மனவலிகளை பிரதிபலிக்கும் முகக் கண்ணாடி, காணும் நபருக்கு மட்டுமே
ஏன்?
எப்படி?
எதற்கு?
யார்?
யாரால்?
யாருக்கு?
என்ற கேள்விகளை
கேட்டும் பதில்
கொடுக்காத கள்வன் இவன்
அவனை கடிந்தாலும்
இழப்பு நமக்கே!
ஒன்று நம்மால் உதிர்ந்த ரூபமாய்
இல்லை
நம் மனதை
உதிர வைக்கும் ரூபமாய்
பதிவு செய்ய முடியாத காட்சிகள்
அரங்கேறும் இவன் முன் மட்டும்
இவனை நிழல் என்று சொல்வதா?
காட்சி என்று சொல்வதா?
இரண்டும் நம் பிரதிபலிப்பே!
நிழல் என்றால் பின் தொடர வேண்டும்
காட்சி என்றால் நிலைக்க வேண்டும்
கண்ணாடி
மொழியின் குரல் மட்டும் மௌனம்
இவன் முன்னே
நம் நிஜத்தின் பிம்பமாய்
இருந்தாலும்
அவரவர் வனப்பு
இவன் முன்னே
சொல்லும் மிடுக்கு
பாகுபாடு கொள்ளாது
இவன் தேவை
எவர் இல்லத்திலும்
உள்ளத்திலும்
நிஜத்திலும்
எதிர்மறை கிடையாது
இவனிடம்
ஒரு பக்கம் மட்டும்
காண முடிவதால்
மனதின் கண்ணாடி முகம்
முகத்தின் கண்ணாடி இவனே!
பிறர் நம்மை காண்கையில்
தெளிவு பிறக்க இவன்
வேண்டும் நித்தமும்
பல தடவை காண
நம் வாழ்வை சீர்படுத்த
இவனும் காரணமோ?
-Veena
கண்ணாடி
உன்னைக் காணாமல் செல்வாரில்லை!
நின்னைப் பாராத பாவையில்லை!
உன்னைக் காணாத நாளில்லை!
நீ இல்லாத வீடில்லை, கடையில்லை!
கண்ணாடி உன் முன்னாடி நாள்தோறும்,
தன் வனப்பைக் கூட்டத் தமக்கை தேடினாள்;
சலிப்பின்றி சதா காலமும் சகோதரன் நாடினான்;
பொட்டிட்டு பெருமிதமடைய அம்மா அனுகினாள்;
மழமவவென மழிக்க அப்பா உற்று நோக்கினார்;
விழப்போகும் பல்லின் ஆழத்தை தம்பி தடவினான்;
நரைமுடியை மறைக்க மறக்காமல் அத்தை அளந்தார்;
தொப்பையை மறைக்க மாமா பல கோணங்களில் திரும்பினார்.
சுவற்றில் ஒய்யாரமாய், கைப்பையில் ஒரு ஓரமாய்
எத்தனை உருவங்கள் வரினும்,
எத்தனை வடிவங்கள் பெறினும்,
எத்தனை தேவைகள் தரினும்,
எத்தனை தடவை நாடினும்,
எத்தனை துண்டுகள் ஆயினும்,
உன் கடன் பணி செய்தலே எந்நேரமும்;எவராயினும்; எதுவாயினும்!
அனைத்தும் உனக்கு சரி சமமே!
அனைவரும் பெறின் நமக்கு வரமே!
- Akhiladevi
காண்பவை யாவையும் அழகே உன்னில்,
சில நேரம் சலித்துக்கொள்வார் உன் முன்,
சில நேரம் அழுவார்,சிரிப்பார்,நெளிவார், பல முகங்கள் கொண்டாலும் ஒரு முகம் மட்டுமே நிஜம்,எண்ணத்தில் தோன்றும் நிழலை எவ்வளவு அலங்கரித்தாலும், நிஜத்தை காட்டும் கண்ணாடியை கோபித்து என்ன பயன்!
- Vidhya