Wednesday, May 11, 2022

தண்ணீர் கனவு / நினைவு  by Veena Sankar



 தண்ணீர் கனவு / நினைவு 


                                            அன்று  சென்னைக்கு  தண்ணீர் கிடைப்பது  என்பது    ஒரு  பெரிய கனவு. அதை நினைவு கூர்வது  என்பதே  தற்போதைய நிகழ்வு. 


                                          இன்று சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் சற்று குறைவு என்று நினைக்கிறேன். நாங்கள் சென்னையில் குடி இருந்த சமயம், சென்னை மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கும் மெட்ரோ வாட்டர் லாரி வந்ததும் சோம்பேறி கூட சுறுசுறுப்பு ஆகிவிடுவான் என்று சொல்லவேண்டும். தெருவிற்குள் தண்ணீர் கொண்டு வரும் லாரிகள் தெருமுனையில் சப்தம் கொடுத்தாலே கடைசியில் குடியிருக்கும் நானும் என் தோழி  சிந்துவும்  முதல் இரண்டு இடத்தை பிடித்து விடுவோம். போகும் அவசரத்தில் தண்ணீர் அட்டையையும் காசும் நழுவாமல் இருக்க குடத்தினுள்   போட்டு சென்ற நாட்களும் உண்டு. லாரியில் கொண்டு வரும் தண்ணீர்,  தொட்டியில் நிரம்பிய பிறகே தண்ணீர் விடப்படும் என்றாலும் நான், தண்ணீருக்காக  அவசரத்தில் பாட புத்தகங்களை கூட மூடாமல் விட்டு சென்றதும் உண்டு. ஒரு குடத்திற்கு பத்து பைசா முதல்  ஐம்பது பைசா வரை வாங்கி,  அட்டையில்   குறித்து தருவார்கள். 


                                           ஒரு  சமயம்   தண்ணீருக்கு   கடும்  தட்டுப்பாடு ஏற்பட்டது.  நாங்கள்  இருக்கும்  இடத்திலிருந்து  சுமார் ஐந்தாறு தெருக்கள் தள்ளி  ஒரு சைக்கிளில்   ஏழு  குடங்கள் வரை தண்ணீர் கொண்டு  வந்ததும் உண்டு.  வீட்டில் இருக்கும்   சிறு  டம்ளர்களில் கூட  தண்ணீர் பிடித்து வைத்து இருக்கிறோம்.  அது  வீட்டில்  கொலு  வைத்திருப்பது  போல  ஒரு   தோற்றத்தைக் கொடுக்கும்.


                                       இதற்கும்  ஒருபடி மேலே போய்,  பக்கத்தில் உள்ள தெருவில், ஒரு வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாய், நாமாக அடித்து குடத்தில் பிடிக்க வேண்டும் என்றால் ஐந்து காசுகளும், கீழே குழாயில் கொடுக்கும் அழுத்தம் காரணமாக மேல் வீட்டில் தண்ணீர் தானாக குடத்தில் விழும் இடத்தில் பத்து பைசாவும் வசூலித்து  வந்தார்கள். தண்ணீரை  விற்று மேல் வீட்டை கட்டினர் என்று  அந்த வீட்டை சொல்வதுண்டு.  


                                        எங்கள் வீட்டிற்கு முன் இருக்கும்  அடி    குழாயில்    தண்ணீர் மஞ்சள் கரைத்தது போல் இருக்கும்.  அந்த உப்பு  தண்ணீருக்கும் ஒரு வரிசை  உண்டு. இரவு இரண்டு மணிக்கும் வரிசை வந்து தண்ணீர் பிடித்து,  படிகாரம் போட்டு தண்ணீரை குழப்பினால்,  மறுநாள் காலை மஞ்சள் கசடு கீழே  தங்கி  மேலே  தண்ணீர் தெளிந்து  இருக்கும். 


                                            ஒன்பது   வீடுகள்  கொண்ட  இடத்தில்,  ஒரே   ஒரு  கிணறு தான் இருந்தது. அதில் நாம் எட்டிப் பார்த்தால் அந்த  கிணறும்  நம்மை எட்டிப் பார்க்கும்.  அவ்வளவு ஆழத்தில் சிறிது தண்ணீர் இருக்கும். தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பார்கள் என்று கூற  கேட்டிருக்கிறோம் அல்லவா? அதே போல்தான் தண்ணீர் ஊற்று வந்த  பின் தான், கிணற்றிலிருந்து நீர் இறைக்க வேண்டும். அதிலும் வரிசைப்படி பிடிக்கவேண்டும்.   இதனோடு தண்ணீருக்காக சண்டை  சச்சரவுகளும்  உண்டு. அவரவர் தத்தம்  குடத்துடன் கூடிய கயிறு  கொண்டு  நீர் இறைக்க  வேண்டும்.


                                           இது   கூட   பரவாயில்லை.    நான்   சென்னையில்  இருந்து பூவைக்கு மாறுதலான சமயம், என்  கல்லூரிக்கு  சென்று வந்து கொண்டிருந்த சமயத்தில்,  என்னுடன் பேருந்தில்  பயணிக்கும் ஒரு பெண்மணி எனக்கு பரிச்சயம் ஆனார். அவர்  எங்கள் பகுதியில் இருந்து   சென்னை சேப்பாக்கம் வரை தினமும் வேலை பார்த்து விட்டு வருவார். இவ்வளவு தூரம் நீங்கள் தினமும் பயணிக்க வேண்டி  இருக்கிறது? ஏன் அங்கேயே ஒரு வீடு பிடித்து  குடியிருக்கலாம் அல்லவா? என்று நான் கேட்டதற்கு, என்னை கையெடுத்து கும்பிட்டார். பத்து வருட காலம்  தன் அலுவலகத்திற்கு பக்கத்தில், தான் குடி இருந்ததாகவும் போன வருடம் வந்த தண்ணீர் கஷ்டத்தில் வீட்டு ஓனரம்மா, இருக்கும் இந்த தண்ணீர் பஞ்சத்தில் நீங்கள் தினமும் குளிக்க வேண்டுமா? என்று கேட்டதால்  பதறிப்  போய் தொலை தூரம் என்றாலும் பரவாயில்லை என்று    எண்ணி,   தன் சொந்த   வீட்டிற்கு  குடும்பத்தோடு  குடி  வந்ததாக கூறினார்.  


                                          இதைக்   கேட்டதும்  எனக்கு,    அழுவதா?  சிரிப்பதா?    என்று தெரியாமல் விழித்தேன்.  ஒவ்வொருவருக்கும் தண்ணீரை  பின்புலமாக வைத்து பல கதைகள் இருக்கும் என நம்புகிறேன்.  


                                  உயிர் வாழ உணவு மட்டுமே வேண்டுமென்பதில்லை. தண்ணீர் இருந்தால் கூட சமாளித்து விடலாம்  ஒரு  சில நாட்களுக்கு.


                 இறைவன் அருளால் மழை கொண்டு, என்றும்  மலர்ந்து இருப்போம்.


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...