காண அரிது
அன்று மாலை என்னவோ சுகமான காற்று வீச, திருமண விசேஷங்களுக்கு சென்று வந்த அசதியில் சுந்தர் தன் வீட்டு திண்ணையில் அப்படியே படுத்து உறங்கி விட்டான். அப்போது சுந்தரின் வீட்டு வழியே வந்த ராஜா, அவன்பக்கம் வந்தான். பக்கம் வரவும் தான் தெரிந்தது சுந்தர் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று . அலைபேசியில் சினிமா பாட்டை ஓட விட்டு அப்படியே அவன் உறங்கி விட்டதாய் யூகித்தான் ராஜா.
வெளிச்சம் அதிகம் இருந்ததால் தன் கைகளை குறுக்காக வைத்தாலும் ஏதோ ஒரு வெளிச்சம் அவன் தூக்கத்தை கெடுக்க , அதை மறைக்க வேண்டி தன் அலைபேசியை வைத்து அது விழாமலிருக்க ஒரு குச்சியை முட்டு கொடுத்து நிற்க வைத்திருந்தான் என்பதை அறியாத ராஜாவோ, சுந்தரை லந்து பண்ணுவதற்காக அவன் அலைபேசியை மெல்ல எடுக்க முயல, பதறிப்போய் விழித்தான் சுந்தர். சட்டென்று அலைபேசியை நிற்க வைத்திருந்த குச்சியில் சொருகியிருந்த தேன் மிட்டாயை லபெக்கென்று விழுங்கினான்.
" என்னடா! என்ன முழங்கின? " என்று பயந்தான் ராஜா. அதற்கு சுந்தரோ " தன் வாயை மெல்ல திறந்து " தேன் மிட்டாய்" என்று காட்டினான். " ச்சே! என்னமோ ஏதோ என்று நான் பயந்து விட்டேன். உன்னுடைய விலை உயர்ந்த அலைபேசியை விட இந்த தேன்மிட்டாய் உனக்கு பெரிதாக போய்விட்டதா?" என ராஜா கேட்க ,
" ஆமாண்டா! இப்போதெல்லாம் புதிதாய் வரும் இனிப்பு வகையால் இந்த பாரம்பரிய மிட்டாய்கள் குறைந்தும் ஏன் ஒரு சில மிட்டாய்கள் அழிந்தும் போய்விட்டன என்பது உனக்கு தெரியும் தானே! இதுவும் போன மாசம் நம்ம சசி பொண்ணு கல்யாணத்துல தாம்பூல பையில போட்டு கொடுத்தாங்க இல்ல. அதை பத்திரப்படுத்தி வைத்து சாப்பிடுகிறேன்" என்று சொல்லவும் இவன் என்ன பைத்தியமா என எண்ணினான் ராஜா. அவன் முழியை பார்த்ததும் சுந்தர் தொடர்ந்தான். " நம் பள்ளி பருவத்தில் இதை நாம் சாப்பிடாத நாள் இல்லை. இன்னும் கல்கோணா , கமர்கட்டின் சுவை எல்லாம் நினைக்கும் போது வாயில் உமிழ்நீர் சுரக்கிறதே. ஒன்றிரண்டு காசாக சேர்த்து வைத்து ஒவ்வொரு நாள் ஒவ்வொருவரின் முறை என வைத்து நாம் இதை ருசித்து சாப்பிட்டு இருக்கிறோம். அதையெல்லாம் மறந்து விட்டாயா? " என கேட்க, சுந்தரின் அலைபேசியை தூக்குவதற்கு பதிலாக இந்த தேன் மிட்டாயை எடுத்திருக்கலாமோ என்று மனதிற்குள் நினைத்தான் ராஜா.
தற்போது புதியவை எவை வந்தாலும் அதை நாம் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் பழயவை சிறந்தவை என்றால் அவைகளை சுவீகரிப்பதில் நமக்கு சந்தேகம் ஏன்?



















