Thursday, January 2, 2025

ஆறுதல் அல்ல வெற்றி by Veena Shankar

 


ஆறுதல் அல்ல வெற்றி


எப்போது காலை ஐந்து மணியாகும் என்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தன் அலைபேசியை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்யா. அலாரம் அடித்ததும் எழுந்து காலைக் கடன்களை முடித்து அங்குமிங்குமாக நடக்க, நேரம் ஐந்தரையை தொட்டது. காலை இந்நேரத்திற்குள் வரும் அவர் இன்னும் காணவில்லை ஏன் என்ற கேள்வியோடு. " டப் " என்ற சத்தம் கேட்டு ஓடி வந்து வாசலை அவள் பார்க்க, அடுத்த வீட்டில் பேப்பர் பையன் பேப்பர் போட்டு சைக்கிளை வேகமாக மிதித்து தெரு முனையை தொட்டான். சரி காபியாவது குடிப்போம் என்று பாலை பிரிட்ஜ் லிருந்து எடுத்து காய்ச்சினாள். முன்பெல்லாம் "சார் பேப்பர்" என்று பேப்பர் பையன் கூப்பிடுவான். அவன் ஒலி கேட்டே பேப்பர் வந்துவிட்டது என்று எல்லோருக்கும் தெரிந்துவிடும். சென்னையிலேயே இவ்வளவு லேட்டா பேப்பர் போட்டா கிராமங்களில் எப்படி என்ற சிந்தனையும் அவளுள் எழுந்தது. மறுபடியும் பார்ப்போம் என்று வாசலுக்கு வரவும் பேப்பர் பையனும் சரியாக வர, அவனிடம் தாமதமாக வர காரணம் என்ன என கேட்க வேண்டும் என்றிருந்தவள், பேப்பரைக் கண்டதும் மறந்தாள். அன்றைய தினம் அவளுடைய வாழ்க்கையில் இன்னும் ஒரு படி உயரம் கொள்ள வேண்டி எதிர்பார்ப்பில் நாளிதழை பிரித்தாள். ஞாயிறன்று இலவச இணைப்பாக வரும் வாரமலர் ஒன்றில் தன் படைப்புகள் வெளிவர உள்ளது என்பது தெரிந்ததால் ஆவலுடன் பார்க்க , ஓர் கதைக்காக அவள் வரைந்த படம் வந்திருந்தது. அதை பார்த்தவுடன் ஆனந்தம் அவளுள். மீண்டும் பக்கங்களை வேகமாக புரட்டியவள் , 

" கவிதைச் சோலை" யில் தன் படைப்பு பிரசுரமானதைப் பார்த்தாள். ஒன்றல்ல இரட்டிப்பு மகிழ்ச்சி அவளுக்கு இருந்தது. என்ன தான் அந்த நாளிதழில் ஒரு கிளார்க் ஆக வேலை பார்த்தாலும் தன் சிந்தனையை தூண்டி உருவான படைப்பு வெளி வரும் போது எவரும் ஆவலாக தான் இருப்பார்கள். சிறு வயதில் அவள் கவிதைகள், ஓவியங்கள் படைத்திருந்த போதும் தன் அண்ணனும் தந்தையும் தான் சரியாக படிப்பதில்லை என்ற ஒரே காரணத்திற்காக கிழித்து எறிந்த நிகழ்வு அவளிடம் அணையா நெருப்பாய் இருந்தது. எப்படியும் தன் படைப்பை ஊரறிய நினைத்தாள். அது இன்று நிறைவேறியது அவளின் மேலதிகாரியின் துணையோடு. இந்த ஆண் வர்க்கத்தின் பிடியில் ஓர் பெண்ணின் படைப்பு வெளி வருவதும் ஆறுதல் அல்ல வெற்றியே! என்றும் உணர்ந்தாள். மேலும் தாமதமாக வந்த நாளிதழை கருத்தில் கொண்டு மீண்டும் எந்த பகுதியிலும் இது நடக்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க மேலதிகாரியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். வருடங்கள் பல ஓட , பன்முகத் தன்மை கொண்ட சரண்யாவும் தன் மேலதிகாரியின் ஓய்விற்கு பின் அந்த இருக்கையில் அமர்ந்தாள். இது வெற்றியல்ல, சாதனையே!


ஆறுதல் தரும் யாவும் வெற்றிக்கு வித்து, வெற்றி கொள்ளும் யாவும் சாதனைக்கு வித்து.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...