இன்றைய மினி கதை
காய்கறி வாங்கி வர கடைத்தெருவிற்கு கிளம்பினாள் முனியம்மா. ஒருவழியாக அனைத்தையும் வாங்கி கூடையை நிரப்பிக் கொண்டு தள்ளாடி தள்ளாடி வந்த அவள் , சற்றே இளைப்பாற கோயில் வாசற்படி பக்கம் அமர்ந்தாள். அப்போது மணி ஐந்தை தொட்ட நிலையில் ஒருவர் பின் ஒருவராக ஒரு கூட்டம் வாசற்படியில் அமர்ந்த போது முனியம்மாளையம் ஏற இறங்க பார்த்தது. பின் அவர்கள் முனியம்மாளைப் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டிருக்க, அப்போது கோயிலிலிருந்து ஒரு பக்தர் கூட்டம் வெளியே வர, முனியம்மாளின் கையில் வந்தவர் ஒருவர் வலுக்கட்டாயமாக பத்து ரூபாய் நோட்டை திணித்து சென்றார். ஒன்றும் அறியாதவளாய் அவள் விழிக்க,அதுவரை அவளை பார்த்து முறைத்த யாசகர் கூட்டம் பொங்கி எழுந்து, முனியம்மாளை யார் எவர் என விசாரிக்க, அதற்குள் முனியம்மாளும் நடந்ததை உணர்ந்து விருட்டென்று எழுந்தாள். மேலும் தன்னை விசாரித்த அந்த கூட்டத்திடம் தான் இளைப்பாற உட்கார்ந்ததாகவும் அவர்களுக்கு போட்டியாக வரவில்லை என்பதை உணர்த்தி தன் கூடையுடன் நடையைக் கட்டினாள் முனியம்மா.

No comments:
Post a Comment