செல்ல அம்லு
பஜாரில் உள்ள முக்கிய கடையுள் ஏறி இறங்கி விட்டாள் நித்யா. அவள் தேடிய பொருள் கிடைக்கவில்லை. "பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் போது மட்டும் தான் வாங்கி வைப்போம். அதுவும் தேவைக்கு மட்டுமே. முன்பெல்லாம் ரொம்ப டிமாண்ட் இருந்துச்சு, இப்ப எல்லாம் நோட்டு புத்தகத்தில் தானே எழுத வைக்கிறாங்க" என்ற பதில் கடைக்காரரிடமிருந்து வந்தாலும் அவள் தன் தேடலை கைவிடவில்லை. இன்னும் சில கடைகளில் விசாரிக்க, கடைசியாய் ஒரு சிறிய கடையில் அவள் தேடியது தொங்கிக் கொண்டிருந்தது. ஆம். அவள் தேடிய சிலேட்டும் அதன் இணை பலப்பமும் கிடைத்தது. அதை வாங்கி கொண்டு எல்லை இல்லா ஆனந்தத்தோடு வீட்டிற்கு வண்டியை விரட்டினாள்.
மறுநாள் காலை சரஸ்வதி பூஜை என்பதால் அன்றே தன் புத்தகத்தோடு தான் வாங்கி வந்த சிலேட்டையும் வைத்தாள்.
மறுநாள் சாமிக்கு பூஜை செய்து முடித்ததும் அவள் செல்ல அம்லுவை சாமி முன் உட்கார வைத்து, கையில் சிலேட்டையும் பலப்பத்தையும் கொடுத்து முதலில் அதை சரியாக பிடித்துக் கொள்ள செய்தாள்.
ஆனால் அம்லுவோ அதை பிடிக்க திணறினாள். பின் நித்யா தானே அம்லுவின் கையை பிடித்து அந்த சிலேட்டில் "அ,, ஆ...." என்று எழுதினாள் . எழுதி எழுதி வடிவம் மாற அதை அழித்து மீண்டும் எழுதி கொடுத்து தானாகவே அம்லுவை எழுத பழக்கினாள். இது எழுதி முடிப்பதற்குள் அம்லுவுக்கு தூக்கம் தூக்கமாய் வந்தது. இருந்தாலும் ஒரு வாரத்திற்குள் தமிழ் எழுத்துகளை எழுதினால் மட்டுமே தான் புதியதாக வாங்கி வைத்திருக்கும் நோட்டு புத்தகத்தை தருவதாக அம்லுவிடம் சொல்லியிருந்தாள் நித்யா. சரியென்று தலையாட்டி கொண்டே படுக்கையில் சாய்ந்தாள் அம்லு.
நித்யா நினைத்தது போலவே அவள் முயற்சியால் தமிழ் எழுத்து பயிற்சி இனிதாய் சிலேட்டில் முடிந்தது. நோட்டில் எழுதுவது என்றால் அம்லுவுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் முதலில் நோட்டில் எதையும் சரிவர எழுத முடியாமல் சற்றே திணறித்தான் போயிருந்தாள் அம்லு . அதற்காக தான் சிலேட்டில் எழுத பயிற்சி கொடுத்தாள் நித்யா. மறுநாள் புது நோட்டில் எழுதப் போகிறோம் என்ற குஷியில் டி வி முன் அமர்ந்திருந்தாள் அம்லு.
அடுத்த நாள் அந்த புது நோட்டில் சில வார்த்தைகளை முன்னமே எழுதி வைத்து அதை அம்லுவிடம் கொடுத்து எழுத சொல்ல, அதை அம்லுவும் ஆசையாய் வாங்கி எழுத தொடங்கினாள். நித்தம் இரண்டு பக்கங்கள் அம்லு எழுதி நித்யாவிடம் காண்பிக்க, வார்த்தைகள் வாக்கியங்களாய் மாறி, பத்திகளாய் உருப்பெற்றது. அம்லுவின் விரல்களும் சற்று பலம் பெற்றதாய் உணர்ந்த நித்யா, மேலும் அவளுக்கு சிறு சிறு கணித பயிற்சியும் கொடுக்க ஆயத்தமானாள். அம்லு எழுத எழுத நித்யாவின் கண்கள் பனித்தன .
பெண் கல்வி முடக்கப்பட்ட அந்த காலத்தில் எதையும் துணிச்சலாக எதிர் கொண்டு, பத்திரிகை ஒன்றில் பணியாற்றியவள் தான் இந்த செல்ல அம்லு. எத்தகைய விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தவள்.
ஆம். நித்யா படிப்பு முடித்து வேலைக்கு சேர்ந்த இரு வருடங்களிலேயே அவளுக்கு பிரமோஷன் கிடைக்க அந்த நேரத்தில் அவள் செல்ல அம்லு அம்மா, ஒரு விபத்தில் சிக்கி, மீண்டு வர முடியாத அளவிற்கு பக்கவாதத்தில் விழ, ஏற்கனவே தந்தையில்லாமல் தன்னை தூக்கி வளர்த்து ஆளாக்கிய தாயை விட எந்த வேலையும் தனக்கு பெரிதல்ல என உணர்ந்து அதை உதறி, சிறு இட்லி கடை ஒன்றை வீட்டிலேயே ஆரம்பித்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தாயையும் கவனித்து வந்தாள் நித்யா.
ஒரு நாள் நித்யா தனக்காக இப்படி இருக்கிறாளே என்று நினைத்து கண்ணீர் சிந்தி, தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அம்லு மெல்ல தன் கை கால்களை அசைக்க, அதை கவனித்த நித்யா, அன்றிலிருந்து தன் அம்மாவிற்கு சிறு சிறு பயிற்சிகள் கொடுத்து தற்போது அவள் நோட்டில் எழுதும் அளவிற்கு கொண்டு வந்து விட்டாள்.
நித்யா போல் மகள் அமைந்தது தன் அதிர்ஷ்டம் என அம்லு மனதில் அவ்வப்போது சொல்லி வந்தாள். உண்மை தானே? தன் அம்மாவிற்காக தன் வேலையை கூட விட்டு தன் படிப்பிற்கு சற்றும் சம்பந்தமில்லாத வேலையை தற்போது பார்க்கிறாள் நித்யா.
எத்தனை பேருக்கு இந்த மனம் வரும்? பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விட்டு திசைக்கு ஒருவராக பொருள் ஈட்ட சென்று, பொருளில் அன்பை தொலைக்கும் காலமு ம் இதுவே .
தேவைக்கு மீறிய எவையும் எப்போதும் எங்கும் ஆனந்ததை கொடுக்காது என்பது உறுதி.

No comments:
Post a Comment