தாங்கி பிடித்தாலும் உண்மை பேசாது, மௌனமாய் கொல்லும்
தாங்கி பிடிக்கும் கரங்களும் ஓர் நாள் பலமிழக்கலாம். அதற்குள் உண்மை பேசி, நல்லதை காண முடியாவிட்டாலும் அடுத்தவரின் பார்வையை மாற்ற இயலாத போதிலும் நம் கண்களை இறுக மூடுவோம், அடுத்தவரின் தவறை எண்ணாதவாறு
ஓர் புதிய முயற்சி புத்தாண்டின் முதல் நாளில்
கொள்ளும் நல்ல எண்ணம் மட்டுமே சிறக்கும் என்பதால்
விழி மூடி கொண்டு செய்த சிந்தனையால்
இறுதியில் எண்ணம் கரைந்தது தான் மிச்சம்
சரி எது ? தவறு எது?
என்பது தெரியாமல்
உண்மை இது! பொய்மை இது!
என்பது விளங்காமல்
இருக்க
பிறரிடத்தில் பகடைக் காயாகி
அச்சத்தில் மொத்தமாய் எனை நான் மாற்றிக் கொள்ள
ஏளனம் மட்டுமே விஞ்சியது,
கண்மூடித்தனமான வார்த்தையும் வாழ்க்கையும் சிறக்காது
என்ற பேச்சால்
தாங்கும் கரங்களே இப்படி உரைத்த பின்னால்
கண்ணாமூச்சி ஆட்டமும் தேவையா?
விழியின் முடிச்சை அவிழ்க்க கரங்களின்
உதவியும் தேவை தானே?
உண்மை அறிந்தேன்,
விழி மூடினால் மட்டும்
விமர்சனம் குறையாது
செவியும் மூட வேண்டியே உத்தரவிட்டேன் என் கரங்களுக்கு.
நல்லதை காண விழியும் செவியும் கரங்களோடு ஒன்றிணைய
தீயவைக்கும் தேவைதான் இந்த கூட்டணி
அனைத்தையும் மறைக்க, மறுக்க, மறக்க
அதனால் வாழ்வு சிறக்க
தோற்றம் மாறினாலும் இதயத்தின் அளவு
ஒன்றே தான் என்பதை
மனதில் கொண்டு
தேவைக்கு மட்டும் விழியை திறப்போம்
எண்ணத்தின் முயற்சியில் கரைந்தது ஆண்டின் இறுதி நாளும்
அடுத்தும் முயற்சிகள் தொடரும் என்ற நம்பிக்கையோடு

No comments:
Post a Comment