நீ வருவாய் என!
நான் இங்கே தான் இருக்கிறேன். உன்னை விட்டு இங்கிருந்து விலக மாட்டேன். உன்னை என் கண்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கும். நான் எதிர்ப்பார்க்கும் போது வர மறுக்கிறாய்? என் மேல் உனக்கு கோபமோ? அதென்ன நான் பக்கத்தில் நிற்கும் போது அமைதியாய் இருக்கிறாய்? நான் ஏதோ வேறு வேலைக்கு சென்றால் உடனே ஆர்ப்பரித்துக் கொண்டு வந்து என் சாம்ராஜ்ஜியத்தை நிலை குலைய வைக்கிறாய். எப்படி? வெள்ளை மனதுடைய என்னையே கலங்க வைக்கிறாய்? உன்னால் எனக்கு எவ்வளவு அவப் பெயர் தெரியுமா ? நீ வெளி வந்து என் சமையலின் மணத்தை சுருக்குகிறாய்? உன் ஆடையை கிழித்து கொண்டு வருவதில் தான் உனக்கு எவ்வளவு மகிழ்ச்சி? நீ வருக நான் பக்கம் இருக்கும் போது, நீ வருவாய் என நான் நினைக்கும் போது. உன்னை சூடேற்றினால் வெளி வருவாய் என்பதால் அதையே நான் கையாளுகிறேன் உன்னை நான் அடைய வேண்டி. பல சமயங்களில் உன்னை நேரம் பார்த்தே கையாள வேண்டியுள்ளது. அதுவும் காலை நேர அவசர கதியில் நீ படுத்தும் பாடு இருக்கிறதே. சொல்லி மாளாது. நீ நெகிழ்ந்து போகிறாய் என்பதால் தானே வர மறுக்கிறாய்? உன்னை கொண்டு சேர்ப்பவனின் கை வண்ணத்தால் தான் நீ இப்படி இருக்கிறாய் என நானும் அறிவேன். ஆனால் எதற்கும் ஓர் எல்லையுண்டு தானே? என வீர வசனம் சொல்லிக் கொண்டு சமையற்கட்டில் நின்று கொண்டிருந்தாள் தமிழ் ஆசிரியையான அந்த வீட்டின் புது மருமகள் நித்யா. அவள் மாமியாரும் நாத்தனாரும் நித்யா தனியே பேசுவதை கேட்டு மெல்ல அங்கே எட்டிப் பார்க்க, அந்த சத்தம் கேட்டு நித்யாவும் அவர்களைப் பார்த்து தன் அடுத்த வசனத்தை மறந்து நிற்க, புஸ் என்று அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிய, அச்சோ! நான் சொன்னதெல்லாம் வீணாகிப் போனதே என்று கரி துணியை தேடினாள் அடுப்பில் வழிந்த பாலை துடைக்க. மாமியாரும் நாத்தனாரும் அவள் செயலை பார்த்து சிரித்துக் கொண்டே நகர்ந்தனர்.

No comments:
Post a Comment