காதல் திட்டம்
குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ரவி . " என்ன விசயம்? எப்போதும் கம்ப்யூட்டர் கையுமாக இருக்கும் நீங்கள் அந்த காலத்து ஆம்பள மாதிரி ஹால்ல நடந்துக்கிட்டு இருக்கீங்க " என்று சமையற்கட்டின் ஜன்னல் வழியே பார்த்த கீதா, தன் கணவனைக் கேட்டாள். "இல்லடி கீது... நம் பையன் சிவாவை பற்றி தான் ஒரே யோசனையா இருக்கு."
" அவனுக்கென்னங்க குறைச்சல், என்னை மாதிரி அழகோடையும் அறிவோடையும் இருக்கான். நல்ல வேலை. பத்தாதற்கு நமக்கு ஒரே பையன். கண்ணுக்குள்ள வைச்சு வளர்த்திருக்கிறோம்" என்றாள்.
" எனக்கென்னமோ அவன் மேல சந்தேகமா இருக்கு. யாரையாவது லவ் பண்ணிகிட்டு இருக்கானோன்னு என் மனசுல தோணுது. "
" என்னங்க புதுசா சொல்றீங்க! சிவா நம்ம பையன்க. அப்படியெல்லாம் ஒண்ணும் பண்ணமாட்டான்." என்று கீதா சொல்ல, அவளை மேலே கீழே பார்த்தான் ரவி. அவன் பார்வையை புரிந்து கொண்டவளாய் "இல்லைங்க, நாம அந்த காலத்துல சின்சியரா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டோம் . சிவாவும் லவ் பண்ணுவான்னு எனக்கு தோணலங்க" என்றாள்.
"இப்பதான் அவன் பெருசா நம்ம பையன், நம்ம ஜீன்னு சொல்லி கதை அளந்த, நம்மளை மாதிரி அவனும் காதல் கீதல் ன்னு மாட்டிக்காம இருக்கணுமே" என்று ரவி மாறினான் பொறுப்பான தந்தை ஸ்தானத்தில். கீதா அசடு வழிந்தவாறே அங்கிருந்து நகர முயல, அவள் கையை பிடித்து இழுத்தான் . "ச்சீ! விடுங்க, என்ன புதுசா கல்யாணம் பண்ணின மாதிரி" என்று சொல்லி அவன் கையை அவள் உதறி விட, "அடி மக்கு பொண்டாட்டியே! இங்க பாரு இது யாரோட மொபைல்?" என்று சொல்லிக் கொண்டே தன் கையிலிருந்த மொபைலை காண்பித்தான்.
" ஏங்க! இது கூட தெரியாதா? சிவாவோடது" என்று சொன்னாள். " அப்பா! இதுவாச்சும் தெரிஞ்சுதே, உனக்கெல்லாம் எப்படி கவர்ன்மென்ட் வேலை கிடைச்சதோ?" என்று சொல்லி தன் ஆதிக்கத்தைக் காட்டி அவளை ரவி பேச்சால் சீண்ட, அவள் பார்வையால் முறைத்தாள் . ஆனால் கணவர் ஏதோ முக்கியமான விசயம் ஒன்றை சொல்லப் போகிறான் என்பதை புரிந்துகொண்டு மீண்டும் " என்னங்க என்ன விசயம்? " என்று சீரியஸ் ஆனாள். " வா " என்று சொல்லி சிவாவின் போனை அவளிடம் காட்டி " பார்! இன்னிக்கி அவன் மொபைலை மறந்தாப்புல வச்சுட்டு போயிட்டான் . எத்தனை மிஸ்டு கால் வந்திருக்கு. ஆனா அதுல ஒண்ணு கூட
பசங்க நம்பர் இல்லை. எல்லாம் பொண்ணுங்க பேரா இருக்கு, பாரு !" என்று காட்டவும் கீதா நெற்றியை சுருக்கிப் பார்த்தாள். விசயம் விபரீதம் தானோ என நினைத்தாள்.
அப்போது அவர்கள் பேச்சுக் குரல் கேட்டு ரூமை விட்டு வெளியே வந்த ரவியின் அக்கா லதாமணி, " என்ன விசயம்? நீங்கள் மட்டுமே முணு முணுன்னு பேசுறீங்க!" என்று காதை நுழைத்தாள் . அதற்கு கீதாவோ, "அக்கா! பாருங்க நம்ம சிவா பண்ணியிருக்க காரியத்த" என்று சொல்லி மொபைலை அவளிடம் காட்டி மிஸ்டு கால் வந்த பெயர்களை பார்க்க சொன்னாள். "என்னடி சொல்ற!" என்று அவளும் படப்படத்தாள்.
லதாமணி அதைப் பார்த்ததும் விசயத்தை புரிந்து கொண்டாள். " உங்க ரெண்டு பேருக்கும் அறிவே இல்லை. நம்ம சிவாவிற்கு இருபத்தியேழு வயசு ஆகும் போதே ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க என்று சொன்னேன், கேட்டீங்களா? நல்லா மார்க் வாங்கின அவனை வெளில படிக்க அனுப்பாம பக்கத்திலேயே பொத்தி பொத்தி வைச்சுக்கிட்டீங்க. நீங்க மட்டும் அவன் வயசுல காதலிச்சு கல்யாணமும் பண்ணிக்க துடிச்சீங்க. நான் மட்டும் உங்களுக்கு ஆதரவா பேசாம இருந்தா உங்க கல்யாணம் நடந்திருக்குமா? இப்போ அவனை சொல்லி குத்தமில்லை" என்று இருவரையும் கடிந்து கொண்டாள்.
ஆம். அவள் சொன்னதும் உண்மையே. சொந்த அத்தை பையன் மாமன் மகள் என்றாலும் அவர்கள் காதலுக்கு அக்கா மட்டுமே பச்சை கொடி காட்டி, அவர்கள் கல்யாணத்தை சிறப்பாய் நடத்தவும் காரணமாகியிருந்தாள். ஆனால் அவள் துரதிருஷ்டம். அவளுக்கு திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அவள் கணவன் இறக்க பிள்ளைகள் இல்லாததால் ரவி, அக்காவை தங்களுடனேயே இருக்க சொன்னான். சிறு வயது முதலே தம்பியின் மீதும் குடும்பத்தின் மீதும் பாசம் வைத்திருந்தாள் லதாமணி . சிவாவை தன் பிள்ளையாகவே பார்த்தாள். கீதாவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வீட்டோடு இருந்தாள்.
அக்காவின் பேச்சினால் தங்கள் தவறை உணர்ந்தனர் தம்பதியர். அத்தைக்கும் சிவாவின் விசயம் எல்லாம் தெரியும்.
அந்நேரம் பார்த்து தன் செல்போனை வீட்டில் மறந்து வைத்து விட்டதாக வந்த சிவா, அது தன் அம்மாவின் கையில் இருப்பதைப் பார்த்து அவசரமாக வாங்கிக் கொண்டு வெளியேறினான் . தான் கோயிலுக்கு செல்வதாக கூறி லதாமணியும் கிளம்பி சென்றாள். காதல் திருமணம் செய்து கொண்ட அவர்களால் சிவாவையும் கண்டிக்க முடியாததால் மௌனம் காத்தனர் ரவியும் கீதாவும். சிவாவின் ஜாதகத்தை தேடும் வேட்டையில் இறங்கினர்.
அன்றிரவு சிவா தன் அத்தையிடம் " தாங்க் யூ அத்தை! என்று அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சினான். "போடா! " என்று அவளும் சிவாவை செல்லமாக கடிந்தாள்.
ஆம் . அத்தை ஜாடைமாடையாக சிவாவிற்கு பெண் பார்க்க சொல்லியும் அதை புரிந்து கொள்ளாத பெற்றோருக்கு அத்தையும் மருமகனும் சேர்ந்து நடத்திய நாடகம் தான் இது. அத்தையின் யோசனைப்படி தன் நண்பர்களின் பெயரையும், ஃபோட்டோ வையும் பெண்களின் பெயரில் பதிந்து வைத்தான். அதை ஏதேச்சையாக பார்த்த ரவி, தன் மகனுக்கு பெண்கள் மட்டுமே ஸ்நேதிகளாக இருக்கிறார்கள் , ஏதாவது தவறு நடந்து விட போகிறது என்று தவறாக எண்ணினான்.
எது எப்படியோ தன் திருமணத்திற்கான முதல் படியில் ஏறினான் சிவா. கற்பனையை விரித்தான். பிள்ளைகள் திருமண வயதை தொடும் போது பெற்றவர்கள் தான் அவர்கள் எண்ணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
எதுவும் நம் கைப்பட இருக்கும் வரை பொக்கிஷமாகவே தெரியும். பிடி தளர்த்தினால் மட்டுமே பிடியிலிருந்து தளர்ந்தவை எதிர்நீச்சல் போட்டு பிழைக்கும்.
காலம் இருக்கும் போது எதையும் செய்வது சிறப்பே!

No comments:
Post a Comment