சாதனையிலும் வேதனை
" உன்னை ஓடி பிடிக்கிற வயசாடா எனக்கு? பாட்டி இல்லாததால நீ ரொம்ப சேட்டை பண்ற! ஓடாதே! நில்! நில்! நான் கொடுக்கிறத சாப்பிடாமல் அது வேணும் இது வேணும்ன்னு அடம்பிடிக்கிற? அதுவுமில்லாமல் எனக்கு தெரியாமல் சமையல் கட்டுப்பக்கம் வந்து சாப்பிடுகிற. உன்னை நான் ஒரு நாள் கையும் களவுமாக கண்டிப்பா பிடிப்பேன். நான், நீ இருக்கிற பக்கம் வந்தால் நீ எதிர் பக்கம் போகிற? நான் ஒரு எட்டு வைத்தால் நீ பத்து எட்டு வைத்து ஓடுற? இந்த வயதில் உன்னோடு விளையாட என்னால முடியாது . "
" இத்தனை நாள் நானும் உன்னை விட்டு பிடிச்சேன் . ஆனால் நீ அடங்குற மாதிரி தெரியல. என்னிடம் வராமல் ஓடுவது, நான் கொடுக்கும் தின்பண்டத்தை சிந்தி சிதறி அடுத்த அறைகளுக்கு கொண்டு சென்று மறைவா தின்பது , போதாக்குறைக்கு என் ரூமிற்கு போய் முக்கிய ஆவணங்களை நோட்டமிடறது என்று நீ செய்யும் எல்லா சேஷ்டைகளையும் இனி என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. "
" வெளியில் மழையாய் இருப்பதால் இங்கேயே விளையாடு என்று நான் வாசல் கதவை பூட்டி வைக்கிறேன் . ஆனால் நீயோ, மெதுவாக செல்வது எனக்கு தெரியாது என நினைச்சியா? உன் கால் தடத்தை வைத்து நான் கண்டுபிடிச்சிட்டேன். நான் எதிரே வரும்போது ஒன்றும் தெரியாதவன் போல் இருந்து விடுகிற" என பெரியசாமி பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டே ஆபிஸ் முடித்து வீட்டிற்குள்ளேயே வந்தான் அவர் மகன் ரவி.
தன் எண்பது வயது அப்பா யாரிடம் பேசுகிறார்? யாரோ வந்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைய , "வா! ரவி! வா ! கரெக்டா வந்துட்டே. நீயும் மருமகளும் இல்லாத நேரத்துல எனக்கு பொழுதுபோக்காய் இவன் இருக்கட்டும் என்று நினைச்சா இவன் ஓவரா சேட்டை செய்றான். இவனுக்கு எல்லாம் உன் அம்மா தான் சரி. அவள் வளைச்சி பிடிச்சிடுவா. ஆனா இப்பதான் உடம்பு கொஞ்சம் அசந்திருச்சு. இவனை பிடிக்க ரெண்டு மூணு நாள் ஆக்கிடறா. தங்கச்சிக்கு போன் போட்டு அவளை அனுப்பி விட சொல்லு" என்றார் பெரியசாமி.
எப்போது நினைக்கிறாரோ இல்லையோ இந்த நேரத்தில் தன் மனைவியை நினைத்தார் பெரியசாமி.
அப்பா இப்படி சொல்லவும் தலையை சுற்றியது ரவிக்கு.
இருந்தாலும் அம்மாவை அழைத்து வருவதில் பிடித்தம் இல்லாத ரவி அப்பாவிடம் சமாதானம் சொல்ல வர,
" அதெல்லாம் எனக்கு தெரியாது. அவளை வரச்சொல்லு . அவ இருக்கும் போது சின்னதா இருந்தான் இவன். இப்ப பெரிசாயிட்டான். என்னால சமாளிக்க முடியல என்று மீண்டும் அப்பா சொன்னார்.
" இருந்தாலும் அப்பா ! ஒரு எலியை பிடிப்பதற்காக டெல்லியில் இருந்து அம்மா வரணுமா? அதுக்கு மருந்து வச்சா சாகப்போது" என்று சொன்னான் ரவி.
தன் ஜோடி இல்லா தனிமைக்கு அப்பா புது விளக்கம் கொடுக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டான் ரவி.
ஆம். அப்பா சொல்வது உண்மை தான். எலிகளை பிடிக்க தனி திறமையும் வேண்டியிருக்கு. இருந்தாலும் எழியை பிடித்து அதை சாகடித்த பிறகு அம்மாவின் முகத்தில் தெரியும் வேதனை , அவளும் ஓர் தாய் என்பதால். செத்த பிறகு அதன் முழிகளின் அழகையும் ரசித்து, "பத்தோடு பதினொன்னாக பாவத்தை சேர்க்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே அதை வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவாள்.
அதை பார்க்கும் அப்பாவும் இவளுக்கு என்ன ரசனையோ? என்ன கண்றாவியோ? என தலையில் அடித்துக் கொண்டு சென்று விடுவார் அதை பிடிக்க தெரியாவிட்டாலும்.
சாதனையிலும் வேதனை உண்டோ? தாய் என்பவளுக்கு