கால் தடம் சொல்லும் நம்
முன்னேற்றத்தை
கால் விரல்கள் சொல்லும் நம்
அழுத்தத்தை
கால்கள்
மருதாணி இட்டு அழகு பார்த்த
கால்களில்
கல்லும் மண்ணும் அடைத்து நிற்க
தங்க தாம்பாளத்தில் தாங்கப்படுவேன்
என்று வெறுங்காலுடன் நிற்க
புரியாத புதிராய் பல ஓட்டங்கள்
கொண்டு சோர்ந்து ஓரிடத்தில் நிற்க
ஓட்டத்தின் ஊடே கேட்கும் கேள்விக்கு
பதில் சொல்வதற்கு கால்கள் நிற்க
ரோஜா இதழில் நினைத்த கால்கள்
நடந்த வலியில் உப்பு நீரில் நிற்க
வாழ்வின் நீண்ட பயணத்திற்கு
இடைவெளி கொடுத்து இளைப்பாற
கால்கள் நிற்க
சாதித்ததால் இனி ஓய்வு என்று
எண்ணி கால்கள் நிற்க
அந்த ஓய்வும் நீடிக்காமல் சுருங்கிய
கால்கள் மீண்டு நிற்க
முதுமை துரத்த மீண்டு எழ முடியாமல்
கால்கள் நிற்க
வறுமை பின் தொடர, எழுச்சி கொள்ள
கால்கள் நிற்க
முடமான கால்கள் பயிற்சியால் எழுந்து
நிற்க
பிறரின் சுடும் வார்த்தைகள் கேட்டு ஓட
தயாராக கால்கள் நிற்க
உடல் உபாதையால் அடியெடுத்து
வைக்க முடியாமல் அதே இடத்தில்
கால்கள் நிற்க
குதூகலத்தில் நம்மையறியாமல்
கால்கள் நிற்க
பாத அபிஷேகம் செய்ய வேண்டி
அமர்ந்த நிலையில் கால்கள் நிற்க
மரியாதை நிமித்தமாக பெரியோரின்
கால்கள் நிற்க
பிஞ்சுக் கரங்கள் பற்றி கால்கள்
நடப்பது அழகு
தந்தையின் காலில் ஏறி அவரோடு
இசைந்து கால்கள் நடப்பது அழகு
ஒருமித்த காதலோடு சேர்ந்து கால்கள்
நடப்பது அழகு
மணமக்கள் தங்கள் கரங்களை பிடித்து
கால்கள் நடப்பது அழகு
வாழ்க்கையில் பயணிக்க ஓர் நடையும்
அவசியம் அதோடு பின்னி,
மின்னியிருக்க.
கால்களே!
உன் அழகுக்கு எத்தனை
ஆபரணங்கள்?
பூட்டி வைக்கவும் தெரியாமல் காட்டி
மகிழவும் முடியாமல்.
விரலுக்கு தகுந்தாற் போல் மெட்டியும்
அழகே!
மணவாளன் உள்ளான் என்பதை
அறிய.
காலை சுற்றி பூட்டப்படும் கொலுசும்
அழகே!
அவரவர் நிலைக்கு தகுந்தாற் போல்.
விரல்களில் சிவப்பு மேலோங்க இடும்
மருதாணியும் அழகே!
நோய் எதிர்ப்பு சக்திக்காக.
விரல் நகங்களுக்கு வண்ண பூச்சும்
அழகே!
பிறரை கவர்வதற்காக.
அங்கே அணியப்படும் காலணியும்
அழகே!
இனிதாய் நடை பயில.
வெயில் தாக்காமல் இருக்க
காலுறையும் அழகே!
சருமத்தை பாதுகாக்க.
சுப தினங்களில் மெருகேற்றும்
நலங்கு குங்குமமும் அழகே!
பெண்களுக்கு , சம்பிரதாயத்தை
விடாமல் காக்க.
பரியின் கால்கள் ஓட்டத்திற்கும்
மாட்டின் கால்கள் ஏற்றத்திற்கும்
கழுதையின் கால்கள் சுமப்பதிற்கும்
பூனையின் கால்கள் நளினத்திற்கும்
பெண்ணின் கால்கள் அழகிற்கும்
ஆணின் கால்கள் உழைப்பிற்கும்
உண்டென்றாலும் இவை யாவும்
மனிதனின் வாழ்வில் இருக்கும்
நடக்கும், ஓடும் கால்கள்
எதிர்காலத்தின் தேவைக்காகவும்
அமைதிக்காகவும்
வாழ்க்கையின் நடையே!
ஓய்வில்லா நடையும்
நிறைவில்லா மனதும்
உடனில்லா நட்பும்
உறவில்லா தருணமும்
உரிமையில்லா நாளும்
மாசில்லா செயலும்
மறக்க இயலா நினைவும்
குன்றிவிடும் அறிவும்
குறிப்பிடா வருத்தமும்
வகைப்படுத்தா நோயும்
உறங்கா விழிகளும்
தெரியா அழுகையும்
காக்கும் கரங்களும்
கைவிடும் செல்வமும்
கழிக்கும் நிமிடங்களும்
கடக்கும் நிகழ்வுகளும்
வாழ்க்கையின் நடையே!

No comments:
Post a Comment