அறிவும் துணிச்சலும்
நகரின் முக்கிய ரயில் நிலையம் என்பதால் சற்று தயங்கியபடி உள்ளே நுழைந்தாள் சாருமதி. அவள் தனியாக ரயிலில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை என்பதால் தன் வீட்டில் இருந்து ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் வந்தடைந்தாள். அவள் கணவன் சேகர் சொன்னபடியே தான் செல்ல வேண்டிய நடைமேடையை அறிய, அந்த டிஜிட்டல் பலகையின் பக்கத்தில் நின்று பார்த்தபடியே காத்திருக்க, அடுத்த சில நொடிகளில் அவள் ஏற வேண்டிய ரயிலின் நடைமேடை பற்றி அறிவிப்பு வர, தனக்குரிய மேடையை நோக்கி நடந்தாள்.
படிக்கட்டில் நிறைய கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்ததால், ரயில் புறப்பட நேரம் நிறைய இருப்பதால் மெதுவாக நடந்து சென்றாள். எட்டு மற்றும் ஒன்பது என குறிப்பிட்டு இருந்த இடத்தில் தன் கால்களை முன்னேற்றினாள். இறங்கி வரவும் அந்த நடை மேடையிலேயே தன்னுடைய ரயில் நிற்பதை பார்த்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள். சுற்று முற்றும் பார்க்க அவள் அமர்ந்திருந்த பெட்டியில் அவ்வளவாக கூட்டம் தென்படவில்லை. எப்போதும் கூட்டம் நிறைந்து இருக்கும் பெட்டியில் இன்று கூட்டமே இல்லையே? என்று யோசனை செய்தபடி அமர்ந்திருந்தாள். எப்போதும் தன் கணவன் ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை நடைமேடையில் நின்று கொண்டு நேரம் கடப்பதால் அதை விரும்பாத சாருமதி அவனை கண்டிப்பாள்.
இன்று என்னவோ வெறுமையை உணர்ந்த சாருமதி ரயில் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதால், தான் இறங்கி நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர நினைத்து தன் கைபேசியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். தன் பெட்டிக்கு எதிராக இருக்கும் இருக்கையில் அமர்ந்தாள். மேலும் தான் ஏறிய ரயில் சரிதானே என்று மறுபடியும் தன் பயணச்சீட்டு கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தாள். எல்லாம் சரியாகத்தான் இருந்தது என்பதை உறுதி செய்து கொண்ட பின், அவள் பக்கத்தில் இருந்த நடைமேடை பலகையை பார்க்க, அது ஒன்பது என்று காண்பித்தது. சற்றே தன் புருவத்தை சுருக்கி பார்க்க, தான் ஏற வேண்டிய ரயில் இது தானே? என்று யோசித்தாள். இருந்தாலும் சரியானதுதான் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள் சுமதி. ஆனால் ஒரு இனம்புரியா கலக்கம் அவள் மனதில் வர சரி ரயிலில் ஏறி அமரலாம் என நினைத்து ரயிலில் ஏற முயல, அந்த ரயில் புறப்படுவதற்கான அறிவிப்பும் வர, மேலும் இரு இளைஞர்கள் அவளை முந்திக் கொண்டு வர, தாமதிக்காமல் ஏறி அமர்ந்தாள்.
தன்னுடைய ரயில் புறப்பட ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதால் தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள பக்கத்தில் இருந்த பெரியவரிடம், தான் போக வேண்டிய இடத்தைச் சொல்லி விசாரிக்க, அவள் போக வேண்டிய ரயில் இது அல்ல என்பதை அவர்கள் உணர்த்த, சட்டென்று தன் பையை கையிலெடுத்து கதவு பக்கம் ஓடி வருவதற்குள் ரயில் புறப்பட, சாருமதி இறங்கி ஓட நினைக்கையில் அவளை ஒருவர் இடைமறித்து நிற்க வைக்க, தான் தவறுதலாக இந்த ரயிலில் ஏறி விட்டதை அவனிடம் பதட்டத்தோடு சொல்லி மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படபடவென இறங்கினாள்.
பயணத்தின் போது தன் பையை தன் பக்கத்தில் வைத்து பயணிக்கும் தான் இன்று மட்டும் ஏன் அதை ரயிலில் வைத்து இறங்கினேன் என்ற குழப்பமும் மேலிட்டது சாருமதிக்கு. இறங்கியவள் தான் முன்னே உட்கார்ந்து இருந்த அதே இருக்கையில் அமர, தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். கணவனோடு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது ஒரு கையை தன் கணவன் மீதும் மறுகையில் வாகனத்தை பிடித்துக்கொண்டும் பயணிக்கும் தனக்கு எப்படி ஓடும் ரயிலிலிருந்து இறங்கும் துணிச்சல் வந்தது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அப்போது மீண்டும் அவள் நடைமேடையில் உள்ள எண்ணை பார்க்க, அது ஒன்பதாவது நடைமேடை அல்ல எட்டாவது என்பதை கூர்ந்து பார்த்த பின் தான் தெரிந்து கொண்டாள்.
இவ்வளவு காசு வாங்கும் ரயில்வே துறையினர் இந்த நடைமேடையின் எட்டாம் எண்ணில் உள்ள வடிவத்தை ஒன்பது போல இருப்பதை கவனிக்க தவறி விடுகிறார்கள் என்று இருவர் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வது இவள் காதில் விழாமல் இல்லை.
விதியை நொந்து கொண்டாலும் தனக்கு தக்க சமயத்தில் அறிவு வேலை செய்ததையும் தன் துணிச்சலையும் எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டாள்.
எல்லோரிடமும் துணிச்சல் இருக்கும் அது தக்க சமயத்தில் மட்டுமே வெளிப்படும்.

No comments:
Post a Comment