நெகிழி என்னும் நான்
ஓர் ஆலையில் பல வடிவங்களில் என்னை தயாரித்து அழகாய் அடுத்த ஆலையிடம் விற்று விடுவர். அவர்கள் ஆலையில் தயாரானவற்றை என்னுள் அடக்கி விடுவர். பிறகென்ன அங்கே உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் நான் இடம் பெயர்ந்து செல்வேன். அப்போது எனக்கே என் மீது பொறாமை வரும். எத்தனை பேர் என்னை பயன்படுத்துவார்கள் என்றெண்ணி. மேலும் அங்கே என் மீது அவர்களின் விலாசம் அது இது என்று பலவற்றையும் ஒட்டியும் எழுதியும் என்னை அட்டைபெட்டியில் அடைக்க தயாராவர். அதில் இருக்கும் வரை நான் நன்றாக தான் இருப்பேன். என்னுடன் சேர்ந்து பிறந்தவர்கள் எல்லாம் திசைக்கு ஒருவராக பிரிந்து செல்லும் போது வருத்தமாக தான் இருக்கும்
வெவ் வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றாலும் கடைகளில் எனக்கு எல்லாம் தனி மரியாதை தான். என்னை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தாங்குவர் . தாகத்தோடும் என் சுவையில் மயங்கியவரும் மீண்டும் மீண்டும் என்னுள் இருக்கும் நீரையோ பானத்தையோ அருந்தும் போது பெருமையாக இருக்கும். அதுவும் கோடைக்காலம் என்றால் என் மவுசு தனி தான். இதுவரை சொகுசாகவே பயணப்பட்டு வந்த நான் மக்களின் தாகம் தீர்த்த பின் வீதியில் என்னை எறிவது தான் எனக்கு அவர்களிடம் வெறுப்பை உண்டு பண்ணுகிறது. சரி , நான் பயன்பட்ட பிறகு எறிய வேண்டியவன் தான் என்றாலும் ஓர் குப்பை தொட்டியில் போட்டால் குப்பையோடு குப்பையாக சேர்ந்து விடுவேன். மற்ற குப்பைகளோடு என்னை தரம் பிரித்து ஒதுக்கி விடுவர். ஆனால் இந்த மக்களோ என்னை விளையாட்டு பொருள் என்று நினைத்து கழிவு நீர் ஒடையிலும் சாலையிலும் எறிந்து விடுவதால் கழிவு நீர் ஓடை அடைத்து கொசுக்கள் உற்பத்திக்கு வழி செய்கிறது. சாலையில் வீசப்படும் நான் வாகனங்களில் மாட்டிக் கொண்டு 'சரட் சரட் ' என்ற சத்தத்தோடு பந்தாடப்படுவேன். ஆனால் நடந்து செல்வோர் என்னை சற்றே கையில் அல்ல காலால் என்னை ஓரப்படுத்தினாலும் நான் ஏன் என்று கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால் அழகான என் உருவம் அழிந்து போவது எனக்கு சற்று வருத்தமே. என்னை வடிவமைத்தவரை எண்ணும் போதும் மனம் சங்கடப்படுகிறது. ஆம். இப்போது உள்ள நிலையில் என் உருவத்தில் புதுமையை புகுத்தினால் மட்டுமே மக்களால் நான் ஈர்க்கப்படுவேன். அதற்கு எனை உருவாக்கியவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது இந்த மக்களுக்கு எப்போது புரியப் போகிறதோ? இன்னும் என்னை உருவாக்காமல் இருந்தால் உசிதமே. ஏனெனில் என்னுள் அடைத்து வைக்கும் பானத்தில் நான் உருவாக்கப்பட்ட விதத்தில் சில பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து அது மக்களுக்கும் போய் சேரும் போது தீங்கு விளைவிக்க கூடும். எனவே என்னை தவிர்த்து பழைய முறையை கையாண்டால் படிப்படியாக என் தேவை குறைந்து போகும். அதனால் உற்பத்தி குறைந்து நான் அழிந்தே போவேன். என்னாடா, எல்லோரும் வாழ நினைக்கையில் நான் மட்டும் அழிய நினைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதற்காக நானும் அப்படியே இருக்க முடியாதல்லவா! சில நாட்கள் வாழும் எனக்கே இது தவறு என்று தோன்றுகிறது. மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்போடு நான் சொல்கிறேன் .
ஒன்று அழிய அங்கே மற்றொன்றுக்கு வழி பிறக்கும். புதுமை பிறப்பது வேண்டும் பழமை அழியாமல், பிறருக்கு தீங்கு இல்லாமல்.
இப்படிக்கு
உங்கள் நெகிழி

No comments:
Post a Comment