அனைவருக்கும் வணக்கம்,
ஐம்பது எழுத்தாளர்களின் விதவிதமான சிறுகதைகளை தன்னுடைய இயல்பான வாழ்க்கை அனுபவத்துடன் இணைத்து எழுதியுள்ளார் எஸ் .ராமகிருஷ்ணன். ஆனந்த விகடனில் வாராவாரம் தொடராக வந்த அனைத்தையும் விகடன் பிரசுரம் ஒரு தொகுப்பாக" கதாவிலாசம் " புத்தகமாக வெளியிட்டுள்ளது.
கதை உணவு போல சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட்டிருக்கிறது நம் தமிழ் மரபில், அது மட்டுமில்லாமல் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மச்சம் போல அதை யாவரும் தேடிக் கண்டறிய வேண்டியது என்கிறார் ஆசிரியர்.
ஒரு கதையைப் படிக்க விருப்பமுள்ளவர் ஒரு நாள் ,இரண்டு நாள் அல்லது ஒரு வாரத்திற்குள் படித்து முடித்து விடுவார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் அதை உருவாக்க எத்தனை பாடுபடுகிறான் என்பதை எஸ்.ராவின் எழுத்துத்தில் உண்மையாக உணர முடியும்.
ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது போல ,அதைப் பெற்றெடுத்ததோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு குழந்தையும் வளர்க்க ஒரு பெற்றோர்கள் படும் பாட்டை போல ,அது ஒவ்வொருவர் கையிலும் ,ஒவ்வொரிடமும் தன்னுடைய கருத்துக்கள்,கனவுகள் சென்றடையும் போதும், அதைப்பற்றி வரும் விமர்சனத்திற்காக ,தான் கண்ட உணர்வுகளையும் மற்றவரிடம் பெறுவதற்காக ஏங்கி காத்துக் கொண்டிருக்கிறான்.
எழுத்தாளர்களின் கதை என்று சொல்வதை விட அவர்களுடைய அனுபவமாகத்தான் இருக்க வேண்டும் .அந்தக் கதைகளை படிக்கும் பொழுது நம்முள் உண்டாகும் உணர்ச்சிகளை பார்க்கும் பொழுது அதை நேரில் கண்டால் மட்டுமே இவ்வாறு அதை ரசித்து எழுத முடியும் என்றும் உணர முடிகிறது.
அன்றாட வாழ்வில் இருக்கும் மனிதர்களின் கனவு, காதல்,ஆசை ,வேதனை ,அவமானம் ,கோபம் ,தாபம், பசி ,கடன் , வறட்சி ,வெற்றி ,தோல்வி ,லட்சியம் ,உறவுகள் ,செல்லப்பிராணி, நிலம் ,மரம் ,தண்ணீர்,காடு ,வளங்கள், நிலா ,சூரியன் ,இயந்திரம் ,பரிகாரம்,செல்வம் ,வறுமை ,கடமை,ஞானம், மறதி ,தனிமை ,சாமி,புறக்கணிப்பு,வேசம், கோயில், வீடு ,வீரம்,சோகம்,கதவு, பேய் ,மோகம் ,கானல் ,மருத்துவம், பட்னி ,வெளிச்சம் ,இருள் ,ஜாதி ,இசை, பழி ,பாவம் ,நண்பன் அனைத்தும் சேர்த்து நாடி நரம்புகளால் பின்னப்பட்ட உணர்ச்சி வெள்ளம் தான் கதாவிலாசம். ஆசிரியர் சொல்லுவது போல பிறக்கும் போது மட்டும் கதை கூறப்படவில்லை இறக்கும் தருணங்களிலும் நமக்கு கதை சொல்லியே வாழ்வை முடித்து வைக்கிறார்கள்.
பரிகாரத்தை படிக்கும்பொழுது என்னை அறியாமல் கண்ணில் இருந்து தண்ணீர் வந்தது உறவுகள் மறந்த உணர்ச்சியை அதில் வரும் யானை காட்டும் பொழுது மெய் சிலிர்த்தது.
"எலும்பில்லாத நாக்கு" துடிக்க,
"நெடு வழி பயணம் "தொடர,
"தென்னாடு உடையான்" பார்க்க ,
"கல் தடம்" மாற,
"தனிமையின் நிறம்" இல்லை ,
"நினைவு முகம்" யாரோ ,
"நிழல் குதிரை" மறந்து,
"குருதிக் கடன்" வேண்டா,
"மிதந்து செல்லும் கனவு" பறக்க,
"கயிற்று ஊஞ்சல்" ஆட,
"ஈரக்காற்று" குளிர ,
"எழுத்துப்பிடி" வேண்டும்,
"தீராக்குறை" போக
இவை அனைத்தும் படிக்கும் பொழுதே மனதை ஏதோ செய்தது.
கடைசியாக பாரதியாரின் வரிகளோடு முடித்திருந்தார்
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்,உயிரை வலிமையுறச் செய்வோம் ,உள்ளத்தை உறுதி செய்வோம்.வாழ்வும் இலக்கியமும் வேண்டுவது இதைதான்.

Nice vidya.getting inspired by your explanations.
ReplyDeleteThank you Sakthi 😊
ReplyDeleteSuper Vidhya
ReplyDeleteThank you Akhila 🙏
ReplyDelete