இன்றைய நகைச்சுவை
விடுமுறை முடிந்து பள்ளிக் கூடம் திறக்கின்ற நேரம் என்பதால் என் கணவர் நடத்தும் போட்டா ஸ்டுடியோவிற்கு பள்ளிக் குழந்தைகள் பாஸ்போர்ட் சைஸ் போட்டா எடுக்க வருவார்கள். இன்றும் அப்படித்தான் குழந்தைகளின் வருகைக்காக காலை முதல் இரவு வரை காத்திருந்தேன். முகூர்த்த நேரம் என்பதால் என்னவோ குழந்தைகள் வரவில்லை. இனி யாரும் வரப்போவதில்லை என்று யூகித்து இரவு எட்டு மணிக்கு கடையை பூட்ட எண்ணி விளக்குகளை அணைத்து விட்டு வெளியே வரும் வேளையில் ஓர் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற பெண், " இங்கு போட்டோ இருக்கும்" என்று சொல்லிக் கொண்டே சென்றார் . கடையை பூட்ட எண்ணிய நானும் நமக்கு கிராக்கி வருகிறது என்று நினைத்து கொண்டிருக்கையில் என் கடையின் பக்கத்திலேயே அவர்கள் வண்டியை ஓரங்கட்டி நிறுத்த , அவர்களின் வருகை ஊர்ஜிதமான நிலையில் இரண்டு குட்டி பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக வண்டியிலிருந்து இறங்க , நானும் அவர்களை வரவேற்க எதிரே நிற்க, அவர்களும் பக்கம் வர "வருகிறார்! வருகிறார்!" என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி போல் மனதில் சொல்லிக் கொண்டேன். என் பக்கம் வரும் வரை எல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஆனால் ஒரே ஒரு மாற்றம் என் கடையை தாண்டி அடுத்த கடைக்கு அந்த கூட்டம் செல்ல , "அம்மா! இங்கே புரோட்டா இருக்குமா?" என்று சின்ன பெண் ஒருவள் கேட்க, "அதான் சொன்னேனே இங்கே புரோட்டா கிடைக்கும் என்று" என்று அவள் தாய் பதில் சொல்ல, என் முகம் வாடியது என்றாலும் "புரோட்டா - போட்டோ" ஆன கதையை எண்ணி என்னுள் நானே சிரித்துக் கொண்டே கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு நடையை கட்டினேன்.

No comments:
Post a Comment