கேள்வியும் நானே
பதிலும் நானே
சிந்தனையில் பூக்கும்
பக்குவமும் என்னுள்ளே
தனிமையில் இருக்கும் போது தாங்கும்
நபர்களும் உண்டோ
தவிப்பில் வெறுப்பும்
சேருமே
நிர்பந்தத்தில் எடுக்கும் முடிவும் பலன் தாருமோ?
வாய்த்தது பூ என்றாலும்
பூத்தது பூவல்லவே
பூவென்றால் சாந்தமிருக்கும்
மகரந்ததைதை காப்பது போல் காவல் கிடக்கும்
இது ஏதும் கிடைக்காத நானும் இங்கே
வெறுமையிலும் தனிமையிலும்
தயக்கம் தந்த மயக்கமா?
மனைவியின் இழப்பால் நேர்ந்த கதியா?
தேவைக்கு கூட கை நீட்ட தெரியாமல் வளர்ந்த விதமா?
பிள்ளைகளிடம் கூட அது தொடருமா?
பசிக்கு சோறு கிடைத்தாலும்
அது
அன்போடும் பாசத்தோடும்
பரிவோடும் பரிமாறப்படுமா?
ஆளுமை உள்ள உலகில் தள்ளாடி நினைவுகளை சுமப்பதும் சாத்தியமா?
சிலாகித்து பழகிய மனத்திற்கு வெறுமையும் தேவை தானா?
துணையுடன் பேசிய
காலங்களில் சண்டையிட்டதும்
அதுவே பின் காதலாய் மாறியதும் அடுத்தவர் யாருக்கும் புரியுமா?
யாத்திரை பயணத்தில் கூட நித்திரை கொள்ளாத
நிலையும் வேண்டுமா?
நிமிர்ந்தால் தெரிவது அவளே!
கண்ணயர்ந்தால் கூட கனவிலும் அவளே!
கரிசனம் கொள்ள பலர் இருந்தாலும் தரிசனம் கிடைக்குமா அவளின்?
பெருமூச்சு கூட வர மறுக்கிறது துணை அவள் என் உஷ்ணத்தை ஏற்க இல்லாததால்
சாத்திரம் படித்தால் மட்டும் போதுமா?
மனைவியின் அன்பையும் படிக்க வேண்டாமா?
தாயிடம் மட்டும் சேரும்
உறவுகளும் உணர்வுகளும்
தந்தையிடம் அண்ணியப்பட்டு நிற்பதும் ஏனோ?
பத்திரத்தைக் கூட பத்திரமாக வைத்து பாதுகாக்க
மனைவியின் மனம் எனும் புத்தகத்தை படிக்க அல்ல புரட்டிக் கூட பார்க்க மறந்ததும் ஏனோ?
இதயம் பிரிந்த பின்னால்
உதயமாகும் அறிவிற்கு
ஆதாயமும் உண்டோ?
சமுதாயமும் தூற்றுமே
அதில்
நியாயமும் உண்டே!

No comments:
Post a Comment