Wednesday, April 20, 2022

"கொரியர் பாய்" சிறுகதை by Veena Sankar


கொரியர் பாய் 

                                            வீட்டில் இருந்த   கரணுக்கு போன் வர, “ ஹலோ! யாரு!” என்று கேட்டான்.  எதிர்முனையில்  பேசுபவர் அவர் தன் விவரத்தை சொல்ல, “ஓகே! சார். நான் உங்க கிட்ட இதைப்பற்றி அப்புறம் பேசுறேன்.  என்னுடைய வீடு சின்னது.  ரூம்ல என் மனைவி தூங்கிட்டு  இருக்கிறாள். அவள் எழுந்தால் கஷ்டம் சார்.” என்று  சொல்லி போனை  துண்டித்தான். 


                                                 அந்த நேரம் பார்த்து  அடுப்பில் குக்கர் வைத்தது ஞாபகம் வர, சமையல் அறைக்கு ஓடி, அடுப்பை அணைக்கும் முன்  அது விசில் விட, அதை ஆசுவாசப்படுத்தினான். தன் மனைவி எழுந்தால் என்ன நடக்கும் என்ற பின்விளைவுகளை அறிந்த கரண், அவள் தூங்கும் போது மட்டும்தான் அமைதியாக இருப்பாள் என்பதால் அவளை எழுப்பவும் மாட்டான். அந்த நேரம் மட்டும் தான்  தான் சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்வான்.


                                           சரி, டிவி பார்ப்போம் என நினைத்து டிவியை ஆன் செய்ய, அது அலறியது. எப்போதும் டிவி சத்தத்தை குறைத்து வைத்து பார்க்கும்போது எப்படி  இன்று மட்டும் டிவி வால்யூம் கூடியது? என நினைத்துக்கொண்டே டிவியை ஆப்  செய்து, நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்தான்.  ஆனாலும் டிவி  வால்யும்  எப்படி கூடியது என்று தன்  மனதோடு அசை போட்டான் கரண். அவன் கட்டிலில் படுத்திருந்த போது அவன்  கையே, டிவி ரிமோட்டில் பட்டு வால்யூம் கூடியிருக்கும் என்பதை உணர்ந்தான்.


                                             நல்ல நேரம் கூடி வருவது போல, கெட்ட  நேரமும்  சில சமயம்  ஒன்றாகத்தான் வரும்.  அப்போதே காலிங் பெல் அடிக்க, ஓடி போய் கதவை திறந்தான் கரண். “ஏன் சார்! காலிங் பெல்லை      அமுக்கினீர்கள்?” என்று கேட்டான் வந்தவனிடம்.  “காலிங்பெல் உங்களை கூப்பிட தானே சார் இருக்கு? அதனால்தான் அமுக்கினேன்.” என்று  சொன்னான் வந்தவன். “என் மனைவி தூங்குறாங்க.  அவங்க  எழுந்தால் கஷ்டம் என சொன்னான் கரண்,   தூங்கும் தன் மனைவியை தாங்குபவன்.  


                                        “இனிமேல் நீங்கள் வருகிறீர்கள் என்றால் கதவை மெதுவாக  தட்டுங்கள்.” என்றும் சொன்னான் கரண். “சரி! நீங்க யார்?  என்ன வேண்டும்?” என விசாரிக்க, “நான் கொரியர் பாய் சார். எப்போதும் நான் இந்த நேரத்தில் தான் வருவேன் சார். நேத்துக்கூட அந்த அக்காதான் பார்சலை வாங்கினார்கள்”   என்றான்  கொரியர்   பையன்.      “ஆன்லைனில் அந்த அக்கா ( கரணின் மனைவி) டிரஸ் ஆர்டர் பண்ணி இருக்காங்க. அதை கொடுக்கத்தான் வந்தேன்.” என்றும் சொன்னான். “இந்தாங்க சார் பில்.   மூவாயிரம் ரூபாய் கொடுங்க. கேஷ் ஆன் டெலிவரி என்று போட்டிருக்கு.” என்று கொரியர் பாய் சொல்ல, நேற்று தானே நாலாயிரம் ரூபாய்க்கு டிரஸ்  வாங்கினாள். இன்னைக்கு மூவாயிரம் ரூபாய் என தன்னையறியாமல் வாயை பிளந்து கரண் சத்தம் போட, சத்தமில்லாமல் அவன் மனைவி பணத்தை கொரியர் பையனிடம் கொடுத்து பார்சலை  வாங்கினாள். 


                                           “தூங்கும் போது என்னை  டிஸ்டர்ப் பண்ணா எனக்கு பிடிக்காது உங்களுக்கு தெரியும் இல்ல?  பின்ன எதுக்கு என் போனை உங்ககிட்ட வெச்சுக்காம என் பக்கத்துல வைத்தீர்கள்?  அந்த கொரியர் பையன் எனக்கு போன் பண்ணி எழுப்பி விட்டு விட்டான்.” என்று  கரணை கடிந்து கொண்டாள்.


                               சத்தம் போட்ட கரணும் வாயடைத்து நின்றான். ஆயிரக்கணக்கில்  ஜவுளிக்காக தன் மனைவி காசு  செலவழிப்பதற்காக   அழுவதா? இல்லை  தன்  மனைவியின் தூக்கம் கெட்டு, தன் சந்தோஷம் கெட்டுப்  போனதே, அதற்கு அழுவதா?  என தெரியாமல் முழித்தான்  கரண்.


 மனிதனின்  சொற்கள்  ஊமையாவதும்  உவமையாவதும் சந்தர்ப்பவசத்தால்.


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...