நன்றியுள்ளவன்
சிறு வயது முதலே அவனை எனக்கு நன்றாக தெரியும். வாய் பேசாதவன் என்றாலும் எனக்காக அவன் உயிரைக் கூட கொடுப்பான். சொந்தங்கள் எட்டி நிற்கும் நேரங்களில் கூட அவன் எனக்கு துணையாக வருவான். இன்னும் சொல்லப் போனால் ஒரு முறை நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட அவன் என் வரவுக்காகவே காத்திருந்தான். நான் என்ன செய்தாலும் அதை ஆமோதிப்பான். அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட அதை நாசுக்காக சொல்வான்.
அவன் என்னுடன் சேர்ந்ததற்கு ஓர் நிகழ்வும் உண்டு.
ஒரு நாள் நான் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது என்னை நோக்கி வந்தான். அப்போது தான் அவன் தன் தாயை ஒரு விபத்தில் இழந்திருந்தான். உடன் பிறந்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் பிரிய இவன் மட்டும் தனியே இருப்பது எனக்கு தெரியும். என்னை மேலும் கீழும் பார்த்தவன் ஏதோ சொல்ல வருவது எனக்கு புரியாவிட்டாலும் பின் சுதாரித்துக் கொண்டு அவன் பசியை புரிந்து கொண்டவனாய் "சரி இரு வருகிறேன். எங்கும் போய் விடாதே!" என்று அவனிடம் சொல்லி , உள்ளே சென்று சில பிஸ்கட்டுகளை கொண்டு வரும் வரை உள்ளே வராமல் வாசலின் முன் பக்கமே காத்திருந்தான். நான் சொன்னது அவனுக்கு புரிந்திருக்கிறது என்று நினைத்து நானும் பிஸ்கட்டை அவனிடம் நீட்டினேன். அதை என்னிடமிருந்து வாங்காமல் பக்கத்திலிருந்த செடி பக்கம் போனான். நான் கொடுத்த பிஸ்கட்டை சாப்பிடாமல் சென்று விடுவானோ என நினைத்தேன். ஆனால் அவன் செய்த காரியம் எனக்கு ஆச்சரியத்தை தந்தது. செடி பக்கம் போனவன் அங்கே சிறுநீர் கழிக்க, நான் அவனை திட்டி கை ஓங்கினேன். மறுபடியும் என் பக்கம் ஓடி வந்து நான் கொடுத்த பிஸ்கட்டை சாப்பிட தொடங்கினான். அவன் செயல் எதற்கு என்ற கேள்வியோடு நான் ஆராய்ந்ததில் தனக்கு சாப்பிட கொடுத்தவரையும் வீட்டையும் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அவன் அங்கே சிறுநீர் கழித்தான் என்று
பின்னர் தான் நான் தெளிந்து அறிந்தேன். என்ன ஒரு புத்திசாலித்தனம்.
அன்று முதல் அவன் என்னை நண்பனாக பார்த்தான்.
அவன் சிநேகம் பிடிக்காமல் என் மனைவி, மக்கள் என்னை கடிந்த போதும் நான் அவனை வெறுத்ததில்லை. வாலை ஆட்டிக் கொண்டு அவன் வரவை நானும் எதிர்பார்த்ததுண்டு. நன்கு பழகியதால் எட்டி வைத்து பார்க்க முடியவில்லை. அவனுக்கு என்று குடும்பம் இருந்தால் ஒருவேளை என்னை விட்டு விலகியிருப்பான் போல. சில சமயம் எனக்கான உணவினையும் அவனோடு பகிர்ந்ததுண்டு. வீட்டிற்கு தெரிந்தும் தெரியாமலும் அவனுக்கு உணவு கொடுத்துள்ளேன். அவன் பசி போக்கியதால் அவன் நன்றியும் காட்டினான் வேண்டிய சமயத்தில்.
எப்போதும் காலையில் நான் தான் என் பிள்ளைகளை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு வருவேன். மாலையில் என் மனைவி தான் திரும்ப அழைத்து வருவாள். ஒரு நாள் விருந்தினர் வருகையால் என் மனைவி பிள்ளைகளை அழைத்து வர மறக்க, என் பிள்ளைகளும் தாங்களாகவே வீட்டிற்கு வரும் போது இவனும் கூட வர பிள்ளைகள் அவனால் மிரட்சியடைய அவர்கள் அவனை விரட்ட முயன்றும் அவர்களுக்கு துணையாய் வீடு வரை வந்து விட்டுச் சென்றிருக்கிறான். அவனின் நன்றி உணர்ச்சி என்னை திக்குமுக்காட வைத்தது. தினமும் என் மனைவி போகும் போது அவளுக்கும் தெரியாமல் கூடவே சென்றிருக்கிறான் போல. அன்றிலிருந்து அவன் இதயத்தில் நின்றான். இருந்தாலும் அவனை விட்டு விலக சொல்லி வீட்டில் சண்டைகள் நடக்கும்..
யாருடைய தோற்றமும் பெரிதல்ல. செய்யும் செயலே பெரியது என்று நான் எத்தனை முறை வீட்டினரிடம் சொன்னாலும் அவனிடம் சிநேகம் காட்ட மறுக்கின்றனர்.
"நன்றியுள்ள எவருக்கும் இது சமர்ப்பணம்." என்று முடிக்கப்பட்டிருந்தது கீதா படித்த அந்த கதையில். ஆம். உண்மை தான். கீதாவுக்கும் இது தெரியும். அவளும் இதைப்போன்றொரு நாயை இழந்துள்ளாள். கண்ணீர் வழிந்த கன்னத்தை துடைத்துக் கொண்டு புத்தகத்தை மூடி வைத்தாள் கீதா.

No comments:
Post a Comment