கனவின் (கணவனின்) முடிவு சிறுகதை by Veena Sankar
கல்லூரியை விட்டு திரும்பிய தன் மகள் அக்ஷயாவை பார்த்து, ” நான் வேலைக்கு போகவா அச்சு?” என அம்மா சுகன்யா கேட்க, அக்ஷயா தன் அம்மாவை ஏற இறங்க பார்த்தாள். “ஆமாம்மா. பேங்க்ல வேலைக்கு கூப்பிடுறாங்க.” என்றாள் சுகன்யா. “என்ன ஆயா வேலைக்கா?” என நக்கலாக அக்ஷயா கேட்க, “இல்லை. ஆபீசர் வேலை” என்று பதில் சொன்னாள் சுகன்யா. “என்னமா சுயநினைவோடு தானே இருக்கே?” என்று கேட்ட தன் மகளுக்கு, ஆமாம் என்று மட்டும் தலையசைத்தாள்.
“ என்னமா? என்ன சொல்ற? வயசு, தகுதி எல்லாம் விசாரிச்சுயா?” என மீண்டும் சந்தேகமாய் அக்ஷயா கேட்க, “கேட்டேனே. வயசு நாற்பத்தைந்துக்கு மேல் இருக்கணுமாம். ஏதாவது டிகிரி படித்து இருக்கணுமாம். இங்கிலீஷ்ல எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டுமாம்” என்று சுகன்யா பதில் சொல்ல, தனக்கு போட்டியாக வேலை தேடுவதில் அம்மா மும்முரமாக இருக்கிறாளே என்று தன் அம்மாவிடம் கொஞ்சம் கோபப்பட்டாள்.
“ அக்ஷயா! எனக்கு வீட்ல உட்கார்ந்து போரடிக்குது. எவ்வளவு நேரம் டிவி சீரியலை பார்க்கிறது? அதுல வர்ற காட்சிகளும் கன்றாவியா இருக்கு. வரவர தொடர் நாடகங்களை விட அதற்கு நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள்தான் நன்றாக இருக்கு. தினமும் அதையும் ரசிக்க முடியல. வாட்ஸப்ல ஏகப்பட்ட குரூப்ல இருக்கிறேன். ஆனால் வருகிற மெசேஜை மறுபடியும் எல்லா குரூப்பில் இருந்தும் வருது. பாதி மெசேஜை நான் பார்க்கமாட்டேன் என்று உனக்கு தெரியும். கல்லூரி பேராசிரியையாக நீ இருக்கறதுனால காலையிலேயே கிளம்பி விடுவே. நீ, பக்கத்துல இருக்குற காலேஜில் வேலை கிடைக்க முயற்சி பண்றே. ஆனா அது எங்க நடக்குது? என்று கணவனின் இறப்பினை மனதில் வைத்துக் கொண்டு, தன் தனிமையை மறைத்துக் கொண்டு, அதற்கான விடையைத் தேடிக் கொண்டிருந்தாள் அம்மா சுகன்யா.
தற்போது தன் குரலை தாழ்த்தி, “என்ன வேலை? எங்கே?” எனக் கேட்ட அக்ஷயாவுக்கு, “வாட்ஸ் அப்ல வந்திருந்தது. வேலை நம்ம ராஜாஜி ரோடுல இருக்கிற பிரான்ச் ஆஃபீஸ்ல தானம். வேலை என்னன்னு போன் செஞ்சு கேட்டபோது நாளைக்கு நேர்ல வாங்கன்னு சொல்லிட்டாங்க. நான் போகட்டுமா?” என புதிதாக வேலைக்கு போகும் பெண்ணை போல அம்மா கேட்டதும், அக்ஷயாவுக்கு சிரிப்பு வந்தது. தன் அப்பாவின் இழப்பினை மறக்க அம்மாவும் தன்னைப் போல வேலைக்கு சென்றால் கொஞ்சம் மன அமைதி கிடைக்கும் என நினைத்து “சரிமா. உனக்கு முடியுமான்னு மட்டும் பாரு. ரொம்ப ரிஸ்க் எடுக்காதே. டென்ஷனான வேலைன்னா வேண்டாம். முடிவு உன் கையில்.” என அம்மாவிடம் தன் கருத்தை முன்வைத்தாள் அக்ஷயா. “சரிம்மா. நீ இவ்வளவு சீக்கிரம் சரின்னு சொல்லுவன்னு நான் நினைக்கவே இல்லை” என தன் மகளை சந்தோஷத்தில் உச்சி முகர்ந்தாள்.
“ நான் என்ன அப்பாவா? உன்னை வேலைக்கு போக வேண்டாம் என்று அவர் சொன்னதும், உன் மத்திய அரசு வேலையை விட்டுட்டு வந்துட்டியே? உனக்கு அப்போ எடுத்து சொல்ல யாரும் இல்லை. பெண்களின் முன்னேற்றத்தை மேடைக்கு மேடை பேசி எழுச்சியூட்டும் ஆண் வர்க்கத்தினருக்கு, தங்களுக்கும் - தங்கள் பதவிக்கு பாதகம் வரும் என்று தெரிந்தால் பெண்களை நசுக்க தான் பார்க்கிறார்கள். அன்று நான் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக அப்பா சொன்னதற்காக வேலையைவிட்டு இருக்க மாட்டேன்.” என்று தனது ஆவேசத்தை வெளிப்படுத்தினாள் அக்ஷயா. “ சரி! சரி! இப்போ அதை பற்றி பேசி பலனில்லை. அப்பாவின் சம்பாதியத்தால் நாம் ஒன்றும் குறைந்து போகவில்லை. நல்லாத்தானே இருக்கிறோம்? அதை நினைத்து சந்தோசப்படு.” என தன் மகளை ஆசுவாசப்படுத்தினாள் அம்மா.
“ சரி! நான் போய் என் சர்டிபிகேட் எல்லாம் எடுத்து வைக்கிறேன்.” என்று சொல்லி உள்ளே போன அம்மாவை பார்த்து, இந்த நாற்பத்தி ஏழு வயசுலயும் என்ன சுறுசுறுப்புடன் அம்மா இருக்கிறாள் என்று தன் அம்மாவை கலாய்த்தாள் அக்ஷயா.
அன்னாளில் படித்து முடித்த கையோடு சுகன்யாவுக்கு வேலை கிடைத்தாலும் மூன்று மாதத்திற்குள்ளாகவே நல்ல வரன் ஒன்று வந்தது. தன் வீட்டில் வசதிக்கு ஒன்றும் குறைவு இல்லாததால், சுகன்யா வேலையை விட வேண்டும் என்று ஒரு கண்டிஷன் போட்டார் மாப்பிள்ளை. சுகன்யாவின் அம்மா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாப்பிள்ளை கேட்காததால், ஒரு கட்டத்தில் அந்த வரன் வேண்டாம் என தீர்மானித்தனர் சுகன்யாவின் வீட்டார். தனக்குப் பின் மூன்று தங்கைகளை பெற்றோர் கரையேற்ற வேண்டுமே என்று சுகன்யா நினைத்து, இது நல்ல வரன் என்பதாலும் வேலையை விட சம்மதித்தாள். சுகன்யாவின் முடிவு பெற்றோருக்கு சிறிது வருத்தத்தை கொடுத்தது. சுகன்யா வேலைக்கு போனால் சிறிது பணம் கொடுத்து உதவி இருப்பாள். தன் தங்கைகளின் கல்யாணத்தை நன்றாக நடத்தி வைக்கலாம் என நினைத்து இருந்தனர் பெற்றோர்.
சுகன்யாவின் கணவர் பின்னாளில் தன் மைத்துனிகளின் கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்தி முடித்தார். தன் கணவனை எண்ணி பெருமை பட்டாள் சுகன்யா. எப்படியோ தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்து கொண்டே தன்னுடைய சான்றிதழ்களை எடுத்து வைத்தாள்.
மறுநாள் சுகன்யா வங்கிக்கு செல்ல, அவளுக்கான வேலை என்ன என்பதை சொன்னார் வங்கி மேலாளர். அந்த வேலை அவளுக்கு பிடித்துப்போகவே, தனக்கு அந்த வேலை கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்தாள்.
மாலை வந்ததும் அம்மாவின் வேலையை பற்றி விசாரித்தாள் அக்ஷயா. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கான சேவை மையம் அது என்றும், அங்கே தனக்கான வேலை என்ன என்பதை சுகன்யா சொல்லும் பொழுதே அவள் அலைபேசி சிணுங்கியது. “ஹலோ!” என்று சொன்ன சுகன்யா முகம் மலர்ந்தாள். “ரொம்ப சந்தோஷம்.” என்று சொல்லி போனை கட் செய்தாள்.
“ என்னமா வேலை கன்ஃபார்ம் ஆயிடுச்சா?” என அக்ஷயா கேட்க, “இல்ல. வர்ற ஞாயிற்றுக்கிழமை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். மீனு அத்தை தான் போன் பண்ணினாங்க. அவங்களோட ஒண்ணு விட்ட அக்கா பையனுக்கு தான் உன்னை பொண்ணு கேட்டாங்க. நான் தான் அதை உன் கிட்ட சொல்லல.” என்று அம்மா சொன்னதும், தாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தை பருவத்திற்கு சென்றாள் அக்ஷயா.
அக்ஷயாவின் கால்கள் கோலம் போட, தன் மகளின் வெட்கத்தை உணர்ந்தாள் சுகன்யா. சரி என்று சொல்லாமல் அக்ஷயா தன் செய்கையால் சொன்னது புரிந்தது சுகன்யாவிற்கு.
மாப்பிள்ளை வீட்டார் சம்பிரதாயத்திற்காக பெண் பார்க்க வருவதாகவும் சொல்லி, அன்றே திருமண தேதியையும் நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.
மறு நாள் திங்கள் கிழமை. அம்மாவின் சான்றிதழ்களை மறுபடியும் தங்கள் வீட்டு பீரோவில் பூட்டி வைத்தாள் அக்ஷயா. அம்மா சுகன்யா, “ஏன்” என்று கேட்டதற்கு, “அன்று அப்பாவினால் உன் வேலை போனது, இன்று என் கல்யாணத்தால் , அப்ளிகேஷன் போடுவதோடு உன் வேலையின் கனவு தகர்ந்து போகிறது. கல்யாணம் ஆனதும் உன்னை தனியாக விட்டு விட்டு போவேன் என்று நினைத்தாயா?” என சொல்லி கண்ணடிக்க, சோகமாய் தன் முகத்தை வைத்தபடி நடித்தாள் அம்மா சுகன்யா. தன் நிறைவேறாத ஆசைகளோடு இதையும் கணக்கில் சேர்த்துக் கொண்டாள் சுகன்யா.
ஒரு செயல் பிறருக்கு சந்தோஷம் கொடுக்கும் என்று நாம் எண்ணும் போது நிறைவேறாத ஆசைகளும் எண்ணங்களும் நம் மனதை விட்டு நீங்கிப் போகும்.
கனவுகள் மெய்ப்படும் கடமைகள் முடிந்தபின்.

No comments:
Post a Comment