அந்த பெண்ணிடம் தூக்கி போட, திசை மாறிய பறவை போல அது சற்று முன்னாலே விழ, சைகையில் நான் ஊக்கு போட்டு கிழிந்த சல்வார் மறைத்து கொள்ளும் படி நான் சொல்ல, சிறிது நேரம் அந்த பெண் விழிக்க, ஒருவழியாக என் பாஷையை புரிந்து கொள்ள, தன்னால் முன் வந்து எடுக்க முடியாததால் தன் ஆண் நண்பனிடம் விசயத்தை சொல்ல, ஓடி வந்து ஓகை எடுத்து செல்ல, இருவரும் கண்களாலே நன்றி சொல்ல, புன்முறுவல் செய்து கொண்டே பேருந்து நகர, நடத்துனரிடம் சாவு கிராக்கி என்ற கெட்ட பெயர் புன்வருவலுடன் வாங்கி கொண்டேன். 


ஆள் பார்த்து செய்வதல்ல உதவி. அதே போல் எதிர்பார்த்து செய்வதும் அல்ல. எதிர்பாராமல் உதவி செய்தவர்களுக்கு நன்றி என்ற வார்த்தையும் தேவைப்படாது. ஆத்ம திருப்பதியே வெல்லும்.

இந்த வாரத்தலைப்பு " நன்றி" - Vidhya Nivash

 


செல்ல குழந்தைகள் நொடி பொழுதில் செய்யும் கைமாறுக்கு கண்ணில் பூப்பாய்


முன்பின் தெரியாதவர் செய்யும் உதவிக்கு புன்னகையுடன் வருவாய்


உணர்வால் உணர்ந்து உயிராக உடன் இருப்போர் கொடுக்கும் கைக்கு உணர்வுபூர்வமாக வருவாய்

 

ஆக மொத்தத்தில் உனக்கு நிகரான வார்த்தையில்லை வையகத்திலே ...

சிந்தனையை தூண்டி, வாய்ப்பு கொடுத்தற்கு உன்னையே அழைக்கிறேன் "நன்றி"

இந்த வாரத்தலைப்பு " நன்றி" - Akhiladevi Kumaran

 





இந்த வாரத்தலைப்பு " நன்றி" -ரிஷி

 

நன்றி!!!

இடமறிந்து என்னை 

பயன்படுத்துபவர்களுக்கு...

நன்றி!!!

ஒருவர் எதிர்பாராமல்

செய்யும் உதவிக்கு

மனமுவந்து கூறியதற்கு...

நன்றி!!!

ஒருவர் வெறுப்பை

அளித்தும் சிரித்து நகரும் தருணத்திற்கு...

நன்றி!!!

தவறை அறியாமல்

தவறு செய்பவர்க்கு

நல்லதை உணர்த்தியவர்களுக்கு...

நன்றி!!!

கரையில் இருப்பவர்களுக்கும்

கடலில் நீந்த

ஏதோஓர் விதம்

உதவியதற்கு...

நன்றி!!!

நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை

மழையாக பொழிபவர்களுக்கு...

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...