Thursday, December 19, 2024

புதுமை கொள் by Veena Shankar



 புதுமை கொள்


" அம்மா , எல்லாரும் இப்படி கும்பலா நிக்காதீங்க, போய் வரிசையில் உட்காருங்கம்மா" என்று சொன்னான் ரவி. கோயில் வாசலில் யாசகம் கேட்டு கொண்டிருந்த கூட்டமும் ரவி காட்டிய திசையில் வரிசையாய் அமர்ந்தது . ஒவ்வொருவருக்கும் தான் கையில் கொண்டு வந்திருந்த உணவு பொட்டலத்தை அவன் வழங்கினான். "இன்னிக்கி என்ன சாதம் " என்று ஒருவள் ரவியை பார்த்து கேட்க, " தயிர் சாதம்" என பதில் தந்தான் அவன் . தன் குடும்ப பரிகாரத்திற்காக தினமும் ஒவ்வொரு வகையான உணவு வழங்கி வந்தான். காலையில் உணவு பொட்டலத்தை வாங்கிய அவர்கள், அதை மதிய வேளையில் தான் உண்பர். 


 அப்போது காரிலிருந்து இறங்கினார் முக்கிய பிரமுகர் ஒருவர். அவர் இறங்கியதும் யாசகர் கூட்டம் எழுந்து நின்றது. யாசகம் கொடுப்பவர்கள் எப்போதும் கோயிலுக்கு சென்று திரும்பி வரும் போது தான் யாசகம் கொடுப்பது வழக்கம். ஆனால் இவர் கோயிலுக்குள் செல்லும் முன்பே அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இருபது ரூபாய் கொடுப்பார். வாரம் ஒருமுறை கோயிலுக்கு வரும் அவர் அவர்களுக்கு , காசு கொடுக்காமல் போவதில்லை. கூட்டம் அவர் பக்கத்தில் வந்து சூழ, அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் "இருங்கள். தருகிறேன். தருகிறேன்" என்று சொல்லி தன் சட்டையிலிருந்து ஐநூறு ரூபாய் தாளை வெளியே எடுத்தார். எப்போதும் தனித்தனியாக பணம் கொடுக்கும் அவர் , அன்று யாசகர்களில் ஒருவனிடம் மட்டும் பணத்தைக் கொடுத்து அவர்களுக்குள் பிரித்து கொள்ள சொல்லி கோயிலுக்குள் சென்றார் . அவர் செல்லும் வரை அமைதியாய் இருந்த கூட்டம் தங்கள் பங்கிற்கான காசை பகிர, அதில் அவர்களுக்குள் சர்ச்சை எழுந்தது. பலர் அமைதி காக்க, ஒரு சிலருக்குள் சண்டை வந்தது. அவரிடமிருந்து காசு வாங்கியவன் " நீ நேற்றே எனக்கு காசு தரவேண்டும். அதனால் அதை கழித்து தான் உனக்கு கொடுப்பேன். கொஞ்சம் ஓரமாய் போய் நில்லு" என்று கடிந்து கொண்டான் மற்றொருவனிடம் . "நேற்று நான் வரவில்லை, அதனால் நேற்றைய பங்கையும் சேர்த்து கொடு!" என மற்றொரு பெண் கேட்க, இப்படியே ஒருவர் பின் ஒருவராக வாக்குவாதம் தொடர, இதை எதிர்ப்பக்கம் தேநீர் கடையில் தேநீர் அருந்த வந்த திலக் கவனித்தான். தேநீரை சீக்கிரம் அருந்தி விட்டு அந்த கூட்டத்தை நோக்கி வந்தான். அவர்களை சமாதானப்படுத்த, அவர்களின் பஞ்சாயத்து அவனிடம் திரும்பியது. ஒருவாறாக அவர்களின் பங்கை பிரித்து கொடுத்தவன், இப்படி அவர்களுக்குள் சண்டை வராமல் இருப்பதற்கு தன்னிடம் ஒரு தீர்வு இருப்பதாக சொல்ல, " என்னவாக இருக்கும்" என்று வடிவேலு பாணியில் எல்லாம் தங்களுக்குள் கேட்டு கொள்ள, ஒருவர் மட்டும் " சீக்கிரம் சொல்லப்பா!" என்றார். "சொல்கிறேன், உங்கள் எல்லோரிடமும் செல்போன் இருக்கிறதா? " என்று கேட்க, அவரவர் தங்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த செல்போனை அவனிடம் காண்பித்தனர். " சரி! இது போதும். உங்கள் எல்லோருக்கும் தனித்தனி (கியூ ஆர் கோடு) போர்டு ஒன்றை ஏற்பாடு செய்து தருகிறேன். யார் உங்களுக்கு காசு கொடுக்க நினைக்கிறார்களோ அப்போது அதை அவர்களிடம் காண்பித்தால் அவர்கள் போன் மூலம் செலுத்தும் பணம் உங்கள் வங்கி கணக்கில் தானே சேர்ந்து விடும். அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் சேர்ந்து விட்டதா என்பதை கண்டுபிடிக்க உங்கள் செல்போனில் ஒலி வரும். அதற்கு தான் உங்களிடம் செல்போன் இருக்கிறதா? என்று கேட்டேன். " என்று சொன்னான். அவன் சொன்னது சிலருக்கு புரியவில்லை என்றாலும் விசயம் புரிந்த ஒருவர் "அது வாங்க காசு ஆகுமே!" என்று கேட்க, "நான் வங்கியில் தான் வேலை பார்க்கிறேன் . எங்கள் வங்கி மூலமாக உங்களுக்கு இலவசமாக தர ஏற்பாடு செய்கிறேன்" என்றான். ஆனால் பணம் வந்திருக்கிறது என்ற தகவல் செல்போனில் ஒலிக்க மட்டும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை நீங்கள் செலுத்த வேண்டும்." என்று தெளிவாக திலக் சொன்னான். இதை எல்லோரும் ஆமோதிக்க , "அது எப்ப கிடைக்கும்?" என்றாள் ஒருத்தி. " ஒரு வாரத்தில் கிடைக்கும்" என்றான் அவன். இதைக் கேட்டதும் சரியென தலையசைத்து அதற்கு ஏற்பாடு செய்யும் படி திலக்கிடம் சொல்லி தங்கள் வழக்கமான இருப்பிடத்திற்கு நகர்ந்தனர் யாசகர்கள். இனி நமக்குள் சில்லறை பிரச்சனை வாராது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். 


காலம் எப்படி செல்கிறது என்று பார்த்தீர்களா? அறிவியலின் விந்தை இப்போது யாசகம் கேட்பவர்களுக்கும் உறுதுணையாகிறது. 


காலத்தோடு புதுமை ஏற்பதும் சிறப்பே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...