Thursday, July 25, 2024

பால் அபிஷேகம் by Veena Shankar

 


பால் அபிஷேகம்


சமந்தாவிற்கு கடவுள் பக்தி மிக அதிகம். ஒவ்வொரு கிழமையிலும் குறிப்பிட்ட கோயிலுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஞாயிற்றுக் கிழமையில் மட்டுமே பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் கோயிலை தவிர்த்தாள். ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு செல்லும்போதும் அர்ச்சனை செய்யும் போதும் ஏதாவது பூ, பழம் என்று கொடுத்து அர்ச்சனை செய்வாள். அதுவே சிறப்பு என்பது அவளுக்கு தெரியும். அன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கமாக செல்லும் மாரியம்மன் கோயில் அபிஷேகத்திற்கு பால் கொடுக்க எண்ணி முதல் நாளே மறுநாள் பால் அதிகம் வேண்டும் என்று பால்காரரிடம் சொல்லி இருந்தாள். மறுநாள், பதிவாக வாங்கும் பாலுக்கு ஒரு பாத்திரமும் கோயிலுக்கு என ஒரு தூக்கு சட்டியும் வைத்து உள் வேலையாக அவள் சென்ற நேரம் பார்த்து பால்காரர் வர, பாத்திரத்தில் மட்டும் பாலை விட்டு தூக்கு சட்டியை எடுத்துக் கொண்டு வெளியே போவதை பார்த்து பால்காரர் என்ன செய்கிறார் என்பதை பார்த்தாள். கோயிலுக்கு என தனியாக பாலை இன்னொரு கேனில் வைத்திருந்தது கண்டு ஆச்சரியப்பட்டாள். 


 மாரியம்மன் கோயிலுக்கு சென்று பால் செலுத்தி சிறப்பாக நடைபெற்ற அபிஷேகத்தை பார்த்து வீட்டிற்கு வரும் வழியில் தன் எதிர்வீட்டு அக்காவிடம் பால்காரர் பற்றி பெருமையாக பேசினாள். "என்னதான் இருந்தாலும் நம்ம பால்காரர் சாமிக்கு தனி பால் கொண்டு வந்து ஊற்றுகிறார். பரவாயில்லை" என்று சொல்ல, " போடி ! போ! அது கவர் பால். பசும் பால் கிடையாது. அதுவும் இல்லாமல் கவர் பாலுக்கு ஒண்ணுக்கு ரெண்டா தண்ணிய விட்டா பசும்பால் போல இலக்கமாக இருக்கும். எப்பவும் அவர் அப்படித்தான் செய்வார் . அதனால் தான் நான் சுவாமி அபிஷேகத்திற்கு பால் வேண்டும் என்று சொல்லாமல் நித்தியபடிக்கு வாங்கும் பாத்திரத்திலே வாங்கி சொம்பில் விட்டு சாமிக்கு கொடுப்பேன்" என்று சொன்னதும் சமந்தாவிற்கு தூக்கி வாரி போட்டது. பால் காரர் மேல் அவளுக்கு கோபம் வந்தது. வீட்டிற்கு வந்து தன் கணவனிடம் விஷயத்தை சொல்ல, தான் அந்த தண்ணி பாலுக்கு எப்போதும் கொடுக்கும் அதே காசு கொடுக்கப் போவதில்லை கொஞ்சம் குறைத்துத்தான் கொடுப்பேன் என்று சொல்லவும் அவள் கணவன் அவளை ஏற இறங்க பார்த்து , " நீ குரைத்தாலும் காசை குறைச்சி கொடுத்தாலும் நீ செய்வது தப்பு. சாமிக்கு கொடுக்கும் பால் என தெரிந்தும் பால்காரர் இப்படி செய்கிறார் என்றால் அது பாவம் . அவர் செய்யும் பாவத்தில் நீயும் பங்கு கொள்ளப் போகிறாயா? எனக்கு தெரிந்து அவர் கேட்கும் பாலுக்கான காசை கொடுத்து விடு !" என்று தீர்க்கமாய் சொல்லி நகர்ந்தான். " அட! ஆமா! இது எனக்கு தெரியாம போச்சே" என்று நினைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் வந்தவள் இனி பக்கத்து வீட்டு அக்கா சொல்வது போல செய்ய வேண்டும் இல்லையேல் தன் கணவன் முன்பே சொல்லியிருந்தது போல ஏதாவது ஒரு ஏழை குழந்தையின் வயிற்று பசியாற்ற வேண்டும் என முடிவும் எடுத்தாள்.


 இருந்தாலும் அம்மனுக்கு செய்த பால் அபிஷேகம் அவள் கண்முன்னே நின்றது. இதற்கு பின் சமந்தா முடிவில் மாற்றம் இருக்கும்?


 மாற்றங்கள் நமக்கு சாதகமாக அமைந்தால் சிறப்பு. பாதகம் என்றால் நம் அணுகுமுறையை மாற்றுவதே சிறப்பு.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...