என் பேருந்து பயணம்.
என் தொழிலுக்கு தேவையான பொருட்களை சென்னையிலிருந்து தருவிப்பது வழக்கம் என்றாலும் இரு மாதங்களுக்கு ஒரு முறை அங்கே சென்று தொழிலின் நிலைக்கு ஏற்றார் போல் என் அறிவை மேம்படுத்துவது என் வழக்கம். எப்போதும் ரயிலில் முன் பதிவு செய்து பயணம் செய்யும் நான் கூட்ட நெரிசலால் இம்முறை முன்பதிவு செய்ய முடியவில்லை. சரி இருந்தாலும் ரயிலில் தட்கல் போட்டு ஊர் போய் சேரலாம் என்றால் அதுவும் கிடைக்காமல் என்னை ஏமாற்றியது. முன்பு பேருந்தில் பயணித்தாலும் ரயில் பயணம் வசதியாய் இருக்கவே பேருந்து பயணம் பல வருடங்களாக அந்நியபட்டது.
இனி வேறு வழியில்லாமல் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தேன். படுக்கை வசதியுடன் கடைசியில் இருந்த ஓர் இருக்கை என் இருக்கை என்பதால் வசதி தான் எனக்கு. நான் கொண்டு வந்த பொருட்களை பக்கத்திலே வைப்பதும் என் வழக்கமே. படுக்கை வசதியோடு இருப்பதால் இதுவும் ஓர் புது அனுபவமே என்று நினைத்தே பயணித்திற்கு தயாரானேன்.
ஒரு பக்கத்தில் ஒரு படுக்கையும் மறுபுறத்தில் இரண்டு படுக்கை வசதி கொண்டதாகவும் இருந்தது அந்த பேருந்து. சிலர் ஜோடியாகவும், குடும்பமாகவும் பயணப்பட்டனர்.
புதுப் பயணம் என்பதால் புறம், அகம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே என் பயணம் வளர, ஒவ்வொரு முக்கிய நிறுத்தத்திலும் பேருந்து ஆட்களை ஏற்றிக் கொள்ள , சென்னையின் புறநகரிலே பேருந்து நிறைந்தது .
அப்போது சாப்பிட தயாராக இருந்த என்னிடம் நடத்துநர் வந்து "சார்! ஒரு உதவி. இவர்கள் இருவரும் ஒரே ஊருக்கு செல்ல வேண்டியிருப்பதால் வேறு பேருந்தில் இருக்கை வசதி கூட இல்லாத காரணத்தினால் ஒருவரும் ஒரு சேர ஒரே இருக்கையில் அமர்ந்து வருவதாகவும் அதனால் நீங்கள் மேல் படுக்கைக்கு மாறலாமா?" என்று கேட்க ஏதோ அவசரத்தில் தலையாட்டி விட்டேன் . அதற்கும் ஓர் காரணம் உண்டு. வாங்கிய பொருட்களை பக்கத்திலே வைத்து கொட்ட கொட்ட விழித்து வருபவன் நான். மேல் படுக்கைக்கு மாற்றம் செய்தால் வசதி தான் என்று நினைத்தே சம்மதித்தேன். என் முன் இருந்தவர்களை பார்க்க அடர் விளக்கொளியில் எனக்கு ஏதும் அவர்களிடம் வித்தியாசம் தெரியவில்லை. ஒன்றாக வேலை பார்ப்பதால் ஊருக்கு எப்போது செல்வதானாலும் ஒன்றாக போவதை வழக்கமாக்கி இருப்பார்கள் என்ற சிந்தனை தான் இருந்தது எனக்கு. அதுவும் அவர்களில் ஒருவரை விசாரித்ததில் தெரிந்து கொண்டது தான்.
நேரம் செல்ல, நான் கொண்டு வந்த பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டு முடிக்க, ஓர் உணவகத்தில் பேருந்து நிற்கவும் சரியாக இருந்தது. இயற்கை உபாதைக்காக நான் மேலிருந்து இறங்க, அப்போது தான் கவனித்தேன் கீழே பயணித்தவர்கள் இருவரும் எதிரெதிர் பாலினத்தவர் என்று.
பேசி பேசியே நித்திரையை கெடுத்த என் கீழ் பயணித்தவர்களை அடுத்தவர் கோபத்தில் திட்டிய போதும் அதையும் பொருட்படுத்தாமல் அவர்களின் பேச்சு வளர்ந்தது ஒழிய நின்றபாடில்லை.
ஒரு கட்டத்திற்கு மேலே சுமார் இரவு பன்னிரண்டு மணிக்கு சயன நிலைக்கு செல்லும் எனக்கும் நித்திரை அவர்களால் தடை பட, அவர்களிடம் சொல்ல நினைத்த போது, அந்நேரம் அவர்களின் திரைச் சீலையும் லேசாக காற்றில் விலக, நான் குனிந்து அவர்களை உறங்குமாறு சொல்ல நினைத்த வேளையில் , நான் கண்டது என்னை நிலை குலைய செய்தது.
ஒரு கட்டத்திற்கு மேலே அவர்களின் பேச்சு வளர்ந்தாலும் அவர்களின் நடவடிக்கையும் குறைந்தபாடில்லை. நான் சொல்ல வருவது படிப்பவருக்கு புரியும் என்ற நம்பிக்கையில் முடிந்தது என் பேருந்து பயணம்.

No comments:
Post a Comment