என் சைக்கிள் பயணம்
என் முதல் சைக்கிள் பயணம் என் வாழ்க்கையை போல் அமையவில்லை. சற்று கடினம் தான். சில பேருக்கு தான் அப்பா அல்லது அண்ணனுடைய பேராதரவுடன் அமையும். என் தோழி சிந்துவும் (மல்லிகா) நானும் வாடகை சைக்கிள் எடுக்கச் செல்வோம். முதலில் இருவருக்கும் ஓட்டத் தெரியாது என்பது தான் உண்மை. ஒரு சைக்கிள் எடுத்து நான் பிடிக்க அவள் ஓட்ட, பிறகு அவள் பிடிக்க நான் ஓட்ட எப்படியோ முன்னேறி இருவரும் தனி தனி சைக்கிள் எடுத்து அரை மணி நேரம் ஓட்ட ஆரம்பித்தோம். இப்படித்தான் பழகினோம். சைக்கிள் கற்றுக் கொள்ளும் முன் முட்டியை பேத்துக் கொள்ளாமல் யாரும் ஓட்ட முடியாது.
நான் சாதாரணமாக நடக்கும் போதே ஓரிடத்தில் கண்டம் உண்டு. விழுந்து விடுவேன். சைக்கிள் ஓட்டும்போது கேட்கவா வேண்டும்? மேலும் தனியாக சைக்கிள் ஓட்டும்போது நடந்த சம்பவம் என்னால் மறக்க முடியாது. சென்னையில் தி. நகருக்கும் கண்ணம்மாபேட்டைக்கும் நடுவே இருந்தது எங்கள் சைக்கிள் கடை. நாங்கள் சைக்கிள் பழகியதும் அந்த இடத்தில் தான். மிக வேகமாக மிதிக்கிறேன் என்று நான் சைக்கிளை அழுத்த, எதிரே இரு சக்கர வாகனம் வர, நான் பிரேக் பிடிக்க முயல, அது முடியாமல் ஹேண்டில் பாரை திருப்ப, நேரே அது ஒரு குடிசை வீட்டிற்கு முன் நிற்க, அங்கிருந்த பேட்டை பெண்மணி என்னை வறுக்க, செய்வதறியாமல் நான் விழிக்க, சிந்துவும் அங்கு வர, கடைசியில் சிலர் என் பக்கம் நியாயம் பேச, தப்பித்தோம் பிழைத்தோம் என நாங்கள் வாடகை சைக்கிளை ஒப்படைக்க ஓடினோம். இது என் உடன் பிறவா தோழி சிந்துவிற்கு நினைவிருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் நடந்த பிறகு நான் சைக்கிளை தொடாமல் இருந்திருந்தால் இன்று கார் ஓட்ட பழகியிருக்கமாட்டேன்.
சைக்கிள் என்று சொன்னவுடன் எனக்கு இது தான் நினைவுக்கு வரும்.
மிதிவண்டியை நாம் மிதித்தாலும் நம்மை முன்னேற்றுகிறது.

அழகான அடுக்கு மொழி,கடைசி வரி அருமை🌷
ReplyDelete