Saturday, June 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


பிள்ளை செல்வங்களோடு மட்டும் தாயை பார்ப்பது எளிதல்ல இந்த அலைபேசி காலத்தில்


பூரிப்பின் உச்சக் கட்டம் இந்த மழலை செல்வங்கள்


அதுவும் அவர்கள் முகத்தில் ததும்பும் ஆனந்தம்


சச்சரவு கொள்ளா அன்பின் பகிர்மானம்


சேலையும் மலரும் சொல்லும் தாயின் மனநிலை


பாசத்தின் பிரதிபலிப்புக்காக மழலையர் முகத்தில் சிரிப்பு


அதுவும் பொக்கை வாயில் அழகு வடிய

Thursday, June 27, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 வடிவமும் அவனே

வடிக்க வைப்பவனும் அவனே

இலையில் ஓர் இல்லம்

மனதிருந்தால் புகுவதும் கடினமல்ல 

விருட்சத்தி்ல் உதிர்ந்த இலையும்

விருட்சமாகியது நினைவில்

வடித்தவனின் கலை வண்ணமும் 

கைது செய்தது 

தோன்றலில் புனிதம் புதிதாய் புனைவதில் உண்டு தானே?

பல துளைகளின் சங்கமத்தில் பிரமிப்பு

சில கலையினால் மனதில் ஆக்கிரமிப்பு

இலைகளின் நரம்புகள் புடைக்க

 வடித்த சிலையும் சொல்லுதே அமைதியாய்

ஞானத்தை தேடிக் கொள்ள ஓர் வழியை

 வக்கிரம் இல்லா சித்திரம் இங்கே இலைகளில்

Wednesday, June 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 நிற்பவனுக்கு நடந்து செல்ல ஆசை

நடந்து செல்பவனுக்கு பறப்பதற்கு ஆசை

பறப்பவனுக்கோ மண்ணில் இருக்கவே ஆசை

 சிறைப் பறவைக்கு பறக்கும் எண்ணம் மேலோங்கினால் சங்கிலியும் ஓர் பொருட்டல்ல

 சிந்தையில் சிறகடிக்கும் ஆவல் உருப்பெற, உயிர்ப்பெற சங்கிலியின் திறவுகோலும் அவசியம்

அது மனதை திறப்பது போல கடினமில்லை என்றாலும் மனம் திறக்க வேண்டும் அடுத்தவர் எண்ணமும் ஈடேற வேண்டும் என்ற சிந்தனை சிந்தையில்

 வருத்தம் கொள்ளாத மனமும் வருந்தும் கட்டுப்பாடு என்ற சங்கிலியால் பிணைக்கப்படும் போது , என்றாலும் அதீத சுதந்திரமும் கொள்ளும் ஆபத்து தரும் வருத்தமே!

 தண்டனைக்கான சங்கிலி இதுவென்றாலும் ஓடும் கால்களும் பறக்கும் பறவையும் நிற்காது, வெளிவர எத்தனித்து கொடுக்கும் பிணைத்தவனுக்கு தளர்ச்சி எனும் தண்டனையை

 பிடிமானம் இறுகினால் வெகுமானம் உண்டோ? பிடி இறுக பலம் தேவை, பிடிப்பவனும் நாடுவான் இன்னொரு பிடிமானம்

 அகங்காரம் இல்லா அங்கீகாரம் பறவைக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் தேவை இங்கே ஆணிடத்தினின்று

கொலுசு சம்தம் மறுக்க சங்கிலியும் தேவைப்படுகிறதோ இங்கே

ஆணின் தேவையை பூர்த்தி செய்த பின்

மறுக்கவும் முடியாமல்

மறைக்கவும் முடியாமல்

மறக்கவும் முடியாமல் தவிக்கும் நெஞ்சிற்கு இனியும் கிடைத்திடுமா சுதந்திரம் என்றும் சரித்திரம் படைக்க

Tuesday, June 25, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


உரலையும் மறந்தோம் உறவையும் முறித்தோம்

அம்மியையும் மறந்தோம் கும்மியடிப்பதையும் துறந்தோம்

தூலியையும் மறந்தோம் தாலாட்டையும் விடுத்தோம்

நார்கட்டிலையும் மறந்தோம் நல்ல காற்றையும் இழந்தோம்

விவசாயத்தையும் மறந்தோம் விலை கொடுத்து பெற்றோம்

புரிதலையும் மறந்தோம் புவியையும் தூற்றினோம்

குடிசையையும் மறந்தோம் 

குளிர்ச்சியை வெளியேற்றினோம்

விளையாட்டையும் மறந்தோம் விடியலையும் துரத்தினோம்

சுத்தம் மறந்தோம்

அசுத்தத்தை கொண்டோம்

குடும்பத்தையும் மறந்தோம்

குதூகலத்தை வீழ்த்தினோம்

சுதந்திரமாய் திரிந்த பிராணிகளையும்

தந்திரமாய் விரட்டினோம்

Monday, June 24, 2024

எது இணையும் by Veena Shankar

 


எது இணையும்?


சேர்வது

வீரமும் வாலிபமும் 


சேராதது

பணமும் மனமும்


நிற்பது

பெயரும் புகழும்


நிற்காதது

காலமும் கடமையும்


நடப்பது

நேரமும் பாதையும்


நடக்காதது

அறிவும் பணிவும்


குறைவது

செல்வமும் அகவையும்


குறையாதது

செலவும் நோயும்


பேசுவது

ஞானமும் தத்துவமும் 


பேசாதது

அமைதியும் அழுகையும்


மாறுவது

வெற்றியும் தோல்வியும்


மாறாதது

இயற்கையும் ரசனையும்


வெல்வது

உண்மையும் மனிதமும்

 

தோற்காதது 

வருடமும் வார்த்தையும்

Sunday, June 23, 2024

நிதர்சனம் by Veena Shankar

 


நிதர்சனம்


கைக் கடிகாரம் இல்லையென்று

 சண்டையிட்டு இறுதியில் வெற்றி கண்டு அதுவும்

 கிடைக்கப் பெற்றேன்.

ஆனால் என் பார்வை

 என்னவோ அதை பார்க்க மறந்தது, அலைபேசியின் 

 வரவால், என் கைக் கடிகாரத்தின் உறவும் முடிந்தது அன்றோடு என் கரத்தில் ஆடம்பரத்திற்காகவும் அலங்காரத்திற்காகவும் பதியும் வரை மட்டுமே


உறவுகள்


அழுத்தமான வார்த்தைகள் ஆனந்தமாய் வீச அருவியாய் என் கண்களில் கண்ணீர் தேங்குவதும்

அதை மறந்து மீண்டும் உயிர்ப் பெறுவதும் யாராலே?

Saturday, June 22, 2024

என்னை ஈர்த்த கோலம் by Veena Shankar

 


என்னை ஈர்த்த கோலம் 


என் திருமணத்திற்கு பின் ஓரிழையிலல்ல ஈரிழையில் கூட அழகாய் இழுத்து வளைத்து கோலம் போட கற்றுக் கொண்டேன். கோலம் என்றாலே முன்பு அரிசிமாவில் இடுவது தான் மரபு. ஆனால் தற்போதெல்லாம் சுண்ணாம்பு கோலப்பொடி தான் கிடைக்கிறது. அதற்கு நாமும் பழகிவிட்டோம் என்றே சொல்ல வேண்டும். 


என்றும் நிறைவாய் இருக்கும் கோலப்பொடியும் தான, தர்மம் செய்தது போக சிறிது சிறிதாய் கரைந்து கொண்டிருந்தது. எப்போதும் வாசலில் கூவி கூவி அழைத்து விற்பவரும் காணவில்லை. கடைத்தெருவிற்கு போய் வாங்கி வர சோம்பல். 

பிறகென்ன அரிசிமாவு கோலம் தான் மூன்று நாட்களுக்கு அரங்கேறியது . 


அன்று வெளியே செல்ல வேண்டியிருந்ததால் வீட்டை பூட்டி வெளியில் நான் வர, நான் போட்ட கோலத்தின் வடிவத்தில் எறும்பு கூட்டத்தை கண்டதும் என்னுள் பிரமிப்பு. அன்று காவியும் இடாமலே என் கோலம் சிவந்திருந்தது. சரி அடுத்தவரிடம் பகிர ஒரு புகைப்படம் எடுப்போம் என்று எண்ணி அலைபேசியில் படம் எடுப்பதற்குள் கார் ஒன்று வர, அந்த காற்றின் வேகத்தில் எறும்புக் கூட்டம் கலைந்தது. காரை கடிந்தவாரே என் மனக் கண்ணால் மட்டுமே படம் பிடித்து நகர்ந்தேன் என் காலை எட்டி எட்டி வைத்து.

Thursday, June 20, 2024

பேச்சுத்திறமை by Veena Shankar

 


பேச்சுத் திறமை


வைஷாலி சிறு வயதிலிருந்தே மிகவும் துடுக்காக பேசக்கூடியவள். அவள் பள்ளி, கல்லூரியில் தன் பேச்சு திறமையால் பல கோப்பைகளை கைப்பற்றியவள். தமிழ்ப் புலமை கூடுதல் தகுதி என்பதால் பட்டிமன்றத்திலும் பங்கு கொள்வாள். 


அவள் பேச்சில் உண்மை, பொய், நகைச்சுவை என்றில்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் இருப்பதுண்டு. பல இடங்களிலும் மக்கள் அவள் பேச்சை ரசித்து தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்திய சம்பவங்களும் உண்டு. இதனால் பெருமையில் மிதந்தது அவளும் அவளின் அளவான குடும்பமும். 


யாரைப் பார்த்தாலும் "உனக்கென்னடி குறைச்சல் " என்ற வார்த்தையை அவளிடம் தவறாமல் உதிர்ப்பதுண்டு. சொந்தங்களும் " உன் படிப்பு முடியட்டும், நீ - நான் என மாப்பிள்ளை வீட்டார் போட்டி போடுவார்கள்" என்று சொன்னவர்களுக்கு " இன்னும் நான் படிக்கணும்" என்று சொல்லி அவர்கள் வாயை அடைத்தாலும் அவளும் பருவப் பெண் தானே? ஆசை மனதில் இருக்காதா? இதை அவள் அம்மாவும் கண்டுபிடித்திருந்தாள். மகளின் செய்கை பற்றி தெரியாதா தாய்க்கு?


வைஷாலியும் தன் முதுகலை பட்டத்தை முடித்தாள். இளங்கலை பட்டம் முடிக்கும் போதே வைஷாலியின் ஜாதகம் பல இடங்களுக்கு அனுப்பியிருந்தாலும் அதற்கு பதில் ஏதும் வரவில்லை. பெண் பார்க்கும் படலமும் அரங்கேறவில்லை. வைஷாலியின் பெற்றோருக்கு இது வருத்தத்தை தந்தது. மனதில் இருந்தாலும் வைஷாலி இதை வெளிக்காட்டவில்லை. 


நாட்கள், வருடங்கள் ஆகவும் அவள் இருபத்தியாறு வயதை எட்டிப் பிடிக்க, தன் தோழியருக்கு எல்லாம் ஒருவருக்கு பின் ஒருவராக திருமணம் ஆகி விட, விருந்து சாப்பாட்டை மட்டும் அங்கே ருசித்தாள். இருந்தாலும் அவள் பேச்சு திறமைக்கும் வருமானத்திற்கும் குறைவில்லை தான். 


அவளுடைய பேரும் புகழையும் ரசிக்கும் கூட்டம் அவளை தன் வீட்டு மருமகளாகவோ மனைவியாகவோ ஏற்க மறுத்தது. அவளுடைய பேச்சாற்றலே அவளுடைய திருமணத்திற்கு தடையாய் இருந்தது. பட்டிமன்றத்திலேயே இப்படி பேசுபவள் வீட்டில் எப்படி பேசுவாள் என்ற நினைப்பு தான் திருமணம் முடியாததற்கு காரணம் என்று எண்ணிய படியே படுக்க சென்றாள். 


வேதனையிலிருந்த வைஷாலி ஒரு கட்டத்தில் தன் சங்கடத்தை கடவுளிடம் முறையிட கோயிலுக்கு சென்றாள். மனதினுள்ளே உருகி கடவுளிடம் " என்னை நீங்கள் ஊமையாய் படைத்திருக்கலாமே? இவ்வளவு பேச வைத்து என் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்ல முடியாமற் தவிக்க விடுகிறீர்களே! ஏன் ?" என்று கேட்டாள். 


" உன்னை ஊமையாய் படைத்திருந்தாலும் உனக்கு திருமணப் பிராப்தம் இல்லை. உன் பூர்வ ஜென்ம பலன் தான் இதற்கு காரணம்" என்றார் கடவுள் அவள் மனதிலே. 


" நான் யாரையும் வஞ்சிக்காமல் தான் பேசுகிறேன். என் பேச்சுக்கு ரசிகர்கள் பலர் இருந்தாலும் ஏன் இந்த நிலை எனக்கு?" என்று மறுபடியும் கடவுளிடம் கேட்டாள் வைஷாலி. 


அதற்கு கடவுள்

" என்னை பார்! நான் என்னை தேடி வரும் பக்தர்களிடம் நேரே நின்று பேசுவது கிடையாது. அவர்கள் படைக்கும் நிவேதனத்தையும் உண்ணுவது கிடையாது. இருந்தாலும் அவர்கள் அதை விரும்பி செய்கிறார்கள். ஒருவேளை நான் அவர்கள் கஷ்டங்களை காது கொடுத்தும் அவர்கள் படைக்கும் பொருளை உண்டாலும் என்னையும் பழிப்பார்கள். நான் ஏதும் பேசாமல் இருப்பதாலும் உண்ணாததாலும் தான் எனக்கு படைக்கிறார்கள். நான் சாப்பிடுவேன் என்று தெரிந்தால் எனக்கு படைக்கவும் மாட்டார்கள், என்னிடம் கேள்வி கேட்க தயங்கவும் மாட்டார்கள். பார்த்துக் கொள்! எனக்கே இந்த நிலைமை என்றால் உன் நிலையை கொஞ்சம் சிந்தித்துப் பார். " என்று சொல்லவும் இனி இவரிடம் கேட்டு பிரோசனமில்லை என்று கோயிலிலிருந்து வைஷாலி மௌனமாய் தன் நடையைக் கட்டினாள். 


"ஹாய்! வைஷு! சாரி, கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க் இருந்தது. அதனாலே உன்னை லேட்டா ரூமுக்கு அனுப்புங்க ன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு போனேனே? என்று மதன் வந்து அவளை தட்டி எழுப்பவும் சுற்றி முற்றி பார்த்த வைஷாலியிடம் 

" என்ன! நான் வருவதற்குள் தூக்கம் வந்து கனவும் கண்டுட்ட போலயே? என்று கிண்டலடிக்க, "ஆமாம் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு இப்படி தான் வருவாங்களா? உங்க அம்மா லேட்டா அனுப்பினா போதும் என்று சொன்னாலும் எங்க அம்மாதான் சாஸ்திரம், சம்பிரதாயம் ன்னு சொல்லி ரூமுக்குள்ள சீக்கிரம் அனுப்பிட்டாங்க, " என்று சொல்லியதும் சிரித்துக் கொண்டே அவளைப் பற்றினான் மதன்.


ஆமா! எனக்கு கல்யாணம் ஆகாது ன்னு கடவுள் சொன்னாரே? பின் எப்படி மதனுடன்... என்று சந்தேகத்தோடு போட்டோவில் தொங்கிக் கொண்டிருந்த கடவுளைப் பார்த்து கேட்க, " ஐ ' ம் சாரி, அன்னிக்கி பக்தர் ஒருவர் கொண்டு வந்த பிரசாதத்தின் சுவையில் நான் மயங்கியிருந்த போது நீ உன் வேதனையை சொன்னாய், நானும் வேறு வைஷாலிக்கு சொல்வதை உன்னிடம் சொல்லி குழப்பி விட்டேன். நீ மதனை இறுக பற்றிக்கொள் என்று சொல்லியது போலவும் தன்னை பட்டிமன்ற பேச்சாளராக உருவாக்கிய கடவுளுக்கு என்ன பேசத் தெரியாதா என்றும் தன் கனவில் வந்தது நிஜமில்லாமல் போனதற்கு கடவுளுக்கு மனதினுள் நன்றி சொல்லி மதனின் அணைப்பில் தானும் கலந்தாள்.

Wednesday, June 19, 2024

என் பேருந்து பயணம் by Veena Shankar

 


என் பேருந்து பயணம். 


என் தொழிலுக்கு தேவையான பொருட்களை சென்னையிலிருந்து தருவிப்பது வழக்கம் என்றாலும் இரு மாதங்களுக்கு ஒரு முறை அங்கே சென்று தொழிலின் நிலைக்கு ஏற்றார் போல் என் அறிவை மேம்படுத்துவது என் வழக்கம். எப்போதும் ரயிலில் முன் பதிவு செய்து பயணம் செய்யும் நான் கூட்ட நெரிசலால் இம்முறை முன்பதிவு செய்ய முடியவில்லை. சரி இருந்தாலும் ரயிலில் தட்கல் போட்டு ஊர் போய் சேரலாம் என்றால் அதுவும் கிடைக்காமல் என்னை ஏமாற்றியது. முன்பு பேருந்தில் பயணித்தாலும் ரயில் பயணம் வசதியாய் இருக்கவே பேருந்து பயணம் பல வருடங்களாக அந்நியபட்டது.  


இனி வேறு வழியில்லாமல் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தேன். படுக்கை வசதியுடன் கடைசியில் இருந்த ஓர் இருக்கை என் இருக்கை என்பதால் வசதி தான் எனக்கு. நான் கொண்டு வந்த பொருட்களை பக்கத்திலே வைப்பதும் என் வழக்கமே. படுக்கை வசதியோடு இருப்பதால் இதுவும் ஓர் புது அனுபவமே என்று நினைத்தே பயணித்திற்கு தயாரானேன். 


ஒரு பக்கத்தில் ஒரு படுக்கையும் மறுபுறத்தில் இரண்டு படுக்கை வசதி கொண்டதாகவும் இருந்தது அந்த பேருந்து. சிலர் ஜோடியாகவும், குடும்பமாகவும் பயணப்பட்டனர். 


புதுப் பயணம் என்பதால் புறம், அகம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே என் பயணம் வளர, ஒவ்வொரு முக்கிய நிறுத்தத்திலும் பேருந்து ஆட்களை ஏற்றிக் கொள்ள , சென்னையின் புறநகரிலே பேருந்து நிறைந்தது .  


அப்போது சாப்பிட தயாராக இருந்த என்னிடம் நடத்துநர் வந்து "சார்! ஒரு உதவி. இவர்கள் இருவரும் ஒரே ஊருக்கு செல்ல வேண்டியிருப்பதால் வேறு பேருந்தில் இருக்கை வசதி கூட இல்லாத காரணத்தினால் ஒருவரும் ஒரு சேர ஒரே இருக்கையில் அமர்ந்து வருவதாகவும் அதனால் நீங்கள் மேல் படுக்கைக்கு மாறலாமா?" என்று கேட்க ஏதோ அவசரத்தில் தலையாட்டி விட்டேன் . அதற்கும் ஓர் காரணம் உண்டு. வாங்கிய பொருட்களை பக்கத்திலே வைத்து கொட்ட கொட்ட விழித்து வருபவன் நான். மேல் படுக்கைக்கு மாற்றம் செய்தால் வசதி தான் என்று நினைத்தே சம்மதித்தேன். என் முன் இருந்தவர்களை பார்க்க அடர் விளக்கொளியில் எனக்கு ஏதும் அவர்களிடம் வித்தியாசம் தெரியவில்லை. ஒன்றாக வேலை பார்ப்பதால் ஊருக்கு எப்போது செல்வதானாலும் ஒன்றாக போவதை வழக்கமாக்கி இருப்பார்கள் என்ற சிந்தனை தான் இருந்தது எனக்கு. அதுவும் அவர்களில் ஒருவரை விசாரித்ததில் தெரிந்து கொண்டது தான். 


நேரம் செல்ல, நான் கொண்டு வந்த பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டு முடிக்க, ஓர் உணவகத்தில் பேருந்து நிற்கவும் சரியாக இருந்தது. இயற்கை உபாதைக்காக நான் மேலிருந்து இறங்க, அப்போது தான் கவனித்தேன் கீழே பயணித்தவர்கள் இருவரும் எதிரெதிர் பாலினத்தவர் என்று.  


பேசி பேசியே நித்திரையை கெடுத்த என் கீழ் பயணித்தவர்களை அடுத்தவர் கோபத்தில் திட்டிய போதும் அதையும் பொருட்படுத்தாமல் அவர்களின் பேச்சு வளர்ந்தது ஒழிய நின்றபாடில்லை. 


ஒரு கட்டத்திற்கு மேலே சுமார் இரவு பன்னிரண்டு மணிக்கு சயன நிலைக்கு செல்லும் எனக்கும் நித்திரை அவர்களால் தடை பட, அவர்களிடம் சொல்ல நினைத்த போது, அந்நேரம் அவர்களின் திரைச் சீலையும் லேசாக காற்றில் விலக, நான் குனிந்து அவர்களை உறங்குமாறு சொல்ல நினைத்த வேளையில் , நான் கண்டது என்னை நிலை குலைய செய்தது. 


ஒரு கட்டத்திற்கு மேலே அவர்களின் பேச்சு வளர்ந்தாலும் அவர்களின் நடவடிக்கையும் குறைந்தபாடில்லை. நான் சொல்ல வருவது படிப்பவருக்கு புரியும் என்ற நம்பிக்கையில் முடிந்தது என் பேருந்து பயணம்.

Tuesday, June 18, 2024

மாற்றம் கொண்ட விலங்குகள் by Veena Shankar

 


மாற்றம் கொண்ட விலங்குகள்


அமைதியை விரும்பும் மனிதர்களும் காட்டை பற்றிய செய்திகளை அறிய நினைத்து தங்கள் விடுமுறையை அங்கே கழிக்க எண்ணும் மனிதர்களும் பெருகி விட்டனர்.

 அப்படி காட்டை சுற்றி பார்க்க அவர்கள் செல்லும் போது தங்கள் உடனே தேவையான பொருட்களை எடுத்து செல்வது வழக்கம். அதில் முக்கியமானது அலைபேசி. 


தங்கள் பொழுதை அமைதியாக கழிக்க எண்ணிய அவர்களைப் பார்த்து பயந்த வன விலங்குகள் தங்கள் இருப்பிடத்தை ஆக்கிரமிக்க நினைப்பதாக எண்ணி அவர்களை எதிர்த்தன. நாளடைவில் விலங்குகளும் அவர்கள் பயன்டுத்தும் டெக்னாலஜியை கற்க விரும்பி அவர்களிடம் நட்பு பாராட்ட, சுமூகமானது அவர்கள் இருவரின் உறவும்.   


மனிதர்களுக்கு காட்டில் வாழும் ஆசையும் அங்கே நிலவும் அமைதியும் இயற்கை காற்றும் சண்டை சச்சரவு அற்ற சூழலும் பிடித்து போயிற்று. ஆனால் காட்டில் வாழ்ந்த விலங்குகளுக்கு சுதந்திரம் இல்லாமல் போனது. 


இருந்தாலும் அவை நாட்டு மக்கள் பயன்படுத்தும் வசதிக்கு மெல்ல மெல்ல ஆசைப்பட அவற்றை கற்றுக் கொண்டு அந்த வசதிக்கு அடிமையானது.  


காட்டை துறந்து வாழ ஒவ்வொரு விலங்கினமும் தங்களுக்குள் முடிவெடுத்து நாட்டுக்கு செல்ல விழைந்தன. 


 மேலும் மனிதர்கள் கூட்டம் காட்டை படிப்படியாக ஆக்கிரமிக்க தொடங்கியது.


அறிவியலின் வளர்ச்சிக்கு அடிமையான விலங்குகள் காட்டில் அலைபேசி அலைவரிசை சரியாக கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் நாட்டிற்கு குடியேற தங்களுக்குள் பேசி முடிவெடுத்தன. 


இதில் என்ன கொடுமை என்றால் மனிதன் தான் அடிமையானதோடு மட்டுமல்லாமல் காட்டு விலங்குகளையும் இந்த செயற்கை வாழ்விற்கு அடிமையாக்கி விட்டான். சுதந்திரமாய் சுற்றி திரிந்த விலங்குகளின் இடத்தை தன் சுயநலத்திற்காக ஆக்கிரமித்தது கொண்டான் என்பதே உண்மை.


விலங்குகளுக்கு இது தெரியுமா இல்லை புரியுமா இந்த மனிதனின் சுயநல நடவடிக்கை? மனிதன் தங்களை ஏமாற்றி விட்டான் என்பதை எப்போது புரிந்து கொள்ளும்?


நாமும் இப்படித்தான் பகட்டான ஆசைக்கும் நிரந்தரமில்லா வாழ்வுக்கும் அடிமையாகி நிம்மதியை தொலைக்கிறோம். வளமாக வாழ மனத்தை சுருக்கினால் போதுமே!

Friday, June 14, 2024

பரிசு by Veena Shankar

 


பரிசு


காலை முதல் கூடத்திற்கும் வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்த தன் மனைவி லலிதாவை சபரி, என்ன விசயம் என்று கேட்க , "ஒன்றுமில்லைங்க. உங்களுக்கு டிபன் எடுத்து வைக்கட்டா?" என்று மறு கேள்வி கேட்டு தன் கணவனை சமாளித்தாள். " ஏய்! என்ன இன்னிக்கு புதுசா கேட்குற! இப்போதான் பல் தேய்ச்சிட்டு வரேன். அதற்குள்ள டிபன் தரவா ன்னு கேட்குற?" என்று குரல் உயர்த்த, சாரிங்க! ஏதோ ஒரு நினப்புல கேட்டுப்புட்டேன்" என சொன்னவளிடம் 

" இல்லை. காபி கொண்டா, பேப்பர் படிக்கல." என்று சொன்னதும் "இதோ கொண்டாரேன் " என்று சொல்லி சமையற்கட்டு பக்கம் ஓடினாள். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் மனைவி கையால் காபி, ஓர் தனி சுகம் தான் என்பதை தெரிந்தவன் சபரி. 


என்ன செய்ய? ஒரு குழந்தை பிறக்குற வரைக்கும் தான் இந்த கவனிப்பு இருக்கும். வருஷம் பத்தாகிடிச்சி. இன்னும் ஒண்ணும் காணோம். எப்போ கடவுள் கண்ண தொறப்பாரோ? என்ற கேள்வியுடன் 

காபியை ரசித்துக் கொண்டே பேப்பர் படித்து விட, குளிக்க சென்றான். பின்னாலே மனைவியும் எடுபிடிக்கு சென்றாள். 


குளித்து முடித்து, சாமி கும்பிட்டு , சாப்பிட்டு விட்டு அலுவலகத்திற்கு சபரி கிளம்புவது வழக்கம். அதற்காக தான் லலிதாவும் காத்துக் கொண்டிருந்தாள். இடையிடையே அலைபேசியில் யாரையோ தொடர்பு கொண்டு பேசினாள், தன் கணவனுக்கு தெரியாது என்று நினைத்து. சாப்பிட்டதும் சாய்வு நாற்காலியில் ஏதோ யோசானையாய் சபரி அமர்ந்தான். 

 

பொங்கல் பண்டிகை வந்தாலே சபரிக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்து விடும். ஆம் . ஆளுங்கட்சி கொடுக்கும் இலவச பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் எத்தனித்தாலும் அடுத்த முறை சபரி ஆட்சிக்கு வரும் அளவிற்கு ஆதரவு இருப்பதால் இதை விட கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும் என்ற ஆலோசனையில் இருந்தாலும் ஒரு பார்வையை லலிதாவின் மீது வைத்திருந்தான். இதோ இப்போது கூட

அவன் மனைவி லலிதா, சபரிக்கு தெரியாமல் அந்த மணியோடு வெளியேற துடித்துக் கொண்டிருக்கிறாள் என்று சபரி உணராமல் இல்லை.


போன வருடம் , அதற்கு முந்தைய வருடம் ஏன் இன்னும் பல வருடங்களுக்கு முன்பே லலிதாவிற்கும் மணிக்கும் இதே வேலைதான். எப்படியாவது சபரி கண்ணில் மண்ணைத் தூவி ஓடி விடுவர். இருவரையும் மோப்பம் பிடித்து கையும் களவுமாகப் பிடித்து அவரவர் வீடு சேர்ப்பதே சபரிக்கு பெரிய வேலையாகிப் போனது. 


இந்த முறை அவ்வளவு கேவலமாக தான் இருந்து விடக் கூடாது என்பதற்காக அலுவலகம் போகாமல் வீட்டில் இருந்தபடியே ஆபீசையும் லலிதாவையும் மணியின் வரவையும் கண்காணித்து வந்தான். மணியின் வரவிற்காக லலிதா காத்திருந்தாலும் சபரி ஆபீஸ் போன பிற்பாடே தாங்கள் இருவரும் வெளியே போக முடியும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டே கடிகாரத்தை பார்த்தாள். 


நேரம் கடந்து போக, ஒரு கட்டத்தில் லலிதாவின் அழைப்பு இல்லாமல் மணி வீட்டிற்குள் வர, சபரியை பார்த்தவுடன் மிரண்டான் மணி. அவன் தன்னிலை வருவதற்குள்

" என்னடா மணி! இன்னிக்கு இந்த பக்கம் காத்து வீசியிருக்கு?" என கேட்க, " ஒண்ணுமில்லைங்க, உங்களை பார்த்திட்டு போலாம் ன்னு வந்தேனுங்க " என்று சொன்னான். " ஏதேது, ரொம்ப பாசமா தெரியுது! என்னை பார்க்க வந்தியா, இல்லை லலிதாவை கூட்டிட்டு போக வந்தியா?" என்ற கேள்வியை எதிர்பார்க்காத மணி," இல்லைங்க அத்தான். அப்படி ஏதுமில்லைங்க" என்று சொன்னாலும் அவன் சூட்சமத்தை தெரிந்திருந்தான் சபரி. அதற்குள் " யாரது! மணியா? " என அவன் வருகையை சமாளிக்க குசலம் விசாரிக்க வருவது போல் வந்து கண் ஜாடை காட்டி, அதற்குள் என்ன அவசரம் என்பது போல் அவனை கடிந்தாள் லலிதா. 


" என்ன பொங்கல் பரிசு

ஆயிரம் ரூபாயும் இலவச பொருட்களை வாங்க அக்காவை கூப்பிட வந்தியா? " என சபரி கேட்கவும் இருவரும் ஆமாம், இல்லையென்று சொல்ல முடியாமல் தவித்தனர். "உங்களுக்கு பொங்கல் வந்தா இதே பொழப்பா போச்சு. என் மானம் போகுது. அரசியலில் உள்ள நான், என் மனைவியும் அவள் தம்பியும் பொங்கல் பரிசுக்காக ரேஷன் கடையில் கூட்டத்தில் போய் முண்டியடித்துக் கொண்டு வாங்குறது பார்த்து ஊரே சிரிக்குது. உங்களுக்கு அசிங்கமா இல்ல?" எனக் கேட்க, "போங்க அத்தான்! அதோ அவர் இருக்குறல்லா என்று ஒரு பெரிய அரசியல்வாதியின் பெயரை சொல்லி, அவரே வாங்குறாரு, சுயேட்சையா நிக்குற உங்களுக்கென்ன? நாங்க தானே பொங்கல் பரிசு வாங்க போறோம்" என்று சொன்னதும் சபரிக்கு கோபம் தலைக்கேறியது. சபரியின் கோபத்தை புரிந்து கொண்டவனாய் அக்கா லலிதாவின் பின்னால் போய் அவன் ஒளிய, "க்கும். நடுத்தரமா இருந்த நாமும் இப்படி அரசியல் கட்சிங்க பின்னாடி போய் லஞ்சம் கிஞ்சம் வாங்கி தானே இப்படி வளர்ந்திருக்கோம். இலவசம் எல்லாத்துக்கும் பொது தானே? போன எலக்சனுல நான் கவுன்சிலரா நிக்கிறது தெரிஞ்சும் எனக்கே ஒட்டுக்கு பணம் கொடுத்திட்டு போனானே ஒருத்தன் , அது என்ன கணக்குங்குறேன்? இலவசம் வாங்குறதால மட்டும் என்ன அசிங்கம் ஆகிட போகுது? " என்று தன் பங்கிற்கு ஓங்கி குரல் கொடுத்தாள் லலிதா. 


இப்படி ஒரு நாளும் லலிதாவின் சப்தம் ஓங்கியதில்லை. இது புதுசு தான் என்றாலும் அவள் பேச்சில் நியாயம் இருந்ததை சபரி உணர்ந்தான். இப்படி அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே " அக்கா! அக்கா! " என்று பதறிக் கொண்டு மணி, லலிதாவை தாங்கி பிடித்துக் கொண்டாலும் அவள் கண் சொருகி மயக்கமடைந்தாள். 


டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன் பக்கத்து வீட்டு பார்வதியம்மாள் வரவழைக்கப்பட, நாடி பிடித்து பார்த்தவள், சீனியை கொண்டு வரச் செய்து சபரியின் வாயில் திணித்து லலிதா உண்டாகியிருப்பதாக சொன்னாள். அரை மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடுவாள் என்று சொல்லி சபரியிடம் இனாமாக இருநூறை கறந்தாள் பார்வதியம்மாள். 


இதை விட பெரிய பொங்கல் பரிசு லலிதாவிற்கு கிடைக்குமா? என்ற நினைப்பில் அவளை தானே தூக்கி கொண்டு உள்ளே மெத்தையில் கிடத்தினான் சபரி. 


இலவசமும் வசமாகும் நமக்கு, அதனால் நாமும் வசமாகி விடுவோம் அரசியல் கட்சிகளின் சூட்சமத்திற்கு

Wednesday, June 12, 2024

சொல்வது எளிது by Veena Shankar

 


சொல்வது எளிது


சுதாவின் கணவன் சதீஷ் கிப்ட் ஷாப் ஒன்று நடத்தி வந்தான். சுதாவும் தன் வீட்டு வேலைகளை முடித்தவுடன் அங்கே சென்று கணவனுக்கு உதவுவது வழக்கம். பெரும்பாலும் சுதா தான் கடையில் இருப்பாள். எப்போதும் புன்னகை பூத்த முகத்துடனே இருப்பதுதான் சுதாவின் அடையாளம். அந்த சிரிப்புக்கு மயங்கியே கடைக்கு மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அவள் சிரிப்பு மட்டும் அல்ல அவளுடைய அணுகுமுறையும் அப்படிதான். வரும் வாடிக்கையாளர்களின் மனதிற்கு ஏற்றார் போல் அவர்களுக்கு பொருட்களை காண்பித்து தன் பேச்சு திறமையால் வாங்க வைப்பதில் அவள் கில்லாடி என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு பொருளையும் அடுக்கி வைப்பதிலேயே அவள் செயலின் நேர்த்தி தெரிந்துவிடும். பட்ஜெட்டிற்கு தகுந்த மாதிரி அடுக்கி வைத்திருப்பாள். பொருட்களை தானே மனம் உவந்து வாடிக்கையாளர்களுக்கு காண்பிப்பதில்லாமல் அதைவிட ஒரு படி மேலே போய் வாடிக்கையாளர்கள் கடைக்கு உள்ளே வரும் முன்னே எழுந்து நின்று வரவேற்பது அவளுடைய தனி குணம். இதற்காக சதீஷிடம் அவள் பலமுறை திட்டு வாங்கி இருக்கிறாள். " கடை வாசல் வரை வருபவர்களுக்கு உள்ளே வர தெரியாதா?" என்று கேட்டுள்ளான் சதீஷ். ஆனால் அவளுடைய தாய் சொன்ன மந்திரத்தை மறக்காத அவள் , சதீஷின் பேச்சை இந்த விஷயத்தில் நிராகரித்தாள். 


ஒரு நாள் முதியவர் ஒருவர் தன் மனைவியோடு கடைக்கு வர, கல்லாவில் அமர்ந்திருந்த சுதா அவர்கள் வருவதைக் கண்டும் எழுந்து நிற்காமல் புன்னகை மட்டுமே பூத்து அவர்களை கடைக்கு உள்ளே போய் பார்க்குமாறு சொன்னாள். எப்போதும் ஓடி வந்து வரவேற்கும் அவள் ஏன் இன்று வரவில்லை? என்ற நினைப்போடு உள்ளே சென்ற அந்த பெரியவர், அங்கே புதியதாக வேலையாள் ஒருவள் நிற்பதை பார்த்தார். சிறிய கடை இப்போது பிரம்மாண்டமாக விரிந்து இருந்ததை வியந்து பார்த்தார். "உள்ளே பெரிய கடையா இருக்கு, ஆனா வெளியே இருந்து பார்க்கும் போது தெரியல" என்று தன் மனைவியிடம் சொல்லியவாறே தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களை மனைவிக்கு நினைவுபடுத்தினார்.


வந்தவரின் தேவையை கேட்டறிந்து அவர் விரும்பிய பொருளை காண்பித்தாள் வேலையாள். பல பொருட்களை வாங்கினாலும் சுதாவின் செயல் அவருக்கு புதிதாய் இருந்தது. மனதை குழப்பியது. ராசியான இந்த கடைக்கு பலமுறை தான் வந்திருந்தாலும் ஒரு நாள் கூட அவள் இப்படி நடந்து கொண்டதில்லை என்று தன் மனைவியிடம் அவர் சொல்ல, " சரி விடுங்க! இதை போய் பெருசு பண்ணிக்கிட்டு. அது என்ன கவலையில் உட்கார்ந்து இருக்கோ?" என தன் துணையின் கையைப் பிடித்து கல்லா பக்கம் வந்தாள். வாசல் பக்கம் வந்த பெரியவர் " வேலைக்கு ஆள் போட்டு கல்லாவுல உட்கார்ந்தா பழசெல்லாம் மறந்துவிடும் போல, அதுவும் கடையை பெரிசா மாத்திட்டாங்க இல்ல! சின்ன கடையா இருக்கும் போது விழுந்து விழுந்து கவனிப்பாங்க" என்று உரத்த குரலில் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டே கடையை விட்டு இறங்கினார். அவர் சொன்னது சுதாவிற்கு கேட்டது. "ஐயா! ஒரு நிமிஷம் நில்லுங்க " என்று சுதா சொன்னதும் பெரியவரின் துணை நெளிந்தார். சுதா தன் பக்கம் தான் நின்று கொண்டு இருக்கிறாள் என்று எண்ணிய பெரியவர் திரும்பிப் பார்த்தார். ஆனால் சுதா கல்லாவிலிருந்து தன் தோளில் இடுக்கியபடியே ஸ்டிக்கோடு வெளியே வந்தாள். " ஐயா! கொஞ்சம் எனக்காக உள்ளே வர முடியுமா? என்று சொல்லிக் கொண்டே மெதுவாக தாங்கிக் கொண்டு வந்து, தன் இயலாமையை காண்பித்தாள். ஒன்றும் புரியாமல் எப்படி இப்படி நடந்தது என பதறிப்போன அவரிடம் 

 " இரண்டு மாதத்திற்கு முன்பு மாடியில் இருந்து கீழே விழுந்துட்டேன் ஐயா. அப்போ என்னுடைய இடுப்பு எலும்பு, கால் பகுதியும் செயலிழந்து போயிடுச்சு. ஆப்ரேஷன் பண்ணியும் பிரயோஜனம் இல்லை என்று சொல்லிட்டாங்க. அதனாலதான் இந்த மாதிரி கைத்தாங்கலா நடக்க வேண்டி இருக்கு. அதுவும் இந்த ஸ்டிக் இல்லாம என்னால் நடக்க முடியாது. அதனால் தான் வேலைக்கு ஆள் அமர்த்தி இருக்கிறார் இவர். நீங்கள் வரும் போது கூட எழுந்து நிற்க முயன்றேன். முடியல. சரி நீங்க தவறா நினைக்க மாட்டீங்க என்று நினைத்தேன். வீட்ல தனியா இருக்கணும் பிடிக்கல. நாலு பேரை பார்த்தா தெம்பாயிடும் தான் கடைக்கு வரென்" என்று சொல்ல, சுதாவை தவறாக நினைத்ததற்காக பெரியவர் தன்னை தானே நொந்து கொண்டார். " இரண்டு மாசமா நாங்களும் இங்க இல்லை. பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம். நீ விழுந்தது தெரிஞ்சிருந்தா நாங்க பார்க்க வந்திருப்போம். இவர் பேசியதை மனசுல வச்சுக்காத, சாரிமா!" என்று சொல்லி தன் கணவனின் கையைப் பிடித்து இழுத்து வெளியே வந்தார் அந்த பெரியவரின் மனைவி.


வார்த்தைகளை உதிர்ப்பது எளிது, அதை மறப்பது கடினம்.

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வீரர்கள் இல்லா ஆடுகளம் மட்டையும் பந்துமாய் அலைக்கதிரை சுமக்கும் டவரும் கதிரவனும்

- வீணா

செவ்வானில் நெருப்பு கோளம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ,நம் கண்ணிற்கு மட்டுமே.இதோ உதயமாக போகிறது வேறோரு மண்ணில்,சிலருக்கு முடிவு பலருக்கு விடியல்.

நம்பிக்கையின் வேர் இயற்கை..

- வித்யா

Tuesday, June 11, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஒற்றை வெளிச்சம் யாருக்காக?

சிந்தையில் புதிதாய் உதித்தவை

 யாவும் சத்தமின்றி, சத்தியமாய்

 உருப்பெற்றால் பிறர் சொல்வர் ,

 இந்த ஒற்றை வெளிச்சம்

 நமக்கானது என்று

- வீணா


பௌர்ணமி நாளில் முழு நிலவு

சிவந்த கண் ஒன்று 

யாரும் இல்லா நடு

 பாலைவனத்தில் நோட்டமிட 

யாரும் மின்சாரத்தை கடத்த

 முடியாது, ஒற்றை நிலாவிடம்

 மின்சாரத்தை கடன் கேட்டு

 நிற்கும் மின் கோபுரம்.

Monday, June 10, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காட்சியை விரித்து பார்!

பல உண்மைகள் விளங்கும்

அதன் பிம்பத்தையும் பார்!

உலக படைப்பின் அர்த்தம் புரியும்.

ஆம் வீணா,

இது பகலா? இரவா?

இல்லை மாலையா?

நடுஇரவு, விஞ்ஞானத்தின் கையில்

 உலகை எந்நேரமும் படம் எடுக்க

 சாத்தியமே!

எங்கும் மாயை எதிலும் மாயை அதை

 விலகி பார்க்கும் கண்ணாடியில் உன்

 பிம்பம் அது மட்டுமே உண்மை,அதையும்

 அவர்அவர் கற்பனைக்கு ரசமேற்றி

 பார்க்கும் அதிகாரம் யார்க்கொடுத்தது!

Friday, June 7, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மண்ணுக்குள் ஈரம் என்பதால் முளைத்த இதயமெனும் செடிகள், மண்ணில் களைகளோடு செழித்து வளர்ந்தாலும் தனித்துவம் உண்டு அதனிடம்

அழகு வீணா

மண்ணை அள்ளி திண்ணாலும் நம் காதல் எப்படி மறையும்!

வறண்ட பாலையும் இங்கு சோலையானது நம் காதல் கதை கேட்டு!

மணற்பரப்பில் உன் வாசம் பரவி கிடக்க, அனல் வந்து அள்ள விடுவேனா!

அந்த ஆகாயம் ,பூமி சாட்சியாக செய்த சின்னம்!

நாம் இணையா விட்டாலும் இந்த இணைந்த இதயங்கள் சாட்சி சொல்லும்..

அழகு ,அறிவு by Veena Shankar

 


காகம் கரைந்தாலும்

கிளி பேசினாலும்

தாங்கள் நினைக்கும்

நிஜத்தை சொல்லத்

தெரியாதவை


எதுவும் அழகே!


காகத்தின் அழகிய கருமை நிறமும் 


கூரிய அலகும் 


தலை சாய்த்து நோக்கும் பார்வையும் 


உண்ணும் போது பகிர்ந்து கொள்ளும் பழக்கமும் 


வஞ்சமில்லா அறிவும் 


அழகே!


கிளி பேசும் மொழியும்


அழகிய நிறமும்


அலகின் செந்நிறமும்


அழகின் சிரிப்பும் 


கூண்டை விட்டு வெளி வர துடிக்கும் மனமும்


அடிமையாக்கும் திரனும்


அழகே!


சைவமும் அசைவமும் கொண்டாலும் இரண்டும் அழகே! 

அதனதன் நிறத்தில்


 அழகு கூண்டில்

அறிவு சுதந்திரமாய்


 நான் தேடும் பறவைகள் இரண்டு


கருமை கடந்த காலத்தின் பயனுக்காக


பசுமை எதிர்காலத்தின் இனிமைக்காக

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பாதை போட்டு வழி கண்டவன் பின்னால் கூட்டம்

ஒருவழி பாதையும் இல்லை, இரு வழி பாதையும் இல்லை

இங்கே எப்போதும் பல பாதைகள் உண்டு வாழ்வை எதிர்கொள்ள என்று

உணர்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள் பல


உண்மை வீணா,


ஒரு அற்புதத்தை தர காத்திருந்த

 அந்த மாலை நொடி

 பொழுது.இலக்கு வேறு வழியில்

 கண்ட பறவை கூட்டம் மனதை

 வசப்படுத்த. நெருங்கி சென்று

 அருகில் காண போன

 போது.இரை தேடி,பசியாற்றி,

 அன்றைய நாளுக்கு

 விடைச்சொல்லும்

 நேரம்,பகலவன் மெல்ல மறைய,

 சடசடவென நூற்றுக்கு மேலுள்ள

 நாரைகள் படபடவென பறந்த

 காட்சி,மனதை உலுக்கியது.

சற்றன நான் பார்க்க காத்திருந்தாயோ!

மனநோய் போக்க வந்த மருந்தோ!

முழுவதுமாக அருந்தும் முன் ஏன் பறந்தாயோ!

கூட்டில் காத்திருக்கும் குஞ்சுகளை இளைப்பாற்ற சென்றாயோ!

மீண்டும் நாளை நீங்கள் வருவீர்! நாங்கள் வர எத்தனை வருடமோ!

போகும் முன் மனநிறைவை தந்தாயே!

அதுவே போதும் பேரானந்தம்!




படமும் கருத்தும் by Veena Shankar

 


 நிலவினை கவர்ந்த கள்வர்கள் தாம் இவர்கள்


சிறிது நேரத்திலேயே கவர்ந்ததை துறப்பர்

நிலாவின் பெயர்ச்சியால்


கவர்வதும் எளிதல்ல

அதை 

தன்னகத்தே கொள்வதும் அழகல்ல

எளிதல்ல


கவர்பவர் உண்ணாமல் அடுத்தவருக்காக நிலவினை பகிர்ந்த பறவைகள்


 வானம் வசப்பட்டது

அடுத்து நிலவு

தற்போது

நம் பாரத்தின் நிலை


 தெரிந்து செய்தால் தவறு

தெரியாமல் செய்தால் அழகு

தெரியாமல் சுட்ட தோசையில்

தெரிந்த நிலா


 காதல் பறவைகளின் அலகிலும்

அழகிலும் சுருண்டது நிலா

Thursday, June 6, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நீரில் வழி போட்ட நீரும் யாரோ?

அந்தியில் மயங்கியதால் நீந்தி மிதப்பது யாரென்று தெரியாமல் என் பார்வை சொல்லுதே நீ மட்டுமே அழகு என்று

ஆம் வீணா,நீரில் ரோடு அதுவும் பின்தங்கிய நடையில் , அத்தனை வண்ண பூநாரையின் மத்தில் வித்தை காட்டி அனைவரின்  கவனத்தையும் ஈர்த்த கருமையின் ஆதிக்கம்.என்னவென்று சொல்வது.வா சீக்கிரம் வா அந்தி மயங்குது ,வேடிக்கை பார்த்தது போதும் என அழைக்கும் இரவு. 

படமும் கருத்தும் by Veena Shankar

 


கரம் பற்றிய மலரும்

சிரம் உயர்த்திய மங்கையும்

வரமே இப்புவியில்


மலரை பற்றிய மங்கைக்கு 

புதிரானது வாழ்வு

புறம் கூறிய மனிதர்களால்


விரிந்து விட்டால் மட்டும் மலராகாது

Tuesday, June 4, 2024

நீரோடையா? by Veena நீரோடையே! by Vidhya

 



நீரோடையா? இல்லை நினைவோடையா?

காற்றின் வேகத்தில் அலையாய் நம்மை சலனபடுத்தும் நிஜமா?

கருவி நானென்றாலும் கரு நீதானே? 

உன்னை அறிந்து கொண்டேன் என்ற முனைப்பில் நான்

ஆம் வீணா, நீரோடையே,சூரிய

 வெப்பத்தில் நீராவியாக போன மிச்சம்

 அதையும் காற்று அள்ளிக்குடிக்க

 ஆர்ப்பரிக்க! 

கருவை இயக்க வந்த கருவி!

  கருவியை தேடி வந்த

 காந்தமாக காற்று,பூநாரை,நாங்கள்.

நீ எங்கே என்று தேடி சென்ற

 பாதையில் ஒரு அற்புத புதையல்

 ஒளிந்து கிடந்த நீரோடை  .

படமும் கருத்தும் by Veena Shankar



இதில் உள்ளே போடும் காசு யாவும் குட்டி போடுவதில்லை

ஆனால் நம் மனதில் போடும் குப்பைகள் யாவும் காழ்ப்புணர்ச்சியாய் வெளிப்படும்


 மண் இருந்தாலும் பொன் 

உடைந்தாலும் பொன்

சேமிப்பு என்னும் பழக்கத்தினால்


 நீ நிறையும் முன்னே துளை 

வழியே பார்ப்பதும்

நிறைந்த பின் உடைத்துப் பார்ப்பதும்

மனித இயல்பு


அங்கே நினைக்கத் தோன்றுகிறது

மனிதனின் இயலாமையை

சேமிக்கும் வரை அவசரம்

சேமிப்பு நிறைந்த பின் அசுர வேகம்

அதை செலவழிப்பதில்


மேலும் அவன் கைகளை கட்டி போடாமல் உண்டியலை பூட்டி வைத்தானே

அன்றே அவன் நம்பிக்கை கேள்விக்

குறியாகிறது


 வங்கியில் இருக்கும் பணம் போல் இல்லை இது

கடன் பெற சில மணி நேரமாகும்

அவசரத்திற்காக உடைபடும் இது வட்டியும் வசூலிப்பதில்லை


வயல் காட்டு மண்ணும் சேமிக்கும் கலன் ஆனது

விதையை சேகரிக்க அல்ல

இங்கே விளைந்ததின் பலனை அனுபவிக்க


 தேவையுள்ள போது உடுபடுபவன் தேங்காய் மட்டுமல்ல

இவனும் தான்

Monday, June 3, 2024

எல்லாம் மாயை by Veena Shankar

  


மனிதனின் கையால் சமதியாய் போன தன் காதலிக்கு ஓர் மலர் கொண்டு கண்ணீர் அஞ்சலி

 எல்லாம் மாயை

 கண்ணுக்கு தெரிவது மாயை 

உண்மையில்லாத புவியில்

தன் நண்பனின் இடியை தாங்கி கொண்ட உண்மை நண்பன்

 கண்ணுக்கு தெரிவது மாயை 

உண்மையில்லாத புவியில்

 மனிதனின் கையால் சமதியாய் போன தன் காதலிக்கு ஓர் மலர் கொண்டு கண்ணீர் அஞ்சலி

 காதலை சொல்ல வாய்ப்பில்லாத நேரத்தில் எதிர்பாராமல் 

நடந்த துயரச் சம்பவத்தில் காதலியை இழந்த காதலனின் காதல் மலர் அவள் சூடா அல்ல

சமாதியில் அர்ப்பணிக்க

 தன் நண்பனின் இடியை தாங்கி கொண்ட உண்மை நண்பன்

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...