Sunday, April 30, 2023

பொன்னியின் சமையல் by Veena Shankar

 


பொன்னியின் சமையல்


பொன்னி நன்றாக சமைக்க கூடியவள். அவள் சமையலை பற்றி பேசாத உறவினர்கள் இல்லை. கண் பார்த்து கை வேலை செய்யும். அதேபோல் சுறுசுறுப்பும் சமயோசிதமும் கொண்டவள். என்னதான் அவள் ருசியாக சமைத்து போட்டாலும் அவள் மாமியார் மட்டும் ஏதாவது குறை சொல்லி கொண்டே இருப்பாள். ஆனால் அதை தன் கணவனுக்காக பொறுத்துக் கொண்டாள் பொன்னி. மாமியாரின் பேச்சிற்கெல்லாம் மூலையில் அமர்ந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பழக்கமும் இல்லாதவள் தான் பொன்னி. ஒரு நாள் பொன்னியின் பக்கத்து வீட்டு பெண்மணி பொன்னியின் மாமியாரிடம் தான் சமைக்கவில்லை என்பதால் பொன்னி சமைத்த குழம்பை கொஞ்சம் வாங்கி கொண்டு செல்ல வந்ததாக சொல்லி ஒரு கிண்ணத்தை கொடுக்க, மாமியாரும் அவளுக்கு அதில் தேவையான அளவு கொடுக்க, அப்போதே குழம்பை ருசித்து பார்த்தவள் குழம்பில் கொஞ்சம் புளி அதிகமாக இருக்கிறது என்று வாய்விட்டு மாமியாரிடமே சொல்ல கடுப்பானாள் பொன்னியின் மாமியார்.

ஓசியில் குழம்பு வாங்க வந்துட்டு இவ்வளவு பேசுறியே ? என் மருமகள் எப்போதும் நன்றாகவே சமைப்பாள் .

ஆனால் நான் எப்போதும் அவளை குறை தான் சொல்வேன். அப்போது தான் அவள் இன்னும் நன்றாக சமைப்பாள் என்று முகத்தில் அடித்தது போல அந்த பெண்ணிடம் சொல்லவும் அங்கே ஏதச்சையாக வந்த பொன்னியின் காதில் மாமியார் பேசியது விழுந்தது. இருந்தாலும் பொன்னியின் மாமியார் அவள் சமையல் ருசியில்லை என்று திட்டியதும் சரி தான். ஏனென்றால் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு பழக்கப்பட்ட அவள் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லாமல் மிகுந்த அவதிபட்டாள் . எனவே சமைக்கும் போதே அவளுக்கு மட்டும் தனியே எடுத்து வைத்து மற்றவர்களுக்கு தேவையான உப்பு, காரம் போட்டு சமைப்பாள் பொன்னி. அதனால் தான் எல்லோருக்கும் நன்றாக இருக்கும் சமையல் பொன்னியின் மாமியாருக்கு மட்டும் ருசியாக இல்லாமல் தோன்றும். இது தெரியாத அவள் மாமியார் அன்றைய தினம் தனக்கான குழம்பை தான் அவள் பக்கத்து வீட்டு பெண்மணிக்கு கொடுத்திருக்கிறாள். இருந்தாலும் தன் மருமகளை விட்டு கொடுக்காமல் பேசியதால் நம்மை பற்றி குறை சொல்லும் மாமியார் இவ்வளவு புகழ்கிறாளே என்று பொன்னி சந்தோஷப்பட அவளுக்கு மாமியார் மீது மதிப்பு கூடியது. அதிலிருந்து மாமியாரை ஏகமாக மதித்தாள்.


யாசிப்பது தவறு. அதிலும் குற்றம் கண்டு கொள்வது யாசிப்பதை விட தவறு.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...