Tuesday, March 31, 2026

நெற்றிப்பொட்டு by Veena Shankar

 


நெற்றிப்பொட்டு 


எனை நான் கண்ணாடியில் நோக்க 

அங்கே உன் பிரவேசம்

என் பிம்பத்தில் உன் பிம்பத்தை சரி செய்கிறேன் நித்தமும் 

ஒருநாள் குங்குமத்தினால்

மறுநாள் செயற்கையாய் 

ஒட்டிக்கொண்டு

நிறைவு செய்வேன் நெற்றியை

அமாவாசையாய் இருந்த நீ இன்று காலப்போக்கில் 

கொசுவின் கால் அளவு சுருங்கி போனதென்ன?

அதுவும் பொறுத்தேன் 

ஆயினும் வெறும் நெற்றியாய் வலம் வரும் பெண்டிரை காண்கையில் ஈடுபாடு கொள்ள செய்யவில்லை 

அயல்நாட்டவர் போலே மனது எண்ணுவதால்

எதுவும் நிரந்தரமல்ல பூமியில்

இரவு - பகல், சூரியன் - சந்திரன் 

என்பது போலே

இன்றைய நாள்

சுருங்கியும் 

மறுநாள் விரிந்தும் 

சிலநாள் உருண்டும் 

பலநாள் நீண்டும்

இருக்கும் உன் உருவம்

வண்ண வண்ண சித்திரம் போலே 

நெற்றியில் வித்தை காட்டுகிறது

Monday, March 30, 2026

இன்றைய சம்பவம் by Veena Shankar

 


இன்றைய சம்பவம்


நான் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் இன்று எட்டாம் நாள் திருவிழா என்பதால் அதை கொண்டாட எண்ணி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து கோயிலுக்கு சென்று விழாவில் கலந்து கொள்ள நினைத்தேன். கோயிலுக்கு சென்று சாமியை பார்த்து விட்டு வீடு திரும்புகையில் எனக்கு சிறு தொன்னையில் புளியோதரை பிரசாதமும் கிடைத்தது. சிறு துளி வாயில் இட்டு பார்க்கையில் அது தேவாமிருதமாக இருக்க, அதன் ருசியில் மயங்கியவாறே வீட்டை நோக்கி நானும் நடக்க, என் கையிலிருந்த தொன்னையை அருகிலிருந்த சிறுவன் ஒருவன் பார்க்க, அவன் கையில் அதை கொடுத்து நடையை கட்டினேன். 


சாமி திருவீதி உலா வருவதற்கு முன் அனைத்து வீடுகளிலும் வாசல் தெளித்து கோலமிட்டு சாமிக்கு படைக்க பூ , பழம் சகிதமாக நிற்பர். எங்கள் வீடும் அங்கே இருப்பதால் ஒரே கோலாகலம் தான் மனதில் குதூகலத்தோடு. கொட்டு மேளம் இசைக்க, சாமியின் தரிசனம் மீண்டும் கிடைத்தது. சாமி எங்கள் வீட்டை கடந்ததும் எதிர்வீட்டு மாமியின் திருவாய் மொழிதளுக்காக காத்திருந்தேன். அவர் என்னை எப்போது கூப்பிடுவார் என்று நினைத்திருக்க ஏமாற்றமே மிச்சம். மாமி என்னை கண்டுகொள்ளாமல் வீட்டினுள் சென்று விட்டார். 


நானும் வீட்டிற்குள் வந்து என் அலைபேசியை பக்கத்தில் வைத்து அங்கிங்கும் அசையாமல் காத்து கிடந்தேன். அலைபேசியின் வெளிச்சம் தான் என் ஆசைக்கு வடிகால் கொடுக்கும். ஆஹா! அலைபேசியில் வெளிச்சம் வர உசாரானேன். அவசரமாய் எடுத்து பேசுகையில் அண்ணே! சாமி திருவீதி உலா புறப்பட்டாரா? என்று எதிர்முனையில் தெரிந்தவர் ஒருவர் கேட்க, ஒப்புக்கு சிரித்து பதில் கொடுத்தேன் .நான் காத்திருந்தது எதிர்வீட்டு மாமியின் அழைப்பிற்காக.


 முன்பெல்லாம் எங்கள் வீடு தேடி பிரசாதம் கொடுத்தவர் இப்போது வயது மூப்பு காரணமாய் ஒரு சில நேரம் அலைபேசியிலும் அழைப்பார்.


நான் எதிர்பார்த்தபடி சிறிது நேரத்தில் மாமியின் அழைப்பு வர, சமையற்கட்டு பக்கம் ஓடி போய் அலமாரியில் கவிழ்த்தப்பட்டிருந்த பாத்திரத்தை எடுத்து தயாராய் நிற்க, "அப்பா!! இன்று புளியோதரை கொஞ்சமாய் தான் வந்திருக்கு, தொன்னையில் எடுத்து வைத்திருக்கிறேன், வந்து எடுத்துட்டு போ " என்று மாமியின் குரல் சொல்ல, பாத்திரம் என்னை ஏளனமாய் சிரித்தது. இந்த மாமியை நம்பி கையிலிருந்த பிரசாதத்தை வேறு தானம் பண்ணிட்டேனே என்று என் உள் மனது சொன்னாலும் என்னிடமிருந்து வாங்கிய அந்த சிறுவனும் தனக்கு கிடைக்காமல் எனக்கு மட்டும் பிரசாதம் கிடைத்திருக்கிறது என்பதை எண்ணி பார்த்திருப்பான் தானே? கொடுத்ததில் எனக்கு பெரிய இழப்பேதுமில்லையே


எதுவும் எப்போதும் கிடைப்பதை விட எப்போதாவது கிடைப்பதில் தான் ஆனந்தம் அதிகம் இருக்கும் என்பதை முன்பே உணர்ந்திருந்தேன் நான்.

Sunday, March 29, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மனம் புண்பட்ட நேரத்தில் கூட 

அதை இதமாக்க

பதப்பட்ட இலைகளால் 

தயாரிக்கப்பட்ட தேநீர்

மெல்ல இறங்கும்

தொண்டையின் வழியே 

புது உற்சாகம் பிறக்க


 அவாவினால் பிறந்த தேநீரின் ஆவி

என் ஆவி குளிர வைத்து

அவாவினை நிறைவேற்றியது


ஆசையின் விளைவு


" சரி! இந்த பேச்சை இத்தோடு விடு" என்று சொல்லி விருட்டென்று எழுந்து அறைக்குள் போனான் விமல். " இப்ப என்ன சொல்லிட்டேன்? எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. என் வேலையும் கெடுது. கொஞ்சம் நான் கேரியர்ல மேலே வந்துக்கிறேனே? உங்களால எல்லாம் சிறப்பா செய்ய முடியும். ஆனால் நீங்க செய்யறது இல்லை நான் கொஞ்சம் ஸ்லோ தான். " என்று சத்தமாய் கத்தினாள் சுஜாதா. 


 "நீ என்ன கத்தினாலும் சரி, நீ பண்ணினது தப்புதான். என்ன கேட்டுட்டேன் பெரிசா?" என்று பதிலுக்கு உள்ளிருந்தபடியே தான் தப்பு செய்ததாக எண்ணி தன் அம்மாவை மனதால் கடிந்து கொண்டான். 


 பொண்ணு பார்க்க வரும்போதே இந்த கண்டிசன் போட்டு சரின்னு சொன்னா மட்டுமே கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சொல்லி இருந்தான் விமல்.


"அதெல்லாம் போக போக சரியாயிடும் ன்னு என்கிட்ட சமாதானம் சொன்னாங்க அம்மா. அதுவுமில்லாம அவ சின்ன பொண்ணுதானே, உன் ஆசையை தள்ளி வைத்து அவ ஆசைப்படி கொஞ்ச நாள் பொறுத்துக்கோ என்று தன் வருங்கால மருமகளுக்கு வக்காலத்து வாங்கினாள்" என்று மறுபடியும் விமல் சுஜாதா மேல் எகிற, 

" எனக்கு தெரியும் . இந்த ஆம்பளைங்களால ஆசையை அடக்கவே முடியாது" என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்கு போனாள். ஏதேதோ உருட்டும் சத்தம் கேட்டது. 


"இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!" என்றபடி இரு கோப்பையில் தேநீரை கொண்டு வந்து விமல் பக்கம் வைத்தாள் சுஜாதா. "இதை நான் கேட்கும் போதே செய்திருக்க வேண்டியது தானே?" என்றபடி இரு கப்பில் எதில் அதிகம் தேநீர் இருக்கிறது என்று ஆராய்ந்து அதை எடுத்தான் தேநீர் பிரியரான விமல்.

- Veena


உனக்கும் எனக்கும் மட்டுமே உரையாடல்,

அது ஒரு தவம்

தடங்கல் கூடாது

மௌன மொழி வழி

விழிகள் மூடி

உன்னை பருக 

கிடைக்கும் புத்துணர்ச்சி 

- Vidhya 



Saturday, March 28, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அன்பின் வழியில்

எதுவும் இன்பமே!

அறிந்தவர் நோக்கத்தில்

எதுவும் இயல்பே!


மனதால் கொண்ட சிநேகம்

காலத்தால் பேசப்படும்

அறிவு பேசப்படா நேரத்தில்

அன்பின் மொழி மட்டுமே

இயம்பும் வார்த்தை நீங்கலாக


 யாருக்கு யார் சொல்வது நன்றி?

ஒருவேளை உணவு கொடுத்ததற்கு

ஞமிலி 

குழந்தைக்கு சொல்லும் நன்றியா?

தன் தனிமை போக்கியவனுக்கு

குழந்தை 

சொல்லும் நன்றியா?

இல்லை கூட்டு சேர்ந்து

அடுத்தவரை கவிழ்த்த நினைக்கும் சங்கதியா?

இருக்காது

இருவர் மனதிலும்

வஞ்சம் இல்லை

வயதின் கண் 

நட்பு ஒன்றே பிரதானம் என்றும்

இவர்கள் மனதிற்குள்

- Veena 


God bless you!

நல்ல ஓடியாடி விளையாடு என்னை

விட்டுவிடு நிறைய வேலையிருக்கு

முதல்ல அந்த ரீல்ஸ் 

 முடிக்கணும் இல்லே ஜீலி

 திட்டுவா!

இவங்க கூட சேர்ந்து வாக்கிங் கூட

 போக முடியல ஒண்ணு மழை,

ஆன்லைன் கிளாஸ் வேற,

வளர்ந்துவிடாதே வீட்டு

 செல்லப்பிள்ளையா இருந்து விடு

 இல்ல ,புலம்பியபடி கடவுளை

 கூப்பிட வேண்டும்,அவரும் பிஸி

 எத்தனைய தீர்ப்பாரு!

இன்றைய முக்கிய செய்திகள்

 என்று 24/7 😇 கடைசில என்னையும்

 அவங்க மாதிரி ஆக்கிட்டாங்க 🙄

- Vidhya 


Friday, March 27, 2026

எவரிடம் எது காத்திருக்கிறது? by Veena Shankar

 



எவரிடம் எது காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை அழகு என்று நிரூபிக்க 
மலர் பூக்க காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை பிரமாண்டம் என்று நிரூபிக்க மலை காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை பலசாலி என்று நிரூபிக்க காற்று காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை எளிமை என்று நிரூபிக்க தண்ணீர் காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை சிறப்பு என்று நிரூபிக்க மழலையின் சிரிப்பு காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை கொடுப்பவன் என்று நிரூபிக்க அன்பு காத்திருக்கிறது?

எவரிடம் எவரும்
வெளிப்படையாக இருக்கும் வரை எதுவும்
 காத்து நிற்கும். 

படமும் கருத்தும் by winmeengal

 


Veena Shankar: 

உன் வாழ்வும் மரணமும் 

என் கையில்

நிலத்தில் வந்த 

உன் உயிர் மீண்டும்

 நீரை அடையும் வரை


 வகை வகையாய் நீர்நிலைகளில்

வளர்கிறாய்

அலங்காரமாய் தொட்டியில் நீந்துகிறாய்

 இறந்தும் கண் விழிக்கிறாய்

பசி ஆற்றுகிறாய்

மனிதனுக்கு மருந்தாகிறாய்

அழகாய் இருக்கும்

உன்னை ஆவலாய் உண்ண நினைக்கிறேன்

நான் காகை கூட்டமல்ல 

ஒன்றிணைந்து தின்ன

என் தேவை போய்

எவரும் ருசிக்கலாம்

உன்னை யாரும்

ருசிக்கும் வேளையில்

உன் பெரிய இனமும்

கடலில் மனிதனை

பதம் பார்க்கிறது

உன்னை உண்டு 

நான் சிறக்க

மனிதனை உண்டு

நீயும் பசியாருகிறாய்


 Akhila : 

*பூனையின் mind voice🤔*


இது....

நிஜ மீனா? AI மீனா??🤔


கண் முன்னே...

என் முன்னே...

கைக்கெட்டும் தூரத்தில்!

ஆயினும், நான் தொட மாட்டேன்‍‍ - நீ 

என் இரை அல்ல; ‍ 

நான் உன்னை வேட்டையாடவில்லை

யாரும் சாட்சி இல்லை தான்‍ - ஆயினும்

என் மனசாட்சிக்குத் தெரியும்!

Vidhya:

உனக்கும் பசி எனக்கும்

கண்கள் நோக்க

மனிதாபிமானமா, சுயநலமா

எது வெல்லும்?

இரண்டில் ஒன்று  விட்டுக்கொடுக்க

ஒன்று வெல்லும் 

 இல்லையேல் இரண்டும்

 மடியும்!


 



Tuesday, March 24, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அழகு உள்ள இடத்தில் ஆபத்தும்

அறிவு உள்ள இடத்தில் அகந்தையும்

நீ என்று சொல்லும் இடத்தில் அதிகாரமும்  

நான் என்று சொல்லும் இடத்தில் தன்னலமும் 

ஆதங்கம் கொள்ளும் இடத்தில் ஏமாற்றமும்

அன்பு கொடுக்கும் இடத்தில் அறிவீனமும் 

இருப்பது நிதர்சனம்

- Veena 

இரண்டும் ஓர் இனம்

ஒன்றில் மற்றொன்று 

எவ்வகையில் வேறுபடும்

பார்வையில் ஒன்று

வலிமையில் வேறு

அத்தனையிலும் வேறு

எதை கொண்டு இவை குணத்தில்

 பாகுபாடு, தொழிலை கொண்டே!

நண்பனும் எதிரியும் ஒன்றே

காலத்துக்கு ஏற்ப மாறும்,

இருவரும் தேவையே வாழ்வில்

 முன்னேற !

- Vidhya 

Monday, March 23, 2026

படமும் கருத்தும் by winmeengal

  


Veena Shankar: 

எண்ணத்தின் நிறைவே நிறைவு வாழ்வில்

 வட்டத்தின் சுற்றலில் புது வடிவம் முழுமை

முயற்சி கொள்ளும் முழுமை அடையும்

 

ஆதி யார் அந்தமும் யார் இங்கே?

இடும் முட்டைக்கு ஓர் 

கூடமைத்து பாதுகாத்து

புழுக்களாய் மாறும் வரை

உணவளித்து வளர்த்து

இறக்கைகள் முளைக்கும் வரை காத்திருந்து 

பறந்தோடும் பூச்சியே 

நீயும் உன் சக்தி

இதுவென காட்டுகிறாய்

புழு உனக்கே பறக்கும் சக்தி

கொடுத்த இறைவன்

அடிப்பட்ட மனதை

மட்டும் மாற்றும், ஆற்றும் கலையை மனிதனுக்கு 

சொல்லிக் கொடுக்க மறந்தானோ படைக்கும் முன்

சிறப்பு எப்போதும் நம் மீதே

பழி மட்டும் அடுத்தவருக்கானது என்ற 

எண்ணம் உள்ளவரை நாம் வானில் பறப்பது ஊர்தியில் மட்டுமே


Akhila: 

Few of my captions....

(1) Emerging Eminence 

(2) Motivation in the Air

(3) உடைத்தல் நல்லது- எழுந்து பறந்தால்!

(4) 1.2..3..Colourful Escape

(5) "Free"fly(Who named Butterfly 🤔🤔🤔🤪)

(6) Think..Break..Fly 🪰 🪁


 *அற்பப் புழு* 

அற்பப் புழு என்று எண்ணாதே!

உண்டு, கண்டு, வென்று, உடைத்து- 

நான் வெகுண்டு வந்தால் சூறாவளி🌬

நான் சிரித்தால் தீபாவளி✨️

நான் பறந்தால் திருடி😎- 

கட்டாயம் உன் இதயத்தை திருடுவேன்♥️

 மனமே பொறு....

மாயாஜாலம் நடக்கும் விரைவில்!!


 Divya C:

 Dont give up..Beautiful things take time😇


 Vidhya Nivash: 

வலி..வழி..வளி

அடைப்படுவது கடைசியில் பறக்கவே!

சின்ன சிறு வாழ்க்கைல அனைவரையும் மகிழ்வித்து செல்,

எட்டமுடியா இடத்தை எட்டி பிடிக்க பற

சிறகுகள் வலுவிழக்க பயணம் முடியும்!

வலிக்கு பின், வழி பிறக்கும் வளி என்னும் புது பாதை திறக்கும்!

Sunday, March 22, 2026

படமும் கருத்தும் by winmeengal



 Veena Shankar: 

கனா கண்டேன் தோழி


நானும் அந்த நாள் முதல் 

இந்த நாள் வரை

சன்னலோரம் அமர்ந்தே

என் வேதனையை கொட்டி கொண்டிருக்கிறேன்


என்னை ஏளனம் பேசியே

என் ஆற்றலை அடக்கி விட்டனர்


நானும் என் மூளையை 

சிறிதே முடக்கி விட்டு

ஏச்சு பேச்சுக்களை

 தவிர்த்து விட்டு 

நானும் எந்த இனம் என்று தெரியாமல்

மெல்ல என் உணர்வுகளை அடக்கி கொண்டு,


மீசை முளைக்குமா?

ஆண்மை புலப்படுமா?

என் உணர்வுகளுக்கு

 விடியல் கிடைக்குமா?

என்ற நினைப்போடு

இதோ இது நாள்

வரை கழித்து விட்டேன்


தோற்றத்தில் பெண்மையையும் 

உள்ளூர நெஞ்சந்தனில் ஆண்மகனின் கம்பீரதத்தையும் 

சுமந்து 

கொண்டிருப்பதோடு 


உறவுகளின் மத்தியில்

"அடங்காதவள்" என்ற

பெயரோடும்


ஆண் நண்பர்களோடு

உன் பெண்ணை

அங்கே , இங்கே பார்த்தேன் என்றும் 


அவள் ஆண் பிள்ளைகளோடு 

பழகுவது உனக்கு

 தெரியாமல் இருக்குமா?


என்று என் பெற்றவர்கள் மத்தியில் அடுத்தவர்கள் நெருப்பாய் கொளுத்தி போட


என் உடன் பிறந்தவனும் 

என்னை அன்னிய 

நபராய் பாவிக்க


"நான் யார்"? என்ற எண்ணம் 

தலைக்கேறினாலும்

என்னால் செய்ய முடிவது தான் யாது?


என்னை பெற்றவள் மட்டுமே

ஏதும் பேசாமல் மௌனம் காக்க,

என்னையே நான்

பல முறை கேட்டுக் கொண்டேன்


நான் பிறந்தது தான் குற்றமா?

என்னை படைத்தவனின் குற்றமா?

காலம் என்னை மாற்றியதால்  

அது காலத்தின் குற்றமா?

இல்லை 

காலம் என் துயரை துடைக்காமல்

காத்து நிற்பது குற்றமா?


பருவத்தின் வளர்ச்சி

உண்டெனில் அதுவும் என் கரங்களில் உண்டோ?


முடிந்தால் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்

இல்லையேல் என்னை

என் போக்கில் விட்டு விடுங்கள்

விற்று மட்டும் விடாதீர்கள்

என் உணர்ச்சிகளை

ஏளனம் காட்டி என்றென்றும்


இந்த சன்னல் மட்டுமே 

கண்டிருக்கிறது என் 

கண்ணீரை

சன்னல் திரைச்சீலை மட்டுமே

துடைத்திருக்கிறது

என் விழியோரக் கண்ணீரை


காலப்போக்கில் காற்றும் என் 

கண்ணீர் துடைக்க

நினைக்கையில் மீண்டும்

சுனாமியாய் அவதூறு எழ,


யாரும் அறிய வாய்ப்பில்லை

என் மனதின் வலியை


மீண்டு வா என்கிறது

என் மனது

மீண்டும் துரத்துகிறது

என் மாறுபட்ட உணர்ச்சி

மீள்வது பற்றி நினைக்கையில்

நீள்கிறது நாட்கள்


Akhila : 

படர்ந்து விரிந்த வானமே!!


நீ அளித்த தானம் - இன்று என் முற்றத்தில் தோரணமாய்✨️


விண்மீன்கள் என் கண் முன்னே நீந்த வரம் தந்தாய்🌟

நன்றிகள் பல🙏


அதோடு, எம் தோழியர்க்கு, 

மூன்று வரங்கள் தருவாயா?


புவியெங்கும் பூவையர்க்கு பேதைமை யகற்றி 

மேன்மை தருவாயா? 


அவளைக் கும்பிட வேண்டாம்..

அவளைக் கொஞ்சிட வேண்டாம்..

அவளைக் கொண்டாட வேண்டாம்..

அவளை மிதிக்க வேண்டாம்..

மதித்தால் போதும்- 

சகாவாக, சமமாகக் கருதும் சமூகம் தருவாயா?


புற அழகை புறந்தள்ளி,

பயத்தினை ஒரங்கட்டி,

மாய வலையினை அறுத்து,

சுயத்தோடு நயமாகப் பேசி, 

சுய மரியாதையோடு கைகோர்த்து,

வீரமும் விவேகமும் ஒரு சேர நடை போட, 

தெளிவும், தெம்பும் 

இரு கண்களாகத் தருவாயா?


-உன் குட்டித் தோழி🤹‍♀️


 Akhila :

நிலாவிடம்🤩


அன்புத் தோழனே!


நேற்று உன் வெற்றிடம் நிரப்ப, 

உன் சகாக்கள் துணையாக இங்கிருக்க,

தோரணமென ஆடிப்பாடி, அலங்கரித்தாலும்.....

என் மனம் உன்னையே நாட...

என் கண்கள் உன்னையே தேட...

போதும் இந்த நாடகம் மாதாமாதம்- 'அமாவாசை' எனும் பேரில்!


விரைந்து வா.. நாம் வேற்று கிரகமோ,

வேறொரு பிரபஞ்சமோ பறந்து செல்வோம்- 

எல்லா நாளும் "பௌர்ணமியாக்க"🥰


-அன்புத் தோழி❣️


 Akhila : 

Let me start...


 *தொங்கும் தாராக்களுடன் ஏங்கும் தாரகை* 


இன்று ஈகைத் திருநாளிலாவது ஆகாயம் ஏவுகணைகளின்று தப்புமா?


-அமீரகக் குட்டி


 Veena Shankar:

 மாப்பிள்ளைகள் வரிசை கட்ட, என் மனம் ஏனோ எனக்கான ஒருவனை தேடி

 கொஞ்சம் எட்டி பிடித்து இலக்கை அடைந்தால் முதல் நிலையை சீக்கிரம் பிடித்து விடலாம். கொஞ்சம் பக்கத்தில் உள்ளதை பற்றினால் மேலே செல்ல காலம் ஆகுமே!

எதிர்கால சிந்தனையில் படித்த இளம் பெண்

 எட்டிடுமோ வாழ்வு

தொங்குகுன்றன கனவுகள்

ஏங்குகிறது அதை அடைய


Vidhya Nivash:

 விடியலை தேடி

வானின் ஈகைக்காக!

ஒவ்வொரு விடியலும் சிலரின் ஈகையே!


சிலரின் ஈகையில் ஜொலிக்கும் நட்சத்திரம்!


தினமும் வரும் நட்சத்திரத்தை பார்க்க முடிந்தும் விலகி செல்லும் சிலர்,

 ஜன்னல் வழியாக உள்ளே வரமுடியாத வீடு,

அலங்கார விளக்கில் மட்டுமே ஜொலிக்கும் நட்சத்திரம்,

அருகில் இருந்தும் தொலைவில், தொலைவில் இருப்பது மறைவில்,

ஏராளமான வழியிருந்தும் விடியா வான்!

இவளின் ஆசைக்காக ஒளி வீச , இருளை நீட்டிக்க !

இப்படியே இருளை விருப்பும் உலகில் விடிந்தும் உறக்கத்திலே கழிய,யாரின் ஈகையோ இது!


 Veena Shankar:

 விடியலும் வேண்டுமோ?


ஏதும் அறியாதவரை 

என் மனதில் மகிழ்ச்சியே!

பற்பல விஷயங்கள் அறிந்து கொண்டபின்

மனிதர்களின் சுயநலம் தெரிந்து கொண்ட பின்

என் வாழ்க்கை

தலைகீழே


அறிந்து கொண்ட விஷயங்களால்

நான் வாதாட தான் கற்றேனா?

இது மட்டுமே விளங்கவில்லை


மண் தன் வளம் 

அறியாதவரை சிறப்பே!

அறிந்து கொண்டால் 

அதன் விளைச்சலை 

நேரடியாக கைப்பற்றிக் கொள்ளுமோ?


எதையும் அறிந்து கொள்ளாததும் 

அறிந்தும் அறியாமல் இருப்பதும் சிறப்பே!

Tuesday, March 17, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


 உயிர் எழுத்து


அகந்தையை ஒழிப்போம்

அறிவீனம் விலக்குவோம் 

ஆற்றலை அறிவோம்

ஆக்கம் அடைவோம்

இரக்கம் கொள்வோம்

இறைவனை வணங்குவோம் 

ஈதல் செய்வோம்

ஈரம் காட்டுவோம்

உரிமை கொடுப்போம்

உந்துதலாய் இருப்போம்

ஊக்கம் கொள்வோம்

ஊழ்வினை மாற்றுவோம்

எதிரியை மதிப்போம்

எதிர்காலத்தை சீராக்குவோம்

ஏமாற்றத்தை தடுப்போம்

ஏற்றம் தொடுவோம்

ஐயத்தை சிதைப்போம்

ஐவிரல்கள் இணைப்போம்

ஒழுக்கம் பேணுவோம்

ஒன்றிணைந்து  

உயர்வோம்

ஓதுவதால்

சிறப்போம்

ஓய்வினை தவிர்ப்போம்

ஒளடதம் குறைப்போம்


 "அ" வின் தொடக்கம்


அரிதாரம் இன்றி தோன்றும் முகம் சில சமயம்

அகம் காட்ட மறுக்குமே!


அவசியமானது என்று நினைக்கும் ஒன்று மனதில் 

அலட்சியம் காட்டுமே! !


அறியாமையால் செய்யும் செயல் உள்ளூர உழன்று

அடி வாங்க செய்யுமே!


அகந்தையில் உருவாகும் வார்த்தைகள் யாவும் அளவில்லா

அழிவை கொடுக்குமே!


அப்பழுக்கில்லா குணம்

எங்கும் எப்போதும்

அனைவரையும் ஈர்க்குமே!


அச்சத்தில் பிறக்கும் யாவும் சிறப்பு கொடுக்காது

அவசரமாய் மறையுமே!


அடுத்தது என்ன என்ற கேள்வி என்றும் செயலில்

அறிவீனம் விலக்குமே!


அதிசயிக்க வைக்கும் எதுவும் ஆராவாரத்தோடு

அமர்க்களப்படுத்துமே!


அழகாய் தோன்றும் காட்சிகள் யாவும்

அபரிமிதமான மகிழ்ச்சி கொடுக்குமே!


அசாத்தியமான செயல்கள் எதுவும் மனதில் 

அசை போட வைக்குமே!


"அ " வின் பிறப்பு மொழிகளின் தொடக்கம்


ஆண்டுகள் பல கடந்தும் நின்று வியாபிக்கும்


இயல்பாய் அறிவிக்கும் மொழியின் எளிமையை 


ஈர்க்கும் "ழ" கரம் என்றும் சிறப்பு இதனுள் 


உதவிடும் " ந" கரமும் கூட்டிடும் உச்சரிப்பை 


ஊக்கியாய் இருந்து கூர்ந்து பொருள் பட வைக்கும் 


எவருக்குமான ஆற்றல் மொழியினை அறியும் வேகத்தினிலே 


ஏற்றம் இல்லாத இடத்தில் மாற்றம் வெளிப்படா 


ஐயம் கொள்ளேன் இதில், எங்கும் சிறப்பே மொழிகளின் ஆதிக்கம்


ஒன்றும் என்றும் மறவா கற்ற கலையை


ஓங்கி உரைக்கும் மேன்மை கொடுக்கும்


உரைத்தது உறைந்தது மனதில் பனி போலே அதுவும் என் பணியே


காப்போம் மொழியை அறிய முற்படுவோம் நம் அறிவின் கண்


- Veena


"அ"


அறிந்திராத அந்த அறிவு-


ஆட்டிப்படைக்கும் அந்த அறிவு-


இல்லாததை மெய்யாக்கும் அந்த அறிவு-


இருப்பினும் பொய்யாக்கும் அந்த அறிவு-


பலர் உழைப்பை பன்மடங்கு குறைக்கும் அந்த அறிவு-


பலர் பிழைப்பில் கைவைக்கும் 

அந்த அறிவு-


அத்தனையும்

இயற்கையாகத் தோன்ற வைக்கும் 

அந்த அறிவு-


பட்டையை கிளப்பினாலும், 

நட்டத்தை மீட்டாலும்,

பட்டத்தை வென்றாலும்,

மனிதத்தை வென்றாலும்,

கணிதத்தை வென்றாலும்,

எத்தனை அவதாரம் 

எடுப்பினும், 


செயற்கை நுண்ணறிவாம் அந்த அறிவு-

இயற்கை ஆகாது!!

உப்புக்கல் வைரக்கல் ஆகாது!!!


- Akhila 


 எழுத்துகளின் வலிமை❤️💖


கருவறையில் இருந்த என்னை 'வெளியே வா...ஜெயிக்க!' என்று சீராட்டினாள் என் 🩷அன்னை✨


ஆண்டுகள் கடந்தும் அயராது தொடர்கிறேன் நம் தமிழை தூரதேசத்தில் இருந்தபடி...🩷✨


இயலாது என்ற சொல் துறந்து

முயற்சி, உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றால் நிரப்புங்கள் நம் உள எண்ணங்களை✨


ஈதல் சிறப்புதான்; அதனினும் சிறப்பு அந்நிலை அடைந்தவரை மீண்டும் மீண்டும் 🫴பெறும் இடத்திலேயே விட்டுச்செல்லாமல் வாழ்வில் சிறக்க உதவுதலே!!


தேடல்தான் பற்பல வினாக்களின் விளக்கங்களை நம்மிடம் சேர்க்கும் 💯

தேடலோடு தொடரலாம் அத்தனை பொழுதுகளிலும்🙏😇-ரேவதி சக்தி


- Revathy Sakthi 


அ என்ற எழுத்தில் அண்டமும் அடங்கும்,

ஆடியில் வீசும் காற்றும் தமிழ் மொழி

 பேசும்,

இப்போதும் எப்போதும்,

ஈரிதழ் ஒட்டியும் ஓட்டாமலும்  ,

உதடுகள் பிளக்க, 

ஊன்றிய முதல் மொழி

எம்மக்கள் கொண்டாடும் ,

ஏற்றம் பெற்ற மொழி ,

ஐயனும் ஐயையும்

சொல்லில் விளையாடிய மொழி,

ஒற்றுமையில் ஓங்கி உயர்ந்த ,

ஒளவியம் இல்லா  சிறப்புமிக்க மொழி, 

அஃதே எங்கள் தமிழ் மொழி!

-Vidhya 


சிந்தனை துளிகள் by Revathy Sakthi

 


முண்டாசுக் கவிஞன் மிடுக்கான எம் பாரதி!

பெண் அறிவை வளர்த்திடப் பெருமுயற்சி செய்த எங்களின் பாட்டன் பாரதி!

அகண்டிருந்த மகாகவியின் அறிவிற்கு ஆகாயம் பணிந்ததம்மா!

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் எனக்குள்ளும் விதைத்துவிட்டாய்- அமரகவி பாரதி!

செங்கோலை வீழ்த்த எம் எழுதுகோலுக்கு உன்னால் அல்லவா சக்தி கிடைத்தது!

சாதிகள் தொலைத்து புதுயுகம் படைக்க

அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதி வழி அஞ்சாமல் வாழ

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் மொழியின் மகுடம் தந்தார்!


 வேடிக்கை மனிதரைப் போல- நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற 

பாரதீயின்🔥 வேதம் இந்த ஆண்டாளின் ஆண்டாண்டு கால முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் அச்சாணியாய் தொடரும் ஐயா!!!

ஆம்!-பெரிதினும் பெரிது கேட்டு

மானம் பற்றி

ரெளத்திரம் பழகி நான் அனுதினமும் திரிகிறேன்!

பாரதியே உன் போல் என் கண்களும் இரு சூரிய துண்டுகளுக்கு சமம்!


சொல்லிச் சென்றவர்கள் மத்தியில்

சொல்லிச் செய்தவன் எம் செந்தமிழ்த்தேன் பாரதி!

இறப்பு பற்றிய அச்சமில்லை நீ கண்ட புதுமைப் பெண்ணான எனக்கு!

சறுக்கி விழும் மனிதருக்கு 'சரித்திரமே நீதான்' என்றாயே பாரதி!

செய்வது துணிந்து செய்து

சொல்வது தெளிந்து சொல்லி

நாளைய தலைவர்களாகிய அத்தனை மாணவச் செல்வங்களையும் என் வழியாக அறிவாகிய 'பாரதி எனும் தீ' புகட்டி கற்பிப்பேன்!

இப்பொழுதும் எப்பொழுதும்🙏



Monday, March 16, 2026

கொசுவின் ராஜ்யம் by Veena Shankar

 


கொசுவின் ராஜ்யம்

என் மெய்யே சுளீரென்றது

என்னை நானே அடித்து 

வருத்திக் கொண்டதால் அதுவும் அவனாலே 

சில நேரம் செல்லமாய்

சில நேரம் ஆழமாய்

தீண்டினாலும் 

வெற்றி என்பது சம அளவே

ரீங்காரமிட்டவன் அவன் 

மடிந்த பாடில்லை

சிலநேரம் அவனை கொன்றும் வெற்றியில்லை

கத்தியில்லா யுத்தம் ஒன்று 

அரங்கேறியது தான் மிச்சம்

என் உறக்கத்தை கெடுத்ததால் 

என் உதிரத்தையும் இழந்தேன்

வலியும் கொண்டேன் 

நோயும் கொண்டேன்

அசைவில்லா நேரத்திலும்

என்னை அசையச் செய்தான்

மருந்து வைத்து விலக்கினாலும் 

மறவாமல் வாசல் வருவான்

அவனை சிறை பிடிக்க

முடியாமல் அடைபட்டேன் 

நான் அறை என்னும் கூண்டினுள் 

இவனை அடக்க வழி

தெரிந்தால்

கொஞ்சம் சொல்லிவிட்டு போங்க

நான் ஆழ்ந்த உறக்கம்

கொண்டு 

சுறுசுறுப்பாய் மாற 


இப்படிக்கு

கொசுவை அடக்க தெரியாதவன்

 

Sunday, March 15, 2026

பொருள் இரண்டு by Veena Shankar

 


பொருள் இரண்டு


பகவதிக்கு ஊர் வம்பு என்றால் அல்வா சாப்பிடுவது போல. பக்கத்தில் நாலு பேரை கூட்டி வைத்து கொண்டு புரணி பேசுவதும் இல்லாததை உண்டு என்று சொல்லி சாதிப்பதும் அவள் வழக்கம். அவள் நடவடிக்கைக்கு பயந்தே அவர்களும் ஜால்ரா அடிப்பார்கள். அவளுக்கு குழந்தைகள் இல்லாததாலும்

கணவன் காலையில் சீக்கிரமே வேலைக்கு செல்வதாலும் அவளுக்கு இது தான் முழு நேர பொழுது போக்கு.  


விதி வலியது தானே? அவள் தன் ஐம்பது வயதை தொட்டவுடன் செவிகள் இரண்டும் மந்தமாக, பிறரின் ஏச்சு பேச்சுக்கு சொந்தமாகிப் போனாள். பின் என்ன? இதனால் அடுத்தவரிடம் தன் வார்த்தையையும் சுருக்கினாள் பகவதி. இருந்தாலும் அடுத்தவர் உதட்டின் அசைவு கொண்டு அவர்கள் சொல்வதை தெரிந்து கொள்வாள். இதனால் அவளை சுற்றியிருந்த கூட்டங்கள் விலகின. ஆனால் பக்கத்து வீட்டு மாலாவின் மருமகள் லட்சுமி மட்டும் இவளிடம் கொஞ்சம் சைகை மூலமாக பேசுவாள்.


லட்சுமி கரும்பு ஆலையில் வேலை பார்ப்பதால் அவளுக்கு சர்க்கரை இலவசமாக கிடைக்கும். தன் தேவைக்கு போக மிகுதியாய் இருக்கும் சர்க்கரையை குறைந்த விலையில் அக்கம்பக்கத்தில் விற்று வருவாள்.  


இரு தினங்களுக்கு முன் பேச்சுவாக்கில் லட்சுமி, தன்னிடம் சர்க்கரை இருப்பதாக பகவதியிடம் சொல்ல, அதை தனக்கு விலைக்கு தருமாறு கேட்டாள் பகவதி . மேலும் அதற்கான விலை எவ்வளவு என்று பகவதி கேட்க, நூற்றி நாற்பது ரூபாய் என்பதை சைகையில் ஒன்று மற்றும் நாற்பது என்பதை பிரித்து பிரித்து காட்டினாள். அதனை தவறாக புரிந்து கொண்ட பகவதி, " ஒரு கிலோ நாற்பது ரூபாய் மிக அதிகம். கடையில் கூட நாற்பத்தைந்து ரூபாய் தான், நீ ரொம்ப அதிகம் சொல்கிறாய் " என்று சொல்லி அன்று என்னமோ லட்சுமியிடமே கத்த ஆரம்பித்தாள்.


" அச்சோ அக்கா! நான் மொத்தம் நாலு கிலோவுக்கு சேர்த்து நூற்றினாற்பது ரூபாய் என்று தானே சொன்னேன்" என்று உரக்க, விளக்கமாய் லட்சுமி சொல்ல, இம்முறை அவள் சைகையை விடுத்து அவள் உதட்டின் உச்சரிப்பை கண்டு கொண்டவள், "ஓ அப்படியா? " என்று கணக்கு போட்டு "அப்படியானால் கிலோ முப்பதைந்து ரூபாய் தானே ?" என்று கேட்க, லட்சுமியும் "ஆமாம்" என்று தலையசைத்து ஆமோதித்தாள்.


பேச்சு மட்டுமல்ல ஒருவரின் சைகை கூட அடுத்தவரால் தவறாக புரிந்து கொள்ளபடுகிறது என்பதும் உண்மையே!

Thursday, March 12, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

விலையில்லா அன்பில்

பற்றும் எதுவும் தூணே

பரிவு எங்கே? அன்பு அங்கே

பாசம் எங்கே? பற்றுதல் அங்கே 

பொறுப்பு எங்கே? கடமை அங்கே

வெறுப்பு எங்கே? விருப்பம் அங்கே

தனிமை எங்கே? சிந்தனை அங்கே 

மறதி எங்கே? மாற்றம் அங்கே 

மதி எங்கே ? சிறப்பு அங்கே

காதல் எங்கே? தவிப்பு அங்கே 

மறுப்பு எங்கே? தவிர்ப்பு அங்கே

 எதுவும் எங்கே? அதுவும் அங்கே

- Veena 


பற்றிக்கொள்ள இடமிருக்க, மனம் என்ன

 சொல்ல,

ஒன்றின் முதிர்ச்சி வருபவருக்கு உரம்,

வளர வேண்டிய, முக்கியமான சில 

 அம்சமாக இந்த புதிய உறவு மலர நேரம்

 போதும் ,பூக்கள் தானாக மலரும்..

- Vidhya 

Wednesday, March 11, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya



வண்ணங்களின் சங்கமம் 

எதற்காக இங்கே?

பண்டிகை கொண்டாடவா?

வாசலில் கோலமிடவா?

 மனதின் கோலத்தை

வெளிப்படுத்தவா?

அதனதன்  சிறப்பை 

வெளிக்காட்டவா?

மனிதர்களின் நிறம்

காணவா? 

இதில் சமாதானத்தின்

நிறம் மட்டும் அமைதியாய்

உள்ளது

எட்டா உயரத்தில்

- Veena

வண்ணங்களே எண்ணங்களின்

 கோர்வை ,

வண்ணத்தை கன்னத்தில் ஓட்டி

 விளையாட கெஞ்சும் கூட்டம் ,

சிந்திய வண்ண கலவையில்

 மண்ணும் மின்னும் , மகிழ்ச்சியின்

 வெளிப்பாடு வண்ணங்கள்!

- Vidhya 

Tuesday, March 10, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


முதல் இடத்தை அடைய வேண்டி

நடக்கும் மோதல்

மூளைக்கும் சுத்தியலுக்கும் இடையே

இதில் சிதைந்தது

என்னவோ மூளைதான்

மூளைக்கு எட்டிய

அறிவால் பெற

வேண்டிய இடம்

பேராசையால்

சிதைந்தும் போனதோ?


உன் காயங்களுக்கு

நீயே பொறுப்பு

சுத்தியலையோ சூழ்நிலையையோ

பழிக்காதே

முதலிடம் பிடிக்க

ஆசைப்படு

அதிகாரத்திற்காக அல்ல

பிறரிடம் அன்பு காட்ட

- Veena 

மூளை சலவை செய்ய 

தோற்றுபோன அரசன்!

ஆயுதம் கொண்டு

பணம் கொண்டு

ஜெயிக்க முடியாத நிலை ,

எதை எடுக்க அதன் கையிலே

 அழிவு..

புத்தியை தீட்ட ஆயுதமும்,

 காகிதமும் வேண்டா ,

வெற்றிக்கு ஆளுமை,விவேகம்

 இருக்க அனைத்தும் அதன்

 காலடியில்  கிடக்க 

 தலைநிமிர்ந்து நிற்கும் தலைவி!

- Vidhya 


Monday, March 2, 2026

இன்றைய நகைச்சுவை  by Veena Shankar

 


இன்றைய நகைச்சுவை 


திருமண நாள் 


அன்று ஞாயிற்று கிழமை மட்டுமன்றி எங்கள் திருமண நாள்

 என்பதால் நானும் என் மனைவியும் அருகிலுள்ள கோயிலுக்கு செல்லலாம் என முடிவு செய்து கிளம்ப தயாரானோம்.


எப்போதும் வார நாட்களில் மட்டுமே எங்கள் திருமண நாள் வரும். அதுவும் அவளுக்கு காலையிலும் எனக்கு இரவிலும் ஷிப்ட் அமையும். எனவே அன்று நாங்கள் தனித்தனியே கோயிலுக்கு செல்வது வழக்கம். அன்று கூட அலுவலகத்தில் விடுப்போ, அனுமதியோ கேட்க முடியாது. 


ஆனால் அன்றோ மிக சந்தோஷத்துடன் இருவரும் கிளம்பினோம். கோயிலுக்கு வந்து சுவாமியை கும்பிட்டோம். எப்போதும் சிறிது சத்தம் போட்டு சாமி கும்பிடுவது என் வழக்கம் என்பதால் சாமியிடம் " எங்களுக்குள் பிரியா வரம் வேண்டும்" என்றேன் நான். ஆனால் இது பக்கத்திலிருந்த என் மனைவிக்கு தவறாக காதில் விழுந்து விட்டது. " என்ன நான் இருக்கும் போது பிரியாகிட்ட போய் வரம் வேண்டும் என்று கேட்கிறீர்கள்?" என்று குய்யோ முறையோ என்று கூவினாள். நானும் "எங்களுக்குள்"என்ற வார்த்தையை தொண்டையில் முழுங்கி கொண்டதால், எவ்வளவு எடுத்து சொல்லியும் புரிந்து கொள்ளாமல் "நீ இரவு ஷிப்ட் போகும் போதே எனக்கு சந்தேகம் தான். நாளைக்கு நானும் உன்னோடு அலுவலகம் வருவேன். யாரு அந்த பிரியா என்பது தெரிந்தாக வேண்டும் என்று சொன்னாள்.


அப்புறம் என்ன ? இந்த வருடமும் நானும் அவளும் தனித்தனியே கோயில் பிரகாரம் சுற்றி வீடு வந்து சேர்ந்தோம்.


சாமி வரம் கொடுத்தாலும் இந்த ஆசாமியின் நாவில் சனி விளையாடியது என்று எண்ணி என்னை நானே நொந்து கொண்டேன்.

Sunday, March 1, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


கல்லில் கூட ஈரமுண்டு

முள்ளில் கூட மலருண்டு 

பல்லுக்கு கூட அரண் உண்டு

சொல்லில் கூட முரண் உண்டு

துள்ளலில் கூட சோகமுண்டு 

எதிலும் எதிர்ப்பதம் உண்டு

அதை அறிந்தவர் 

சிறப்பதுமுண்டு

- Veena 

பூவும் உண்டு முள்ளும் உண்டு,

எதை எடுக்க எதை கொடுக்க ,

அழகில் ஆபத்தும் உண்டு அதை

 காக்க இயற்கை கொடுத்த வரம்,

பிடுங்காமல் இருக்க குத்தாமல்

 இருப்பேன்.

- Vidhya 

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...