கரையும் உடல்களின் ஊடே
உருகும் தோழமை
சிரத்தில் உஷ்ணம் என்றாலும்
கரத்தில் அணைப்பு
சிறந்து விளங்கும் வாழ்க்கையில்
மறந்து போன பழமை
தளர்ந்த கால்களுக்கிடையே
மீண்டும்
வளர்ந்த நட்பு
வணங்காமுடிகள் இங்கே
நாவில் மட்டும் புன்னகை
வார்த்தைகளில் இனிமை
உருகியது நீயும் நானும் என்றாலும்
தழைத்தது நம் குடும்பம்
பிறர் மனதை கவர அரசனாக வேண்டாம்
அசுரனாக வேண்டாம்
சுடராய் இருந்தால் போதும்
வலிமையுள்ள தீயாய் அல்லாமல்
தீபமாய் மாற வாழ்வு
நம் வசம்
உருகி பேசுவதில் யாரும் சளைத்தவரல்ல
உதிரம் தேய கொண்ட உழைப்பில்
உறுதியோடு இறுதி வரை
கொள்ளும் நட்பே சிறப்பு
ஏற்றிய சுடர் ஒளி கொடுத்தாலும்
தன் உயரத்தை குறைத்துக் கொண்டாலும்
களம் காணவே விரும்புகிறது
காற்றின் வேகத்தில்
தன் அழிவைக் கூட
எண்ணாமல்
சுடராக மாறி பிறருக்கு
ஒளி கொடுப்பதும் சிறப்பே
எனினும் அதன் சிறு வடிவம் மட்டுமே அழகு
பெருந்தீயாய் மாறி உடமையை அழிக்காமல் உள்ளவரை
தலைமை யாருக்கென மோதிக் கொண்டாலும்
அடுத்தவருக்கு வாழ்த்து சொல்லி
போட்டியாளர் ஒருவரை ஒருவர் தழுவும் தருணம்,
வெற்றி யாருக்கென்றாலும் இது சொல்லும் அவர்களின் பண்பை
உருகும் மெழுகிடம் உள்ள பண்பு
மனிதனிடம் காண முடியவில்லையே!
அப்படிப்பட்ட மனிதன் உருவாக்கிய பொருளில் மனிதநேயம் எதிர்பார்ப்பது சரியோ?
தன்னால் முடியாததை தான் தயாரித்த பொருளில்
தியாகத்தை புகுத்தினான்.
இதுவும் விந்தையே!
உயிர்த்தியாகம் செய்த மெழுகும்
தான் உதிர்த்த மெழுகு நீரில்
சில மணித்துளிகள்
உயிர் கொள்வது போல
மனிதரில் சிலரும் உண்டு
என்பதும் நிஜமே!

No comments:
Post a Comment