அன்புக்கு வேலி அவசியமா?
ஆயிஷா... கணவனின் வரதட்சணை கொடுமை தாளாமல் சபர்மதி நதியில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்.. ஹ்ம்ம்ம்.. உயிர்நீக்கும் முன் தெளிவான வீடியோ பதிவையும் ஏற்றியுள்ளார். இவ்ளோ தெளிவாகப் பேசியிருப்பதைப் பார்த்தால் தனிச்சையாக முடிவெடுக்காமல் நன்கு தீர யோசித்துத் தன் கணவனைப் பழிவாங்கவே இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவை எடுத்ததற்காக அவரைக் கோழை என்று பலர் தூற்றுகின்றனர். இத்தகைய நெருக்கடியான சூழலில் நாம் சிக்காததாலோ அல்லது தற்கொலை செய்யும் அளவு நம்பிக்கையின்றி துவண்டு போகாமல் நம்மை இறைவன் பாதுகாத்து வைத்திருப்பதாலோ ஆயிஷவின் முடிவை மட்டுமல்ல, எவருடைய முடிவையும் விமர்சிக்கும் தகுதியினை அடைந்துவிட முடியாது, இல்லையா? பிறரது முடிவுகளை விமர்சிப்பதை விடவும் அவற்றிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடங்களைக் கவனிப்பதே எல்லா வகையிலும் நன்மை பயக்கும்.
இந்த தற்கொலை விஷயத்திலும் நமக்குப் பாடமா? ஆம்.
இதில் நமக்கு இருக்கும் பாடம் இதுதான். ஆயிஷா தன் வாழ்வில் நிகழ்ந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான தன் கணவனைப் பற்றி மட்டுமே சிந்தித்திருக்கிறாள். பிரச்சினைகள் தரும் குழப்பங்களின் போது நமது முடிவெடுக்கும் திறன் திசை மாறுகிறது என்பது நமக்கு விளங்குகிறது. பிரச்சினைகளுக்கு யார் காரணமோ அவர்களைத் தான் அதிக முக்கியமாகக் கருதுகிறோம். ஆனால், உண்மையில் சீரான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் சமயத்தில் இது தவறு என்பது தெளிவாகப் புரியும். நம் வாழ்வு என்பது நமக்கானது. பிறருக்கு உதவுவதில் நமக்கு இன்பம் தான் கிடைக்க வேண்டும். மாறாக, நம் உதவியோ அருகாமையோ யாருக்கு விருப்பமில்லையோ அவர்களுக்காக ஒரு நொடியும் செலவழிப்பது நமக்கு அவசியமில்லை. விலகி வந்து அவர்களுக்காகப் பிரார்த்திப்பதோடு நம் அன்புக்கு வேலி அமைத்துகொள்ளலாம். பல சமயங்களில் இந்த விலகலே அவர்கள் நம்மைப் புரிந்து கொண்டு நெருங்கி வர உதவும். நமக்கு யார்மீது வெறுப்புள்ளதோ அவரையே, அவரது நடவடிக்கைகளையே உற்று உற்றுப் கவனித்துக்கொண்டிருக்கிறோம். நம் நலன் மீது அக்கறை கொண்டு அறிவுரை சொல்பவர்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒதுக்கி விலக வேண்டியவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே நம் நேரத்தையும் செயல்களையும் செலவழித்து மனநலத்தையும் உடல்நலத்தையும் சிதைத்துக்கொண்டிருக்கிறோம். சிந்திப்போமா? நிச்சயம் சிந்திப்போம். சிந்தித்து சிந்தனைகளைச் சீராக்கிக்கொள்வோம்.

நம் உதவியோ அருகாமையோ யாருக்கு விருப்பமில்லையோ அவர்களுக்காக ஒரு நொடியும் செலவழிப்பது நமக்கு அவசியமில்லை இந்த வரி👌👌அருமை,அழகான சிந்தனை 👏👏👏
ReplyDeleteமிக்க நன்றி வித்யா
Deleteதாஹிராபானு...ஆழமான கருத்து👌🕊👌
ReplyDeleteநன்றி காஞ்சனா
ReplyDelete