Wednesday, April 8, 2026

பயணத்தில் ஓர் காட்சி by Veena Shankar

 


பயணத்தில் ஓர் காட்சி


நானும் எனது கணவரும் கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டி எங்களிடத்திலிருந்து பேருந்தில் பயணம் மேற்கொண்டோம். ரயில் பயணம் இதற்கு ஏற்புடையதல்ல என்பதாலும் ஒரே பேருந்தில் பயணம் செய்தால் சில மணி நேரங்கள் கூடுதல் ஆகும் என்பதாலும் முக்கிய இடங்களில் இறங்கி ஏறி அடுத்த பேருந்திற்காக தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் காத்து நின்ற வேளையில் ஒரு கார் காரர் எங்கள் பக்கம் வந்து நின்று "திருநெல்வேலி போக வேண்டுமா? வாருங்கள் வெறும் ஐம்பது ரூபாய் தான்" என்றார்.


 சற்று யோசித்து விட்டு இருவரும் ஆமோதித்து, காரின் பின் பக்கம் ஏறி அமர்ந்தோம். ஐம்பது ரூபாய் என்பது மலிவு தான் அதுவும் குளிரூட்டப்பட்ட காரில். அவர் அனுமதியோடு மதிய உணவையும் உண்டோம்.  


போகும் வழியில் ஓர் இடத்தில் கல்லூரி பெண் ஒருவளின் அருகே காரை நிறுத்தி "திருநெல்வேலி போகணுமா? வாம்மா ! ஐம்பது ரூபாய் தான் என்று சொல்ல, அம்மாணவி வர மறுத்தாள். வெயில் அதிகமாய் உள்ளது என்பதை காரணம் காட்டி இருமுறை அவளை வற்புறுத்தியவர் அவள் ஏற மறுத்ததால் காரை அவ்விடம் விட்டு நகர்த்தினார்.


பின் பக்கம் திரும்பி எங்களிடம் "பாருங்க! ஐம்பது ரூபாய்க்கு யாரு திருநெல்வேலிக்கு கொண்டு விடுவார்கள் ? வெயில் வேற அடிக்குது" என்றார். நாங்கள் அவருக்கு மௌனத்தை பதிலாய் தந்தோம்.


 அப்போது என்னவரிடம் எங்கள் மொழியில் "அந்த மாணவி ஏறி இருக்கலாம். அதான் நாம் இருக்கிறோமே ? என்ன பயம்? " என்று நான் சொல்ல, " நீ சொல்வது சரிதான். நாமும் கார் காரரும் கூட்டாளிகள் என்று அவள் நினைத்திருக்கலாம் அல்லவா? அவள் வர மறுத்ததும் சரி தான் " என்றார். ஆம் . நான் எப்படி இப்படி தவறாக நினைத்தேன் என்று யோசித்துக் கொண்டே என் மகளிடமும் இதை கண்டிப்பாக பகிர வேண்டும் என மனதினிலிட்டேன்.  


 எவர் வழியில் எவர் சரி என்பதை கணிக்க முடியாத காலத்தில் நாம் வாழ்கிறோம் என்றும் எண்ணிக் கொண்டேன். ஆனால் கார் காரர் நாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு சரியாக கொண்டு போய் விட்டார் என்பது மகிழ்ச்சி தான் என்றாலும் நானும் அப்பெண்ணை போல் தனியாக நின்றிருந்தால் காரில் ஏறி இருக்கமாட்டேன் என்பது தான் உண்மை .

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...