காற்றாக மாறி எல்லை கடந்து வானம் தொட்டு பருந்து போல் வட்டமிட ஆசை,
அதிகாலையில் மலரும் மொட்டு களிலிருந்து சிந்தும் தேன் ஆக மாற ஆசை,
மலை உச்சியில் மரத்தின் கிளையில் தலைகீழாகத் தொங்கும் குரங்காக மாற ஆசை,
சுட்டெரிக்கும் சூரியனுக்கு குடை பிடிக்க ஆசை,
இருள் கொஞ்சும் பொழுதில் நடு வானில் மிதக்கும் நிலவின் அருகில் நட்சத்திரமாக கண் சிமிட்டிட ஆசை,
வானவில்லின் வண்ணம் ஆக மாறி அருவிகளில் வழிந்தோடிட ஆசை,
வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் இல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுத்திட ஆசை,
மயில்போல காலில் சலங்கை கட்டி ஆட ஆசை,
குயில் போல இல்லை என்றாலும் கழுதை போல கத்த ஆசை,
மலர்களை மொய்க்கும் வண்டுகளை போல புத்தகங்களைக் மொய்க்க ஆசை,
பெண்ணுக்குள் ஆண், ஆணுக்குள் பெண் இது இயல்பு இவை இரண்டும் மத்தியிலும் அல்லாடும் உள்ளங்களின் கண்ணீர் துடைக்கும் கைக்குட்டையாக மாற ஆசை,
சத்தமில்லா கடலில் மிதக்கும் ஓடம் ஆக மாற ஆசை,
தூசி பறக்கும் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பறக்க ஆசை,
பால்போன்ற குழந்தைகளின் கண்களில் இருந்து வடியும் மையாக ஒழுக ஆசை,
பல பேர் பசி போக்கும் கோயில் பிரசாதமாக மாற ஆசை,
சில நேரம் நீதிபதிகளின் பேனா மையாக மாற ஆசை,
அம்மா அப்பாவிற்கு செருப்பாக மாற ஆசை,
என்னவரின் கைபிடித்து நெடுந்தூரம் மௌனத்தில் பேசி நடந்திட ஆசை,
தோழிகளின் தலையணையாக இருக்க ஆசை,
காதலன் காதலியின் கற்பனையாக ஆசை,
காற்றில் கரையும் கற்பூரமாகவும், ஆடி காற்றடித்தாலும் அசையாத கல்லாகவும் ஆக ஆசை,
மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோலாக நிற்க ஆசை,
வயது முதிர்ந்தும் சிறுபிள்ளை போல் நடக்கும் பிள்ளைகளை தமக்குப் பின் யார் காப்பார் என்று ஏங்கும் பெற்றோரின் தூக்கமாக இருக்க ஆசை,
இறக்கும் நாள் அறிந்து வாடும் உள்ளங்களின் படுக்கையாக மாற ஆசை,
ஆசை எனும் அருமருந்து இருப்பதாலே பலர் இன்று அசை போட்டுக் கொண்டிருக்கின்றனர் வாழ்க்கையை ....
இன்று பேச ,எழுத ,நடக்க ,சிரிக்க, அழுவ அனைத்து சுதந்திரமும் கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறி நான் நானாக இருக்கவே ஆசைப்படுகிறேன்!!!!


Superb
ReplyDeleteThank you Veena
DeleteVery nice.Each lines are àwesome.
ReplyDeleteThank you Sakthi
ReplyDelete