"சரீரத்தின் சங்கதி" சிறுகதை by Veena Sankar
“அப்பா! இந்த அம்மாவை பாருங்கப்பா! எப்போது பார்த்தாலும் என்னை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள்” என்று தன் அப்பாவிடம் தன் அம்மாவை பற்றி புகார் சொன்னாள் குழலி. “ஆமா! நீ செய்யறது மட்டும் சரியா இருக்கா? படித்து முடித்ததும் டேபில இருக்கிற புக்கை அப்படியே வைக்கிற; எழுந்திருக்கும்போது போர்வையும் மடிக்கிறது இல்ல; காபி சாப்பிட்ட டம்பளரை கழுவுவதில்ல” என குழலியின் குற்றச்சாட்டை அடுக்கினாள் அம்மா பூங்கோதை. அப்பா குமார் குழலியின் முடியை தடவி அவளை சமாதானப்படுத்த, பூங்கோதை தன் கணவனையும் திட்ட ஆரம்பித்தாள். பூங்கோதை, ஒரு வழியாக கத்தி முடித்து தோட்டத்தின் பக்கம் சென்றாள். அவள் சென்றாலும் அவள் உதிர்த்த வார்த்தைகள் வண்டுகளின் ரீங்காரம் போல ஒலித்தது குழலிக்கு.
“அப்பா! ஏன்ப்பா? என் அம்மா மட்டும் இப்படி இருக்கிறாங்க? என்னோட பிரண்ட்ஸ்களோட அம்மாவும் சரி, அப்பாவும் சரி. ரொம்ப ப்ரேன்ட்லியா அவங்ககிட்ட பழகுறாங்க. ஆனா எனக்கு மட்டும் இது ஏன்ப்பா இப்படி நடக்குது?” என தன் துக்கத்தை அடக்க முடியாமல் அழுகுரலில் குழலி கேட்டாள். “நீ செய்வதும் அப்படித்தானே இருக்கும்மா. அம்மா சொல்ற வேலையை ஒழுங்கா செய்திருந்தால், அம்மா உன்னை எதற்கு திட்ட போகிறாள்? நீ செய்வது தவறு தான்.” என்று தன் மகளை சமாதனம் செய்ய முயற்சிக்க, “ஆமா! நீ எப்பவுமே அம்மாவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவே. இது தெரிஞ்சும் உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு! என்னை…” என்று பட்டாசு போல் வெடித்தாள் குழலி.
“உங்கம்மா சொல்றதுல தப்பே இல்லை” என்று மறுபடியும் அப்பா குமார் சொல்ல, முகத்தை திருப்பி கொண்டு நடந்தாள். தன் மகளின் நடையை ரசித்தவாறே நின்றான் குமார். பெண் பிள்ளைகளுக்கு அப்பா மீது பாசம் அதிகம் என்பதை குமாரும் உணர்ந்திருந்தான்.
நாட்கள் நகர்ந்தன. குழலி படிக்கும் கல்லூரியில் துறை சார்ந்த கூட்டம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இருபாலரும் படிக்கும் கல்லூரி என்றாலும் அந்த கூட்டம் முற்றிலும் பெண்களுக்கானது என்பதால் மாணவியர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். ஊரின் சிறப்பு பெண் மருத்துவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடைபெற, சிறப்பு விருந்தினர் பேச்சு அடுத்தது என அறிவிக்கப்பட்டது. அந்த பெண் மருத்துவரும் தன்னை யார் என்று மாணவியரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, பெண்களின் தற்போதைய நிலை, சமுதாயத்தில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், எப்படி அவர்கள் வாழ்க்கையை கடக்க வேண்டும் என்பன பல விவரங்களை விளக்கினார்.
அதில் ஒரு பகுதியாக மாணவியரின் அம்மாக்களின் வயது மற்றும் அவர்கள் தங்கள் மகளை எப்படி நடத்துகிறார்கள் என கேட்டார். பல மாணவியரும் எழுந்து நின்று தங்கள் அம்மாக்களின் நிலையை சொல்ல, குழலியும் இது தான் சமயம், தன் அம்மாவை பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தன் அம்மாவை பற்றி சொல்ல நினைத்தாலும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது. மாணவியர், சில நேரங்களில் தங்கள் அம்மா கோபமாகவும் சோர்வாகவும் எரிச்சலாகவும் இருப்பதாக சொன்னார்கள். மாணவியர் பேசி முடித்ததும் அதற்கான விடையை மருத்துவர் தெரிவித்தார்.
“பெண் பிள்ளைகள், குழந்தை பருவம் முதல் முதியவள் ஆகும் வரை பல நிலைகளை கடந்து வரவேண்டி இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் ஏமாற்றத்தை எதிர் கொண்டு வாழ வேண்டியுள்ளது. அம்மாக்களுக்கு சிறுவயதில் தங்களுக்கு கிடைக்காத பாசம், அரவணைப்பு, ஏமாற்றம், தான் விரும்பிய பொருள் கிடைக்கப் பெறாமை என பல செயல்கள் இருந்திருக்கக் கூடும். பல பேர் தங்கள் மனதில் உள்ளதை பிறரிடம் பகிராமல் மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பார்கள். உங்களின் அம்மாக்களின் நிலையும் அப்படித்தான் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏதோ ஒரு காரணம் அவர்களை பாதித்திருக்கலாம். நீங்கள் அவர்களிடம் சற்று பொறுமையாக பேசிப்பாருங்கள். அவர்களுடைய அனுபவம் உங்களுக்கு பாடமாக இருக்கவும் வாய்ப்புள்ளது.”
“ தன்னுடைய இயலாமையின் காரணமாக கூட நீங்கள் சொன்ன குணங்கள் உங்கள் அம்மாவிடம் தென்படலாம். அவர்களுடைய நடவடிக்கைகளில் மாற்றம் உண்டு என்றால் அது கண்டிப்பாக உங்கள் அம்மா “மெனோபாஸ்” வயதில் உள்ளார் என்றே கொள்ளலாம்.” என்றார். உடனே ஒரு மாணவி தன் கையை உயர்த்தி தனக்கு ஒரு கேள்வி இருப்பதாக சொல்ல, அவளை வெகுவாக பாராட்டினார் சிறப்பு மருத்துவர். “இது தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம். நமக்கு ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது நிவர்த்தி செய்து கொண்டு நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.
மேலும் கையை உயர்த்திய மாணவியிடம் கேள்வி கேட்குமாறு சைகை செய்ய, ” மேடம்! எங்க அம்மாவை போல நானும் என்னுடைய மெனோபாஸ் சமயத்தில் அப்படித்தான் நடந்து கொள்வேனோ?” என்று கேட்டாள். அதற்கு “அது உன் கையில் தான் உள்ளது. இப்போது உன் அம்மாவின் நடவடிக்கை உனக்கு தவறாக தோன்றலாம். மேலும் நீ அவர்களை போலவே எதிர்வாதம் செய்கிறாய் அல்லது அவருக்கு பிடிக்காத செயலை செய்கிறாய் என்றால், உன் அம்மாவின் செயல் இன்னும் தீவிரமாகி விடும். நீ சற்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். நீயும் உன் அம்மா போல் தொடர்வாய் என்றால் பிற்காலத்தில் உனக்கும் உன் அம்மாவின் நிலை ஏற்படலாம். ஆனால் அதற்கு தான் தற்போது யோகா மையங்கள் பல உள்ளன. அங்கு சேர்ந்து முறையாக யோகாவை கற்றுக் கொள். உன் வாழ்க்கை நந்தவனம் ஆகும்.” என்று சொல்லி அவள் கேள்விக்கு விடையாக, அனைத்து மாணவியருக்கும் நீண்ட ஆலோசனைகளை வழங்கினார்.
இன்னொரு மனைவி கையை உயர்த்தி, ” மேடம்! நான் காலையில் ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி கம்ப்யூட்டர் கிளாஸ் போய் ஒன்பது மணிக்குள் கல்லூரிக்கு வந்து, மீண்டும் கல்லூரி விட்டவுடன் நான் பகுதி நேரமாக வேலை செய்கிறேன் என்பதால் நான் வீட்டிற்கு செல்ல இரவு மணி ஒன்பது ஆகிவிடும். ஆனால் என் அம்மா என்னை பார்த்து எங்கே ஊரை சுற்றிக் கொண்டு வருகிறாய்? என கேட்கும் பொழுது எனக்கு செத்துவிடலாம் போல் தோன்றும். அதற்கு நான் என்ன செய்வது? யோகாசனம் செய்ய எனக்கு நேரம் கிடையாது. நான் என்ன செய்வது?” என தவித்தாள். இதைக் கேட்டதும் தன் சிரிப்பை உதிர்த்து, “தற்கொலை என்றும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. அது மேலும் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். தற்கொலை எண்ணத்தை விட்டு விடு. உன் அம்மாவின் மீது தப்பு இல்லை. இந்த நாகரீக உலகில் பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளுக்கு நிகராகவே இருக்கிறார்கள். சில நேரம் அவர்கள் பாதை மாறி விடுகிறார்கள். தகவல் தொடர்பு சாதனங்களால் பெண்கள் சீரழிக்கப்படுவதை நாம் நடைமுறையாகவே காண்கிறோம். தினமும் அரை மணி நேரம் யோகாவிற்காக ஒதுக்கி விடு. ஒவ்வொரு நாளும் கல்லூரியில் என்ன நடந்தது என்பதை உன் அம்மாவிடம் ஒளிவு மறைவு இல்லாமல் கூறிவிடு. அப்போது உன் அம்மாவிற்கு உன் மீது நம்பிக்கை வரும். அதுவும் இல்லாமல் நீ அந்த தாயின் நிலைக்கு வந்தால் தான் உன் தாயின் அருமையும் அவருடைய தவிப்பும் உனக்கு புரியும்.” என்று சொல்லி அம்மாணவியை சமாதானம் செய்தார்.
இப்படி வரிசைகட்டி நின்ற கேள்விகள் அனைத்திற்கும் தெளிவாகவும் அழகாகவும் மருத்துவர் பதில் சொன்னதை கேட்டதும் குழலியின் கண்கள் குளமாயின. இத்தனை நாள் அம்மாவை பற்றி தப்பாக நினைத்து விட்டோமே என்றும், இன்றைக்கு வீட்டுக்கு போனவுடன் கல்லூரியில் நடந்த எல்லா விஷயத்தையும் அம்மாவிடமும் அப்பாவிடமும் ஒப்பித்து விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தாள் குழலி. அவ்வாறே எல்லா விஷயங்களையும் அவள் தன் பெற்றோரிடம் சொல்ல, குழலி பேசி முடித்ததும் குழலியை தனியே அழைத்து சென்ற குழலியின் அப்பா குமார், “அந்த மருத்துவர் சொன்னது உண்மைதான். அன்று உன் பாட்டியும் நம்மோடு தான் இருந்தார். உன் பாட்டியும் இந்த வயதில் இப்படித்தான் நடந்து கொண்டார். உன் அம்மாவிற்கு, கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை. தகப்பனாரும் இல்லை. அந்த ஏக்கமே தற்போது கோபமாக மாறிவிட்டது. உன் அம்மா தற்போது மெனோபாஸ் நிலையில் இருக்கிறாள் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் நானும் உன் அம்மா எது சொன்னாலும் அவளுக்கு எதிராக வாதம் செய்வது கிடையாது. உனக்கு அது புரிய சில காலம் ஆகும்.” என சொன்னான் குமார். இதைக் கேட்டதும் தன் அப்பா பெண்களின் நிலையை புரிந்து கொண்டு, தன் அம்மாவிற்கு ஜால்ரா அடிப்பது சரிதானே என நினைக்க தோன்றியது குழலிக்கு.
இப்படியாக தினமும் தன் கல்லூரி முடிந்து வந்தவுடன் எல்லாவற்றையும் பெற்றோரிடம் நடந்தவற்றை சொல்வாள் குழலி. ஒருநாள் குழலி இப்படி ஒப்பித்து செல்ல, குமார் தன் மனைவியிடம், “நாளைக்கு நம்ம குழலி காலேஜ் விட்டு வரும்போது இந்த பஞ்சை உன் காதில் வைத்து அடைத்துக் கொள். அவள் பேசி முடித்தவுடன் எடுத்து விடு.” என்று ஆலோசனை சொல்ல, அதை தற்செயலாக குழலி கேட்க, தன் அப்பாவை அவள் முறைக்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். “சும்மா சொன்னேன்” என்று அப்பா குமார் அசடு வழிந்து குழலியை தேற்ற ஒரு வழியாக சமாதானம் ஆனாள் குழலி.
வெளிப்படையான பேச்சு, செல்வோரின் மனத்தை வெற்றிடம் ஆக்கும். மேலும் வெண்மையாக்கும். கேட்பவரின் மனதையும் தூய்மை ஆக்கும்.

No comments:
Post a Comment