சுயநலம்
இரு நாட்களாக இரவில் என் தோழி இல்லாமல் உறக்கம் இல்லை. என் தோழன் பக்கத்தில் இருந்தும் என்னை அவ்வப்போது எழுப்பி என் ஆழ் தூக்கத்தை கெடுக்கும் அவள் இல்லை. அவள் நடுநிசியில் குரல் கொடுக்காத போதும் நான் எனை மறந்து அவள் குரல் எழுப்பியதாக நினைத்து எழுந்து அவளை நான் வைக்கும் இடத்தில் தேடுவதும் பின் அவ்விடத்தில் வெறுமை கண்டு ஏமாறுவதும் தொடர்கதையானது. இரு நாட்களாக நான் உலகத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவளாகவும் நினைக்க எப்போது என் கை வருவாள் என்பது தெரியவில்லை.
அவள் உள்ள வரை தோழனை ஒதுக்கிய நான், அவள் மீண்டும் என்னுடன் சேர தோழனின் துணையை நாடினேன் இரவில். ஆம். இரு தினங்களுக்கு முன் என் தோழனோடு சண்டை போட்டு என் தோழியை நான் கோபத்தில் வீசி எறிய, அப்போது உணரவில்லை அவள் என்ன பாடுபட்டிருப்பாள் என்று. அவள் இழப்பு என்னை வெறுமையாக்கிய போதே உணர்கிறேன். தோழமையோடு என்னை அணுகிய என் தோழனை நான் நிராகரித்தது நியாயமா என்று.
இப்போதும் சுயநலம் மேலோங்க இணக்கமானேன் என் தோழனோடு என் இரவு நேர தோழியை அடைய.

No comments:
Post a Comment