Monday, May 27, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 பால்காரர் பால் ஊற்றும் சமையம் பார்த்து

வெள்ளி பாத்திரம் போல் பள பளவென தேய்த்து வைத்திருக்கும் 

பித்தளை வடிகட்டியை

அதன் இடத்தில் அமர்த்தி  

ஆட்களுக்கு தகுந்தாற் போல் மூன்று நான்கு தேக்கரண்டி காபி பொடியை அதில் இட்டு

ஒரு தம்பளர் சூடான கொதி நீரின் பாதியளவை வடிகட்டியின் தலையில் கொட்டி

அதன் வாயை மூடியால் மூடி

காபி பொடி சுடுநீரை சற்றே இழுத்து கொள்ளும் வரை அமைதி காத்து 

மீதி இருக்கும் சுடுநீரை ஊற்றி வைக்க

அதற்குள் காபியின் மணம் மூக்கை துளைக்க

தானாக பிறந்த உமிழ்நீரும் நம் உணர்வை தூண்ட

அந்நேரம் பால்காரரின் மணி சத்தம் கேட்டு பால் வாங்கி வர ஓட

அப்பொழுதே கறந்த பால் ஆனதால் அதன் சூடும் நம் கையில் ஐக்கியமாகும் வரை காத்திருக்க

அந்த பாலையும் அடுப்பில் ஏற்றி உயிர் கொடுக்க

காய்ச்சும் போதே பசும் பாலின் நல்வாடையும் காபி தண்ணீரோடு இணைய

இருமுறை வடித்த காபி தண்ணீரை மற்றொரு கிண்ணத்தில் ஊற்ற 

பால் பொங்குவதற்குள் அதை பல முறை கரண்டி கொண்டு கிளறி விட

பாலும் பொங்கி தன் வேலையை திறம் பட செய்ய

சூடு ஆறுவதற்கு முன் அதன் மேல் படிந்திருக்கும் நுரையையும் பாலடையையும் விலக்கி விட

பாலிற்காக காத்திருந்த 

பித்தளையில் செய்த தம்பளர் மற்றும் அதன் இணையான வட்டையும் மேடை மீது முன்னமே ஆசனம் பிடித்து தன்னை நிரப்பிக் கொள்ள  

வட்டையில் பாலும் மெல்ல மெல்ல அதன் இடத்தை முக்கால்வாசி அடைத்து நிற்க

இரு முறை வடிகட்டி சேகரித்த அந்த அடர் வண்ண காபி தண்ணீரை ஊற்ற

மீதியிருந்த இடத்தை அடைத்துக் கொண்டு சிறிது நுரையோடு மேலெழும்ப

அந்த காபி மணம் அறையை சுற்றி வர

ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் உயிர்த் தியாகம் செய்து அதில் கரைய 

தம்பளரில் உள்ள காபி வட்டைக்கு இரு முறை இடம் மாறி மீண்டும் தம்பளரில் அடைய

அதன் பின் ஒரு தேக்கரண்டி பாலின் நுரையை மட்டும் தம்பளரின் நடுவில் பரவ விட

அதுவும் காணாது என்று மீண்டும் ஒரு முறை காபி தண்ணீரை நடுவில் ஊற்றி அழகுபடுத்த 

அதன் நிறம் மற்றும் மணம் காபி குடிக்காதவருக்கும் அதன் அலங்காரம் பிடித்து போய் தங்கள் நாவினை வெளியே நீட்டி உதட்டை நனைக்க

பிற காட்சிகளெல்லாம் அந்நியப்பட்டு தம்பளரில் மட்டுமே நம் கண்கள் லயிக்க

வேகமாக சென்றால் காபி துளிகளை இழக்க நேரிடும் என்ற மனபாவத்தோடு நம் கால்களை மெல்ல செல்ல மூளை பணிக்க

அதை பொறுமையாய் ருசித்து அருந்த நினைக்கும் நாம்

அறையின் ஓரத்தில் இடம் பார்த்து நாற்காலியை முன்னிழுத்து

இடக்கையில் தம்பளரையும் வலக்கையில் வட்டையில் காபியை ஊற்றி 

தனியேவும் அமர்ந்து குடிக்கும்

சுகம்

ஆனந்தம்

திருப்தி

அமைதி

என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் தகுமே காபியின் சுவைக்கு

என்றும் நான் அடிமை

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...