Friday, April 21, 2023

கூண்டு பறவை by Veena Shankar



 கூண்டு பறவை 


                                              சுதிருக்கு பறவைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். பறவைகளின் மொழியை பேசத் தெரிந்தவன். அழகான அல்லது அதிசயமான பறவையை பார்த்தால் தன் வசப்படுத்திவிடுவான். தனக்கான வேலை இந்த துறையிலேயே அமைய வேண்டும் என ஆசைப்பட்டு அதில் வெற்றியும் கண்டான். தன் பாதி வாழ்க்கையை காட்டிலேயே வாசம் செய்ததால் வெவ்வேறு பறவைகளின் ஒலியையும் அறிந்திருந்தான். . இவ்வாறு பறவைகளை தன் வசப்படுத்தி ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கூண்டு அமைத்து தன் வீட்டு பால்கனியில் பாதுகாத்து வந்தான். சட்டத்தில் இது குற்றம் என்றாலும் ஆராய்ச்சிக்காக விதி விலக்கப்பட்டிருந்தது.


                                அவன் வீட்டு பால்கனி பெரியதென்றாலும் சாலையில் நடந்து செல்வோர், அந்த பறவை கூண்டுகளை பார்க்காமல் வழி கடந்ததில்லை. தினமும் ஒரு பறவையை கூண்டிலிருந்து விடுவித்து விடுவான் சுதிர். கூண்டிலிருந்து வெளியே வரும் பறவை முதலில் முழு உற்சாகத்தோடு வரும். அன்றும் சுதிர் ஒரு பறவை கூண்டினை திறந்து விட, பறவை உற்சாகமாய் வந்தது. இந்த காட்சியை சாலையில் இருந்த டீக்கடை ஓரம் அமர்ந்திருந்த நண்பர்கள் இருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.


                            “ எவ்வளவு சந்தோஷமா இந்த பறவை கூண்டிலிருந்து வெளியே வருகிறது” என்று ஒருவன் தன் அடுத்த நண்பனிடம் சொல்ல, “ நீ நினைப்பது போல அந்த பறவை சந்தோஷமாக வெளியே வந்தாலும் சிறிது நேரம் கழித்து மீண்டும் கூண்டில் அடைபட்டு விடும். நீ இப்போதுதான் இதை பார்க்கிறாய். நான் எப்போதும் அவரையும் அந்த பறவைகளையும் கவனித்து வருகிறேன். ஒருநாள் பறவை ஒன்றினை அவர் கூண்டிலிருந்து வெளியேற்ற, அதுவும் சந்தோஷமாக சிறிது நேரம் சிறகை விரித்து பறக்க, அதனை விட வலிமை மிக்க மற்றொரு பறவை அதனை துரத்த, அந்த பறவைக்கு ஈடு கொடுக்க முடியாத இந்த கூண்டு பறவை மறுபடியும் கூண்டிலே அடைப்பட்ட காட்சியை கண்டவன் நான்.” என்று நண்பன் சொன்னதும் “ கூண்டிலேயே அடைபட்டு இருந்தால் எப்படி அந்த பறவை இன்னொரு பறவையை எதிர்கொள்ளும்? அதை சுதந்திரமாக விடுவித்திருந்தால் நன்றாக பறந்து அது தன் பாதையை பார்த்து சென்று இருக்கும்.” என்ற நண்பனிடம் “ எதுவும் அளவுக்கு அதிகமாக இருந்தால் ஆபத்து தான்” என்று அவன் தன் நண்பனுக்கு புரியும்படி சொன்னான். 


 

                        மேலும் அவனே “ அந்த கூண்டில் சில பறவைகள் கூடு கட்டி வாழ்வதையும் பார். வெளியே சென்ற பறவைகள் இருக்கும் இடமே உத்தமம் என்று நினைத்து தாங்கள் ஒவ்வொரு முறை கூண்டை விட்டு வெளியே சென்று திரும்பும் போது, கூடு கட்ட தேவையான பொருட்களை தாங்களே கொண்டு வந்து கூடு கட்டி வாழத் தொடங்கி இருக்கிறது. இதனை பறவைகளை வளர்க்கும் நண்பரும் களைய முனைவதில்லை.” என்றும் சொல்லி முடித்தான்.


                           சுதந்திரம் கிடைத்தவுடன் பறக்க எண்ணிய பறவை, தனக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் மறுபடியும் கூண்டிலேயே அடைபட்டு, தன் முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. யார் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பெரியதல்ல. எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம்.


                                  தனக்கு நிம்மதி இருக்கும் இடத்தில் மட்டுமே பறவை கூடுகட்டி வாழும். அதைப் போல நமக்கான நிம்மதியான இடம் தேடி அலைவதை விட நம் இல்லத்தை இனிமையாக்கி அதில் நம் பொழுதினை பசுமையாக்குவோம்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...