அன்றொரு நாள் பேருந்தில்
நான் எப்போதும் நெடுந்தூர பயணத்திற்கு ரயிலில் செல்வது தான் வழக்கம் என்றாலும் தவிர்க்க முடியாத சில நேரங்களில் பேருந்திலும் பயணம் செய்பவள் . அன்றும் ஒரு முக்கிய நிகழ்சசிக்காக நான் பேருந்தில் பயணம் செய்ய வேண்டி பஸ் நிலையத்திற்கு செல்ல , அங்கே நான் போக வேண்டிய இடத்திற்கான பேருந்தும் நின்றிருக்க அருகில் நின்ற நடத்துநரிடம் விசாரித்த பிறகே அந்த பேருந்தில் ஏறி அமர்ந்தேன். சற்று நேரத்தில் பேருந்து புறப்பட நடத்துநர், சரியான சில்லறை தந்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள பணித்தார். ஆனால் அப்போது தான் சம்பளப் பணம் கையில் வந்தது போல ஒவ்வொருவரும் ஐநூறு ரூபாய் தாளை அவரிடம் நீட்ட, கடுப்பானார் அவர். இருந்தாலும் முடிந்த வரை சில்லறையை சரியாக திருப்பி கொடுத்தார்.
அனைவருக்கும் கடிந்து கொண்டு சில்லறை கொடுத்ததால் என்னிடம் வரும் போது எனக்கும் சில்லறை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் நான் என்னிடம் இருந்த ஐநூறு ரூபாய் தாளை அவரிடம் கொடுக்க, என்னிடம் மட்டும் நூற்றி ஐம்பது ரூபாயை சரியாகக் கொடுக்கு படி கூற, மறு வார்த்தை பேசாமல் நானும் இருநூறு ரூபாய் தாள் தான் உள்ளது என அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கியவர் ஐம்பது ரூபாய் சில்லறையை பின்னர் வாங்கும் படி சொல்லி அவர் தன் இருக்கைக்கு சென்றார்.
எதிர் வந்த நிறுத்தங்களில் பல பேர் ஏற, இவர் பயணச்சீட்டை கொடுப்பதும் ரூபாயை வாங்குவதுமாக இருந்தார். அவர் முன் பின் வந்து செல்லும் போது நான் அவரை பார்க்க அவரும் தன் திசையை என் பக்கம் பார்த்தால் என் பாக்கியை திருப்பி கொடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை.
ஒரு கட்டத்தில் பேருந்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய , நினைவாற்றலில் கொஞ்சம் சிறுத்து போயிருக்கும் நான், அவரிடம் ஐம்பது ரூபாயை எப்படி கேட்பது என்ற அவலாதி என்னிடம் தொற்றிக் கொண்டது. நான் ஏதும் கேட்டு அவர் திருவாயிலிருந்து ஏதாவது கேட்க கூடாத வார்த்தைகள் வந்து விடுமோ என்ற அச்சம் வேறு என்னை உறுத்த , கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு நிலைக்கும் என்ற நம்பிக்கையில் நான் அமைதியாய் இருந்தேன்.
"உன் காசு தானே! நீ கேட்கலாம். இதில் என்ன வெட்கம் வேண்டியிருக்கு?" என்ற உங்கள் கரிசன வார்த்தை எனக்கும் கேட்காமலில்லை.
அவர் விரலிடுக்கில் ஒருசில ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருந்தது என்பதை நான் நன்கு அறிவேன். இருந்தாலும் ஓர் கூச்சம். சரி இறங்கும் போது சொல்லி வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டேன்.
ஒரு வழியாக கூட்டம் குறைய ஆரம்பிக்க, அவரே என்னிடம் வந்து புது ஐம்பது ரூபாய் தாளை கொடுத்தார்.
என் நினைப்பு சரி தானே? கஷ்டப்பட்டது ஏதும் நிலைக்கும்.
மேலும் என்னிடம் ஐம்பது ரூபாயை திருப்பி கொடுக்கும் போது நான் கேட்டவுடன் நீங்கள் தான் முடிந்தவரை சில்லறை கொடுத்தேர்கள். மற்ற எவரும் என் பேச்சை சட்டை செய்யவில்லை. நெடுந்தொலைவு பயணம் என்றால் நடத்துநர் சில்லறை தந்தே ஆக வேண்டும் என்ற நினைப்பு பயணியரிடம் உண்டு. போன் பே, ஜி பே போடுங்கள் என்றாலும் மலைக்கிறார்கள் என்றும் தன்னிடம் இருந்த நோட்டுகள் யாவும் கிழிந்திருந்ததால் எனக்கு அதை கொடுக்க விருப்பமில்லை என்று சொல்லி சென்றார்.
வராதது வந்தது போல் உணர்ந்து அவர் மனசாட்சியை வெகுவாய் ரசித்தேன். உள் மனதில் அவரின் நிலையை எண்ணி இனி முடிந்த வரை சரியான சில்லறையை நடத்துனரிடம் தர முடிவு செய்தேன்.