நன்றி என்ற வார்த்தை இருப்பது தெரிந்தும் அதை சொல்ல மறுக்கும் மனங்களுக்கும் நன்றி, நம்மை படிப்படியாக உயர்த்தியதற்கு.
நன்றி என்ற வார்த்தையும் அன்னியபட்டுவிடும் புரிந்து கொள்ளும் மனங்களுக்குள். இருந்தாலும் சிரத்தையுடன் செய்யும் செயலுக்கு சிரம் தாழ்த்தி நன்றி சொல்லாவிட்டாலும் கரம் நீட்டி சொல்வதும் அழகு
நன்றி
எப்போதுமே கூட்டம் நிறைந்திருக்கும் அந்த பேருந்து நிறுத்தத்தில் ஓர் இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கியது வசதியான ஓர் இளம் ஜோடி. வெகு நேரமாகியும் தங்களுக்குள் பேசி கொண்டே நின்று கொண்டிருந்தனர். பார்வையாளர்களுக்கு கட்டணம் இல்லா படமாயினர். வந்தது தங்கள் வாகனத்தில், பின் ஏன் இவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழ, நகரம் என்பதால் அடுத்தவர் செயலில் மூக்கை நுழைக்காமல் அவர்கள் மீது நமுட்டு பார்வை இருந்தாலும் அவர்களை கவனிக்க தவறவில்லை அந்த கூட்டம். பல இடங்களுக்கான பேருந்து வந்தும் அதில் ஏறாமல் நின்றனர் அந்த ஜோடி. நின்றிருந்தோர் ஒவ்வொருவராக பேருந்தில் ஏற மிஞ்சியது நான் மட்டுமே. நாம தான் இலவச பேருந்திற்கு நிற்கிறோம் என்றால் இந்த வசதியான பெண்ணும் ஓர் ஆணுடன் நிற்கிறாளே என்று பெண்ணியம் பேசும் எனக்கும் தோன்றியது. கூட்டம் சென்ற பின் அவர்களை நோட்டமிடவும் தவறவில்லை நான். அப்போது மறைவிடம் இல்லாததால் அந்த ஆண் அவளை சற்றே மறைத்து நிற்க, தான் அணிருந்த சல்வார் எங்கே கிழிந்திருக்கிறது என்று பார்த்தாள் அந்த பெண். பிறரை நோட்டமிடும் கில்லாடிய நான் அதை கண்டுபிடித்துவிட்டேன். அவள் இறங்கும் போது அவளுடைய சல்வார் கிழிந்திருக்க வேண்டும் என் எண்ணிக்கொண்டேன். திடீர் மாற்றம் செய்யும் அரசு போல என் பேருந்தும் வருவதை கவனிக்காமல் இருந்தேன் நான். பின் சுதாரித்துக் கொண்டு ஏறி, என் புடவையில் இருந்த ஒரு ஊக்கை அந்த பெண்ணிடம் தூக்கி போட, திசை மாறிய பறவை போல அது சற்று முன்னாலே விழ, சைகையில் நான் ஊக்கு போட்டு கிழிந்த சல்வார் மறைத்து கொள்ளும் படி நான் சொல்ல, சிறிது நேரம் அந்த பெண் விழிக்க, ஒருவழியாக என் பாஷையை புரிந்து கொள்ள, தன்னால் முன் வந்து எடுக்க முடியாததால் தன் ஆண் நண்பனிடம் விசயத்தை சொல்ல, ஓடி வந்து ஓகை எடுத்து செல்ல, இருவரும் கண்களாலே நன்றி சொல்ல, புன்முறுவல் செய்து கொண்டே பேருந்து நகர, நடத்துனரிடம் சாவு கிராக்கி என்ற கெட்ட பெயர் புன்வருவலுடன் வாங்கி கொண்டேன்.
ஆள் பார்த்து செய்வதல்ல உதவி. அதே போல் எதிர்பார்த்து செய்வதும் அல்ல. எதிர்பாராமல் உதவி செய்தவர்களுக்கு நன்றி என்ற வார்த்தையும் தேவைப்படாது. ஆத்ம திருப்பதியே வெல்லும்.

No comments:
Post a Comment