இன்றைய நகைச்சுவை
நகரின் பெரிய ஜவுளிக்கடை என்பதால் அங்கே எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். தரமும், மலிவும் சிறப்பு என்பதால் நானும் அங்கே செல்வதுண்டு.
இப்படித்தான் ஒருநாள் துணி எடுக்க சென்றேன். அன்று என்னவோ நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு துணிமணிகள் வாங்கி பில் போடும் இடத்திற்கு தள்ளப்பட்டேன் என்பது தான் உண்மை.
வரிசையில் கால் வலிக்க நின்று பணம் செலுத்தும் இடத்திற்கு வருகையில் எனக்கு முன் நின்ற ஒருவர் "ஹே சிரி"என்றார். நானோ அவர் என்ன சொன்னார் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் மீண்டும் அவரை கூர்ந்து கவனித்தேன். மறுபடியும் அவர் அதே வார்த்தையை என்னிடம் சற்று திரும்பியவாறு சொல்ல , தயக்கத்தோடு நானும் சிரித்து வைத்தேன். ஆனால் என் சிரிப்பிற்கான அங்கீகாரம் அவரிடமிருந்து எனக்கு கிடைக்கவில்லை. பிறகு அவர் அலைபேசியை பார்த்தவாறு மீண்டும் அதே வார்த்தை சொல்ல, என் மனதில் குழப்பம்.
எங்கு சென்றாலும் திருவாயை மூடிக் கொள்ளும் பழக்கம் இல்லாததால் அவரிடமே சந்தேகத்தை கேட்க அவர், " மேடம்! இது ஐ போன். இதில் நாம யாருக்காவது கால் பண்ணனும்னா இல்லை ஏதாவது கேள்வி கேட்கணும்னா "ஹே சிரி " என்று சொன்னால் "என்ன? என்று அது கேட்கும், அப்போ நாம சொல்ல வேண்டியதை சொன்னால் அது பதில் சொல்லும்" ன்னு சொல்ல, என்ன டெக்னாலஜி இது என்று முழித்தேன்.
மனிதனை எவ்வளவு சோம்பேறியாக்குகிறது என்பதையும் நினைத்து வருத்தமும் கொண்டேன்.

No comments:
Post a Comment