"அன்று பூத்த ரோஜாப்பூ" சிறுகதை by Veena Sankar
தேவை இல்லாத ஒரு பொருளை தேவைப்படும் ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் பிறக்கும் சந்தோஷமும் தேவை பூர்த்தி அடைவதால் வாங்கியவருக்கு தோன்றும் உணர்வும் சொல்லி மாளாது.
வர்ஷினிக்கு ரோஜா செடி என்றால் மிகவும் பிடிக்கும். தன் வீட்டு மாடியில் வண்ண வண்ண ரோஜா செடிகளுக்கு இடம் ஒதுக்கி தோட்டம் அமைத்து இருந்தாள். அதிலிருந்து துளிர்க்கும் இலை முதல் பூக்கும் பூ வரை அணு அணுவாக ரசிப்பாள். தினம் பூக்கும் ஒரு பூவை எடுத்து கடவுளுக்கு சூடி மகிழ்வாள். இன்னொரு பூ பூத்தால் அதை அவள் பார்க்கும் நபருக்கோ அல்லது பூவை விரும்புபவர்களுக்கோ கொடுத்து மகிழ்வாள். அதற்கு மேலும் பூக்கும் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு பார்த்து பார்த்து ரசிப்பாள். தலைக்கு மேல் வேலை இருந்தாலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் தன் தோட்டத்தை பார்க்காமல் வர்ஷினிக்கு அன்று இரவு தூக்கம் வராது.
வர்ஷினியின் நெருங்கிய தோழியின் மாமனார் முடக்குவாத நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அலைபேசியில் அழைத்து அவள் தோழி சொல்ல, தன் வேலைகளை சீக்கிரமாக முடித்துக் கொண்டு அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றாள்.
எப்போதும் கடுப்பான தோற்றத்துடனும் சிடு சிடு என பேசும் தோழியின் மாமனார், அன்று தான் அமைதியாக படுத்திருந்ததை வர்ஷினி பார்த்தாள். வாய் திறந்து பேச முடியாமல் அவர் திணறிக் கொண்டு இருப்பதை பார்த்ததும் அவளுக்கு ஏதோ போலாகி விட்டது. அவர் எதோ சொல்ல வருகிறார் என்பதையும் ஓரளவுக்கு வர்ஷினி தெரிந்து கொண்டாள். ஆனால் அவரின் மௌனமொழி அவளுக்கு புரியவில்லை.
ஒரு சமயம் தன் தோழி வீட்டிற்கு வர்ஷினி செல்லும் பொழுது, அவள் தோழியை பற்றி இவளிடம் அவள் மாமனார் குறை சொல்ல, வர்ஷினி சென்ற பின்னால் அவளை பற்றி அவள் தோழியிடம் குறை சொன்னது, அவள் தோழி மூலம் வர்ஷினி தெரிந்து கொண்டாள். வயதானவர்கள் என்றால் ஏதாவது புலம்பிக் கொண்டிருப்பதும் அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதும் புதிதல்ல. தன்னைப் பற்றி அவள் மாமனார் சொன்னது உண்மையில்லை என்று தெரிந்ததால் வர்ஷினி மௌனமாகவே இருந்தாள். அதனால் தான் தன்னை பற்றி குறை சொன்ன போதும் தோழியின் மாமனாரை, காண மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.
அவரை காண செல்லும் போது தன் வீட்டு ரோஜா செடியில் அன்று பூத்த ரோஜா பூவினை கொண்டு சென்று அவரிடம் கொடுத்தாள். அவரிடம் அதன் இதழ்கள் ஒவ்வொன்றாக வாடி உதிர்வதற்கு முன் அவர் சரியாகி விடுவதாக தோழியின் மாமனாருக்கு தைரியம் சொன்னாள். ஆனால் தோழியின் மாமனாரோ, வர்ஷினியை தான் கடிந்து, குறை சொல்லிப் பேசினாலும் அவள் தன் மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாமல், நடந்த கசப்பான சம்பவத்தை மறந்து தன்னைப் பார்க்க வந்திருக்கிறாள் என்பதை நினைத்தும் தன்னை நொந்து கொண்டார். வர்ஷினியின் இனிமையான பேச்சும் மனதும் தனக்கும் அமைய முதல் முறையாக கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.
மறுநாளும் மருத்துவமனைக்கு சென்ற வர்ஷினி, தோழியின் மாமனார் விரும்பிப் படிக்கும் எழுத்தாளரின் புத்தகத்தை அவர் காதருகே வாசித்து காட்டினாள். இவ்வாறாக தினமும் ரோஜாப்பூடன் வந்து, புத்தகத்தையும் வாசித்துக் காட்டினாள் வர்ஷினி. மருத்துவரின் ஆலோசனையால் அவர் செயலில் முன்னேற்றம் கண்டு மறுநாள் வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர் சொன்னார்.
அவர் முகத்தில் தவழ்ந்த சந்தோஷமும் அவருடைய பேச்சும் தெளிவாக இருப்பதை வர்ஷினி உணர்ந்தாள். மறுநாளும் ஒரு ரோஜா பூ பறித்து, அவரை காண மருத்துவமனைக்கு சென்றாள். வர்ஷினியைப் பார்த்ததும் தான் அவளை மட்டும் அல்லாமல் பிறரை புண்படுத்தி பேசியதற்கு தன்னை மன்னிக்கும்படி அனைவரிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்தார் வர்ஷினி தோழியின் மாமனார்.
தான் செய்த செயலுக்காக வர்ஷினி இடம் மன்னிப்பு கேட்க, அதை தான் மறந்து விட்டதாக வர்ஷினி சொல்ல தான் அவருக்காக கொண்டு வந்திருந்த ரோஜா பூவினை அவரிடம் நீட்டினாள்.
மறுபடியும் இந்த பூவின் இதழ்கள் உதிரும் வரை தான் இங்கே இருக்க வேண்டுமா என தோழியின் மாமனார் செல்லமாய் கோபத்தோடு வர்ஷினியைப் பார்த்து கேட்க, அந்த பூ அதற்காக கொடுக்கப்படவில்லை. இவ்வளவு நாள் அவரை நன்றாக பார்த்துக் கொண்ட அந்த செவிலி பெண்ணுக்கு கொடுக்குமாறு வர்ஷினி சொல்ல, நிம்மதி அடைந்த தோழியின் மாமனார், அந்த ரோஜாப்பூவினை செவிலி பெண்ணிற்கு கொடுத்து அவளை வாழ்த்தினார். ரோஜா பூவினை வாங்கிக்கொண்ட செவிலி பெண்ணோ தனக்கு இதுவரை யாரும் தன்னுடைய செயலுக்காக வாழ்த்தியது இல்லை என்றும் ரோஜாப்பூ கொடுத்ததற்கு அவருக்கு நன்றி சொல்லியும் மகிழ்ந்தாள்.
உதிர்ந்த இதழ்களை பூக்களாக மாற்ற இயலாது. ஆனால்
எதிர்க்கும் பகைவனையும் நம் அணுகுமுறையால் மாற்றலாம்.

No comments:
Post a Comment