சிறப்பு கல்யாணம்
வசதியான வீட்டு கல்யாணம் என்பதால் ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தது. ஒரு கல்யாணம் என்றாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொள்வதால் கூட்டத்திற்கு அளவே இருக்காது. அதுவும் இரட்டை கல்யாணம். மணமகன்களும் மணமகள்களும் இரட்டையர்கள். இருவீட்டாரின் குடும்பத்திலும் மிக முக்கியமான நிகழ்வு என்பதால் பிறந்த குழந்தை முதல் தொன்னூறு வயது பாட்டி வரை ஆஜராகியிருந்தனர். மணமகன்களின் சிரிப்பும் மணமகள்களின் அழகும் வந்தோரை பிரமிக்கச் செய்தது. வைதீக முறைப்படி நடக்கும் கல்யாணம் என்பதால் மணமக்கள் சீக்கிரமே எழுந்து தயாராக இருந்தனர். மாலை மாற்றுவது தான் முகூர்த்தம் என்பதால் நாதஸ்வரம், மேளம் காதை பிளந்து ஒலித்தன.
தாலி கட்டும் சமயத்தில் மந்திரங்களும் ஓதப்பட்டன.. கல்யாணம் இனிதே முடிந்தது. மாலை சகிதமாய் தங்களுடைய அம்மாவின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றனர் மணமக்கள். ஒரு நாற்காலியில் மணமக்கள் அமர, அவர்களை விட சிறு வயதுள்ளவர்கள் அவர்களிடம் ஆசி பெற்றனர். பல வேலைகளுக்கு இடையே கல்யாணத்தை காண வந்தவர்கள் மணமக்களுக்கு பரிசளித்துவிட்டு விருந்திற்கு தயாரானார்கள். கல்யாண விருந்து முடிந்ததும் கையோடு அவர்களை தேனிலவுக்கு அனுப்பவும் ஏற்பாடாகியிருந்தது.
தனித்தனி காரில் அவர்களின் உடைமைகள் ஏற்றப்பட்டு, தாங்கள் ஏறும் முன்னர் அனைவருக்கும் சந்தோஷத்தோடு டாட்டா காட்டினர் மணமக்கள். அவர்களது முகத்தில் அனைவரையும் விட்டு பிரிகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் சிரிப்போடு விடைபெற்றனர். அவர்களை இனிதே வழி அனுப்பினர் பெற்ற பிள்ளைகளும் உறவினர்களும். ஆம் அந்த இரட்டை தம்பதியர்களுக்கு இன்று அறுபதாம் கல்யாண வைபவம் இனிதே நடைபெற்று, உறவினர்களின் சந்தோஷ கிண்டல்களுக்கு நடுவே மணமகள்கள் வெட்கப்பட்டதோடல்லாமல் அவர்களுடைய இரண்டாவது வாழ்க்கையை தொடங்க வாழ்த்தி அனுப்பப்பட்டனர்.
இளமை மனதிலும் முதுமை செயலிலும் இருக்க வேண்டும் .

No comments:
Post a Comment