Monday, January 4, 2021

மனம் மாற்றம் by Veena Shankar

                                                             மனம் மாற்றம்

 

 

       மீரா நடுத்தர குடும்பப்பெண் என்பதால் தன் குடும்பத்திற்கு ஏற்றவளாய்.பொறுமையாய் நடந்து கொள்வாள் என்று தான் மாறன் அவளை திருமணம் செய்யவே ஒத்துக்கொண்டான். அவள் விருப்பம் இருந்தால் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகலா என கூட சொல்லியிருந்தான். மீராவும் தன்வேலையை விடாமல் மாறனின் மனமும் கோணாமல் குடும்பத்தை  கவனித்துக்கொண்டாள்.
 
                          வருடங்கள் பல ஓடின. இடையே இரு குழந்தைகள் பிறந்தன.இரண்டாவதுகுழந்தையின் பேறு கால விடுப்பு முடிந்து மீண்டும் வேலைக்குச் செல்ல தயாரானாள்.அவள் சென்ற முதல் நாளே இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய பதவி உயர்வு.வீட்டிற்கு வந்ததும் மாறனிடம் சொன்னாள்.அவனுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. பணத்திற்குபணம் மற்றும் பதவியால் உயரும் மதிப்பு.ஆனால் அவன் என்றுமே தாழ்வு மனப்பான்மையை மனதில் வளர்த்துக் கொண்டதேயில்லை.இப்படியே நாட்கள்செல்லச் செல்ல மீராவின் நடவடிக்கைைகளில் பல மாற்றங்கள் பல உணர்ந்தான் மாறன். ஆனால் அவன் மீராவிடம் இதைப் பற்றி பேச விரும்பவில்லை. காற்று அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள் அது போல மாறனுக்கும் மீராவின் மேல் சிறிது வெறுப்பு வரத்தான் செய்தது. ஏனெனில் வீட்டிற்கு வரும்போதே மீரா சற்று கோபத்துடன் காணப்படுவாள். குழந்தைகளை கடிந்து பேசுவதும் அடிப்பதுமாக இருக்கும் அவளுடைய நடவடிக்கை. மாறனிடம் மட்டும் சற்று அமைதியாக பேசுவது ஆறுதலான விஷயம். இதுவே மேலும் மேலும் தொடர கூடாது என்று மட்டும் விரும்பினான். என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான். சோதனையின் முடிவில் வழியும் பிறந்தது. 
 
      மறுநாள் காலை வீடு பரபரப்பாக இருந்தது. சில மணித்துளிக்குள் வீடு பூட்டப்பட்டு அமைதியானது. மீராவும் புறப்பட்டாள். அவளை அவளுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தான் மாறன். ஆனால் சந்தேகப்பட்டு அல்ல.மீராவோடே அலுவலகத்திற்கு நுழையாமல் சற்று தாமதமாக உள்ளே சென்று தன்னுடைய விசிட்டிங் கார்டை காண்பிக்க ப்யூன் சொன்ன இடத்திற்கு சென்று அமர்ந்தான். அங்கே மீராவை சந்திப்பதற்காக நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தனர். இது மாறனுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் அவள் வந்தவர்களிடம் சிரித்து பேசும் அழகை ரசிக்க மறக்கவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாய் ப்யூன் கூப்பிட்டதை கூட காதில் வாங்காமல் எழுந்து நடந்தான்.
 
      மாலை மாறன் சீக்கிரமே வந்து குழந்தைகளை பார்த்துக் கொள்வான் . மீரா சற்று தாமதமாக வந்தாலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவது முதல் கதை சொல்லுவது வரை அவள் தான் செய்வாள். இடைஇடையே கொஞ்சல்களும் கிள்ளல்களும் அரங்கேறும் . வந்தவள் குளித்து மாறனுக்கும் தனக்கும் காபி கொண்டு வர இடையே வந்த பையன் சற்றே இடித்து செல்ல காபிக் கொட்ட மீரா படபடத்தாள். இதைப்பார்த்த மாறனோ 'மீரா! கோபப்படாதே' என்று சொன்னான். ஒன்றும் சொல்லாமல் நகர்ந்தாள். குழந்தைகள் வீட்டுப் பாடம் முடித்து, டி .வி பார்க்க,சமையலறையில் அவள் தஞ்சம் புக, இரவு உணவு முடிந்து குழந்தைகள் படுக்க சென்றனர். மீராவும் வேலையை முடித்து டிவி பார்த்துக் கொண்டிருந்த மாறனின் அருகில் அமர்ந்தாள். மாறன் டி.வியை அணைத்து மீராவையும் அணைத்தான்.
 
    'ஏன் மீரா உனக்கு இவ்வளவு கோபம் வருகிறது. ஆபீஸ் டென்ஷனா? ஆபிசுல சிரித்துப் பேசும் மீராவா நீ' எனக் கேட்க மீரா முழித்தாள். ஆமாம் மீரா .இன்னிக்கு உன் ஆபீசுக்கு வந்தேன். உனக்குத் தெரியாமல் என்று சொல்ல. ஆமாங்க . அது வேலை செய்யுற இடம். வாங்குற காசுக்கு உழைக்கணும். அதுவும் ப்ரமோஷன் வேற. அப்படிதான் இருந்தாகணும். ஆனால் வீடு அப்படியில்லை. நான் சுதந்திரமா வாழ வேண்டிய இடம். குழந்தைகளிடம் கண்டிப்பும் அரவணைப்பும் இருக்கவேண்டும்.
 
    நல்லபடியா வளர்க்கணுமில்ல. அதைத்தான் செய்கிறேன். என் கண்டிப்பை மட்டும் பார்க்கிறதா தோணுதுங்க. தேவையான இடத்தில் கொஞ்சம் கோபப்படுற மாதிரி நடிக்கிறதுல தப்பில்லைங்க. என்று கட்டியணைத்தாள். என்னைப் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் என மீராவின் மனது சொல்லுவது மாறனின் இதயத்திற்கு கேட்டது. மௌனங்களின் புரிதலே வாழ்க்கை. சிறப்பானதும் கூட.
 

      மறுநாள் விடிந்தது. மாறனும் பலாப்பழம் சுவைத்தது போல உணர்ந்தான். உள்ளே இனிமை. வெளியே கடுமை. மீராவிற்கு வாழ்த்து சொல்ல எழுந்தான் ஒரு அன்புக் கணவனாக.


2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...