Thursday, February 27, 2025

செவித்திற(ன்)மை by Veena Shankar

 


செவித்திற(ன்)மை


"சீக்கிரம்! மணி எட்டு ஆச்சு. இன்னும் என்ன செய்யுற சமையல்கட்டுல ? எட்டேகாலுக்கு எனக்கு பஸ் வந்திடும். தெரியும் தானே? எப்ப பார்த்தாலும் வேலைய மெதுவா செஞ்சு என்னை டென்ஷன் ஆக்குறதே உன் பொழப்பா போச்சு. எத்தனை தடவை சொல்லியிருக்கேன். வேலையை சீக்கிரம் பாருன்னு. உன்னோட கத்தி கத்தியே என் ஆயுசு போயிடும் போல, இதுக்கு எதுக்கு நீ காலைல அஞ்சு மணிக்கு எந்திரிக்கணும்? எனக்கு உன் டிபனும் வேண்டாம், மதியம் சாப்பாடும் வேண்டாம் " என்று சொல்லி கொண்டே சமையலறைக்கு குமார் செல்ல, அப்போது தான் உமா தட்டில் இடியாப்பமும் தேங்காய்பாலும் எடுத்து வந்து நீட்டினாள். " உன்னை யாரு இதை காலை வேளையில் பண்ண சொன்னா? லீவு நாள்ல செய்ய வேண்டியது தானே? " என்று மறுபடியும் அவளை கடிந்து கொண்டே பார்க்க, அவள் காதில் வைத்திருந்த காது கேட்கும் கருவியின் சத்தம் குறைக்கப்பட்டிருப்பது தெரிந்து, " ஐயோ இது வேறையா? இவ்வளவு நேரம் நான் சொன்னது எதுவுமே உனக்கு கேட்கலையா ? சரியா போச்சு . எத்தனை முறை சொல்லியிருக்கேன். செவிட்டு மிஷனை சரியா வைன்னு. " என்று சொல்லியவாறே அதை சரி செய்தான். 


குமார், உமாவிற்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலேயே வீட்டு பக்கத்தில் உள்ள கல் குவாரியில் கல் உடைக்க வைத்த வெடியின் அதிர்வால் உமாவின் காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக சக்தி இழக்க, இப்போது முழுவதுமாக கேட்காமல் போனது.

எனவே டாக்டரின் பரிந்துரையின் பேரில் அவளுக்கு காது கேட்கும் மிஷன் பொருத்தப்பட்டது.


குழந்தைகள் இல்லாததால் விரக்தியில் எப்போதும் குமார் இப்படி தான் உமாவிடம் சண்டை பிடிப்பான். இதனால் இருவருக்கும் வீண் விவாதம் வந்து கொண்டேயிருந்தது. 


"சரி! சரி! இந்தாங்க! டிபனும் கட்டிட்டேன்" என்று சொல்லியவாறே சாப்பாட்டு பையை வைத்தாள் உமா. அவனும் அவசர அவசரமாக சாப்பிட்டு கிளம்பினான். "அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டாள் உமா. " எப்ப பார்த்தாலும் நொய் நொய் ன்னு கத்திகிட்டே இருக்கார். இவர் பேசறது கேட்ககூடாதுன்னு நினைச்சு தானே அதுல இருக்குற சத்தத்தை குறைச்சு வச்சேன். இவர் கத்துற கத்தல் எட்டு ஊருக்கு கேட்கும். இதிலே என்னை வேற செவிடுனு கூப்பிடறார. எனக்கு என்ன காதுக்கு மிஷன் வைச்ச பிறகும் கேட்காமலா இருக்கு? எனக்கு என்ன பிள்ளையா? குட்டியா? அவசர அவசரமா வேலை பார்க்கணுமாம் . இதோ இன்னும் ஒருசில வேலைதான் பாக்கி இருக்கு. அதை முடிச்சிட்டு பத்து மணிக்கு நாடகம் பார்க்க உட்கார்ந்தேன்னா இரண்டு மணி வரை பொழுது போயிடும். அப்புறம் சாப்பிட்டு தூங்கி எழ, பால்காரர் வருவார். காபி போடவும் இந்த மனுஷன் கரெக்டா வந்து நிற்பார்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டே வீட்டு கதவை சாத்தினாள் உமா. 


கேட்கும் திறன் இழப்பதும் நல்லது தானோ?


 எது கேட்க வேண்டுமோ அது கேட்காமல், தேவையில்லாததை கேட்க வைத்து இந்த செவி செய்யும் அநியாயம் இருக்கிறதே சொல்லி மாளாது. 


என் கூற்று சரி தானே?

Wednesday, February 26, 2025

தோழனா? எதிரியா? by Veena Shankar

 


தோழனா ? - எதிரியா?


தமிழ் வகுப்பு என்றாலே மாணவர் அனைவருக்கும் அல்லாது அடுத்த பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பொருட்டு இல்லை தான். ஆனால் பத்தாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர் ரங்கசாமி இதற்கு விதிவிலக்கு என்றே சொல்ல வேண்டும். அவர் பாடத்தில் எந்த ஒரு மாணவனும் தோற்பதில்லை , குறையாமல் எழுபது விழுக்காடு எடுத்து விடுவர். இத்தனைக்கும் அவர் வகுப்பை பல ஆசிரியர்கள் சூறையாடினாலும் வெற்றி அவர்பகம் தான். "ஐயா, உங்கள் பாடத்தில் மாணவர்கள் எழுபது விழுக்காடு எடுத்துவிடுகிறார்கள், அதனால் நீங்கள் எப்படியும் பாடத்தை தேர்வுக்குள் முடித்து விடுவீர்கள். எங்களுக்கு தான் சிரமம்" என்று மற்ற ஆசிரியர்கள் சொல்வது வழக்கமாகி விட்டது. பாடத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுப்பது என்பது ஒரு சவால் தான். பல பேர் மேலோட்டமாக நடத்துவர். சிலர் விளக்கம் கொடுத்தே நேரத்தை கழிப்பர். ஒரு சிலரே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பர். அதில் விளக்கம் நிறைய கொடுக்காமல் செயல்முறையிலே பாடம் நடத்துவதில் வல்லவர் ரங்கசாமி.

நடைமுறைக்கு தேவையான பாடங்களையும் தன் தனி மற்றும் தமிழ் திறனை கொண்டே வளர்ப்பார்.

ஒவ்வொரு வாரக் கடைசி தினத்தில் மாணவர்களின் செயல் திறனை சோதிப்பார்.

அன்றைய தினம் வார இறுதி நாள் என்பதால் மாணவர்களை ' தோழன் அல்லாதவர்களுக்கு ' கடிதம் எழுத பணித்தார். எல்லோரும் ஒரு தாளில் தங்கள் கருத்தை கடிதம் வாயிலாக எழுதி முடித்து ஆசிரியரிடம் கொடுக்கவும் பள்ளி மணி அடிக்க, ரங்கசாமி அடுத்த வாரத்தில் இதன் முடிவை தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார்.

அடுத்த வாரம் வரை மாணவர்கள் காத்திருக்க, அந்த நாளும் வர எல்லோரிடமும் அவரவர் தாளை ரங்கசாமி வழங்க, அனைவருக்கும் பூஜ்யம் மதிப்பெண் இடப்பட்டிருந்தது குறித்து மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர். 

மாணவர்களின் நிலையைக் கண்ட. ஆசிரியர், " இது வரை யாரும் இந்த மதிப்பெண் வாங்கியதில்லை என்று எனக்கு தெரியும். நீங்கள் உங்கள் கருத்தை கடிதம் வாயிலாக எழுதியது ஏறக்குறைய சரியென்றாலும் என் தலைப்பை மீண்டும் சொல்கிறேன்" என்று தலைப்பை மறுபடியும் சொல்ல, மேலும் அவரே "தோழன் அல்லாது என்றால் எல்லோரும் எதிரி என்று பொருள் கொண்டு உங்கள் கடிதத்தை எழுதியுள்ளீர்கள். எதிரியை வசப்படுத்தும் திறமையும் உங்கள் எழுத்தில் தெரிய வந்தாலும் நான் நினைத்தது அதுவல்ல. தோழன் அல்லாது அதற்கு எதிர்ப்பதமாய் "தோழி" என்ற சொல் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டதும் எல்லோரும் ஒரு நிமிடம் அசந்து விட்டனர்.


 இப்படித்தான் ஒவ்வொரு முறையும் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவார் ரங்கசாமி. இதையே நாளைக்கு ஒரு தாளில் வீட்டுப் பாடமாக எழுதி வரச் சொன்னார் . 

விளக்கமான பாடத்தை விட திறனறி தேர்வு வைத்து பாடங்களை நடத்துவதில் இவருக்கு மிஞ்சியவர் அவரே! 


மனனம் செய்வது கடினம். புரிந்து படிப்பது எளிது.

Tuesday, February 25, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



Veena Shankar: 

மண்ணில் இட்ட 

விதை துளிர்ப்பதும்

துளிர்த்தது செடியாவதும்

செடியாகி அதனூடே 

சிறு மொட்டுக்கள் உருவாவதும் 

அந்த மொட்டும் மலர்ந்து மலராவதும்

மலர்ந்த பின் காயாவதும்

காயும் பின்னே கனியாவதும்

கனியும் பிறர் உண்ண உணவாவதும்

உணவான பின்

வயிறு நிரம்ப

அப்பொழுது கிடைக்கும் ஆனந்தம் 

ஒன்றே நிலையானது

அன்றி

அந்த மண்ணில் புதைந்த விதையின் தியாகத்தை நாம் மறப்பது இயல்பே!

அதை வளரும் 

விதையும் அறியாது

அதுவும் சிறப்பே!

Veena Shankar:

 எதுவும் வீழ்ந்தால் மட்டுமே

துளிர்க்கும்

அது விதையானாலும் சரி

நான் பெறப் போகும்

வெற்றியானாலும் சரி

Vidhya:

மண்ணில் விழும் ஒவ்வொரு

 விதையும் முளைக்கவே

 விளைகின்றன ..

முளைத்தது மண்ணில் வேரூன்றி

 நிற்க தக்க சூழ்நிலையும், அதன்

 முயற்சியுமே சிறந்த உரம்..

உரமற்ற தரிசு நிலத்தில்

 முளைத்தும் என்ன பயன்!


யாருக்கு தெரியும் ஒரு நாள் பல

 குருவிகள் கூடு கட்டும் உன்

தோளில்,பலர் உறங்குவர் உன்

 மடியில்,உன் கையில் தொங்கி

 விளையாடும் குரங்குகளும்,

ஊஞ்சல் ஆடும் சிறார்

 கூட்டமும் இதன் நடுவே  தோகை

 விரித்து ஆடும் உன்

 கூந்தலும்,வண்டு வந்து மோதும்

 பொன்னிற பூக்களும்,

அணிலும்,கிளியும் பந்தாடும்

 பழங்களை சுமக்கும்

 சொர்க்கமாக மாறுவாய் என்று!





Sunday, February 23, 2025

பெண்கள் by Veena Shankar

 


பெண்கள்


திமிரும் திறமையே பெண்களுக்கு

அறிவும் அங்கீகாரமே பெண்களுக்கு

அழகும் ஆபத்தே பெண்களுக்கு

சமாளிப்பதும் வேண்டுமே பெண்களுக்கு

ஆற்றலும் தேவையே பெண்களுக்கு 

துறப்பதும் எளிமையே பெண்களுக்கு

பொறாமையும் தூண்டுதலே பெண்களுக்கு

பொறுமையும் திறனே பெண்களுக்கு

Saturday, February 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

அணையா விளக்கே இவள்

நெருப்பைக் கூட நீராய்

மாற்றிடுவாள்

மாறும் கலையும் 

பிறரை மாற்றும் வித்தையும் அறிந்தவள் இவள்

உருகும் மெழுகு கூட

உறைந்து கிடக்கிறது 

இங்கே அவள் தம்

நளினமான நடனத்தால்

காற்றும் வெட்கியது அவள் தம் வனப்பான அசைவுகளை கண்டு

எவர் மயங்க இந்த நடனம்

 நீர் போர்வையில் மறைந்து

யார் அறிவர்?

அது அவள் தன் மனத்தின் கண் வழிந்த கண்ணீராய்

கூட இருக்கலாம்

விழியின் நீர் பிறர்

அறியாத போது 

அந்நீரும் ஆவியாகி விடுமே காற்றினால்

மெழுகின் நீரும் கடினமே

தான் செய்யும் தியாகத்தை எண்ணியே!

பாவை இவள் அங்ஙனமல்ல 

பொறுமையில் அறிவைக் கூட வென்றிடுவாள் 

பாதகம் யாருக்குமில்லை

இவள் நடனமும் கண்ணீரும்

ஓசைப்படாமல் வெளிப்படுவதால்

Veena Shankar: 

வண்ண வண்ண மெழுகில்

தன் வண்ணம் இழந்த சுடரும் 

காண்கையில் நீரூற்று போலே

உள்ளக் குமுறல்கள் 

வெளிப்பட 

கரையும் மெழுகும்

புனைகிறது வேறொரு உருவம்

தன் மனம் பெருக்கி

தன் உடல் சுருக்கி

இறுதியில் 

தன் இடம் தொலைத்து

உரைக்கிறது 

பண்பை இழக்காதே!

மலையென்றாலும் சரிவு உண்டு இயற்கையால் கொண்டதும் வீழும் 

போது 

செயற்கை மெழுகும் 

தீயினால் இழக்கும் தன் உடலை

Vidhya:

எதுவும் சாத்தியம் என்றால்

 இதுவும் நடக்கும்..

கொட்டும் மழைத்துளியை

 மெழுகுவர்த்தியும் கடன்

 வாங்கியது என்ன?

வெளிச்சம் கொடுத்தது போதும்

இங்கு ஈரமே தேவைப்படுகிறது!

ஒளி தர பல நுட்பங்கள்

 வந்துவிட்டன..

மழைக்கூட செயற்கையாக

 கொண்டுவர முடிகிறது.. ஆனால்

 வருவதை எங்கே

 நழுவவிடுகிறோம்!

தீயில் குளித்து உருகியது போதும்

 கொஞ்சம் மழையில் நனைந்து

 உறைகிறேன்!


எஸ்.ரா வின் ஏழுதலை நகரம் by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம்,

இந்த ஆண்டின் முதல் புத்தகம் கடந்த மாதம் வாசித்த எஸ்.ராவின் ஏழு தலை நகரம். மாயாஜால கதை,கண்ணாடிக்கராத் தெரு அதில் நுழைப்பவர் யாரும் திரும்பி வருவதே இல்லை.ஒரு சிறுவனின் ஆர்வம் அதைப்பற்றி அறிய,அதை பற்றி சொல்லப்பட்ட கட்டுகதைகள்,அந்த முடிச்சுகளை அவிழ்விக்கும் கதை.அவனை சுற்றியுள்ள பேசும் எலி,பறவை ,பறக்கும் பையன், தாத்தா,பாட்டி,நூலகம் என பல விசித்திரமான கற்பனையுடன்,வாழ்க்கை பாடத்தையும் சொல்ல மறக்கவில்லை ஆசிரியர்.

பறக்க,சிந்திக்க, சிரிக்க,ஒரு குழம்பிய மாயாஜால ஓடை இந்த புத்தகம் கடைசியில் தெளிய வைக்கும்.


 last month, I read this book . The title of the book impressed me.It was like a magical river with so many real-life characters. it initially brings us to a confused state . The book about Magic Street at last revealed the truth.

Friday, February 21, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 பள்ளியில் சேரும் வயது இதுவென

 சொன்னது பிறப்பு சான்றிதழ் பாராமல்

பயின்ற கல்வியின் பலனாய் சொன்னது

பள்ளியில் சேர பிறப்பு சான்றிதழ் வேண்டுமென்று

- Veena 

பள்ளிக்கு போவதே ஆனந்தம்

பலருக்கு வீட்டை விட அங்கே

 நிம்மதி அதிகம் 

சிலருக்கு பள்ளிக்கு போவதே

 வெறுப்பு அனைத்தும் வீட்டிலே

 கிடைக்கிறதே !

பள்ளிக்கூடம் கல்விக்கு

 மட்டுமல்ல பலருடன்

 பழக,பகிர்ந்து உண்ண,ஆடி பாடி

 விளையாட அது ஒரு சொர்க்கம்,

அதுவே இன்று பாரமாக

 போனதென்ன!

பல நினைவை தூண்டுதே இந்த

 அழகு சித்திரம்!

- Vidhya 

Thursday, February 20, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

கொஞ்சும் கிளியும் 

கெஞ்சும் அணிலும்

நெஞ்சில் கிலியும் 

கொள்ள செய்யுதே

Veena Shankar:

 அடி பணிவது தவறில்லை அன்பு

 மதிக்கப்படும் இடத்தில்

Vidhya:

வா நண்பா உனக்கொரு ரகசியம்

 சொல்றேன்..

நன்றாக பல்லில் கொறித்து

 சாப்பிடு,நீ பாதியை சிதற

 விடுறா ,மீதியை விட்டு செல்லுற

அதை என்னிடம் தா,நான்

 உன்னிடம் தரனேன் ,என்ன

 டீலிங் ஓகேவா!



Wednesday, February 19, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வண்ண வண்ண பிள்ளைகளின் 

கள்ளமில்லா சிரிப்பு

சின்ன சின்ன சிரிப்பே கொல்லும் இழப்பை

தாவி தாவி வந்து மனதை வசமாகும்

ஆவியுள்ள வரை 

போதுமே இந்த 

காரணமில்லா வரும் சிரிப்பு

-வீணா


வண்ணம் இல்லா உலகில்

வண்ணம் பூசி பிறப்போம்

அவர் அவர் வண்ணத்தை

 அவர்அவரே தீட்டுவோம்

 வானவில் கொண்டு,

கொள்ளை கொள்ளும் அழகு

 சிரிப்பு ,மனமும் சேர்ந்து

 சிரிக்குதே!

- வித்யா



Tuesday, February 18, 2025

படமும் கருத்தும் by Veena ,Priya and Vidhya

 



தீர்க்கமாய் ஓடவும் விடாது

துணிந்து நிற்கவும் விடாது

பொறுமையாய் நடக்கவும் விடாது

எவற்றையும் கடத்தவும் விடாது

அழகை ரசிக்கவும் விடாது

எண்ணத்தை தொலைக்கவும் விடாது

சுகத்தை நினைக்கவும் விடாது 

எளிதாய் மறக்கவும் விடாது

கயிறு என்றெண்ணி தாண்டிடவும் விடாது

தவறு என்று தடுக்கவும் விடாது

மனதால் ஏற்கவும் விடாது

பொறுமையை இழக்கவும் விடாது

சுமையை இறக்கவும் விடாது

மாற்றத்தை தோற்கவும் விடாது

ஓய்வாய் சிந்திக்கவும் விடாது

நிறைவாய் இருக்கவும் விடாது

ஓடும் காலத்தோடு ஓடிட வேண்டும் நாமும்

சித்திரமும் கைப்பழக்கம் 

சிதறாமல் வாழ்வது நல்வழக்கம்

- வீணா

ஏற ஏற குறையும்

குறைய குறைய 

ஏறும் காலத்தின் சுழற்சியில்

சிக்காதவர் இல்லை!

எதையும் தள்ளிப் போடதே

என்னை விட்டு போகதே

மீண்டும் வரமாட்டேனே!

நேற்று இன்று நாளை

அதே நொடி மீண்டும் வருவேன்,

 போனேன் ,இருப்பேன்..

ஆனாலும் புதியவன்!

தவறவிட்டதை பிடிக்க முடியாது

இருப்பதை தக்க மறக்காதே

வருவதை பிடிக்க பழகு!

-வித்யா


அண்டத்தின் நான்காம் பரிமாணம் காலம்


அறிவியல் தெரியும் என்பதற்காக


காலப்பயணம் செய்து 


உன் வாழ்வை பல்லண்டத்தில் 


தேடலாம் என்று எண்ணாதே


கருந்துளைக்குள் சிக்கிக் கொண்டால் 


காணாமல் போய்விடுவாய்


கடவுளை தேடிக்கொண்டிருக்கும்


குவாண்டம் கொள்கையே இன்னும்


சரிவர பிடிபடவில்லை


இந்நொடி பொழுதில் இங்கேயே வாழ்ந்து விடு


"எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ

நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ

என்ற பாடலுக்கு ஏற்றது போல"


காலத்தை கையாளும் கலையை கற்றுக்கொள்


-பிரியா




Monday, February 17, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena:

தூங்கா இதயத்தை

தாங்கும் கரங்கள்

இங்கே கண்டாலும்

தங்கும் மாசை கூட 

தேங்காமல் விலக்கிடுமா ?

இதயம் அடைபடுவது 

ஓர் கரத்திலே தானே?

அதுவும் தாங்காமல் போனால்

தொங்குவதும் உயிரே காலன் பிடியில் அது

தீங்கே அடுத்தவர் இதயத்திற்கும்

Vidhya :

எங்கு கொண்டு மாட்டி வைக்க

காற்றுப்பையில் காற்றை தவிர

புகையே அதிகம் நிரம்ப

 சுவாசிக்க முடியாமல் திணற

எங்கே சென்று பாதுகாக்க!

உள்ளே உள்ளதை வெளியே

 தள்ளி உள்ளுக்கு எதை மீண்டும்

 இழுக்க ,இந்த மாசை

சுவாசிக்காமல் இருக்க நான்

 வேலைநிறுத்தம் செய்யவா!

ஏஐ கொண்டு சுவாசித்து

 கொள்ளுங்கள்!



Sunday, February 16, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இதயத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலவா?

இல்லை

வானின் ஊடே அதன் 

வெண்ணிற உயிரா?

இல்லை

என் காதலியின் மனதில்

எனக்கான இடமா?

இல்லை

வண்ணம் இழக்கா அவள் மனமா?

இல்லை

கலையா மேகக் கூட்டத்தின் நிலையா?

இல்லை

வான் வரைந்த ஓவியத்திற்கு

கண் பட்டுவிடக்கூடாது

என்று அச்சத்தில் மறைக்கும் மரக்கிளையின் செயலா?

வானில் அகப்பட்டது

அகன்றுவிடும்

சிலமணித் துளிகளில்

நிஜத்தில் வசப்பட்ட

இதயம் பரிமாறுமே ஒழிய

அழியாது உடலில் ரணத்தால் கொள்ளும் வடு போல

மனதில் தங்கிவிடும்

நினைவால் என்றும்

தாங்கும் யாவும் 

பலமே மனதால்

அதுவே நமக்கு பயனே

நம் சக்தி அறிவதால்

- Veena 

நிலவிற்கும் மேகத்திற்கும்

 இடையே உறவாடும் கிளைகள்

முதலில் அந்த மேகத்தை

இரண்டாவதாக அந்த நிலவை

தொட்டு விட வேண்டும்..

பூமியிலிருந்து நிலவுக்கு அம்பு

 எய்தும் மனுட கூட்டம் அதை

 கலைக்கும் எறும்பு கூட்டம்

அதை விட்டு வைக்காத மேக

 கூட்டம் தரும் மழைத்துளி

ஒவ்வொன்றாக ஒன்றை

 தொடரும் விதியின் வழி மதி!

Vidhya 


Saturday, February 15, 2025

படமும் கருத்தும் by Veena ,Priya and Vidhya



Veena Shankar: 

எத்தனை ஏணிகள் இருந்தாலும்

முயற்சி எடுத்து ஏறும் ஒருவனுக்கே

வாய்ப்புகளும் வெற்றியும் வசமாகும்

Veena Shankar:

 நின்று ஏறுவதால் தான் அது ஏணி

அதுவே படுத்துவிட்டால் வெறும் விறகே

 Veena Shankar: 

ஆள தெரிந்தவனுக்கு ஒரு படியும் போதும் மேலே ஏற

அதன் பயன் தெரியாதவனுக்கு ஆணிகள் பல கொண்டாலும் வீணே!

 Veena Shankar: 

ஏறி மிதிபட ஏணியென்றாலும்

இலக்கை அடைய நம்பிக்கை தருவதும் அதுவே!

 தாங்கும் இதயமும் அதுவே!

எட்டி விட நினைத்தால் நாமும்

அந்தரத்தில்

ஆகவே

நாம் பிறருக்கும் ஏணியாய் இருக்க வேண்டும் 

தாங்க மட்டும் அல்ல

தவிக்கவும் விட


Vidhya:

எத்தனை ஏணிகள் இருந்தும்

 என்ன பயன்?

 அதை எப்படி பயன்படுத்த

 வேண்டும் என்ற அனுபவம்

 வேண்டும்..

அதில் தானும் ஏறி, பிறருக்கும்

 வழிகாட்டி,ஒரு புது சமூகத்தை

 நெறிப்படுத்த முடியும்..

எத்தனை பட்டங்கள் பெற்றும்

எத்தனை வீடுகள் கட்டியும்

பிறருக்கு பயன் இல்லையேல் 

அது பயனற்றது!

கொடுக்க கொடுக்க வளரும்

 செல்வங்கள் அவை,அதற்கு

 அனுபவ அறிவும் தேவை!

கல்வி அறிவுயில்லா, கேள்வி

 அறிவு மிக்க,குடிசையில்

 வாழும் எளியவரே வலியவர் !


அது வெரும் மரங்கள் அல்ல 

அனுபவம் வாய்ந்த மனிதர்கள் 

அவர்களை நீ சரியாக 

பயன்படுத்தாவிட்டால் 

படித்தும் நல்ல உடை உடுத்தியும் 

பயனில்லை  

புலப்படவேண்டியது எல்லம் 

தெரியாது 


-பிரியா

Thursday, February 13, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 Veena Shankar: 

வெவ்வேறு இடங்கள் நோக்கி பயணம்

உடன் வெவ்வேறு சிந்தனையுடன் 

வெவ்வேறு கவலைகளை சுமந்து

Veena Shankar: 

துணைகள் எதிரெதிர் பக்கம் பயணித்தால் மட்டும் என்ன

பயணம் வேறாகுமா?

கிளைகள் உடைந்த பின் துளிர்க்கும் தாவரத்தின் வேராகுமா?

வேரும் வேறாகாமல் இருப்பது தாவரத்தின் குணமே!

 Veena Shankar: 

சிந்தனை கொள்ளும் போது 

அங்கே முகங்கள் தெரிவதில்லை

முகங்கள் தெரியும் போது 

அங்கே குற்றங்கள் ஏதும் மறைக்கப்படுவதில்லை

குற்றங்கள் வெளிப்படும் போது 

அங்கே ஏதும் காப்பதில்லை

Vidhya, 

கனவுகளை நோக்கிய பயணம்!

ஓடி வந்து வண்டியை பிடித்த

 களைப்பு ..

நாளைக்கு வீட்டு சாப்பாடு..

ரயிலோடு உறவாட, மனதோடு

 வருடும் நினைவுகள்..

உங்களுடைய கடைசி ரயில்

 பயணத்தை நினைத்து பார்க்க 

கூடும் உற்சாகம், எப்போதும்

 ரயிலின் குரலோடு,மோதி

 விளையாடும் குரல்கள்,அதில்

சுவையானது உணவு

 பண்டங்களை விற்பவரின்

 குரல்,கேட்டவுடன் பசியை

 தூண்டும்,அனைவரும் உறங்கும்

 நேரத்தில் உறங்கா இரயிலின்

 கீதம் டடக்..டக் ட..டக் என தாலாட்ட 

கூடவே குறட்டை கைக்கோர்க்க,

 விடிந்தால் பலரின் பயணத்தை

 நினைவாக்கும் ரயில் வண்டி!!

Wednesday, February 12, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

புகையே பகை

ஆனால் இந்த புகை பகையல்ல

மஞ்சளே மருந்து

ஆனா இன்று வெறும் நேற்றியே

எண்ணெய் குளியல் ஆரோக்கியம்

ஆனால் இன்று அதிலும் கலப்படம்

இவை யாவும் இப்படியிருக்க

தேடுகிறேன் இது போன்ற மூதாட்டியை

அறிந்திலேன் அவள் போன இடத்தை

அரைகுறையாய் கற்ற மசாஜ் செய்யும் கூடத்தில்

Veena Shankar:

 தாலாட்ட தாய்

சீராட்ட பாட்டி

விளையாட தாதி

பாராட்ட தந்தை 

தோள் கொடுக்க சகோதரன்

இருந்தார்களாம் அன்று

அழகான கூட்டு குடும்பத்தில்

இன்று

வீட்டு சமையலில் கூட கூட்டு அது தொலைந்து போனது

Veena Shankar:

 வெள்ளை மனது

பிள்ளை மனது

கிள்ளை மொழி 

பிள்ளை பேச்சு

கொள்ளை அழகு

பிள்ளை சிரிப்பு

கள்ளை மிஞ்சும்

பிள்ளை மயக்கம்

தொல்லை தருமோ?

இல்லை 

சுகம் அளிக்குமோ?

தினம் ஒரு பாடம் நமக்கே 

பிள்ளையும் பயிற்றுமே!

Vidhya:

ராஜா வீட்டு கன்றுக்குட்டி 

பிச்சி பூ கொண்டு பந்தாட்ட

 தேனும் பாலும் இருக்க ஜவ்வாது

 சந்தனத்தோடு,அப்பா

 படையெடுத்து கொண்டு வந்த

முத்து,வைரம் ஜோலிக்க கூடவே

 அரபு நாட்டு அக்தர் கமகமக்காக

இவன் எந்த கோட்டையை பிடிக்க

 பிறந்தானோ என்று எள்ளி

 நகையாட,அரங்கேறும் குளியல்

 அந்தபுரத்தில், எங்கும்

 பரவிக்கிடக்கும் ஆனந்தமயம்.

ஆயாவும் காக்கையும் by Veena Shankar

 


ஆயாவும் காக்கையும் 


"ஆயா! ஆயா ! " என்று அழைத்தது மரத்தின் மீது அமர்ந்திருந்த காகம். "யாரு கூப்பிடறது?" என்றவாறே சுற்றும் முற்றும் பார்த்த ஆயாவிடம் " நான் தான். மரத்தின் மேலே பாரு" என்றது காகம் மீண்டும். 


மேலே பார்த்த ஆயாவிற்கோ கோபம் தலைக்கேறியது, 

" இன்னிக்கும் வடை திருட வந்துவிட்டாயா?" இந்த கிழவியிடம் போய் திருடுகிறாயே உனக்கு வெட்கமாய் இல்லை? நேற்று திருடி, மறுபடியும் இன்று வந்து ஆயா ! ஆயா! ன்னு சாந்தமாய் கூப்பிட்டு தொல்லை பண்ணுகிறாய் . போ ! போ! " என்று விரட்டிக் கொண்டே வடையை மூடி வைத்து மறைத்தாள். 

" போ ஆயா! நேற்று தின்ன வடையை என் குஞ்சுகிட்ட கொடுத்தேன். ஆனால் அது வடையெல்லாம் வேண்டாம், ஆயாவை பீட்சா போட சொல் என்றது. இன்று பீட்சா வாங்கி வரச் சொல்லியிருக்கிறது. நானும் அதெல்லாம் ஆயாவிற்கு போட தெரியாது என்று சொன்னாலும் அடம் பிடிக்கிறது. நேற்று உன்னிடமிருந்து சுருட்டிய வடையை அப்புறம் நான் தான் சாப்பிட்டேன். அதனால் ஆயா நீ ஏன் பீட்சா விற்க கூடாது? " என்று கேட்க, " என்னது பீட்சாவா! அப்படியென்றால் என்ன?" என ஆயா கேட்டு விழித்தாள். "என்ன ஆயா ! இது கூட தெரியாதா? அதான் இப்போது எல்லாரும் வாங்குகிறார்களே! எல்லா இடங்களிலும் ஏன் ஆன்லைன் ல கூட விற்கிறார்களே !" என்று சொல்ல, "அதெல்லாம் எனக்கு பண்ண தெரியாது. அதுவும் இல்லாமல் அதற்கெல்லாம் ரொம்ப செலவாகும் போல தெரியுது. பேரும் புதிதாக இருக்கிறது. " என்று சொல்லி தன் வேலையில் மூழ்கினாள். " இல்லை ஆயா! நான் சொல்வதைக் கேளு. அதை நீ கற்றுக் கொண்டால் உனக்கு இலாபம் பல மடங்கு பெருகும். உன் வடையை பிழிந்து எடுத்தால் ஒன்றரை வண்டி எண்ணெய் தான் வருகிறது. ஆனால் பீட்சா ல அப்படி எண்ணெய் இருக்காது. அதுவும் இப்போது எங்களுக்கு இரத்த கொதிப்பு , சர்க்கரை வியாதின்னு பெரிய நோயெல்லாம் வந்திருக்கிறது. மருத்துவர் எண்ணெய் பண்டத்தை தவிர்க்க சொல்லியிருக்கிறார்" என்று சொல்லிக் கொண்டே மெல்ல அவள் பக்கம் வந்தது காகம். 

" வடையில் எண்ணெய் அதிகம் இருக்குன்னு சொல்கிறாயே, பாரு! இதிலே எங்கே எண்ணெய் இருக்கு?" என்று சொல்லிக் கொண்டே மூடியிருந்த வடையைக் காக்கையிடம் காட்டினாள். "பார்க்கும் போது தெரியாது, ஆனால் சாப்பிடும் போது தான் தெரியும்" என்று சொல்லிக் கொண்டே இன்றும் இரண்டு வடையை அபேஸ் செய்து பறந்தது காக்கை. " ச்சீ... போ! உன் புத்தி உன்னை விட்டு எங்கு போகும்? அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை நீ மாறவே இல்லையா?" என்று நொந்து கொண்டே வடை தட்டை மறுபடியும் மூட, அதற்குள் பத்து காக்கைகள் அவள் முன் பிரவேசமானது. "ச்சு ... க்சு..." என்று சொல்லி காக்கை கூட்டத்தை விரட்டினாள் ஆயா.


காலம் மாறினாலும் பிறவி குணம் மாறாது என்பது உண்மை தான் போல.

Tuesday, February 11, 2025

படமும்,கதையும், கருத்தும் by Veena and Vidhya

 


வீடு


"வீடு கட்ட லோன் தரங்களாம்" என்ற விஷாலின் பேச்சு சூர்யாவிற்கு கேட்க, திருமணத்திற்கு பின்பு தான் சிறிது சிறிதாக காசு சேர்த்து வாங்கிய இடத்தில் வீடு கட்டிடலாம் என்ற நினைப்போடு அன்று இரவு உணவை முடித்தான். அப்போது அவன் மனைவி, குழந்தைகளிடம் இதைப்பற்றி சொல்ல, உடனே "வீடு கட்டுவோம்" என்றாள் மனைவி. "அப்பா! வீடு கட்ட அவங்க லோன் கொடுத்தாலும் அதில் சிறிது பங்களிப்பு நாம் செய்தால் நன்றாக இருக்கும்" என்று சூரியாவின் மூத்த பையன் சொல்ல, "சரி" என்று ஆமோதித்தான் சூரியா. " ஏங்க! அவன் சின்ன பிள்ளை. அவன் சொன்னதற்கு நீங்க ஏன் தலையாட்டுனீங்க, பணத்திற்கு என்ன செய்வது,? நாம மொத்த பணத்திற்கும் லோன் போட்டிடுவோம். அது தான் நல்லது. எங்க வீட்டுல போட்ட நகையெல்லாம் கேட்காதீங்க!" என்று கறாராக மனைவி சொல்ல அதற்கும் விழித்தவாறே தலையசைத்தான் சூரியா. சூரியா குழப்பத்துடனே தூங்கப் போனான். மனம் நினைவால் வீடு கட்ட தொடங்கிய நிலையில் அவன் செவியும் கைகோர்த்தது. அஸ்திவாரம் போட்டு வீடு செங்கற்கட்டிற்கு மாற கற்பனையில் வீடு கட்டி குடி புகுந்தான் சூரியா. பின்னாளில் அவன் புது வீட்டில் மணம் வீச மனம் பூத்ததா?


 ஒவ்வொருவரின் வாழ்விலும் வீடு என்பது ஒரு அடையாளம். அந்த அடையாளமும் அவரவர் நம்பிக்கையிலும் உழைப்பிலும் பூப்பவையே!


Veena Shankar: 

சத்தமில்லாமல் கட்டினேன்  

ஓர் வீடு

என் அகத்துள் அல்ல

செவிக்குள் 

இளகி நிற்கும் நெஞ்சந்தனில் நிலைக்காது என்று தெரிந்தே

Veena Shankar: 

வீட்டை கட்டி உட்புக கதவிற்கு பதில் 

சுவர் வைத்து கட்டிய

அவன் உயிர் மீண்டானா?

- Veena 


ஆஹா என்ன ஒரு கற்பனை,

inbuilted headphone 🎧 Aaa..

எவ்வளவு பேசினாலும் அசையாத

 ஜடம் என்பதற்கான

 அடையாளமா!

அல்லது பெருகி வரும் ஒலி

 மாசுவிற்கான விடுதலையா!

தேவையுள்ள போது திறந்து மூட

 புதுவிதமான கட்டுமானம்!

செங்கலில் ஓட்டை போடும்

 வண்டாக நான் இருக்க..

எதை வைத்து அடைத்தாலும்

 உடைத்து தள்ளுவேன்!

இங்கே கேட்க

 காத்திருந்தும்(காது)

பேச வாயிருந்தும் பெருகி

 வரும் இயந்திர உலகம்,

அதை தகர்த்து எறிவோம் 

இனிய சொல் கொண்டு!

- Vidhya 


Monday, February 10, 2025

படமும் கருத்தும் by Vidhya and Vidhya

 


Veena:

யாவிற்கும் அடைக்கலம் உண்டு குழியிலே!

இல்லாற்கு கொடுத்து ஈவதும் பண்பே!

வெறுமை கொண்ட குழியும் நிரம்பும் பகிர்வதாலே!

வெற்றிடத்தை தொடரும் போது கூட புதயலும் கிடைக்க வாய்ப்புள்ளதே!

இருவர் விளையாடும் ஆட்டத்தில் 

அறியாதார் வீழ்வர் இழப்பாலே!

கணிதமும் கூட கவனமாய் இங்கே

அரங்கேறும் ஓர் வித்தையே!

Vidhya, 

கையுக்கும் மூளைக்கும் ஒரே

 நேரத்தில் வேலை,

அள்ளி அள்ளி போட குறையும்

 குழிகள்,

நிரம்பிய குழியை அடைய 

எண்ணி நகரும் விரல்கள்,

தொட்டதெல்லாம் வளர

 உள்ளுக்குள் கொண்டாட்டம்!

ஏற்றத்தாழ்வை இளமையில்

 சொல்லிக் கொடுக்கும் ஆட்டம்!

ஒரு நிமிடத்தில் காலி!


Sunday, February 9, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena, 

ஒவ்வொரு கட்டமாய் நகர

வெற்றி என்றும் நமதே

இணை பிரியா தாயக்கட்டையும் 

இணைந்தே பயணிக்கும் காய்களும்

காட்டும் பாதை எதுவோ?

நிழல் தரும் மரங்கள் போலே

அங்கங்கே சொந்த கூடாரமுண்டு பயணத்தில்

வெட்டுபவர் எவரோ?

வீழ்பவர் எவரோ? யாருமறியார் 

துள்ளி துள்ளி நகர்ந்து இல்லம் அடைந்தவுடன்

கூடவே இறுமாப்பு கொள்ளுமே மனதும்

Vidhya, 

எத்தனையோ விளையாட்டு

 வந்தாலும் என்றும் அழியாத தாய

 விளையாட்டு,

பிறரை வெட்டி,வெட்டுப்பட்டு

 மேலே செல்ல ,கடைசியில்

 தாயத்திற்கு காத்திருக்க,பின்னே

 வருவர் முன்னே செல்ல

 வெற்றியை கணிக்க முடியாத

 விளையாட்டு..

விளையாட்டு என்று பந்தயம்

 ஆனதோ அன்றே வினையும்

 சேர,கள்ளம்கபடமற்ற மனதில்

 போட்டி வந்து சேர

 பொழுதுபோக்கு வியாபாரம்

 ஆனதே!






Saturday, February 8, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தட்டிக் கொடுத்தால் 

எட்டிப் பிடிக்கலாம் வாழ்வை

வட்டியும் முதலுமாய்

விட்டதை பிடித்தே!

ஆட்டியும் படைக்கலாம் உலகை அதுவும்

இட்டு செல்லும் உயர்நிலை நோக்கி!

ஊட்டி வளர்த்த தாயும் மகிழ்வாள் உன்னிலைக் கண்டு

வெட்டி சென்ற உறவுகளும் 

ஒட்டிக் கொள்ளும் மெதுவாய்

கட்டி இழுத்தாலும் வாராது என்று சொன்னவையும் இன்று

உன் பின்னால்!

ஓட்டிய நாட்கள் யாவும் வீணல்ல

தட்டி அடக்கி திருத்திய சினேகமும் 

உன்னைக்

காட்டி காட்டி பெருமைக் கொள்ளும்!

குட்டி குட்டி சோதனைகளும்

கூட்டி வைக்கும் உனக்கான அனுபவத்தை

கெட்டவை யாவும் தகர்ந்து போகும் எண்ணத்தில் உயர்ந்து நிற்க

கேட்டவை எல்லாம் கிடைக்க

கைகட்டி நிற்கவே பழகு!

கொட்டி கொடுத்தாலும் திரும்பாது இந்த தருணம்

Vidhya, 

அடி உன்னால் முடிந்த வரை

 முயற்சி செய்!

பயிற்சி இல்லா களம் தோல்வியே

முயன்ற வரை பலத்தைக்

 கொண்டு விளையாடு 

ஊர் திரும்பி பார்க்க வெற்றி

 நடை போடு!

தோல்வியோ! வெற்றியோ!

ஆனால் ஒரு நாளும் முயற்சிக்க

 மறக்காதே!



Friday, February 7, 2025

சிலர் by Veena Shankar

 


சிலர்


சிலரை தவிர்க்க வேண்டும் 

சிலரை தாங்கி நிற்க வேண்டும் 

சிலரை நினைவு கொள்ள வேண்டும்

சிலரை மறக்க வேண்டும் 

சிலரை வெறுக்க வேண்டும்

சிலரை நேசிக்க வேண்டும் 

சிலரை தொலைவுபடுத்த வேண்டும்

சிலரை பக்கத்தில் கொள்ள வேண்டும்

சிலரை மகிழ்விக்க வேண்டும்

சிலரை துகிலுறிக்க வேண்டும்

சிலரை மேம்படுத்த வேண்டும்

சிலரை கற்பனையில் கொள்ள வேண்டும்


அந்த சிலரும் நம்முடன் பயணிப்பர் நினைவால் என்றும்


 சாலையில் கண்டேன் ஓர்

சிலை - அதன் அழகு கண்டேன்

சேலையில் - அதுவோ பூக்களின் 

சோலை - அது போல் கடையில்

வலை வீசி தேடினேன்

விலை கேட்டே சென்றேன் - அதுவே

வேலையாகி போக 

வாலை சுருட்டிக் கொண்டு வருமாறு பணித்தார் என் கணவர்

Thursday, February 6, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

மணமேடையும் தூக்குமேடையும் ஒன்று தானா?

மனம் பகிர்ந்து புரிந்து கொள்ள முடியாத மனங்களுக்கு இடையே

 Veena Shankar: 

மேடையேறும் போது இல்லாத அச்சம், 

கயிற்றை பார்த்ததும்

தலை கவுழ்வதும் ஏனோ?

அது மணமேடையானாலும் சரி

தூக்கு மேடையானாலும் சரி

இரண்டும் ஒன்றே இவ்விடத்தில்

Veena Shankar: 

மனத்தின் கண் உள்ள அவாவை

மரத்தின் மூலம் காண்பது நியாயமா?

மனம் பகிர்ந்த பின் இந்த 

கயிறும் தேவை தானா?

Vidhya:

இது தேவை தானா

எவ்வுயிரையும் கொன்றாள்

 பாவம் ,இங்கே யாவும் அடங்கிய

 உடலை பலிக்கொடுக்க என்ன 

நேர்த்தி!

வாழ்நாள் சிறைதண்டனை

 அதுவே இறுதி,இதில் மரண

 தண்டனை தேவையா?

தேதி குறித்து உயிர் போவதை

 விட வேறென்ன கொடுமை

 இருக்கு!


Wednesday, February 5, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

குப்பைக் கிளறி உண்டது மாறி

மாடி வீட்டில் இலையில் சோறு

கூடியிருந்த கூட்டம் கலைந்தது

தனித்தே உண்டது

புது வகை உணவுகளால் 

மாற்றி விட்டான் மனிதன் காகைகளையும்

மொட்டைமாடியில் நிலா சோறு உண்டவன் இன்று

உணவகங்களில், 

காகையும் இடம் மாற்ற கூடும்

உணவகங்களுக்கு

விரைவில் மாற்றம் வேண்டி

சுவை வேண்டி

என்றால் மனிதனின்

அடுத்த இடமும் எதுவோ?

 Veena Shankar: 

சுவையறிந்து உண்பேனா?

கண் சுருக்கி நோட்டமிட்டு உண்பேனா?

குஞ்சுகளின் பசிக்காக உண்பேனா?

மூதாதையரின் ஆசிக்காக உண்பேனா? 

படைத்ததற்காக உண்பேனா?

இனி கிடைக்காமல் போகுமோ என்று உண்பேனா?

நான் உண்டு என் இனமும் உண்ண வேண்டும் என்று நினைப்பேனா?

நான் கரையாமல் உண்டால் நான்

 உண்டது கரையாமல் போகுமோ

என்ற அச்சத்தில் உண்பேனா?

யாருக்கான உணவு இது என்ற நினைப்பில் உண்பேனா?

படைத்தவன் புசிக்கும் முன் எனக்கு படைத்ததால் உண்பேனா?

படைக்கும் உணவினை என் உடம்பு பெருக்காமல் உண்பேனா?

உண்ணும் உணவில் அர்த்தங்கள் பல

அவை

பசிக்காக

தேவைக்காக

உணர்வுக்காக

என்பதையும் நீ அறியாயோ?

Vidhya:

அட வடையும்,அப்பளமும் 

காணோமே!

தண்ணியும் வைக்கவில்லை,

அடுத்த முறை இதெல்லாம்

 இல்லை என்றால் ஸ்ட்ரைக் 

 பண்ண சொல்லி நம்ம

 சங்கத்துல சொல்லனும்..

நாங்க எவ்வளவு பிஸி

உங்க இஷ்டப்படி வைச்சா என்ன?

டேஸ்டாக இருப்பதால்

 பரவில்லை!

நன்றி ,மீண்டும் வருவேன்!

வடை இல்லாத உணவும்

காக்கா இல்லாத விருந்தும்

 உண்டா!

அழைக்காத  விருந்தாளி

 தேவையற்ற போது

அழைத்தாலும் வரமாட்டோம்

 உங்கள் தேவைக்கு,

எங்கள் சேவை உங்களுக்கு

 தேவை ,புல் பூண்டு முளைக்க ...



Tuesday, February 4, 2025

படமும் கருத்தும் by Winmeengal

 


Veena Shankar: 

விழியிருந்தும் காணாது யாவும்

 நல்லவை அல்லாது

 Veena Shankar: 

முகம் மறைக்க முகமூடி உண்டு

அகம் சுருக்க யாது உண்டு

Veena Shankar: 

அவள் கெண்டை விழி கண்டால்

நான் நிலைகுலைந்து போவேன் என்றோ

அவளும் தன் விழி மறைத்தாள்

இல்லை இல்லை அவள் விழி

அவளிடம் இல்லை

தேவனிடம் தான் உண்டு

அதை மறைக்க எண்ணியே இந்த தொப்பியின் பிரவேசம் இங்கே தலையில்

அவளுக்கு கிரீடமாய்

Veena Shankar: 

வேடங்கள் போட தெரியா நேரத்தில்

நம்மை நாம் மறைக்க இந்த தொப்பியும் தேவையே!

ஒவ்வோர் தொப்பிக்கும் தன்னை தான் மாற்றிக் கொண்டதாகவும் ஓர் உணர்வு

Vidhya 

கருமையின் அழகே கருணை

கருப்பு வெள்ளை என்றும் அழகே

கார்கூந்தல் என்ன செய்ய

 அதுவும் தலை குனிந்தது

 கருமையின் முன்னே!



ஏ ஐ கண்ணில் பட்டால் 

உன் கருங்கூந்தலுக்கு  

வர்ணம் பூசி 

உதட்டுக்கு சாயமிட்டு 

உனக்கு மெருகேத்தி 

உலக அளவில் உலவ விடும் 


--பிரியா


சற்று நேரம் முன்பு -

விழி மூடி கொண்டு..

நிம்மதியை கொள்ளை கொண்ட ..

அழகு புத்தரை கண்டு தான் ...

இவளும் ..

முயற்சிக்கிறாளோ...!?...

- Kiruthika 


  


  

Monday, February 3, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 Veena Shankar:

 நிஜம் அனுபவத்தில் நிழல் ஆனந்தத்தில்

Veena Shankar: 

முகப்பொலிவு மட்டும் இழப்பதல்ல முதுமை

சில நேரம் அகமும் வேதனையில் பொலிவிழக்கும் 

நிழல் கூட பின்தொடரும் முதுமையின் கடைசி நிமிடம் வரை

ஆனால் தொடராது ஏதும் அதைப்போல

பிறரிடம் சொல்லிப் பகிர முடியாத பாஷைகள் இங்கே மட்டும் பரிமாறப்படுகிறதே!

மொழிகள் கூட அந்நியப்படும் மௌனம் ஆய்கொள்வதால் 

இந்த மௌன மொழிகள் பகிர்வது என்ன?

இளமையின் முதுமைப் பற்றியா?

முதுமையில் இளமைப் பற்றியா?

ஆனந்தத்தின் தொடர்ச்சியா?

தொடர்ச்சியில் தான் ஆனந்தமா?

ஏளனமும் கொடையா?

கொடை கொண்டதால் வரும் ஏளனமா ?

எட்டியிருப்பதும் சுகமா?

சுகமும் எட்டப்போய்விடுமா?

சுருங்குவது எண்ணமா?

எண்ணத்தையும் சுருக்கவா?

Vidhya, 

மீண்டும் குழந்தை பருவம்

தொட்டதை விட்ட பருவம்

ஊருக்கில்லாமல் தனக்கு தானே

 பேசி தன் அழகை ரசித்த

 உலகம் !

ஊரே சொல்லுது ஞாபக மறதி

 என்று உனக்கும் எனக்கும் மட்டும்

 தான் தெரியும் அவர்கள்

 மறுத்ததை காக்கும் பூதம்

 கண்ணாடி என்று,,நினைக்க

 மறந்தால் தானே மறக்க!

மனதிற்கும் மூளைக்கும் தெரியும்

 எதை மறக்க வேண்டுமென!

நீயும் பொம்மை நானும் பொம்மை

மற்றவை யாவும் மெய் என்னும்

 பொய்!



Sunday, February 2, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena:

சொந்த பந்தங்கள் நிறைவாய் உறவாட சந்தர்ப்பமும் இதுவே!


பந்தியில் ஓர் அலப்பறையும் தொடர்கதை தானே!


தொந்தி நிறைய சிறப்பாய் அனைவரோடும் உண்டு களித்தே


சாந்தி கொள்வது 

மனமும் சுவையிலே!


மந்தி கூட்டத்தின் வழி இது என்பதாலே


சந்திப்பில் உண்டு ஓர் மகிழ்ச்சயே!


அந்தி வேளை சுருங்கி நின்றாலும் அடுத்தவர்


வம்பில் ஓர் புது ஆனந்தமே!


சிந்தி சிதறி கிடந்தாலும் எதற்கும்


சந்தியில் கூடும் பங்காளிகள் 


பிந்தி பிரிவால் சேர்ந்து கொண்டாலும்


தந்தி போல் விரைந்து சேர்ந்திடும் மனதின் எண்ணத்தாலே 


நீந்தி கற்கும் வாழ்க்கையில் யாவும்


நந்தி போல் நிற்கும் பகைக்கும்


முந்தி சென்று அணைக்கும் உறவுகள் 


ஏந்தி காக்கும் அதுவே என்றேன்றும்


நிந்தி எந்நாளும் குடும்ப ஒற்றுமை செழிக்க!

Vidhya:

அள்ளி அள்ளி வயிறார சாப்பிட்ட நமக்கு ..

கிள்ளி சாப்பிட, அரை வயிறு சாப்பிடக்கூட நேரமில்லை!

அத்தை வடைச்சுட

அம்மா பம்பரமாக சுத்த

ஆத்தா மேற்பார்வையிட 

வண்டுகள் போல் வாண்டுகள்

 தூணை சுற்றி வர..

தான் வாங்கிய அனைத்தும்

 சமைத்து விட்டாசா என அப்பா

 மோப்பம் விட,

கேலிக்கூத்தாக, கும்மாளமாக

 தயாராகும் விருந்து,

யாருக்கும் எந்த நோயும் இல்லை

இருந்தாலும் கவலையில்லை 

எந்த மாத்திரையும் முன்னும்

 பின்னும் உண்ண வேண்டாம்.

அண்டா அண்டாவாக காப்பி

 தண்ணியை தவிர...

நினைக்கும் போதே எச்சில் ஊர

தின்ன தின்ன திகட்டாத 

விருந்து எங்கும் கிடைக்காத

 உணவே மருந்து..




இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...